http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 85

இதழ் 85
[ ஜனவரி 16 - ஃபிப்ரவரி 15, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

ஐந்தாண்டுக்கொருமுறை மாற்றம் ஏன்?
திரும்பிப்பார்க்கிறோம் - 32
ஆடிஅருளப் பிரசாதம் பெற்ற பொன்னில் . . .
வைகல்
மனத்துக்கண் மாசிலன்
ஊன்சோறு (அ) ஊன்துவையடிசில்
பருத்திப் பெண்டிர்
இதழ் எண். 85 > கலையும் ஆய்வும்

சம்பந்தர் பாடல் பெற்ற வைகல் காவிரியின் தென்கரை ஊர்களுள் ஒன்றாகும்.1 ஆடுதுறைக்குத் தெற்கே 4 கி. மீ. தொலை வில் உள்ள திருநீலக்குடிக்குத் தென்கிழக்கில் 3 கி. மீ. தொலை வில் உள்ளது வைகல். இவ்வூரிலுள்ள மூன்று சிவன்கோயில் களுள் ஊரின் மேற்குப் பக்கத்தில் உள்ள வைகல்நாதர் கோயில் மாடக்கோயிலாகும்.2 இதன் முதல் வாயில் உறுப்புகளற்ற தாங்கு தளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுக் கபோதத் துடன் நிற்கிறது. இரண்டாம் வாயில் முதல் வாயில் போலவே உள்ளபோதும் சாலைப்பத்திப் புறந்தள்ளல் கூடுதல் அமைப்பாக உள்ளது. வாயிலின் தென்புறத்தே ஒருதள வேசர விமானத்தில் கரண்டமகுடம், சிற்றாடை அணிந்து, பின்கைகளில் அங்குசம், பாசம் ஏந்தி, இடம்புரியாக அமர்ந்துள்ள பிள்ளையாரின் வல முன் கையில் தந்தம். இட முன் கையில் மோதகம்.

வாயிலை அடுத்து வளரும் சுற்றில் காணப்படும் ஒருதள வேசர விமானங்களில் தெற்கில் கொம்பியல் கோதை அம்மனும் தென்மேற்கில் பிள்ளையாரும் மேற்கில் வள்ளி, தெய்வானை யுடன் முருகனும் இடம்பெற்றுள்ளனர். வடமேற்கிலுள்ள மண்டப அறைகளுள் ஒன்றில் யானைத்திருமகளும் மற்றொன் றில் திருமகள் நிலமகளுடன் விஷ்ணுவும் காட்சிதருகின்றனர். வடபுறத்தே உள்ள ஒருதள நாகர விமானத்தில் சண்டேசுவரர்கள் இடம்பெற்றுள்ளனர். வடகிழக்கில் உள்ள மண்டப அறையில் சனீசுவரனும் பைரவரும் உள்ளனர்.

அம்மன் கோயில்

பெருமண்டபம், முகமண்டபம், விமானம் பெற்று விளங்கும் அம்மன் கோயில் அண்மையில் சீரமைக்கப்பட்டுள்ளது. உறுப்பு களற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், ஆழமற்ற கூடுகளுடனான கபோதம் பெற்று விளங்கும் பெருமண்டபத் தின் சுவரில் சாளரம் ஒன்று அமைந்துள்ளது. முகமண்டபம், விமானக் கீழ்த்தளம் இவை பெருமண்டபக் கட்டமைப்பி லேயே உள்ளன. கிரீவகோட்டங்களில் தோழிகளுடன் அம்மன் காட்சிதருகிறார். முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்கும் பெருமண்டபம் வெறுமை யாக உள்ளது. தூண்களின் கீழ்ச்சதுரம் நாகபந்தம் பெற, இடை, மேற்சதுரங்கள் உருளைக்கால்கள் கொண்டுள்ளன. முகமண்ட பத்தை அடுத்துள்ள கருவறையில் சமபங்கத்தில் உள்ள இறைவி யின் பின்கைகளில் அக்கமாலை, மலர். சடைமகுடம், மகர குண்டலங்கள், முப்புரிநூல், பட்டாடை அணிந்துள்ள தேவியின் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடிய வலம்பிதமாக உள்ளது.

சுற்றாலைச் சிற்பங்கள்

கரண்டமகுடம், சரப்பளி, முப்புரிநூல், அலங்கரிக்கப்பட்ட உதரபந்தம் அணிந்து இலலிதாசனத்தில் உள்ள தென்மேற்கு வலம்புரிப் பிள்ளையாரின் பின்கைகளில் வலப்புறம் உள்ள பொருள் அங்குசமாகலாம். இடப்புறம் பாசம் உள்ளது. முன் கைகளில் வலப்புறம் தந்தமும் இடப்புறம் மோதகமும் உள்ளன.

கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், ஸ்வர்ண வைகாக்ஷம் அணிந்தவராய் மயிலுடன் நிற்கும் முருகப் பெருமானின் பின்கைகளில் வலப்புறம் சக்தி, இடப்புறம் வஜ்ரம். கழுத்தணிகளும் கையணிகளும் அலங்கரிக்கும் அவரது வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை கடிய வலம்பிதமாக உள்ளது. கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், பட்டாடையுடன் வலப்புறமுள்ள தெய்வானை யின் இடக்கையில் மலர். வலக்கை நெகிழ்ந்துள்ளது. வள்ளி வலக்கையில் மலர் கொண்டு, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார்.

கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், கழுத்தணிகள், கையணி கள், முப்புரிநூல், உதரபந்தம், பட்டாடை அணிந்து, மண்டப அறையில் உள்ள விஷ்ணுவின் பின்கைகளில் சங்கு, சக்கரம். வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை கடியவலம் பிதமாக உள்ளது. கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங் கள், பட்டாடை அணிந்து வலப்புறத்துள்ள திருமகளின் வலக்கை நெகிழ, இடக்கையில் மலர். இடப்புறத்துள்ள நிலமகள் கச்சற்றவராய்ப் பூட்டுக்குண்டலங்களுடன் இடக் கையை நெகிழ்த்தி, வலக்கையில் மலர் கொண்டுள்ளார்.

வடக்குத் திருமுன்னில் காணப்படும் இரண்டு சண்டேசு வரர்களுள் பழையவர் சடைமகுடம், முப்புரிநூல், சிற்றாடை அணிந்து, வலச்செவியில் பனையோலைக் குண்டலத்துடன் காட்சியளிக்கிறார். இடச்செவி வெறுமையாக உள்ளது. வலக் கையில் மழு. இடக்கை தொடைமீதுள்ளது. சுகாசனத்தில் உள்ள புதியவரின் இரு கைகளும் கடகத்தில் உள்ளன.

கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், பட்டாடை இவற்றுடன் காட்சிதரும் சனீசுவரனின் வலக்கையில் தடி. இடக்கை கடியவலம்பிதமாக உள்ளது. பின்னால் காகம். நிர்வாணியாய்ச் சுடர்முடியுடன் நெற்றிக்கண், வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம், கோரைப்பற்கள், முப்புரிநூல், உதரபந்தம், கழுத்தணிகள், கையணிகள் இவற்றுடன் காட்சிதரும் பைரவரின் பின்கை களில் உடுக்கையும் பாசமும் அமைய, முன்கைகளில் முத்தலை ஈட்டியும் தலையோடும் உள்ளன.

வெற்றுத்தளம்

வளாகத்தின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் மாடக் கோயிலின் வெற்றுத்தளம் திருப்பணிகளின் காரணமாகத் தாங்குதளம், சுவர், கூரையற்ற நிலையில் 1. 57 மீ. உயரமுடைய வெறும் மேடையாகக் காட்சியளிக்கிறது. மேடையின் தென் புறத்தும் வடபுறத்தும் மேலேற வாய்ப்பாகத் திசைக்கு ஆறு படிகள். பெருமண்டபம், முகமண்டபம், இருதள வேசர விமானம் என அமைந்துள்ள வைகல்நாதரின் திருமுன் நோக்கிய நிலையில் மேடையின் மேல் அமர்ந்துள்ள நந்தியின் மண்டபம் வேசர கிரீவம், சிகரம் பெற்றுள்ளது.

விமானம்

பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்று, 4. 65 மீ. பக்கமுடைய சதுரமாக அமைந்துள்ள விமானத்தின் கீழ்த்தளச் சுவர் முப்புறத்தும் சட்டத்தலை பெற்ற நான்முக அரைத்தூண்கள் அணைத்த கோட்டப் பஞ்சரங்கள் பெற்றுள்ளது. விமானத்தின் போதிகை களுக்கு மேற்பட்ட உறுப்புகள் செங்கல்லால் ஆனவை.





கபோதத்துடனான சிறு மண்டபம் பெற்றுள்ள தெற்குக் கோட்டத்தில் ஆலமர்அண்ணல் வீராசனத்தில் உள்ளார். வல முன் கை சின்குறிப்புக் காட்ட, இட முன் கை சுவடியேந்திய நிலையில் முழங்காலின் மீது உள்ளது. பின்கைகளில் வலப்புறம் அக்கமாலை, இடப்புறம் தீச்சுடர். சடைப்பாரம், முப்புரிநூல் என அணியப்பட்ட துண்டு, உதரபந்தம், சிற்றாடை, இடைக் கட்டு, இடச்செவியில் பனையோலைக் குண்டலம் அணிந்துள்ள இறைவனின் வலச்செவி வெறுமையாக உள்ளது. வலக்காலை முயலகன் மீது இருத்தி, சடைமுகப்பில் படமெடுத்த பாம்புடன் காட்சிதரும் இறைவனின் தலைக்குப் பின்புறம் கிளைத்திருக்கும் மரத்தின் நடுப்பொந்தில் ஆந்தையும் கிளையொன்றில் பொக்கணமும்3 உள்ளன. இறைவனின் இருபுறத்தும் முனிவர்கள். மேற்கு, வடக்குக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. மேடையின் இப்பகுதியில் இருந்து கீழிறங்க வாய்ப்பாகத் துளைக்கைப் பிடிச்சுவருடன் ஆறு படிகள் உள்ளன.





முதல் தள ஆரஉறுப்புகள் ஆறங்கம் பெற்றமைய, இரண் டாம் தளம் செங்கல் கட்டுமானமாய் மேலே கிரீவம், சிகரம் பெற்று முடிகிறது. ஆரச்சாலைகள் வெறுமையாக உள்ளன. கிரீவகோட்டங்களில் தென்புறம் வீராசனத்தில் ஆலமர் அண்ணலும் மேற்கில் மகாராஜலீலாசனத்தில் தேவியருடன் பரமபதநாதரும் வடபுறம் தேவியருடன் சுகாசனத்தில் நான்முக னும் கிழக்கில் தேவியருடன் சுகாசனத்தில் சிவபெருமானும் இடம்பெற்றுள்ளனர். விமானத்தின் கட்டமைப்பில் உள்ள முகமண்டபத்தின் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன.

பெருமண்டபம்

பெருமண்டபத்தின் புறச்சுவர் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கபோதம், கூரையின் மேல் சிறு வேதிகை என அமைந்துள்ளது. கிழக்கு முகத்தில் புறந்தள்ளியுள்ள சுவரின் சாலைப்பத்தி வாயிலாக்கப் பட்டுள்ளது. நாகபந்தம் பெற்றுள்ள இவ்வாயிலின் இருபுறத்து முள்ள கோட்டப்பஞ்சரங்களில் தெற்கில் பிள்ளையார் அமைய, வடகோட்டம் வெறுமையாக உள்ளது. கரண்ட மகுடம், சரப்பளி, உதரபந்தம் அணிந்து இலலிதாசனத்தில் உள்ள இடம்புரிப் பிள்ளையாரின் பின்கைகளில் அங்குசம், பாசம். முன்கைகளில் வலப்புறம் தந்தம், இடப்புறம் மோதகம்.

முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுப் போதிகை களுடன் கூரை தாங்கும் பெருமண்டபமும் அதையடுத்துள்ள தூண்களற்ற பேரளவிலான முகமண்டபமும் வெறுமையாக உள்ளன. கருவறையில் வைகல்நாதர் என்ற திருப்பெயருடன் வேசர ஆவுடையார் மீது உருளைப் பாணம் பெற்ற இலிங்கத் திருமேனி இடம்பெற்றுள்ளது.

கல்வெட்டுகள்





வெளிச்சுற்றிலுள்ள பிள்ளையார் கோயில் முன்றில் தூண் ஒன்றில் காணப்படும் முதல் இராஜராஜரின் இருபத்தாறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,4 வைகலை வானவன்மாதேவிச் சதுர்வேதிமங்கலமாக அடையாளப்படுத்துவதுடன், அது உய்யக் கொண்டார் வளநாட்டின் கீழ் வெண்ணாட்டில் இணைக்கப்பட்டிருந்த தகவலைத் தருகிறது. மாடக்கோயில் மகாதேவருக்கு ஸ்ரீகோயில் எடுப்பித்தவராகக் கூளிக்குடியைச் சேர்ந்த ஸ்ரீகண்டன் விஜ்ஜாதரனான வன்தொண்டன் பெயரைத் தரும் கல்வெட்டு இன்றும் நன்னிலையில் இருப்பது குறிப்பிடத் தக்கது. இரண்டாம் கோபுர வாயிலின் வடபுறம் காணப்படும் துண்டுக் கல்வெட்டு அன்றாடு நற்காசு 17,500க்கு வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்கலத்தில் பிச்சி என்பவர் நிலத்துண்டு ஒன்றை விற்ற தகவலைத் தருகிறது.5

குறிப்புகள்
1. சம்பந்தர் 3 : 18. 'வைகல் மேற்றிசைச் செய்யகண் வளவன் முன் செய்த கோயிலே', 'வைகல் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே', 'வைகலில் திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே', 'வைகல் வாழ்வர்கள் வலம்வரு மலையன மாடக்கோயிலே' எனும் பாடலடிகள் குறிக்கத்தக்கன.
2. ஆய்வு நாட்கள் 7. 8. 1981, 27. 1. 2001, 23. 10. 2009. உடனிருந்து உதவிய திருவாளர்கள் உன்னத குருக்கள், பாலு குருக்கள், காவலர் தா. பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு உளமார்ந்த நன்றி. இக்கோயில் பற்றிய முதற் கட்டுரை மார்ச்சு 1982ல் வெளிவந்த திருக்கோயில் இதழில் பதிவாகியுள்ளது.
3. பொக்கணம் பற்றிய விரிவான தரவுகளுக்கு: இரா. கலைக் கோவன், பொக்கணம், கலைமகள், தீபாவளிமலர், 1999.
4. இக்கல்வெட்டு களஆய்வின்போது பேராசிரியர் முனைவர் மு. நளினியால் கண்டறியப்பட்டது.
5. இக்கல்வெட்டு களஆய்வின்போது பேராசிரியர் முனைவர் அர. அகிலாவால் கண்டறியப்பட்டது.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.