http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 104

இதழ் 104
[ பிப்ரவரி 2014]


இந்த இதழில்..
In this Issue..

தமிழ் அமுதம்
தேடலில் தெறித்தவை - 10
Chola Ramayana 11
பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கண்ணனூர்
Gokarneswara - 2
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 2
அம்பர் பெருந்திருக்கோயில்
அறுவர்க்கு இளையநங்கை - 2
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 1
வட்டணை ஆடல் கண்ட திருவாய்மூர் திருக்கோயில்
Book Street Bonanza-2
இதழ் எண். 104 > கலைக்கோவன் பக்கம்
தமிழ் அமுதம்
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணிக்கு,

சிராப்பள்ளி வானொலியில் காலை 7. 30 மணிக்கு ஒலிபரப்பாகும் தமிழ் அமுதம் நிகழ்ச்சியில் பேச அழைத்திருக்கிறார்கள். தமிழே அமுதம்; இதில் தமிழ் அமுதம் வழங்கச் சொன்னால் தமிழ், தமிழ் என்று இரண்டு முறை சொன்னாற் போலத்தானே! தமிழே அமுதம் என்றால், தமிழ் அமுதம் ஒரு பொருட் பன்மொழி ஆகிவிடும்.

அது சரி, அமுதம் - தமிழ் இலக்கியங்கள் தொட்டுப் பார்த்த சொல்லா?

ஆம்! அமுதம், பத்துப்பாட்டிலும் இடம் பெற்றுள்ளது; எட்டுத்தொகையில் காணப்படுகிறது. மதுரைக் காஞ்சி தாய்ப்பாலை அமுதம் என்கிறது. நற்றிணை, 88ஆம் பாடலில், ‘புணர் திரைக் கடல் விளை அமுதம்’ காட்டுவதுடன், அமுதம் உண்க என்று அன்போடு அழைக்கவும் செய்கிறது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இணைந்து போற்றும் அமுதம், அமிழ்தமாகவும் இலக்கியங்களில்
கண்சிமிட்டுகிறது.

தொல் இலக்கணமாக அறிஞர்களால் கொண்டாடப்படும் தொல்காப்பியத்தின் பொருளதிகாரம், வானோர் அமிர்தம் காட்டுகிறது. கற்பியலில் இடம்பெறும் இந்த நூற்பா குடும்பத்தலைவன் எங்கெல்லாம், எதன் காரணமாகவெல்லாம், எப்போதெல்லாம் பேசலாம் என்பதைக் குறிக்கும் அற்புதமான நூற்பாவாகும்.

குறுந்தொகை, நானூறு குறுஞ்செய்யுட்களால் ஆன பழந்தமிழ் இலக்கியம். அதில் நான்கு பாடல்கள் அமிழ்தம் சுட்டுகின்றன. ‘அரும் பெறல் அமிழ்தம்’ எனத் தோழியின் பேச்சாக, பெறுதற்கு அரியது அமிழ்தம் எனக் குறிக்கும் குறுந்தொகை, தலைவியின் கூற்றாக அந்த அமிழ்தத்தைப் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு வழங்குகிறது.

‘அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டி’. ‘தோழி, நம்முடைய அடுத்த வீட்டுப் பெண் அமிழ்தம் உண்பாராக’ என்று தொடங்கிய தலைவியை இடைமறித்த தோழி, ‘அரிதாகப் பெறக்கூடியது அமிழ்தம். அதை அடுத்த வீட்டுப் பெண்ணுக்குக் கிடைக்க வாழ்த்துகிறாயே! இந்தக் கொடை உள்ளத்தின் பின்னணியை நான் தெரிந்து கொள்ளலாமா?’ என்று கேட்டாள்.

தலைவி சொன்னாள், ‘அன்பான தோழியே, என்னை நேசித்துப் பழகி என் உள்ளம் கவர்ந்த காதலர் என்னை மணந்துகொள்ள ‘வருவார்’ என்று அந்தப் பெண் இன் சொல் சொன்னார். மகிழ்ந்தேன். கரிய மெல்லிய சிறகுகளையும் கூரிய நகங்களையும் உடைய வெளவால், பாலைக் கலந்தாற் போன்ற இனிய தேமாவின் பழத்தைத் தின்று, அதன் பின் நெல்லி மரத்தின் புளித்த காயையும் உண்டு, பக்கத்தில் உள்ள உயர்ந்து வளரும் கழைகள் பெற்ற முள் இல்லாத அழகிய பருத்த மூங்கிலில் தொங்கி ஓய்வெடுக்கும். இது போல் அளவற்ற மூங்கில்கள் வளர்ந்து சோலைகளாய்த் திகழும் நாட்டவர் என் காதலர். அவர் எப்போது திருமணம் பேச வருவார் என்று உள்ளம் குமைந்திருந்த எனக்கு, ‘வரும்’ என்ற அந்தப் பெண்ணின் சொல் வாழ்க்கை அளித்தது. அதனால்தான், அத்தனை உயிர்ப்பான சொல்லை அளித்த அப்பெண்ணின் இதழ்களில் அமிழ்தம் நிறையட்டும் என்றேன்’ தலைவியின் இந்த உரை சிறப்பென்றால் அடுத்த வீட்டுப் பெண்ணைக் குறிக்க இச்செய்யுள் கையாண்டிருக்கும் ‘இலாட்டி’ எனும் சொல் கூடுதல் சிறப்பாய்ப் பொலிகிறது.

இல்லத்தாள், இல்லத்தரசி, இல்லக் கிழத்தி என ஏற்கனவே அள்ளக் குறையா அமிழ்தமாய் வாழ்க்கைத் துணை குறிக்கும் இனிய தமிழ்ச் சொற்கள் ஏராளம் இருக்க, குறுந்தொகை இலாட்டி எனும் மற்றொரு சொல்லையும் தருகிறது. இல் ஆட்டி - இலாட்டி. இல்லத்தை ஆள்பவள் எனும் பொருளுடைய இச்சொல் சங்க காலத்தில் பெருவழக்குப் பெற்ற சொல்லாக இருந்தது போலும்.

நற்றிணை கூட இச்சொல்லைப் பெய்துள்ளது. அங்கும் கூட அடுத்த வீட்டுப் பெண்ணை அயல் இலாட்டியாகி அமுதம் பெறுகிறார். அவரும் நற்றிணை நாயகிக்கு ‘வரும்’ என்று விரிச்சி சொன்னவர்தான்.

அதென்ன விரிச்சி? நாம் ஒன்றை நினைத்திருக்கும்போது, அதற்காக ஏங்கியிருக்கும்போது, வேண்டி நிற்கும்போது அந்த ஒன்று ‘கிடைக்கும், வரும், நடக்கும்’ எனுமாறு போல நல்ல சொல் வெளிப்படுமாயின் அதுவே விரிச்சி. தொடர்பற்ற சூழலில், சொல்லிப் பெறாமல், இயல்பாகக் கனியும் நல்ல சொல் விரிச்சி. பழந்தமிழர் இந்த விரிச்சியில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். போருக்குச் செல்லும்போதும், போருக்குச் சென்றவர் மீண்டும் வருவாரா என்று எதிர்பார்த்து நின்ற போதும் விரிச்சி கிடைக்காதா என்று காதுகளை மலர்த்திக் காத்திருப்பர் மக்கள்.

குறுந்தொகையின் இரண்டு அமிழ்தச் சுட்டல்களே விரிச்சிவரை நீண்டுவிட்டன. ஐயூர் முடவர் எனும் புலவர் காதலன் கூற்றாகக் காதலியைக் குறிக்கும்போது அவளை அமிழ்தம் என்கிறார். காதலி இனியவளாம். எத்தகு இனியவள்? அழகிய, இனிய சொல் போல் இனியவளாம். அந்தச் சொல் எப்படிப்பட்ட சொல்லாம்? அமிழ்தம் போன்ற சொல்லாம். இனியவர் எத்தனை பெருமையுடன் பொலிகிறார் பார்த்தாயா? அமிழ்தம் போன்ற சொல், அந்தச் சொல்லைப் போல் அவள், அடடா எத்தனை உயர்வு! எயிற்றியனார் ஐயூராரை ஒரு படி தாண்டி, தலைவியை அமிழ்தம் ஊறும் செவ்வாயினளாய்ப் படம் பிடிக்கிறார்.

அமிழ்தம் அமிழ்து எனவும், அமுதம் அமுது எனவும் வழங்கும். கோயில்கள் வளர்ந்த காலத்தில் அமுது கல்வெட்டுகளில் உணவாகப் பார்க்கப்பட்டது. உண்ணும் அனைத்தும் அமுதாகி நெய்யமுது, தயிரமுது, எள்ளமுது, உப்பமுது என நீண்ட வரலாற்றைக் கல்லெழுத்துக்கள் பேசும்.

அமுது வளர்ந்த வரலாறு வேண்டுமெனில் எழுது, தொடர்ந்து பேசலாம்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.