http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 105

இதழ் 105
[ மார்ச் 2014]


இந்த இதழில்..
In this Issue..

அமுது - ஒரு வரலாற்றுப் பார்வை
Gokarneswara - 3
Chola Ramayana 12
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 3
பெரும்பேறூர் தான்தோன்றீசுவர சுவாமி திருக்கோயில்
நன்னிலம் மதுவனேசுவரர் கோயில்
தேடலில் தெறித்தவை - 11
ஊழி நான்முகன்
இதழ் எண். 105 > கலையும் ஆய்வும்
நன்னிலம் மதுவனேசுவரர் கோயில்
இரா.கலைக்கோவன், மு.நளினி
கும்பகோணம் திருவாரூர்ப் பெருவழியில் 30 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது நன்னிலம். இவ்வூரில் அமைந்துள்ள பாடல் பெற்ற(1) மதுவனேசுவரர் திருக்கோயில்(2) துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரை, கபோதம் பெற்றுள்ள எளிய நுழைவாயிலுடன் தொடங்குகிறது. கூரையின் மேல் தெற்கிலும் வடக்கிலும் கர்ணகூடங்களும் நடுவில் பெருஞ்சாலையும் சுதையுருவங்களுடன் காட்டப்பட்டுள்ளன. பெருஞ்சாலையில் சிவபெருமானும் உமையும் அமர்ந்திருக்க, வலப்புறம் பிள்ளையாரும் இடப்புறம் முருகனும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.

வெளிச்சுற்று

வாயிலுள் நுழைந்ததும் வெளிச்சுற்றின் தென்கிழக்கில் மடைப்பள்ளி அமைய, வடபுறத்தே உள்ள அறைகளில் ஒன்பான் கோள்களும் பைரவர், சூரியன், சனீசுவரன் சிற்பங்களும் உள்ளன. வாயிலுக்கும் மாடக்கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் பிள்ளையார் சிற்பமும் பலித்தளம், கொடிமரம், நந்தி மண்டபம் இவையும் அமைந்துள்ளன.


வெற்றுத்தளத்தின் மீது விமானம்


சுற்றாலை விமானங்கள்

வளாகத்தின் மேற்கிலுள்ள ஒருதள நாகர விமானங்களில் தென்மேற்கில் சித்தி விநாயகரும் மேற்கில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியரும் உள்ளனர். வடமேற்கில் உள்ள ஒரு தளத் திராவிட விமானத்தில் யானைத்திருமகள் இடம்பெற, வடக்கிலுள்ள ஒருதளத் திராவிட விமானத்தில் சண்டேசுவரியுடன் வலக்கையில் மழுவேந்திய சண்டேசுவரர் சுகாசனத்தில் உள்ளார். கரண்டமகுடம், பட்டாடை அணிந்து வலக்கையில் மலருடன் சண்டேசுவரியும் சுகாசனத்தில் உள்ளார். அவரது இடக்கை கடகத்தில் உள்ளது. கரண்டமகுடத்துடன் இடம்புரியாக உள்ள சித்தி விநாயகரின் பின்கைகளில் அங்குசமும் பாசமும் இருக்க, முன்கைகளில் வலப்புறம் தந்தம், இடப்புறம் மோதகம். கரண்டமகுடம், பட்டாடை இவற்றுடன் பின்கைகளில் வ{ரம், சக்தி கொண்டு முன்கைகளில் காக்கும் குறிப்பும் அருட்குறிப்பும் காட்டி நிற்கும் முருகனின் பின்னால் மயில் உள்ளது. வலப்புறமுள்ள தெய்வானை இடக்கையில் மலரேந்தி, வலக்கையை நெகிழ்த்தியுள்ளார். இடமிருக்கும் வள்ளி வலக்கையில் மலரேந்தி இடக்கையை நெகிழ்த்தியுள்ளார்.

மதுவனேசுவரி கோயில்

வளாகத்தின் வடபுறத்தே பெருமண்டபம், முன்மண்டபம், முகமண்டபம், ஒருதள வேசர விமானம் இவற்றுடன் மதுவனேசுவரி கோயில் கொண்டுள்ளார். உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கபோதம் பெற்றுள்ள பெருமண்டபம், முன்மண்டபம் இவை வெறுமையாக உள்ளன.

பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கபோதம் பெற்றுள்ள விமானத்தின் சுவர்க் கோட்டங்களும் அதே கட்டமைப்பில் உள்ள முகமண்டபத்தின் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. கருவறையில் கரண்டமகுடம், கழுத்தணிகள், பட்டாடை இவற்றுடன் இலங்கும் இறைவி முன்கைகளில் காக்கும் குறிப்பும் அருட் குறிப்பும் காட்டி, பின்கைகளில் அக்கமாலையும் மலர் மொட்டும் ஏந்தி சமபங்கத்தில் காட்சிதருகிறார்.

வெற்றுத்தளம்

உபானம், உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், சதுரப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கபோதம் என 3. 28 மீ. உயரத்திற்கு அமைந்துள்ள வெற்றுத்தளம் செங்கல் கட்டுமானமாய் உள்ளது. மேலே மாடக்கோயில் வளாகத்தைச் சூழ அமைந்த கைப்பிடிச் சுவர். வெற்றுத்தளத்தின் விமானம் சார்ந்த பகுதியில் தெற்கிலும் வடக்கிலும் காட்டப்பட்டுள்ள கோட்டங்களில் வடகோட்டம் வெறுமையாக உள்ளது. தென்கோட்டத்தில் முயலகன் மீது வலப்பாதத்தை இருத்தி, மண்டையோடு தங்கிய சடைப்பாரம், உதரபந்தம் பெற்று, வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் பாம்பும் தீச்சுடரும். வலப்பின் கையில் அக்க மாலையும் உள்ளது. வல முன் கை சின்முத்திரையில் அமைய, இட முன் கை சுவடி ஏந்தியுள்ளது. வெற்றுத்தளத்தின் தென் கிழக்கில் அமைந்துள்ள பதினேழு படிகள் மாடக்கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றன. இப்படிகளின் வடபுறத்தே உள்ள மண்டபத்தில் இலிங்கத்திருமேனியராய் பிரம்மபுரீசுவரர் எழுந்தருளியுள்ளார். அதற்கும் சற்றுத் தள்ளி அமைந்துள்ள ஒருதள வேசர விமானத்தில் இலிங்கத்திருமேனியராய் அகத்தீசுவரர் காட்சிதருகிறார்.

சோமாஸ்கந்தர் திருமுன்

வெற்றுத்தளத்தின் மீது பெருமண்டபம், முன்மண்டபம், முகமண்டபம், ஒருதள வேசர விமானம் என அமைந்துள்ள மாடக்கோயிலின் தென்புறத்தே முகமண்டபம், ஒருதளத் திராவிட விமானம் பெற்ற சோமாஸ்கந்தர் திருமுன் விளங்குகிறது. பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கபோதம் பெற்றுச் செங்கல் கட்டுமானமாய் உள்ள சோமாஸ்கந்தர் விமானத்தின் முப்புறக் கோட்டப் பஞ்சரங்களும் வெறுமையாக உள்ளன. முகமண்டபம் விமானத்தின் கட்டமைப்பை ஒத்துள்ளது.

மதுவனேசுவரர் விமானம்

பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கபோதம் பெற்றுள்ள இந்த ஒருதள வேசர விமானம் 4. 71 மீ. பக்கமுடைய சதுரமாக அமைந்துள்ளது. சுவர்க் கோட்டங்களில் தென்புறத்தே ஆலமர்அண்ணலும் மேற்கில் இலிங்கோத்பவரும் வடக்கில் நான்முகனும் காட்சி தருகின்றனர். வலக்கையைத் தலைக்கு அணையாகத் தந்து வல ஒருக்கணிப்பில் உள்ள முயலகனின் மார்புக்குக் கீழே வலத் திருவடியை இருத்தி, வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் பாம்பு சுற்றிய உடுக்கையும் பாசமும் உள்ளன. இட முன் கை முழங்கால் மேல் தாழ, வல முன் கை அக்கமாலையுடன் சின்முத்திரையில் உள்ளது.

பின்கைகளில் மான், மழு ஏந்தியுள்ள இலிங்கோத்பவரின் வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது. வடக்கில் உள்ள நான்முகன் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை ஏந்தி, பதக்கம் வைத்த மாலையுடன் வலக்கையில் காக்கும் குறிப்புக் காட்டி, இடக்கையைக் கடியவலம்பிதமாகக் கொண்டுள்ளார்.

கிரீவகோட்டங்களில் தெற்கில் வீராசனத்தில் ஆலமர் அண்ணலும் மேற்கில் சுகாசனத்தில் தேவியருடன் விஷ்ணுவும் வடக்கில் தேவியருடன் தாமரையில் சுகாசனத்தில் நான்முகனும் உள்ளனர். வலப்பாதத்தை முயலகன் மீது இருத்தியுள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் பாம்பு, உடுக்கை, தீச்சுடர் இவை உள்ளன. வல முன் கை சின்முத்திரையில் அமைய, இட முன் கை சுவடி ஏந்திய நிலையில் முழங்காலின் மீது இருத்தப்பட்டுள்ளது. பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, கிரீடமகுடத்துடன் உள்ள விஷ்ணுவின் முன்கைகள் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் உள்ளன. நான்முகன் வழக்கம் போல் அக்கமாலையும் குண்டிகையும் கொண்டு, முன்கைகளை விஷ்ணுவை ஒப்பக் கொண்டுள்ளார்.

முகமண்டபம்

விமானத்தை ஒத்த கட்டமைப்பில் உள்ள முகமண்டபக் கோட்டங்களில் தென்புறத்தே உள்ள பிள்ளையார் பின்கைகளில் அங்குசம் பாசம் ஏந்தி நின்றகோலத்தில் இடம்புரியாகக் காட்சிதருகிறார். வல முன் கையில் தந்தம், இட முன் கையில் மோதகம். வடபுறத்தே உள்ள மகிடாசுரமர்த்தனியின் பின்கைகளில் சங்கு, சக்கரம் அமைய, வல முன் கை காக்கும் குறிப்புக் காட்டுகிறது. இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது.

பிற மண்டபங்கள்

முன்மண்டபம், பெருமண்டபம் இவற்றின் புறச்சுவர்கள் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், கூரையுறுப்புகள், கபோதம் பெற்றமைந்துள்ளன. தெற்கிலும் கிழக்கிலும் வாயில்கள் பெற்று முச்சதுர, இருகட்டுத் தூண்கள் தாங்கும் வண்டிக்கூடு கூரையுடன் அமைந்துள்ள பெருமண்டபத்தின் வடபுறம் ஒருதள நாகரமாக ஆடவல்லான் திருமுன் அமைந்துள்ளது. திருமேனி இல்லாத அத்திருமுன்னில் ஆடவல்லான் ஓவியம் வரையப்பட்டுள்ளது. முச்சதுர, இரு கட்டுத் தூண்கள், எண்முகத் தூண்கள் தாங்கும் கூரையுடன் உள்ள முன்மண்டபத்தில் நந்தி இடம்பெற்றுள்ளது. மண்டபத்தின் வடபுறம் சுவரொட்டி அமைந்துள்ள திண்ணை வெறுமையாக உள்ளது.

முகமண்டப வாயிலின் தென்புறத்தே பிள்ளையாரும் வடபுறத்தே முருகனும் அமைய, கருவறையில் சதுர ஆவுடையாரில் உருளைப்பாணம் பெற்ற இலிங்கத்திருமேனி இடம்பெற்றுள்ளது. பின்கைகளில் சக்தியும் வ{ரமும் பெற்றுள்ள முருகனின் முன்கைகள் காப்பு, அருள் முத்திரைகளில் உள்ளன. துளைக்கையால் இட முன் கை மோதகத்தைச் சுவைக்கும் பிள்ளையாரின் வல முன் கையில் தந்தம். பின்கைகளில் அங்குசம், பாசம்.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ள இரண்டு(3) கல்வெட்டுகளுள் கி. பி. ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் முற்சோழர் கல்வெட்டு, நாரண்ணன் என்பார் இக்கோயிலில் நந்தாவிளக்கொன்று ஏற்ற வாய்ப்பாகக் கோயில் அலுவலர் மூவரிடம் பன்னிரண்டு கழஞ்சுப் பொன் தந்த தகவலைக் கூறுகிறது. மற்றொரு கல்வெட்டு படிக்க முடியாத அளவிற்குப் பெரிதும் சிதைந்துள்ளது.

குறிப்புகள்

1. சுந்தரர் 7 : 98. ‘கோடுயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்கணான்செய்கோயில்’, ‘பொன்னி நன்னீர்த்துறை வன்திகழ் செம்பியர்கோன் நரபதி நன்னிலத்துப் பெருங்கோயில்’ எனும் பாடலடிகள் குறிப்பிடத்தக்கன.
2. ஆய்வு நாட்கள் 13. 2. 1982, 30. 8. 2008, 23. 10. 2009. இக்கோயில் பற்றிய முதல் கட்டுரை, ‘திருநன்னிலத்துப் பெருங்கோயில்’ எனும் தலைப்பில் 1982 ஜூலை - ஆகஸ்டு திருக்கோயில் இதழில் வெளியானது.
3. நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி -2, 1978 : 234, 235.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.