http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 28

இதழ் 28
[ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

இமயத்துக்கே மகுடமா?
கதை 8 - தேவன் தொட்ட சுனை (இறுதிப் பகுதி)
Valanchuli - Interesting Observations
உடையாளூர்க் கயிலாசநாதர் கோயில்
ஜப்பானில் தமிழும் பரதமும்
திரு. ஐராவதம் மகாதேவன் - அறிமுகம்
இரண்டாண்டு நிறைவு வாழ்த்துச்செய்திகள் - II
Links of the Month
இதழ் எண். 28 > ஐராவதி சிறப்புப் பகுதி
திரு. ஐராவதம் மகாதேவன் - அறிமுகம்
இரா. கலைக்கோவன்










பிறப்பு2-10-1930, மன்னச்சநல்லூர் - சிராப்பள்ளி.
கல்விவளனார் கல்லூரி, சிராப்பள்ளி
சென்னைப் பல்கலைக்கழகம்
அருட்தந்தை பெட்ரம் தங்கப்பதக்கம்
வி.எஸ்.சீனிவாசசாஸ்திரி தங்கப்பதக்கம்
பணிஇந்திய ஆட்சிப்பணி (IAS) - 1954
ஆசிரியர் தினமணி - 1987-91
ஃபெல்லோஷிப்ஜவஹர்லால் நேரு - 1970
இந்திய வரலாற்றாய்வுக் கழகம் - 1992
விருதுகள்தமிழ்ச் செம்மல் - மதுரைப் பல்கலைக்கழகம்
செப்புப்பட்டயம் - தமிழகத் தொல்லியல் கழகம்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள் - 2001
செல்வநாயகம் டிரஸ்ட் விருது - 2004
கல்விக்கொடைரூபாய் ஐம்பது இலட்சம்
நூல்கள்The Indus Script : Texts, Concordance and Tables (1977)
Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003)


தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் கருத்தரங்குகள் அறிஞர் பெருந்தகைகள் சந்திக்கும் களங்களாகும். அங்குதான் கல்வெட்டறிஞர் திரு.ஐராவதம் மகாதேவனை முதன் முதலாகப் பார்க்கும் வாய்ப்பமைந்தது. மதிய உணவின்போது புலவிருந்தக வாயிலில் அவர் நின்றிருந்தார். சுற்றிலும் பெருங்கூட்டமாய்க் கல்வெட்டு, தொல்லியல் ஆய்வர்கள். தினமணி ஆசிரியராக அப்போதுதான் அவர் பொறுப்பேற்றிருந்தார். ஏதேதோ கேள்விகள். அனைத்திற்கும் மலர்ந்த முகத்துடன் பதிலளித்துக் கொண்டிருந்தார். நான் சற்றுத் தொலைவில் நின்றபடி அவரையே பார்த்தவாறு இருந்தேன். அகன்ற நெற்றி; அறிவார்ந்த கண்கள்; குழந்தைத்தனமான முகம்; எளிமையான ஆடை; இயல்பான பேச்சு; பார்வை பேசுபவர்களிடம் மட்டுமே இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த சில மணித்துளிகளிலேயே அவரது பழகும் தன்மை எனக்குப் பிடித்து விட்டது. நெருங்கி உரையாட விழைந்தும் அறிமுகம் இல்லாமையினால் தயங்கித் திரும்பினேன்.

தினமணி கதிர் தொடர்ந்து என் கோயிற்கலைக் கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டிருந்த காலம் அது. அதனால் சென்னை செல்லும்போதெல்லாம் தினமணி அலுவலகம் சென்று, 'கதிர்' ஆசிரியர் திரு.கி.கஸ்தூரிரங்கனையும் சந்தித்து உரையாடி வருவேன். அப்படி ஒருமுறை சென்றிருந்தபோதுதான், திரு.கி.கஸ்தூரிரங்கன் 'ஆசிரியரைப் பார்க்கின்றீர்களா?' என்று கேட்டார். உடன் ஒப்புக்கொண்டேன். தொலைபேசியில் என்னை ஆசிரியருக்கு அறிமுகப்படுத்திய திரு.கி.கஸ்தூரிரங்கன் என்னை அவர் அறைக்கு ஆற்றுப்படுத்தினார். திரு.ஐராவதம் மகாதேவனை நேருக்குநேர் மிக அருகில் சந்தித்த அந்த வாய்ப்பு என் நெஞ்சில் நிறைந்தது. என்னைப்பற்றி வினவினார். சொன்னேன். அவர் கட்டுரைகளைப் படித்திருந்தமையால் அவை பற்றிக் கூறி மகிழ்ந்தேன். தினமணிக் கதிரில் தொடர்ந்து எழுதுவது குறித்துச் சொன்னதும், 'படித்திருக்கிறேன்; நல்ல தமிழ் நடை. தொடர்ந்து எழுதுங்கள்' என்று உற்சாகப்படுத்தினார். அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவேண்டுமென்று ஏதோ ஒன்று எனக்குள் சொல்லியது.

தினமணியில் திரு.ஐராவதம் மகாதேவன் பல புதுமைகளைச் செய்தார். இலக்கியத்திற்கும் அறிவியலுக்குமென இரண்டு இணைப்புப் பகுதிகளை உருவாக்கினார். அப்பகுதிகளில் வெளியான கட்டுரைகள், செய்திகள் குறித்த என் கருத்துக்களை தினமணிக்குத் தொடர்ந்து எழுதிவந்தேன். அவற்றை வெளியிட்டமையுடன், அறிவியல் சுடருக்கான கேள்வி பதில் பகுதியில் வாசகர்கள் அனுப்பும் மருத்துவஞ் சார்ந்த கேள்விகளுக்குரிய பதிலளிக்கும் பொறுப்பையும் மகாதேவன் எனக்களித்தார். அவர் ஆசிரியர் பொறுப்பிலிருந்தபோது தினமணிச்சுடரில் வெளியான குளிப்பதற்கு நேரமில்லை என்ற என் கட்டுரை அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட அறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. தவத்திரு அடிகளார் பெருமானின் அருள்நோக்கில் ஆட்படும் பேறும் அந்தக் கட்டுரை வழிதான் எனக்கு அமைந்தது.

புதிதாக வெளியாகியிருந்த என் 'பழுவூர்ப் புதையல்கள்' நூலுடன் திரு. மகாதேவனைக் காண தினமணி அலுவலகம் சென்றிருந்தேன். அவர் தலையங்கம் எழுதிக் கொண்டிருந்தமையால் சற்று நேரம் காத்திருக்குமாறு ஆயிற்று. அவரே அழைத்தார். நூலைத் தந்தேன். நூல் குறித்து அவர் கருத்தறியும் ஆர்வத்தை வெளிப்படுத்தினேன். நான் அடுத்த நாளும் சென்னையில் இருப்பேனா எனக் கேட்டறிந்து, வரச்சொன்னார். தேர்வெழுதிய மாணவன் மனநிலையில்தான் சென்றேன்.

'பொதுவாகவே இப்போது இளைஞர்கள் நன்றாக எழுதுகிறார்கள். அவர்கட்கு வாய்ப்புகள் பெருகியுள்ளன. இந்த நூல் நன்றாக வந்துள்ளது. விவாதங்கள், கருத்துக்கள், சொல்லியிருக்கும் முறை, சான்றுகள், நடை எல்லாம் நன்றாக உள்ளன. கருத்து மாறுபாடுகளைக் குறிக்கும்போது மட்டும் இப்போதிருக்கும் நிலையினும் சற்று மென்மையாகக் கூறினால் நல்லதென்று நினைக்கிறேன்' என்று கூறி, நூலைத் திருப்பித் தந்தார். 'நூல் உங்களுக்குத்தான்' என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். அவருடைய பாராட்டுக்களைவிட இறுதியில் வெளிப்பட்ட அந்த வழிகாட்டல்தான் என்னை ஆட்கொண்டது. அவர் அறையை விட்டு வெளியேறிய அந்த நொடியில் தீர்மானித்தேன். 'இனி எத்தகு கருத்துப் பிறழ்வுகளைச் சந்தித்தாலும் சரி, மென்மையாகவே மறுக்க வேண்டும்'.

தினமணியில் ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்த சில ஆண்டுகள் தினமணியின் பொற்காலம். தமிழுக்கும் அது வளர்பிறைக்காலமே. தமிழண்ணல் தொடங்கிப் பல தமிழ் அறிஞர்கள் அருமையான கட்டுரைகளைத் தமிழ் மணியில் பதிவு செய்தனர். கல்பாக்கம் சீனிவாசன், மருத்துவர் சு.நரேந்திரன், கே.என்.இராமச்சந்திரன், திரு.இராமசுந்தரம் உள்ளிட்ட பல அறிவியல் தமிழ் அறிஞர்கள் அறிவியல் சுடரைச் செழுமைப்படுத்தினர். தமிழில் அறிவியல் கட்டுரைகளைப் பலவாய்ப் படைக்க எனக்கும் சுடர் பெருமளவில் உதவியது. திறமையை மட்டுமே கருத்தில் கொண்டு பத்திரிகை நடத்தியதால் திரு.மகாதேவனின் உழைப்புப் படித்தவர் இடையே தினமணியை அழுந்த நிலைநிறுத்தியது. தமிழ் நாளிதழ் படிக்காத பலர் தினமணி வழி தமிழ் நாளிதழ் உலகின் அறிமுகம் பெற்றதை நானறிவேன்.

டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் அந்தக் காலகட்டத்தில் பொதுமக்களுக்கான வரலாற்றுச் சொற்பொழிவுகளைத் திங்கள்தோறும் நடத்தி வந்தது. ஏதேனும் ஒரு திங்கள் பொழிவாற்ற வருமாறு திரு.மகாதேவனை அழைத்திருந்தேன். அவரும் ஒப்புதலளித்தார். மாலையில் இரண்டு மணிநேரம் தினமணி வாசகர்களுடன் கலந்துரையாடவும் பின் சற்று இடைவெளி விட்டு பிராமி கல்வெட்டுகள் பற்றிப் பேசுவதாகவும் ஏற்பாடாயிற்று. தம் துணைவியாருடன் வந்திருந்த திரு.மகாதேவன் என் இல்லத்தில் உணவருந்தியதைப் பெருமையாகக் கருதினேன். வாழ்க்கை முழுவதும் தமிழ் பிராமி கல்வெட்டுகளைத் தேடி நடந்த அப்பெருந்தகையின் திருவடிகள் பதியும் பேற்றை என் இல்லம் பெற்றது.

அன்று நடந்த இரண்டு நிகழ்வுகளிலும் பங்கேற்பாளர்கள் முன் பலமுறை என்னைப் பெருமைப்படுத்திப் பேசிய அவர் பெருந்தன்மை என்னை நிறைத்தது. ஒருசொல் சொல்லிப் பாராட்டவே பலமுறை சிந்திக்கும் பேராசிரியர்களுக்கு இடையே உண்மையான உழைப்பை மதித்துப் போற்றும் அவர் மாறுபட்ட மனிதராய்த் தோன்றினார். என்னையும் என் வாழ்வரசியும் அவர்கள் பெரிதும் அன்பு பாராட்டி வாழ்த்தியது நேற்று நடந்தது போல் நினைவில் உள்ளது. வாசகர்களின் பல்வேறு விதமான வினாக்களைச் சரியான விடைகளுடன் எதிர்கொண்ட அவருடைய ஆசிரிய ஆளுமையும் பிராமி கல்வெட்டுகளைப் பற்றிய அவருடைய உழைப்பின் பதிவும், தினமணியின் மறுமலர்ச்சி வழி என்னில் உருவாகியிருந்த அவர் தொடர்பான மதிப்பீட்டைப் பன்மடங்காக உயர்த்தின.

உலகத் தமிழ் மாநாட்டிற்காகத் தஞ்சாவூர் சென்றிருந்தபோத்டு திரு.மகாதேவனைக் கருத்தரங்க அவையில் சந்தித்தேன். திரு.பாலாஜி படித்த கட்டுரையொன்றில் காணப்பட்ட கருத்துப் பிறழ்வைச் சுட்டியபோது, என்னை யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொல்லி அமர்வுத் தலைவர் அறிவுறுத்தினார். அப்போது அவையிலிருந்த திரு.மகாதேவன், என்னைப் பெயர் கூறி அழைத்து, 'இயக்குனர், டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்' என்று அறிமுகம் செய்து கொள்ளுமாறு சொல்ல, அதுவே எனக்கு அறிமுகமானது. இரண்டாம் முறையாக அவரது பெருந்தன்மை என்னை ஆட்கொண்டது. எத்தனை பேருள்ளம் என்று வியந்தேன்.

'வரலாறு' இதழ் தொடங்கிய பிறகு அதன் புரவலர் உறுப்பினரான திரு.மகாதேவன், வரலாறு இதழிற்கு இயன்ற போதெல்லாம் கட்டுரைகள் வழங்கி வந்தார். சிறிய அளவில், ஆனால் புதிய கருத்து மலர்வுகளுடன், படிப்பவர்க்கு எளிதில் விளங்குமாறு அவர் கட்டுரைகள் அமைந்தன. எங்கள் மையத்தில் பொழிவாற்ற இரண்டாம் முறையாக அவரை அழைத்திருந்தேன். வந்திருந்தார். சிந்துவெளி நாகரிகச் சுவடுகள் பற்றிய உரை. கலந்துரை நேரத்தில் பல கேள்விக் கணைகள். உணர்வு வயப்படாமல் பொறுமையாக அனைத்துக் கேள்விகளுக்கும் விடைதந்தார். அவரது அடக்கம், தணிவு, எத்தகு வினாவையும் எளிமையாக எதிர்கொள்ளும் திறன் ஆகியன என் நெஞ்சில் ஆழப்பதிந்தன.

'வரலாறு' இதழால் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. அப்பெருந்தகையுடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பமைந்தது. தம்முடைய வாழ்நாள் பணியான, 'Early Tamil Epigraphy' ஐ அவர் உருவாக்கிக் கொண்டிருந்த காலம் அது. ஒரு தவம் போல அப்பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். கருவைச் சுமக்கும் ஒரு தாயின் எதிர்பார்ப்பும் எச்சரிக்கை உணர்வும், நலநோக்கும் அவரிடம் இருந்தன. தம் உழைப்பையும், நூல் வரவிருக்கும் அமைப்பையும், என் போன்றோர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் அவ்வப்போது பகிர்ந்துகொள்வார். அவரது உழைக்கும் ஆற்றல், இயன்றவரையில் பிழைகளில்லாமல் நூலைக் கொணர அவர் மேற்கொண்ட முயற்சிகள், பலர் கருத்துரைகளையும் கேட்டுத் தம் நூலை ஓர் உன்னதப் பதிப்பாக வெளிக்கொணரக் கருதிய அவரது பண்பு ஆகியன இன்றைய ஆய்வாளர்கள் நெஞ்சில் நிறுத்திக் கொள்ளத்தக்கன. பொறாமை, தாழ்வு மனப்பான்மை, இயலாமை, தவறான போட்டியுணர்வு காரணமாகப் பிற ஆய்வாளர்களைப் பற்றிப் பொய்யாகவும் புறம் பேசியும் மகிழ்ந்திடுவோர், திரு.மகாதேவனின் பெருந்தன்மையை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

அவரது பெருந்தன்மைக்குப் பல சான்றுகளை முன் வைக்கலாமெனினும் இரண்டைச் சுட்டினால் போதுமென்று நினைக்கிறேன். பிராமி, வட்டெழுத்துக் கல்வெட்டுகளை மீளாய்வு செய்தபோது சிராப்பள்ளி மலைக் கல்வெட்டுகளையும் அவர் ஆராய வேண்டியிருந்தது. அந்தப் பணிக்கான முன்னேற்பாடுகளை என் பொறுப்பில் விட்டிருந்தார். எங்கள் ஆய்வு மையத்திலிருந்து ஒரு பங்கேற்பாளர் அவசியம் வரவேண்டுமெனப் பணித்திருந்தார். அதனால் பேராசிரியர் முனைவர் மு.நளினி அவர் குழுவில் பங்கேற்றுச் சிராப்பள்ளி மலை ஆய்விற்குச் சென்றார். அங்கு, 'அகரம் குசலன்' எனும் வட்டெழுத்துக் கல்வெட்டைத் தற்செயலாக நளினி கண்டுபிடித்தார். அந்தக் கண்டுபிடிப்பு குழுவின் கண்டுபிடிப்பாகவே கருதப்பட வேண்டுமெனினும், திரு.மகாதேவன் அந்தப் பெருமையை முழுவதுமாய் நளினிக்கே தந்தார். அன்றிரவு அவரைக் காணச் சென்றபோது, 'நளினி கண்டுபிடித்தார்' என்று தொடங்கிக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவர் ஒத்துழைப்பையும் பெருமையையும் அவர் எடுத்துச் சொல்லிய பாங்கு, 'அடடா இந்தக் குழுவில் நாம் இடம்பெறாது போனோமே' என்று என்னை வருந்த வைத்தது.

திரு.மகாதேவன், சிராப்பள்ளி மலைக்கோட்டையைப் படம் எடுத்துத் தருமாறு என்னிடம் கேட்டிருந்தார். அவர் வேண்டுகோளைத் தலைமேல் ஏற்று ஆண்டார் தெரு வீடுகளில் ஒன்றைத் தேர்ந்து, வீட்டார் அனுமதி பெற்று, மாடிக்குச் சென்று, அங்கிருந்து சிராமலைப் பிளவு நன்கு தெரிகிறதா என்பதை உறுதி செய்து கொண்டு படங்கள் எடுத்தனுப்பினேன். அவற்றுள் ஒரு படம் Early Tamil Epigraphy நூலில் வெளியாகியுள்ளது. படமெடுக்கச் சொன்னபோதும், படமெடுத்து அனுப்பியபோதும் அவர் படம் கேட்கிறார், நாம் அனுப்புகிறோம் என்று மட்டும் கருதியிருந்தேன். நூல் வெளிவந்து அதைப் படித்தபோதுதான், அவர் எதற்காக என்னை மலைக்கோட்டையைப் படமெடுக்கப் பணித்தார் என்பதறிந்தேன். என் கண்கள் குளமாயின. 'எத்தனை அன்பு இந்த மனிதருக்கு, எத்தனை பெரிய உள்ளம்!' என்று குழைந்தேன். அவர் குழுவில் இடம் பெற்றதால் எங்கள் மையத்தின் பெயரும் நளினியின் பெயரும் இணையற்ற அவர் நூலில் இடம்பிடித்தன. குழுவில் பங்கேற்காமையாலும் பிராமி கல்வெட்டுகளோடு அதிகத் தொடர்பில்லாததாலும் என் பெயர் அந்நூலில் பதிவாக வாய்ப்பில்லாதிருந்தது. என் பெயரும் அந்நூலில் இடம்பெற வேண்டுமெனக் கருதியோ என்னவோ அப்பெருந்தகை படமெடுக்கும் பணி தந்து என்னையும் நூலில் பதிவு செய்தார். உழைப்பையும் உண்மைத் தன்மையையும் மதிக்கும் அந்தப் பண்பு என் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றது.

என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களுள் ஒன்று அவரது Early Tamil Epigraphy நூல் வெளியிடப்பட்ட நாள். மடல் வழியும் தொலைபேசியும் விழாவில் பங்கேற்குமாறு அன்பொழுக அழைத்தார். அவர் அழைத்ததை எங்கள் ஆய்வு மையத்திற்குக் கிடைத்த பெருமையாகவும் பேறாகவும் கருதி மகிழ்ந்தேன். அரங்கில் நுழைந்ததும் நூலைக் கையில் தந்தார். எத்தனையோ நூல்களை வணங்கத்தக்க பெரியவர்கள் பலரிடமிருந்து பெற்றிருக்கிறேன். ஆனால் இந்த நூல் தரப்பட்ட விதமும் அதன் முதல் பக்கத்தில் எழுதப்பட்டிருந்த சொற்களும் என்னை நெகிழவைத்தன. 'To my dear friend and fellow epigraphist Dr.R.Kalaikkovan, with affectionate regards, Iravatham Mahadevan'.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைவிலிருந்து அவரைப் பார்த்து மகிழ்ந்த அந்த நிலைக்கும், இன்று அப்பெருந்தகையின் நண்பனாக அழைக்கப்பெறும் இந்த நிலைக்கும் இடையில்தான் எவ்வளவு மாற்றங்கள். என் வாழ்க்கையின் பெரும் பேறான அழைப்பு அதுவென உணர்ந்தேன். அதற்கு முன் எப்போதும் ஏற்பட்டிராத உணர்வுப் பெருக்கில் நிலைகொள்ளாதிருந்தேன். மேடையில் என் பெயர் அழைக்கப்பட்டபோது என் உணர்வுகளையே உரையாக்கினேன். நூலை வாங்கியதும் என் கைகள் புரட்டிய பக்கங்களில் பளிச்சிட்ட அந்த மேதையின் உழைப்பையும் அந்த உழைப்பின் கனிவையும் என்னைப் போலவே அவையினரும் நன்கு உணர்ந்திருந்தமையால், என்னால் அவர்களை நெருங்க முடிந்தது. என் வேண்டுகோள் மிகச் சரியானதென மதித்த அனைவரும் எழுந்து நின்று கையொலித்து அவர் உழைப்பைப் போற்றிச் சிறப்பித்தனர். அடுத்தநாள் தினமணி, பெட்டிச் செய்தியாக அரங்கின் அந்த நிகழ்வைத் தனிப்பட வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியிருந்தது.

நூற்றுக்கணக்கான பேராசிரியர்களோடும், கணக்கற்ற ஆய்வாளர்களோடும் மிகச் சிறந்த பல்துறைசார் அறிஞர்களுடனும் பழகும் வாய்ப்பு இறையருளால் எனக்குக் கிடைத்திருக்கிறது. அவர்களுள் சிலர் அறிவிற் சிறந்தவர்கள். ஆனால், அகந்தை நிறைந்தவர்கள். சிலர் அன்பு கமழும் உள்ளத்தர், ஆனால், ஆற்றல் அற்றவர்கள். சிலர் பெரும் பெயருடன் இருப்பவர்கள், ஆனால் ஆழமற்றவர்கள். இந்தப் பெருங்கூட்டத்தில் தொழத் தக்கவராய் விளங்குவார் மிகமிகச் சிலரே. அவர்களுள் திரு.ஐராவதம் மகாதேவன் குறிப்பிடத்தக்கவர். நாற்பதாண்டுகாளுக்கும் மேலாக பிராமி கல்வெட்டுகளுக்கென்றே தம் வாழ்வை அர்ப்பணித்து, மிகப்பெரும் புதையலாய் Early Tamil Epigraphy நூலை அவர் தமிழ்ச் சமுதாயத்திற்குத் தந்திருக்கிறார். இந்தப் பணிக்காக அவரைத் தமிழ்நாட்டரசும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் போட்டி போட்டுக்கொண்டு பாராட்டி மகிழ்ந்திருக்க வேண்டும். செய்யவில்லை. உருப்படியான செயல் எதையும் எப்போதும் செய்வதில்லை என்பதுதான் இங்கு எழுதப்படாத விதியாக உள்ளதே.

வரலாறு இதழ் பொருள் முட்டுப்பாடுகளால் தளர்ந்து வெளிவருவதறிந்து அதற்கு உதவ முன்வந்தார் திரு.மகாதேவன். திரு.எம்.ஜே.எஸ்.நாராயணன் இந்திய வரலாற்றாய்வுக் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்றமை அறிந்ததும் வரலாறு இதழ்களை அவருக்கு அனுப்பிவைத்து, அவருடன் பலமுறை தொலைபேசி, என்னையும் தொடர்பு கொள்ளச் செய்து, 'வரலாறு சிறந்த ஆய்விதழ். அது எக்காரணம் கொண்டும் தளரக்கூடாது.' என்று ஊக்கப்படுத்திப் பெரும் போராட்டத்திற்கிடையில், அக்கழகத்தின் கருணைப் பார்வை வரலாறு இதழின் பக்கம் திரும்புமாறு செய்த பெருமை அவருக்கே உரியது. அந்தப் போராட்டத்தின் பாடுகளை அருகிருந்து பார்த்தவன் என்ற முறையில் அவரிடம் எனக்கு நன்றிக் கடப்பாடு உண்டு.

திரு.மகாதேவன் தாம் உழைத்து ஈட்டிய செல்வத்தின் பெரும் பகுதியை, வீடு உட்பட ஏழை மாணவர்களின் கல்விக்காக வழங்கியவர். இதுகுறித்து அவர் மேற்கொண்ட முயற்சிகாள் அனைத்தையும் நானறிவேன். மிகப் பிற்பட்ட பகுதியில், மிகப் பிற்பட்ட மாணவர்களுக்காக மேல்நிலைப்பள்ளி ஒன்று கட்ட விழைந்த அவரால் கல்வித்துறை நடைமுறைகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால் தம் திட்டத்தின் ஒரு பகுதியை தகுதிக்குரிய மாணவர்களின் உயர்கல்விக்கான அறக்கட்டளை நிதியமாக மாற்றி அமைத்தார். அதன் முதல் விளைச்சலை இந்த ஆண்டு திறனார்ந்த ஏழை மாணவர்கள் சிலர் பெற்று உய்ந்தமையை நாளிதழ்கள் வழி அறிந்து மகிழ்ந்தேன்.

வாழ்நாள் முழுவதும் தாம் சேர்த்த அரிய நூல்களை அவை வீற்றிருந்த அலமாரிகளுடன் தம் செலவில் உ.வே.சாமிநாதய்யர் நூலகத்திற்குக் கொண்டு சேர்த்து, அவை ஆய்வாளர்களுக்குப் பயன்படுமாறு செய்த பெருமைக்குரியவர் திரு.மகாதேவன். காழ்ப்பும் கயமையும் நிரம்பிய ஆய்வுலகத்தில், தம் கால அறிஞர்களை நட்பு பாராட்டி நேசிக்கும் பண்பு வெகுவாகக் குறைந்துவருவது கண்கூடு. ஒருவர் எழுத்திலுள்ள தவறைச் சுட்டிக் காட்டினாலே முகத்திற்கு நேரே குழைந்தும் முதுகிற்குப் பின் புறம்பேசியும் உட்பகை பாராட்டும் ஆய்வாளர்கள் நடுவே, திரு.மகாதேவன் தொழத்தக்கவராய் உவந்து பின்பற்றத் தக்கவராய் உயரிய பண்புகளின் அடையாளமாய்த் திகழ்வதை இங்கு அழுந்தப் பதிவு செய்ய விழைகிறேன்.

தாம் உழைத்து ஈட்டிய பொருளால் தம் பெயரிலோ, தம் துணைவியார் பெயரிலோ, தம்மைப் பெற்றவர்கள் பெயர்களிகோ அறக்கட்டளைகள் அமைக்காமல், தம் கால ஆய்வறிஞர்களான திரு.தி.நா.இராமச்சந்திரன், திரு.கூ.இரா.சீனிவாசன் ஆகியோர் பெயர்களால் தமிழகத் தொல்லியல் கழகத்திலும் டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்திலும் அறக்கட்டளைகள் அமைத்த அப்பெருந்தகையின் பெருந்தன்மையும் அறிவைப் போற்றி ஆராதிக்கும் அவரது பெரும் பண்பும் நினைக்குந் தோறும் என்னை நெகிழவைப்பன.

திரு.மகாதேவன் அணுகுதற்கும் பழகுதற்கும் எளிமையானவர்; அவர் எழுத்தும் அவரைப் போலவே எளிமையானது. கவர்ச்சியாகவோ, கம்பீரமாகவோ பேசவேண்டும் என்று அவர் நினைப்பதில்லை. ஆனால், அவர் உழைப்பின் கம்பீரமும் அன்பின் கவர்ச்சியும் அவர் பேசும்போது அவையைக் கட்டிப்போட்டு விடுகின்றன. 'நீங்கள் சொன்னால்தான் உலகம் ஏற்கும்' என்று முனைவர் திரு.இல.தியாகராசன் தமிழ்ப் பல்கலைக்கழகக் கருத்தரங்கொன்றில், அறிஞர்கள் முன்னிலையில் வெளிப்படையாக அவரிடம் வைத்த வேண்டுகோள் உலகளாவிய அவர் உன்னதம் புரியவைக்கும்.

வரலாறு டாட் காம் என்ற இணையதள வரலாற்றிதழ் ஆசிரியர் குழுவினர் அவரைச் சந்திக்க விழைந்தபோது, அவரிடம் அனுமதி பெற்று, வாய்ப்பேற்படுத்தித் தந்தேன். அக்குழுவினருடன் உரையாடிய பிறகு எனக்கு எழுதிய கடிதத்தில் என்னை, 'அன்புள்ள பேராசிரியர் இரா.கலைக்கோவன் அவர்கட்கு' என்று விளித்திருந்தார் திரு.மகாதேவன். அதிர்ந்து போனேன். ஏனிந்த மாற்றம் என்று வருந்தவும் செய்தேன். வரலாறு டாட் காம் குழுவினர் எங்களிடம் பயிற்சி பெற்று வரலாற்றாய்வில் வளர்ந்து வரும் நிலை கண்டே அவர் இப்படி அழைத்திருக்கிறார் என்பது புரிந்ததும், என்னைப் பழைய நிலைக்கே கொண்டுபோகச் சொல்லி அன்புடன் அவரிடம் வேண்டுகோள் வைத்தேன்.

பேராசிரியர் கூட்டத்துள் ஒருவனாக இருப்பதைவிடத் திரு.ஐராவதம் மகாதேவனின் நண்பர்களுள் ஒருவனாக இருப்பதுதானே பெருமை. எத்தனை பழந்தமிழ் எழுத்துக்களைத் தடவிப் பார்த்த விரல்கள் அவருடையவை! எத்தனை எத்தனை மலைகளை தமிழ்க் கல்வெட்டுகளுக்காக ஏறி அளந்தவை அந்தப் பாதங்கள்! பிராமி எழுத்துக்களைப் பிழையின்றிப் படிக்கவும் பொருத்தமுறப் பொருள் காணவும் பயின்ற சுடர்களல்லவா அவர் கண்கள்! உற்சாகப்படுத்தி உயர வைப்பதன்றி வேறொன்றும் சொல்லத் தெரியாத சொற்கள் பிறக்கும் இதழ்களல்லவா அவருடைய இதழ்கள்! அந்தக் கூரிய பார்வை, அறிவார்ந்த நெற்றி, அன்பான அணைப்பு, எந்த இடத்திலும் யார் முன்னிலையிலும் உரியவர்களை உரியவாறு பாராட்டத் தயங்காத பேருள்ளம்! இப்படிப்பட்ட ஓர் இனியவரின் நட்பினும் பெரும் பேறா பேராசிரியர் அழைப்பு. ஒருக்காலும் இல்லை.

தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வர்கள் அவர் உழைப்பையும் அறிவாற்றலையும் கொடையையும் மதிப்பது உண்மையெனில், அவர் பணிகளைப் பற்றியும் அவரைப் பற்றியும் தகுதி சான்றதொரு நூலை ஒன்றிணைந்து உருவாக்கிடல் வேண்டும். இந்த விதையை Early Tamil Epigraphy நூல் வெளியீட்டு விழாவின்போதே விதைக்க முயன்றேன். தமிழ்ப் பல்கலைக்கழகக் கருத்தரங்கின் போதும் இந்த ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்டேன். இந்தப்பணி தொடங்கும் நாளே திரு.மகாதேவனின் தன்னலமற்ற மகத்தான உழைப்பிற்கு இந்த மண் பதில் மரியாதை செய்யும் நாள்.

- இரா.கலைக்கோவன்
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.