![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 66
![]() இதழ் 66 [ டிசம்பர் 15 - ஜனவரி 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
செந்தாமரைகள் பூத்து நகைபுரியும் குளிர்ந்த நீர்க்குளம். வாளை மீன்களும், கறுப்புக் கெண்டைகளும் நீர்ப்பரப்பில் துள்ளி விளையாட, ஆங்கே தவளைகளின் அரகரா வாய்ப்பாட்டுக் கச்சேரி. மேல்துண்டை உதறித் தோளில் போட்டபடியே சங்கக்கவி பரணர் அவ்விடம் நடைபயில வருகிறார். அடர்ந்த மரக்கிளையில் அமர்ந்திருந்த மீன்கொத்திப்புள் ஒன்று தன் எழிலார்ந்த நீலவண்ணச் சிறகை விரித்துத் தன் சிவந்த நீண்ட அலகைக் கீழ்நோக்கி நாட்டி மின்னலென நீர்ப்பரப்பிற்குள் பாய்ந்து கெண்டை ஒன்றைப் பிடித்து நீரினின்று மீள்கிறது. நின்று இரசித்தார் பரணர். இந்நிகழ்வு பலமுறை நடந்தது. சங்கக்கவி பரணருக்கோ ஆதுரச்சாலைக் காட்சி ஒன்று மனத்திரையில் விரிந்தது. நிகழ்வு ஒன்றுக்கு உவமம் பிறந்தது. இதோ பதிற்றுப்பத்துப் பாடல். கொடைச்சிறப்பும் வென்றிச்சிறப்பும் "இரும் பனம்புடையில் ஈகை வான் கழல் மீன் தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்" 42 : செந்துறைப் பாடாண்பாட்டு விளக்கம் கரிய பனந்தோட்டாலாகிய மாலையும் பொன்னாற் செய்த பெர்ய வீரக் கழலுமுடையராய், மீனைப் பிடிக்கும் சூழ்ச்சியால் சிரற் பறவை குளிர்ந்த குளத்துள் பாய்ந்து மூழ்கி மேலே எழுகின்ற காலத்து அதன் வாயலகை ஒப்ப மார்பிற் புண்களைத் தைக்கும் காலத்து அப்புண்ணின் குருதியிலே மூழ்கி மறைந்தெழுகின்ற நெடிய வெண்மையான ஊசியினாலாகிய நீண்ட தழும்பும்... இப்பாடலில், மீன் பிடிக்கும் சிச்சிலிப் பறவை தன் அலகைக் கீழ்நாட்டிக் கொண்டு நீர்க்குள் பாய்ந்து மூழ்கி மறைந்து அலகை மேல்நோக்கி நிறுத்தி வெளியேறுவது, வீரர் மார்பில் கிழிந்த புண்ணைத் தைக்கும் ஊசிக்கு உவமம். (ஊசியானது புண்ணின் உள்ளே செலுத்தப்படுவதும் பின் மேலே எழுவதும்...) பாடல்மூலம் வெளிப்படும் வரலாற்றுப்பதிவு யாதெனில் சங்கத் தமிழர்கள் அறுவை சிகிச்சை அறிவு பெற்றிருந்தனர் என்பதாம். வாளால் உண்டான வெட்டினை ஊசியால் தைத்துக் குணப்படுத்துதல் என்பது இக்காலத்தில் மேல்நாட்டினரின் மருத்துவ முறைகளுள் முக்கியமானதாகக் காணப்படினும், பண்டைக்காலத் தமிழர்கள் இப்பயிற்சியுடையராயிருந்தனர் என்பது தேற்றம். (பாடுபடுபொருள் காரணமாகப் பெயர் பெற்ற புலவர்கள் தொடரை ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடரலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில், சங்கப் புதையல்கள் படிக்கப் படிக்க நிறையக் கிடைக்கின்றன.) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |