http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 46

இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ]
இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

மணிவிழா நாயகர்
தவறுக்கு தண்டனை
திரும்பிப் பார்க்கிறோம் - 18
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 1
The Chola Temple at Pullamangai(Series)
வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை
முதல் நாள் உலா
"கலை" வளர்த்த பயணங்கள்
குறள்வழி வாழும் குணாளர்
கலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்!!
வணக்கத்துக்குரிய காதல் - சில குறிப்புகள்
Down the memory lane
கம்பன் ஏமாந்தான்
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்
வரலாறே வாழ்வாக - வாழ்வே வரலாறாக... (கலைப்படத் தொகுப்பு)
"கலை" உணர்வு இனிது!!
வாட்டும் வாடையும் ஓடிய ஒன்பதும்
இதழ் எண். 46 > சிறப்பிதழ் பகுதி
கலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்!!
மா. இலாவண்யா
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய். எனக்கு மிகவும் பிடித்தமான இப்பாடலை நான் சில வருடங்கள் முன்பு கேட்டபொழுது எனக்கேற்பட்ட உணர்ச்சிக்கும் இப்பொழுது கேட்கும்பொழுது உண்டாகும் உணர்ச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணிப் பார்க்கிறேன். ஆமாம் சில வருடங்கள் முன்பு எனக்குப் பிடித்த பல பாடல்களைப் போல இப்பாடலும் எனக்கு பிடித்தது என்பதைத் தவிர வேறு சிறப்பேதும் இல்லை. இப்பொழுதோ இப்பாடல் வெறும் பாடலன்று. என் மனதிற்கு மிகவும் அர்த்தம் பொதிந்த பாடல். இப்பாடலைக் கேட்கும்பொழுது நான் நினைப்பது திரு. கலைக்கோவன் அவர்களையே. நம் வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ மனிதர்களைக் கடந்து செல்கின்றோம். அவர்களில் பலரின் முகங்களும் மனதில் பதிவதில்லை. ஒரு சிலர் முகங்கள் பதிவாகின்றன, ஆயினும் அவையும் ஒரு நிமிட நேரமே நம் மனதில் தங்குகின்றன. ஒரு சிலர் ரயில் சினேகமாகச் சிலநாட்கள் நட்புடன் இருக்கிறார்கள். மிகச்சிலரே வாழ்நாள் முழுவதும் நட்புடன் நம் வாழ்க்கையில் அவ்வப்பொழுது மகிழ்ச்சி அலைகளை அள்ளித்தெளித்தபடி இருக்கின்றனர். ஆனால் இரண்டொருவரே நம் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வாழ்வின் போக்கையே மாற்றுகிறார்கள். அப்படி எங்கள் வரலாறு டாட் காம் குழுவினர் அனைவரின் வாழ்க்கையையும் திசை மாற்றியவர் திரு கலைக்கோவன் அவர்கள்தான். அந்தத் திசைதான் வரலாறு. ஆஹா! அத்திசையில் செல்லச் செல்ல எங்களுக்கு நல்முத்துக்களாய் மனதில் பதிந்த நினைவுகளும் புதையல்களாய்க் கிடைத்த வரலாற்றறிவும்தான் எத்தனை எத்தனை!

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் யாஹூ குழும உறுப்பினர்கள் சிலருடன் மேற்கொண்ட ஒரு பயணத்தில்தான் நாங்கள் முதல்முறையாக திரு. கலைக்கோவன் அவர்களைச் சந்தித்தோம். அச்சந்திப்பில் பொன்னியின் செல்வனில் வரும் பலவும் உண்மையில் நிகழ்ந்வையா அல்லது கற்பனையா என்று அறிவதே எங்களின் நோக்கமாக இருக்க, அவரிடம் பல கேள்விகளைத் தொடுத்தோம். நாங்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் பொறுமையுடன் பதிலளித்தார். அம்முதல் சந்திப்பில் என்னை ஈர்த்தது அவரின் தமிழ் நடையே. பேசும் பொழுது பிசிறில்லாத ஆங்கிலம் கலக்காத நல்ல தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் கோர்வையாகவும் அவரால் பதில் சொல்ல முடிந்தது பற்றி எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதற்குச் சில வருடங்களுக்குப் பிறகு வரலாறு டாட் காம் குழுவினருடன் நன்கு பரிச்சயம் ஏற்பட்ட பின்பு நாங்களும் ஆங்கிலம் கலக்காமல் தமிழ்ப் பேசப் பெரிதும் முயன்றோம். இன்றுவரை அது முயற்சியிலேயே இருக்கின்றது. அம்முதல் சந்திப்பிற்கு பிறகு அவருடன் அவர் கோயில்களை ஆய்வு செய்யும் பொழுது கூடச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுதுதான் அவருக்கு வரலாற்றின்மேல் இருந்த ஆர்வமும் பற்றும் எனக்குப் புரிந்தது. ஆங்கிலத்தில் passion என்று கூறுவார்கள். அவருக்கு வரலாறிடத்தில் அந்த passion இருந்தது. வரலாறு ஆர்வம் கொண்டோர் பலர் இருக்கின்றார்கள். வரலாறு சம்பந்தமாகப் புத்தகங்களும் எழுதியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கலைக்கோவன் அவர்கள் வரலாற்றை, கோயிலாய்வை அணுகும் முறையும் அவரது தனித்தன்மையும்தான் எங்களை அவர்பால் ஈர்த்தது என்றால் அது மிகையில்லை.

அவர் கூறுவார், புத்தகங்களின் வழி ஒரு கோயிலைப்பற்றி அக்கோயில் தெரிவிக்கும் வரலாற்றைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம் ஆனால் முழு வரலாறு கோயிலுக்குச் சென்று கோயில்களை ஆராய்ந்தால் மட்டுமே கிடைக்குமென்று. அவர் கோயிலைப் பற்றி ஒரு நூல் வெளியிடுவதற்கு முன்பு அக்கோயிலுக்குப் பலமுறை சென்றுவருவார். கோயிலை ஆராயும்பொழுது ஒரு சிறு தவறும் நேராதபடி ஒவ்வொன்றையும் நின்று நிதானமாகப் பார்த்து மிகவும் விரிவாக ஆராய்ந்து கட்டுரை எழுதுவார். ஒருமுறை சென்று குறிப்புகளெடுத்து எழுதும் கட்டுரைகளைப் பலமுறை கோயிலுக்குச் சென்று முழுமையாய் வாசித்துச் சரிபார்ப்பது அவர் வழக்கம். அவருடன் பல வரலாற்றுப்பயணங்களும் மேற்கொண்ட பிறகு கோயிலை எவ்வாறு முழுமையாக ஆய்வு செய்வதென்று எங்களுக்குத் தெரிந்தது.

வரலாற்றுத் துறையில் வருந்தத்தக்க ஒன்று என்னவென்றால் முழுமையான வரலாறு சான்று கிடைக்காவிடினும்கூட இருக்கும் சான்றுகளை வைத்துச் சிலவற்றை அனுமானம் செய்து ஒரு முழு வரலாறாக உண்மையான வரலாறாக அதை வெளியிடுதுதான். அது நம் முன்னோர்களைப்பற்றிப் புகழ்ச்சியாக கூறுவதே நோக்கமென்றாலும் கூட கலைக்கோவன் அவர்கள் சான்றுகளில்லாது அனுமானம் செய்து வரலாறு வெளியிடுதலை மிகவும் வன்மையாகக் கண்டிப்பவர். இருக்கும் உண்மைகள் நம் முன்னோர்களின் புகழைச் சரிவர நிலைநாட்டும் வகையில் இருக்கும்பொழுது பொய்களைக் கொண்டு பெருமைப்படத் தேவையேயில்லை என்று கூறுவார். ஆமாம் அவர் கூறுவது சரிதானே.

கிடைக்கும் வரலாற்றைக் கலப்படமில்லாமல் வெளியிடுவதையே அவரின் பணியாகக் கொண்டிருக்கிறார். வரலாறு டாட் காம் குழுவினர் நாங்களும் உண்மையான வரலாற்றை மட்டுமே எழுத வேண்டும் என்று நோக்கத்துடன் இருப்பதும் கலைக்கோவன் அவர்களின் வழிகாட்டுதலால்தான். எங்களுக்கு அவர் வழிகாட்டல் இல்லையென்றால் முதலில் வரலாறு டாட் காமே உருவாகியிருக்காது.

எங்களுக்கு எளிமையாக வரலாற்றைப் போதித்த காலையும் அவர் சொல்வதை உள்வாங்கிக் கற்றுக்கொள்ளும் திறன் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆர்வமும் வேறுபடும். அதனை அறிந்து எங்களின் ஆர்வம் வளரும் வகையில் பலமுறை எங்களைக் கேள்விகள் கேட்டு, நாங்கள் சொல்லும் விளக்கங்களையும் கேட்டு, தவறிருந்தால் சுட்டுவார். சரியாகச் சொன்னால் மிகவும் சந்தோஷமடைந்து பாராட்டுவார். அவர் பாராட்டுதல்களைப் பெறவேண்டுமென்று எங்களுக்குள்ளே ஒரு சிறு போட்டி, ஆனால் நட்பான போட்டி நிலவிற்று. மேலும் மேலும் வரலாற்றைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இதனால் பன்மடங்கு பெருகியது.

அதே போலக் கோயிலாய்வில் இருக்கும் பல கூறுகளில் நாங்கள் ஒவ்வொருவரும் நன்றாகச் செய்யக்கூடியது எதுவென்பதையும் தெரிந்து அதற்கேற்ப அந்தந்த கிளைகளில் நாங்கள் வளரும் வகையில் வழிகாட்டினார். அவ்வழிகாட்டின்படி நான் கல்வெட்டினை எனது சிறப்புப்பாடமாக தேர்ந்தெடுத்தேன், கமலக்கண்ணன் கட்டிடக்கலையினை தேர்ந்தெடுத்தார். இசையார்வலர் ராமசந்திரன் இசை சம்பந்தமான கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களை முனைப்புடன் ஆராய்வார். ஆயினும் அனைவரும் பொதுவாக கல்வெட்டு, கட்டிடக்கலை, சிற்பங்கள் என வரலாற்றின் அனைத்து அடிப்படைக்கூறுகளையும் அவரிடமும் முனைவர் நளினி அவர்களிடமுமே கற்றுக்கொண்டோம்.

கலைக்கோவன் கண்மருத்துவர். கண்மருத்துவமனை ஒன்றினைத் திருச்சியில் நடத்தி வருகிறார். அதுவே அவரின் தொழில், பொருள் சம்பாதிப்பதும் அதனால்தான். எல்லோரும் தாம் பொருள் சம்பாதிக்கக்கூடிய தொழிலில் பெரும்பாலான நேரமும் மீதி இருக்கும் நேரத்தில் தன் ஆசை ஆர்வம் இவற்றைப் பொறுத்துக் கலைகளை மேற்கொள்வதோ அல்லது இலக்கியங்கள் கற்பதிலோ செலவழிப்பார்கள். ஆனால் பார்த்தவரையில் நான் நினைப்பது என்னவென்றால் 'கலைக்கோவன் அவர்கள் வரலாற்றினையே முழு மூச்சாகத் தொழிலாகக் கொண்டிருப்பவர், வரலாற்றுக்காகச் செலவிட்ட நேரம்போக மீதி இருக்கும் நேரத்தையே மருத்துவம் பார்க்கச் செலவிடுபவர்' என்றுதான். இதனால் அவர் எத்தனை நோயாளிகளைப் பார்க்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார், அதனால் பணவரவும் எத்தனை குறைந்திருக்கிறது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் வரலாறே நோக்கமாக இருப்பவர்.

இப்படி வரலாறையே தன் வாழ்நாள் பணியாக முழுமூச்சாக மேற்கொண்டிருப்பவரை அவருடைய அறுபதாவது பிறந்தநாள் விழா கொண்டாடும் இவ்வேளையில் வரலாறு தெரிவிக்கும் கல்வெட்டு போல ஒரு கல்வெட்டு எழுதி வாழ்த்தவேண்டுமென்று எனக்கொரு ஆசை. அதனால் அவரைப் புகழ்ந்து பின்வரும் கல்வெட்டினை எழுதியிருக்கிறேன்.

மன்னர்கள் போர்களில் வென்ற நாடுகளை வரிசைப்படுத்திக் கல்வெட்டு மெய்க்கீர்த்திகளில் பொறிப்பது வழக்கம். இக்கலைவேந்தர் செய்து முடித்தது வரலாற்றிற்காகப் பல ஆய்வுகள், அதன் விளைவாக விளைந்த கட்டுரைகளும் நூல்களும். அதனால் இக்கல்வெட்டு மெய்கீர்த்தியில் அவர் எழுதிமுடித்த நூல்களை வரிசைபடுத்தியுள்ளேன். மற்றவை படித்தால் உங்களுக்கே புரியும்.

ஸ்வஸ்திஸ்ரீ
கலைமாது திகழ புகழ்மாது வளர
ஜயமாது விளங்க அவ்வைமாது மகிழ
பல கட்டுரைகளும்
முனைவர் செல்வி நளினி அம்மையும் அகிலா அம்மையும்
உடன் சேர கலை வளர்த்த திருக்கோயில்களும்
காட்டுக்குள் ஒரு கலைக்கோயிலும்
பழுவூர் புதையல்களும்
சுவடழிந்த கோயில்களும்
பழுவூர் அரசர்கள் கோயில்கள் சமுதாயமும்
தளிச்சேரிக் கல்வெட்டும்
தலைக்கோலும்
மகேந்திரர் குடைவரைகளும்
பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்
வலஞ்சுழி வாணரும்
கோயில்களை நோக்கிப்
பல நடையிட்டு
மதுரை மாவட்டக் குடைவரைகளும்
தென்தமிழ்நாட்டுக் குடைவரைகளும்
பல வரலாறிதழ்களும்
புகழ்படத் தந்து வரலாறு மின்னிதழ் மலர வகைசெய்தருளின கலையின் வேந்தராம்
ஸ்ரீராஜமாணிக்கனார் திருமகனார்
ஸ்ரீராஜராஜ கலைக்கோவன் பெருந்தகையாருக்கும்
அவர் நம்பிராட்டியார் உலோகமாதேவியார் அவ்வையாருக்கும்
யாண்டு அறுபது இந்நாள் சர்வதாரி வருடம்
சித்திரைத்திங்கள் எட்டாம் நாள்
அவர்கள் பிறந்தநாள் விழாவானதாலே
விழா எடுப்பித்த
கலைக்கோவனார் திருமகளார் குந்தவைபிராட்டியார்
பரிசளித்தபடி
வரலாறு டாட் காம் குழுவினரோம்
நாங்களும் பரிசளித்து வாழ்த்தினோம்
இது பன்மாகேஸ்வர ரக்ஷை
இப்படிக்கு
திருவரங்கம் சேஷாத்ரி கோகுல் எழுத்து
கோபிசெட்டிபாளையம் கமலக்கண்ணன் எழுத்து
சென்னப்பட்டினம் ராமசந்திரன் எழுத்து
சென்னப்பட்டினம் இலாவண்யா எழுத்து
சென்னப்பட்டினம் கிருபாசங்கர் எழுத்து
குடந்தை சீதாராமன் எழுத்து
குடந்தை பால.பத்மநாபன் எழுத்து
செய்யாறு இராம்நாத் மணி எழுத்து
திருச்சீரபுரம் ரிஷியா எழுத்து
திருச்சீரபுரம் சுமிதா எழுத்து


அன்புடன்
மா.இலாவண்யாthis is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.