http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 74

இதழ் 74
[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

வழிபாடிழந்த திருக்கோயில்கள்
இராசராசசோழனும் சோழமகாதேவியும் - 2
அழிவின் விளிம்பில் சோழர்காலக் கற்கோயில்
மிருதங்கம் - ஒரு பறவைப் பார்வை எழுப்பும் பல கேள்விகள்
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 3
தமிழுடன் 5 நாட்கள் - 2
அசையும் பாவை
இதழ் எண். 74 > கலையும் ஆய்வும்
இராசராசசோழனும் சோழமகாதேவியும் - 2
கி.ஸ்ரீதரன்


(சென்ற இதழின் தொடர்ச்சி...)

மேலும் இவர் கனமாக (Solid) எழுந்தருளுவிக்கப்பெற்ற இடபவாகன தேவர் - நம்பிராட்டியார் உமாபரமேசுவரியார் பற்றியும், திருமேனியின் பீடத்தின் அமைப்பு பற்றியும் கல்வெட்டு குறிக்கிறது. மேலும் இறைவன் - இறைவி அருகில் 'குளம்பில் இருந்து கொம்பு வரை' கணப்பொள்ளலாகச் (Hollow) செய்விக்கப்பெற்ற இடபத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. சோழர் காலத்தில் செப்புத்திருமேனிகள் எவ்வாறு வார்க்கப்பட்டன - படிம வார்ப்புக்கலை எவ்வளவு சிறந்திருந்தது என்பதை அறிய இக்கல்வெட்டு சான்றாக விளங்குகிறது. மேலும் கணபதியார் திருமேனியும் அளிக்கப்பெற்ற நகைகள் போன்றவற்றையும் இவ்வரசி அளித்துள்ளார்.

தஞ்சைப் பெரியகோயில் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட 'சோழமகாதேவி' எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதை அறியச் சான்றுகள் கிடைத்துள்ளன.

தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில், சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருவெறும்பூரிலிருந்து தெற்கே செல்லும் சூரியூர் சாலையில் 3 கி.மீ தொலைவில் சோழமகாதேவி என்ற சிறிய கிராமம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

கைலாயமுடையார்கோயில்

இக்கிராமத்தில் உள்ள கைலாயமுடையார் கோயில் வரலாற்றுச் சிறப்புப்பெற்றது. முதலாம் இராசராசன் காலத்தில் கட்டப்பட்டு அழகிய சிற்பங்களுடன் காட்சிதரும் சிறிய கோயில். இக்கோயிலில் இராசராசசோழன், இராசேந்திரசோழன், வீரராசேந்திரன் காலத்தைச் சேர்ந்த மொத்தம் 15 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதலாம் இராசேந்திரன் காலக் கல்வெட்டுகளில் அவனது பிறந்த நாளான திருவாதிரை நாளைச் சித்திரை மாதத்தில் கொண்டாடவும், மற்றும் இவ்வூரில் 'ஊர்வாரியம்', 'உய்யக்கொண்டான் ஆற்று வாரியம்' போன்ற அமைப்புகள் இருந்தது பற்றியும் அறிகிறோம்.

வீரராசேந்திரன் கல்வெட்டில் சோழமாதேவி ஊர்சபையார் 'சங்கர பகவத் பாதாள்' அருளிய பாஷ்யத்துக்கு சிதாநந்தபடாரர் என்பவர் எழுதிய பிரதிபகம் என்னும் உரையை இவ்வூரில் விரிவுரை செய்பவர்களுக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டது என்ற மிக அரிய செய்தியைக் கூறுகிறது. ஆதிசங்கரரையும், அவரது பாஷ்யத்தையும் குறிக்கும் மிகத் தொன்மையான கல்வெட்டு இதுவே என்று தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி அவர்கள் தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சோழமாதேவி கைலாயமுடையார் கோயில் கல்வெட்டுகளில் இங்குக் கோயில் கொண்டு விளங்கும் இறைவன் ஸ்ரீகயிலாயமுடையார், ஸ்ரீகைலாசர், ஸ்ரீகைலாசர் பரமேசுவரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் முதலாம் இராசராசனது 8, 13, 15, 26 வது ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் ஏழு காணப்படுகின்றன. இராசராசன் இக்கோயில்மீது எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தான் என்பதைக் கல்வெட்டுச் செய்திகள் கூறுவதைக் காண்போம்.

நெற்றிப்பட்டம்

1. ஆறு கழஞ்சு எடையுள்ள நெற்றிப்பட்டம் என்ற ஆபரணம் இறைவனுக்கு அளிக்கப்பட்டது.

நந்தவனப்புறம்

2. (8வது ஆட்சியாண்டு கி.பி.993) சோழமகாதேவி சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த மத்யஸ்தன் (கிராமக்கணக்கு அலுவலர்) ஏறன் கூத்தாடியான மகாஜனப் பிரியன் என்பவன் இக்கோயிலுக்கு நந்தவனம் அமைக்க நந்தவனப்புறமாக நிலம் அளித்தான். அதில் மல்லிகை, இருவாட்சி, சிறுசெண்பகம் போன்ற மலர்கள் பயிர் செய்யப்பட்டுக் கோயிலுக்கு அளிக்கப்பட்டன. அந்நந்தவனத்தை நீர்க்குறைவும் வேலிக்குறைவும் மற்றும் எப்பேர்ப்பட்ட குறைவும் இல்லாமல் பராமரிக்கவேண்டும் என்றும் கல்வெட்டுக் குறிக்கிறது.

மெய்க்காட்டு - மெய்க்காட்டி

3. (8வது ஆட்சியாண்டு கி.பி. 993) வீரசோழ இளங்கோவரையர் தேவியார் பராந்தகன் ஆதித்த பிடாரியார் என்பவர் இவ்வூர் சபையினருக்குப் பொன் அளித்திருக்கிறார். அதனைக்கொண்டு வரும் வட்டியில் அவிட்ட நட்சத்திரத்தன்று ஸ்ரீகைலாயமுடையார்க்கு ஆறு மெய்க்காட்டுகளை, பிரசஸ்திகளை (பெருமைகளை) மெய்க்காட்டி பூசை செய்யவேண்டும் எனக்கூறுகிறது. திருச்சிராப்பள்ளி அருகே உள்ள திருச்செந்துறை கோயிலிலும் பராந்தகன் ஆதித்தபிடாரியார் என்ற அரசி குறிக்கப்படுகிறார். கொடும்பாளூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இருக்குவேளிர் குலத்தைச் சார்ந்தவராக இவர் விளங்குவதால் சோழர் - இருக்குவேளிர் உறவுமுறை பற்றி அறிந்துகொள்ள இக்கல்வெட்டு அரிய சான்றாக விளங்குகிறது.

உமாபட்டாரகி

4. (13வது ஆட்சியாண்டு கி.பி 998) இக்கோயிலில் வழிபாட்டில் இருந்த ஸ்ரீகைலாசத்து உமாபட்டாரகிக்கு ஒருசந்தி திருவமுது படைப்பதற்காக ஊர்சபையினரால் நிலம் தானமளிக்கப்பட்டது. ஊர்சபையினர் 'இராசராசன்' என்ற பெயரிடப்பட்ட பேரம்பலத்தில் (மண்டபத்தில்) கூடி இம்முடிவினை எடுத்தனர். அளிக்கப்பட்ட நிலத்தினை 'ஸ்ரீகோயிலுடையார்கள்' என்ற அமைப்பினர் பெற்றுக்கொண்டு தானத்தையும் பராமரித்து வந்தனர் என்பதை அறிய முடிகிறது.

(தொடரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.