http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 103

இதழ் 103
[ ஜனவரி 2013]


இந்த இதழில்..
In this Issue..

தெரிதலில் தொடங்கிப் புரிதல் வரை ...
தேடலில் தெறித்தவை - 9
மலையீசுவரம்
கோனார் கோயில் - திருமால்பூர்
Gokarneswara - 1
இடையார்பாக்கம் மகாதேவர் திருக்கோயில்
அவன்! ஐயையின் தந்தை!
இதழ் எண். 103 > கலையும் ஆய்வும்
இடையார்பாக்கம் மகாதேவர் திருக்கோயில்
கி.ஸ்ரீதரன்
சென்னை - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சுங்குவார்சத்திரத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவில் இடையார்பாக்கம் என்ற ஊர் அமைந்துள்ளது. இவ்வூர் ஶ்ரீபெரும்புதூர் வட்டத்தின் கீழ் வருகிறது. [1]


திருக்கோயிலின் முந்தைய நிலை


இவ்வூரின் மேற்கே ஏரிக்கரையில் மகாதேவர் கோயில் அமைந்துள்ளது. இக்கட்டுரை ஆசிரியர் இங்கு ஆய்வு மேற்கொண்டபொழுது கோயில் வழிபாடு இல்லாமல், விமானத்தில் மரம், செடிகள் முளைத்தும் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. [2] இக்கோயிலின் கட்டுமானம், சிற்பங்கள், கல்வெட்டுகள், வரலாற்றுச் சிறப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை இக்கோயிலைப் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக அறிவித்தது.[3]


புனரமைப்பிற்குப் பின் திருக்கோயிலின் நிலை


இன்றைய தேதியில் இக்கோயில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையால் உரியமுறையில் புனரமைக்கப்பட்டுப் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

கிழக்கு திசை நோக்கி நிற்கும் இக்கற்றளி தூங்கானை மாட (கஜபிருஷ்ட) வடிவில் அமைந்த இருதள விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறையை உள்ளடக்கிய ஆதி தளத்தின் ஆர உறுப்புக்கள் அனைத்தும் நல்நிலையில் காணப்படுகின்றன. அதன் மேலெழும் இரண்டாவது தளத்தின் ஆர உறுப்புக்கள் சிதைந்து விட்டதால் அத்தளம் பூமி தேசம் வரை காணப்படுகிறது. அதற்கு மேல் அமைந்திருக்க வேண்டிய இரண்டாவது தள ஆர உறுப்புக்களும் கிரீவம் சிகரம் ஸ்தூபம் முதலான விமான அங்கங்களும் காலப்போக்கில் சிதைவுற்று விட்டதால் தற்போது காணுமாறு இல்லை.


திருக்கோயிலின் வரைபடம்


விமானத்தின் தென்புறத் தேவக்கோட்டத்தில் தட்ஷிணாமூர்த்தியும், வடபுறக் கோட்டத்தில் பிரம்மனும் காணப்படுகின்றனர். மேற்குக் கோட்டம் தன்னிடமிருந்த இறைவடிவை தற்போது இழந்து நிற்கிறது.

விமானத்தையொட்டி சிறியதொரு அர்த்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

அர்த்தமண்டபக் கோட்டங்களில் வடக்கே துர்க்கையும் தெற்கே பிள்ளையாரும் இருத்தப்பட்டுள்ளர்.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் நான்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன.[4], [5]

(1) முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி 1070 - 1120) - 13வது ஆட்சியாண்டு - 1083
(2) முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி 1070 - 1120) - 37வது ஆட்சியாண்டு - 1107
(3) இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி.பி 1133 - 11150) - 12வது ஆட்சியாண்டு - 1145
(4) இரண்டாம் இராஜாதிராஜன் (கி.பி 1163 - 1178) - 11வது ஆட்சியாண்டு - 1174

இறைவன் பெயர்

இக்கோயிலில் எழுந்தருளி அருள் புரியும் இறைவன் "திருப்படக்காடுடைய மகாதேவர்" என்றும் "ஆளுடையார் திருப்படக்காடுடையார்" எனவும் அழைக்கப்படுவதைக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

ஊரும் நாட்டுப்பிரிவும்

இன்று இவ்வூர் இடையார்பாக்கம் என்று அழைக்கப்பட்டாலும், பண்டைநாளில் "இடையாற்றுப்பாக்கம்" என்றே அழைக்கப்பட்டதையும் அறியமுடிகிறது. மேலும் இவ்வூர் "ஜெயங்கொண்ட சோழமண்டலத்து மணவிற்கோட்டத்துப் புரிசைநாட்டுப் புரிசை" எனவும், "ஜெயங்கொண்ட சோழமண்டலத்து மணவிற்கோட்டத்துப் புரிசை நாட்டு இடையாற்றுப்பாக்கம் என்னும் ராஜவிச்சாதிர சதுர்வேதிமங்கலம்" என்ற நாட்டுப்பிரிவில் அமைந்திருந்ததையும் அறியமுடிகிறது.




கல்வெட்டுக்கள்


இவ்வூருக்கு அருகில் 'புரிசை' என்ற ஊர் அமைந்துள்ளது. மேலும் திருவள்ளூர் அருகே 'மணவூர்' என்ற ஊரும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டுச் செய்திகள்

சோழமண்டலத்து நித்தவிநோத வளநாட்டுக் கிழார் கூற்றத்தைச் சேர்ந்த ஆரூர் உடையான் வைத்தியநாதன் திருச்சிற்றம்பலம் உடையான் என்பவன் இக்கோயில் மகாதேவருக்குத் தேவதானமாக நிலம் இவ்வூரார் வசம் வாங்கி அளித்துள்ளான். பயன்பாடு இல்லாமல் இருந்த அந்நிலத்தினைத் திருத்தி "சோழ அனுக்க விளாகம்" எனப் பெயரிடப்பட்டு அளிக்கப்பட்டதாகக் குலோத்துங்கசோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மேலும் எயிற்கோட்டத்துக் கோநேரி என்ற ஊரைச்ச் சேர்ந்த அரசூர் கிழவன்வேளான மதுராந்தகன் வைத்த நந்தாவிளக்கு எரிப்பதற்காக 95 ஆடுகள் பெற்றுக்கொண்டு நாள்தோறும் உழக்கு நெய் தானும் தன் வர்க்கத்தாரும் அளிப்பதாக பங்கிபுஞ்சையன் என்பான் சம்மதம் அளித்துள்ள செய்தியை மற்றொரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இரண்டாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டில் இவ்வூர் "இடையாற்றுப்பாக்கமான ராஜவிச்சாதிர சதுர்வேதிமங்கலம்" எனக் குறிக்கப்படுகிறது. கோயிலில் விளக்கு எரிக்க இவ்வூரைச் சேர்ந்த அருளாளப்பட்டன் மகள் ஆண்டமைச்சாநி என்ற பெண் புரிசை ஊரார் வசம் 30 காசுகள் அளித்தும், அவர்களிடமிருந்து நிலம் ஒன்றினை வாங்கியும் "திருநந்தாவிளக்குப் பட்டியாக" அளித்த செய்தியினையும் கல்வெட்டினால் அறிகிறோம்.

மேற்படி பெண் 'திருநந்தாவிளக்குப்பட்டியாக' அளித்த நிலம் தண்ணீர் வருவதற்கு வசதியில்லாததால் பயிர் செய்ய இயலாமல் கிடந்தது. இதனால் திருக்கோயிலில் விளக்கெரிக்கும் பணி தடைபட்டது. எனவே இந்நிலத்தினை ஊராரே பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக நந்தா விளக்கு எரிக்க உதவும் பொருட்டு பசுக்களை தானமளித்ததாக இரண்டாம் இராஜராஜன் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இக்கற்றளி முதலாம் குலோத்துங்க சோழரின் ஆணையின் பேரில் 'சந்திரசேகரன் இரவி என்ற சோளேந்திர சிங்க ஆச்சாரியன்' என்பவர் எடுப்பித்ததையும் கல்வெட்டு பொறித்ததையும் (சிலாலேகை செய்வித்தேன்) முதலாம் குலோத்துங்க சோழரின் 37வது ஆட்சியாண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது.

அடிக்குறிப்புக்கள்

1. பார்க்க - தொல்லியல் சுற்றுலா, தொல்லியல் துறை வெளியீடு.2010-பக்.16
2. பார்க்க - கல்வெட்டு இதழ் 20ல் இக்கட்டுரையாசிரியரின் கட்டுரை. தொல்லியல் துறை வெளியீடு
3. தமிழகத் தொன்மைச் சின்னங்கள் - பாதுகாப்பு அறிக்கை - 2002-2005- இடையார்பாக்கம் பக்.1
4.தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் தொகுதி 4. (காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுக்கள்) - பொதுப்பதிப்பாசிரியர். சீ.வசந்தி, பதிப்பாசிரியர் - இரா.சிவானந்தம். தொல்லியல் துறை வெளியீடு.2013.
5.இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை 251-254-1910.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.