http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 12

இதழ் 12
[ ஜூன் 16 - ஜூலை 15, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

இன்னல்களைக் களைவோம்
மூதூரும் முதுமக்கள் தாழியும்
பகவதஜ்ஜுகம் - 3
ஆந்தையும் உண்டுதான் படித்த ஞான்றே!
திருமணல்மேடு பஞ்சநதீசுவரர் திருக்கோயில்
மங்களாவூர் மத்யார்ச்சுனேசுவரர் கோயிலும் கல்வெட்டுகளும்
கோயில்களை நோக்கி - 1
தட்டுவார் திறனுக்கேற்பத் திறக்கும் கதவுகள்!
கல்வெட்டாய்வு -10
ஸ்ரீனிவாசநல்லூர் பயணம்
சங்கச்சாரல் - 11
குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)
இதழ் எண். 12 > தலையங்கம்
இன்னல்களைக் களைவோம்
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு எங்கள் அன்பார்ந்த வணக்கம்.

முந்தைய இதழ்களில் திருவலஞ்சுழிக் கோயில் சீரமைப்புப் பணிகள் நடந்துகொண்டிருப்பதைப் பற்றியும், முனைவர். கலைக்கோவன் மற்றும் முனைவர் நளினி அவர்களின் தலைமையில் கல்வெட்டுகளை படியெடுத்துக்கொண்டிருப்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். அப்பணிகள் பலர் செய்த உதவிகளினாலும், ஊக்கத்தினாலும் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பணிகள் செவ்வனே முடிவடைந்தது என்று ஒரு வரியில் கூறினாலும், அப்பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் எத்தகைய இன்னல்கள் இருந்தாலும், பணி எத்தனை கடினமாக இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாது அல்லும் பகலும் உழைத்ததனால் விளைந்த நற்பயன் அன்றோ இது.

இன்னல்கள் ஒன்றா இரண்டா! ஆனால் இங்கு குறிப்பிட்டுக் கூறும்படியான சிலவற்றை, வரும் சந்ததியினர் தெரிந்துகொண்டு அத்தகைய இன்னல்கள் நேராமல் பார்த்துக் கொள்வதற்காகவேனும் இங்கு கட்டாயம் கூறித்தான் ஆக வேண்டும்.

க்ஷேத்திரபாலர் கோயிலில் உள்ள கற்களை முழுமையாய் அகற்றி, அவற்றில் எண்ணிட்டு அவற்றை மீண்டும் சரியான இடங்களில் பொருத்தி கோயிலை சீரமைத்தனர் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படிச் சீரமைத்த கட்டுமானப் பணியாளர்களும் அதனை நேர்த்தியாகவே செய்தனர். இருந்தாலும் அவர்களுக்கு கல்வெட்டு பற்றித் தெரியாதல்லவா! அதனால் கல்லினை அடுக்கும் பொழுது ஒரு சில இடங்களில் மட்டும் சில கற்கள் விடுபட்டு மீதமுள்ள கற்கள் பொருத்தப்பட்டிருந்தன. விடுபட்ட கல்லிற்கு பதில் வேறொரு கல்லைக் கொண்டு கல் வரிசைகள் நிரப்பப்பட்டன. அதனால் என்ன என்று கேட்கிறீர்களா? கல்வெட்டுகள் எதுவும் இல்லாத கோயிலென்றால் ஒரு கல்லை அகற்றி மற்றொரு கல்லை உபயோகித்தால் எவருக்கும் தெரியவும் போவதில்லை அதனால் எந்தவொரு பாதகமும் இல்லை. ஆனால் சுவர், ஜகதி, குமுதம் என எங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள் உள்ள இக்கோயிலில், ஒரு சிறு தவறும் கல்வெட்டினை சிதைத்துவிடுமல்லவா! அப்படித்தான் ஆகிவிட்டது. பெரும்பாலான கற்களை ஒழுங்காக அடுக்கிவிட்டிருந்தாலும், ஓரிரு கற்கள் சரியாகப் பொருத்தப்படாததால் கல்வெட்டில் இடைவெளிகள் இருந்தன. அதனால் செய்தியை முழுமையாய் தெரிந்துகொள்ள முடியாதபடி இருந்தது. அப்படித்தான் இருந்திருக்கும், அங்கு கட்டுமானப் பணிகளை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருக்கும் திரு. சீதாராமனும், வரலாற்றில் ஆர்வம் கொண்டு இப்பணியில் உதவ உள்ளன்போடு ஓடிவந்த திரு. பத்மநாபன் அவர்களும் இல்லையென்றால். அவர்கள் இருவரும் முன்னின்று விடுபட்ட கற்களை கண்டுபிடித்து, கற்களுக்கு சரியான எண்ணிட்டு, கல்வெட்டுத் தொடர்ச்சி விடுபடாத வகையில் அவற்றை அடுக்கிவைக்கவில்லையானால், இன்று முழுமையாய்க் கிடைத்த சில கல்வெட்டுகள் துண்டுகளாகத் தான் கிடைத்திருக்கும்.

திரு. சுந்தர் பரத்வாஜிடம் பணிபுரியும் திரு. சீதாராமனைப் பற்றி இந்த இதழில் திரு. கலைக்கோவன் அவர்களின் கட்டுரையில் படிக்கலாம். திரு. பத்மநாபன், கும்பகோணத்தில் வருவாய்த்துறை அலுவலராகப் பணிபுரிகிறார். அவரும், அவர் நண்பர்களும் சேர்ந்து கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் பல கோயில்களுக்கும் சென்று, பல அரிய சிற்பங்களை கண்டுபிடித்து அவற்றின் காலத்தையும் ஆராய்ந்துள்ளனர். மேலும் அங்குள்ள கிராமங்களில் புதைந்து கிடந்த சில முதுமக்கள் தாழிகளையும் கண்டறிந்துள்ளனர். மிகவும் முக்கியமான அவர்களின் கண்டுபிடிப்புகள் சில தமிழ் நாளேடுகளில் வெளிவந்துள்ளன. அம்முதுமக்கள் தாழியினை பார்க்க ஆர்வம் கொண்ட எங்கள் குழுவினருக்கு, அதனைவிட பலமடங்கு ஆர்வத்துடன் அவ்விடங்களுக்கு அழைத்துச் சென்று, முதுமக்கள் தாழிகளைப் பற்றிய பல செய்திகளையும் மிகவும் நுணுக்கமாக எடுத்துரைத்தனர். குகனோடு சகோதரர்கள் ஐவராகி மகிழ்ந்தது போல் திரு. பத்மனாபன், மற்றும் அவர்கள் நண்பர்கள் வரவினால் எங்கள் குழுவும் மகிழ்கிறது. ஒருமித்த கருத்துடைய பலர் ஒன்றுகூடும்பொழுது அங்கு மகிழ்ச்சிக்குக் குறையேது.

முந்தைய இதழ்களில் குறிப்பிட்டிருந்தபடி, சுண்ணாம்புக் கலவையை சுவரில் பூசி கல்வெட்டினை மறைத்திருந்தது இன்னுமொரு இன்னல். திரு. சுந்தர் பரத்வாஜிடம், வெள்ளைப்பிள்ளையார் கோயில் சுவர்களில் பூசப்பட்டுள்ள சுண்ணாம்பினை அகற்றினால், பல கல்வெட்டுகள் கிடைக்கும் என்று கூறிவிட்டோம். உடனே அவர் அச்சுண்ணாம்பினை அகற்றி சுத்தம் செய்ய ஆவன செய்துவிட்டார். பிறகென்ன, முனைவர். நளினி மற்றும் முனைவர். அகிலா அவர்களின் பேருழைப்பால் அக்கல்வெட்டுகளும் பெருமளவு படியெடுக்கப்பட்டுவிட்டன.

இக்கோயிலிலிருந்து நமக்குக் கிடைத்த அரிய செய்திகள் வரலாறு டாட் காம் இதழ்களில் வெளிவரும். தொடர்ந்து படியுங்கள்.

--ஆசிரியர் குழு.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.