![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 100
![]() இதழ் 100 [ அக்டோபர் 2013] நூறாவது இதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வரலாற்றை நேசிக்கும் வரலாறு டாட் காம் அன்பர்களுக்கு வணக்கம்.
நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர் குழு என்கிற பெயரில் அமைந்த எங்களின் குழுமத்தைப் பற்றி வரலாறு டாட் காமில் முந்தைய இதழொன்றில் வெளிவந்த இக்கட்டுரை மூலமாக அறிந்திருப்பீர்களென்று நம்புகிறேன். முடிந்தவரையில் வரலாற்றுக்குத் தொண்டு செய்யும் 'வரலாற்றுச் சிறுத்தொண்டர்கள்'தாம் நாம். இந்தக் கட்டுரையில் சமீபத்தில் நாங்கள் மேற்கொண்ட அத்தகைய சிறு தொண்டு ஒன்றினைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம். 1992ல் ஒரு நாள். பிற்காலச் சோழர் வரலாற்றில் திருப்புமுனையாக விளங்கிய திருப்புறம்பியம் போர் தொடர்பான வரலாற்றுச் சான்றுகளை நேரில் கண்டறிவது என்கிற ஆர்வத்தில் திருப்புறம்பியம் சென்றோம். சோழர் படைகள் தங்கியிருந்ததாக ஊரார் கருதும் ஆலமரத் திடல், ஐயனார் கோயில், 'உதிரம் பட்ட தோப்பு' என்று காரணப் பெயரோடு (?) அழைக்கப்படும் தோப்பு, கச்சாண்டார் கோயில், ஆதித்த சோழர்காலக் கட்டுமானமாகக் கருதப்பெறும் சாட்சிநாதர் கோயில் என்று பல்வேறு இடங்களையும் கண்டு பேருவகை அடைந்தோம். சாட்சிநாதர் திருக்கோயிலில் அமர்ந்து ஆதித்த சோழரின் வரலாறு கூறும் சான்றுகள் குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டோம். 1. முதலாம் ஆதித்தர் தொண்டை மண்டலத்தை வென்றதை திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் 2. அவர் அபராஜித பல்லவரை வென்றதை கன்னியாகுமரிக் கல்வெட்டும் 3. அவர் காவிரியின் இரு கரைகளிலும் சிவாலயங்கள் எடுப்பித்ததை அன்பில் செப்பேடுகளும் 4. அவர்தில்லைச் சிற்றம்பல முகத்தைப் பொன்னால் வேய்ந்த தை திருத்தொண்டர் திருவந்தாதியும் எடுத்தியம்புவதை எண்ணிக் களித்தோம். எப்படிப்பட்ட ஆளுமையாக அவர் இருந்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் எங்களை ஆட்கொண்டது. மேலும் அவர் தனது நெடிய வரலாற்றுப் பயணத்தில் ஏறக்குறைய பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொண்டை மண்டலம் காளஹஸ்திக்கு அருகில் தொண்டைமான் பேராற்றூர் (இன்றைய தொண்டமாநாடு) எனுமிடத்தில் மீளாத்துயில் கொண்டதாகவும் அவருக்கு அவரது புதல்வரான முதலாம் பராந்தக சோழர் அந்த இடத்திலேயே ஒரு பள்ளிப்படைக் கோயில் கட்டி அதில் ஆண்டு தோறும் புரட்டாசித் திங்கள் கேட்டை நட்சத்திரம் முதல் ஆதித்த சோழரின் திருநட்சத்திரமான புரட்டாசி சதயம் வரையிலான ஏழு நாட்களும் திரு உற்சவம் செய்து போஜனமும் அளித்து விழா நடத்தியுள்ளார் என்றும் அப்போதுதான் அறிந்தோம். இத்தகவல்களைக் கூறும் கல்வெட்டு இன்றைய தொண்டைமாநாடு ஊரில் உள்ள சிவாலயத்தில் உள்ளதாகவும் இன்றைக்கும் அது ஆதித்தர் பெயரால் கோதண்ட இராமேஸ்வரம் என்று அழைக்கப்படுவதாகவும் அறிந்து உளமகிழ்ந்தோம். கோதண்ட இராமன் என்பது அவரது பட்டப்பெயரல்லவா? ஆதித்தர் எப்படிப்பட்ட சரித்திரக் கீர்த்தி பெற்ற மாவீரர்! அவருக்கென்று அமைந்த பள்ளிப்படை இன்றும் இருக்கிறது என்பது எத்தனை பெரிய விஷயம் என்று உள்ளம் துள்ளிக் குதித்தது. அப்போதே அப்பள்ளிப்படையைக் காணவேண்டுமென்கிற ஆவலில் தவித்தோம். ஆனால் காலம் கூடி வர ஆண்டுகள் பல பிடித்தன. 16 ஆண்டுகள் கழித்து - 29.02.2008 அன்று காளஹஸ்தி சென்றோம். சொர்ணமுகி ஆற்றைக் கடந்து மறுகரையில் தொண்டமநாடு செல்லும் பேருந்தின் மூலம் பொக்கிஷம்பாளையம் (!) நிறுத்த த்தில் இறங்கிச் சற்று தொலைவு நடந்தோம். சரித்திர ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிருக்க வேண்டிய வரலாற்றுச் சின்னமான ஆதித்தசோழர் பள்ளிப்படையாம் கோதண்ட இராமீஸ்வரம் எங்களை வரவேற்றது. ![]() பள்ளிப்படை கோதண்ட இராமீஸ்வரம் ![]() பள்ளிப்படை விழா பற்றிக் கூறும் கல்வெட்டு அக்கோயிலைக் கண்ணாறத் தரிசனம் செய்தபோது எமது உள்ளம் அடைந்த மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளில்லை. ஆர்வத்துடன் கோயிலைச் சுற்றி வருகையில் வரலாற்றுச் சான்றுகளைக் கண்கள் தேடின. அப்போது முதலாம் பராந்தகர் வடித்த அக்கல்வெட்டைத் தாங்குதளத்தில் கண்டு உள்ளம் பூரித்தது. ஆனால் தற்சமயம் புரட்டாசி மாதம் எந்த விழாவும் திருக்கோயிலில் நடைபெறுவதில்லை என்பதை அறிந்து வருந்தினோம். ஆண்டு தோறும் ஆதித்த சோழர் நினைவாகப் புரட்டாசி சதயத்தன்று சிறு விழா கொண்டாடினால் என்ன என்று தோன்றியது. ![]() விழாவன்று இறைவன் அதன் தொடக்கமாக 2009ல் நமது குழு சார்பாகப் பராந்தக சோழரால் துவங்கப்பட்டு கால ஓட்டத்தில் நின்றுபோய்விட்ட 'ஆதித்த சோழர் பிறந்தநாள் விழாவை' நடத்திட முடிவு செய்து அவ்வாண்டு புரட்டாசி திருச்சதய நட்சத்திரம் அன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு நன்னீராட்டு பூஜை மேற்கொண்டோம். 2009ல் தொடங்கிய இம்முயற்சி கடந்த ஆண்டு 2012 வரை இதே போல் புரட்டாசி சதயத்தன்று மட்டும் கொண்டாடப்படும் விழாவாகவே அமைந்தது. 2013ம் ஆண்டாகிய இவ்வாண்டு ஆதித்தருக்கு உகந்த ஆண்டு போலும். இவ்வாண்டு புரட்டாசி கேட்டை துவங்கி ஏழு நாட்களுக்கும் சிறப்பு நன்னீராட்டு பூஜை முதலானவற்றை மேற்கொள்ளும்படி கீழ்க்காணும் வரலாற்று ஆர்வலர்கள் நாளொன்றுக்கு ரூ.1000 வீதம் நன்கொடையாக அனுப்பி ஆதரவு தெரிவித்தனர். 1. புரட்டாசி கேட்டை - வரலாற்று ஆர்வலர் குழு, தொண்டமநாடு கிளை, ஆந்திர மாநிலம் 2. புரட்டாசி மூலம் - திரு.ஜெயபால், வரலாற்று ஆர்வலர் குழு, திருவிடைமருதூர் கிளை, தஞ்சாவூர் மாவட்டம் 3. புரட்டாசி பூராடம் - திரு. கமலக்கண்ணன் அவர்கள், வரலாறு டாட் காம் 4. புரட்டாசி உத்திராடம் - ஆர்.வைதேகி, வரலாற்று ஆர்வலர் குழு, சீர்காழி கிளை 5. புரட்டாசி திருவோணம் - திரு. ஆர். ஸ்ரீநிவாசன், வரலாற்று ஆர்வலர் குழு, நாகப்பட்டினம் மற்றும் திரு.கமலக்கண்ணன் 6. புரட்டாசி அவிட்டம் - திரு. க.மதிசேகர், வரலாற்று ஆர்வலர் குழு, கொங்கணாபுரம் கிளை, சேலம் மாவட்டம் 7. புரட்டாசி திருச்சதயம் - வரலாற்று ஆர்வலர் குழு, நாகப்பட்டினம் மற்றும் திரு. பால. பத்மநாபன் அவர்கள், வரலாறு டாட் காம். இனிவரும் ஆண்டுகளிலும் இது போல் ஏழு நாட்களுக்கும் சிறப்புப் பூஜைகள் செய்திடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.கல்லில் வடிக்கப்பெற்ற சோழர் விழாவிற்கு மீண்டும் உயிர் தருவதும் வரலாற்றுக்கு நாம் செய்யும் சிறு தொண்டுதானே?this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |