http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 66

இதழ் 66
[ டிசம்பர் 15 - ஜனவரி 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

செம்மொழி மாநாடு சிறப்புற...
மரபு வரிசையில் நாயக்க அரசர்களின் உருவச் சிற்பங்கள்
வாசிப்பில் வந்த வரலாறு - 1
சோழர் கால ஆடலாசான்கள்
விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்
அதிசய ராஜம்! அபூர்வ ராஜம்!
இரண்டு சந்தோஷங்கள்
மீன்கொத்தியும் பரணரும் (தமிழரின் அறுவை சிகிச்சைப் பதிவு)
இதழ் எண். 66 > ஆலாபனை
அதிசய ராஜம்! அபூர்வ ராஜம்!
லலிதாராம்

தினமணி இசை விழா மலர் 2009-ல் வெளியான கட்டுரை.

சங்கீத கலா ஆசார்யா எஸ்.ராஜம் ஒரு பல் துறை வல்லுனர். அற்புதமான பாடகர், சிறந்த ஓவியர், அட்டகாசமான ஃபோட்டோகிராபர். இன்று உயிரோடு இருக்கும் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுள் மூத்தவர். இதில் ஆச்சரியம் என்னவெனில், இவரை ஓவியராய் அறிந்தவர் பலருக்கு இவரின் சங்கீத ஆளுமை தெரியாது. சங்கீததில் பரிச்சயம் உள்ளவர்கள், பாடகரான எஸ்.ராஜம்தான் ஓவியமும் தீட்டுகிறார் என்று அறிந்திருப்பதில்லை.அறுபதைத் தாண்டினால் தன் பெயரே மறந்து போகும் நிலையில் பலர் இருக்க, 91-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் ராஜத்தின் நினைவாற்றல் அபாரமானது. தனது பத்தாவது வயதில் கேட்ட தனம்மாள் வீணையையும், நாயினாப் பிள்ளை பாட்டையும் நேற்று கேட்டது போல நினைவு கூர்ந்து பாடியும் காட்டக் கூடியவர். மயிலாப்பூர் நடுத் தெருவில் இருக்கும் அவருடைய வீடு ஒரு சங்கீதத் தலம். அம்பி தீட்சிதர், பாபநாசம் சிவன், மதுரை மணி போன்ற மேதைகளின் சங்கீதம் ஒலித்த இடம். அங்கு அவரைப் பல முறை சந்தித்துப் பெற்ற முத்துக்களின் சில சிதறல்கள் இங்கே:

எங்கள் பூர்வீகம் ஸ்ரீவாஞ்சியம். ஸ்ரீவாஞ்சியம் சுப்பராம ஐயர் என் கொள்ளுத் தாத்தா. அவர் நிறைய தமிழ்ப் பதங்கள் செய்துள்ளார். என் தந்தையார் வி.சுந்தரம் ஐயர் வக்கீலுக்குப் படித்தார். அவர் கோர்ட்டுக் கச்சேரிக்குச் சென்றதை விட, சங்கீதக் கச்சேரிக்குச் சென்றதுதான் அதிகம். பெரிய ஞானஸ்தரான அவரைத் தெடி அக் கால பிரபல வித்வான்கள் வந்த வண்ணம் இருப்பர். நான் இப்போது இருக்கும் வீட்டை எனது ஐந்தாவது வயதில் வாங்கினார். இந்தத் தெருவில்தான் (நடுத் தெரு) மயிலாப்பூர் சங்கீத சபா இருந்தது. அங்கு பிடாரம் கிருஷ்ணப்பா, பாலக்காடு ராம பாகவதர், நாயினாப் பிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை போன்ற ஜாம்பவான்களின் கச்சேரிகளை என் சிறு வயது முதல் கேட்டிருக்கிறேன். சரஸ்வதி பாய் நந்தனார் சரித்தரம் சொன்னார் என்றால் கண்முன்னே வேதியரும் நந்தனும் வந்து நிற்பர். அப்பேர்ப்பட்ட சொல்லாற்றல். அற்புதமான பாட்டு!



கச்சேரிக்கு வரும் வித்வான்கள் எல்லாம் எங்கள் வீட்டில் தங்குவர். அப்படித் தங்கும் போது எனக்கு பல கீர்த்தனங்களைச் சொல்லிக் கொடுப்பர். என் தந்தைக்கு இருந்த செல்வாக்கால், நான் எங்கேயும் போகாமல் நல்ல சங்கீதம் என் வீட்டுக்கே வந்து என்னை ஆட்கொண்டது. குறிப்பாக அன்றைய ஹரிகதை விற்பனர்களிடமிருந்து எண்ணற்ற பாடல்களைக் பாடம் செய்தேன். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர். அவரிடமே 200 கீர்த்தனங்கள் கற்றுக் கொண்டேன். அவரது சிஷ்யை சௌந்திரம் எனது முதல் குரு. காயக சிகாமணி முத்தையா பாகவதருக்கு என் மேல் தனி பிரியம். ‘வல்லி நாயகனே’ போன்ற அவரது சொந்த சாஹித்யங்கள் பலவற்றை எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இசை திருவாலங்காடு சுந்தரேச ஐயரின் வயலின் இசை. அரை நிமிடம் வாசித்தாலும் ராகத்தின் ஜீவனை முழுமையாய் காட்டிவிடும் வாசிப்பு அது! விடியற்காலை என் மூக்கினுள் வயலின் வில்லை நுழைத்து எழுப்பி, பேகடையும் சங்கராபரணமும் சொல்லிக் கொடுத்ததை என்னால் எப்போதும் மறக்க முடியாது.



மதுரை மணி எங்களுக்கு உறவினரும் கூட. சங்கீத உலகில் ஞானி என்றால், அது அவர்தான். “ராஜு! ராகம் எல்லாம் குளிச்சிட்டு வரா மாதிரி சுத்தமா இருக்கணும். ஸ்வரம் பாடறது எப்படி இருக்கணும் தெரியுமா? தங்கச் சங்கிலி மாதிரி இருக்கணும். ஒவ்வொரு ஸ்வரமும் கோத்துக் கோத்து இருக்கணும். ஸ்ருதியில் இம்மி பிசகாம நிற்கணும்”, என்று அடிக்கடி கூறுவார். அவரின் ஸர்வலகு வழியே என்னைப் பெரிதும் கவர்ந்தது. நான் யாரிடம் கற்றேன் என்று சொல்வதைவிட யாரிடமெல்லாம் கற்கவில்லை என்று சுலபமாகச் சொல்லி விடலாம். இருப்பினும், மூவரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

முதலாமவர் அம்பி தீட்சிதர். முத்துஸ்வாமி தீட்சிதரின் வம்சத்தில் வந்தவர். அவரும் மயிலாப்பூரிலேயே தங்கி இருந்தார். என் தந்தையாரின் வேண்டுகோளுக்கு இணங்கி எனக்குச் சொல்லிக் கொடுத்தார். எங்கள் வீட்டுக்கு வந்த முதல் நாள் சுத்த தன்யாசி ராகத்தை லேசாக இழுத்தார். ‘சுப்ரமண்யேன’ அல்லது ‘ஸ்ரீ பார்த்தசாரதி’ போன்ற ஒரு தீட்சிதர் கிருதியைத்தான் சொல்லிக் கொடுப்பார் என்று என் அப்பா நினைத்தார். அவரோ, ‘எந்த நேர்ச்சினா’ என்று தியாகராஜ கிருதியை ஆரம்பிக்கவும் என் தந்தைக்கு ஆச்சரியம் தாளவில்லை. பத்து வயது கூட நிரம்பியிராத எனக்கு, தீட்சிதர் கிருதிகள் போன்ற கஷ்டமான உருப்படிகளில் பாடத்தை தொடங்கியிருந்தால் பாட சிரமப்பட்டிருப்பேன். தியாகைய்யர் எளிமையாவும், ராக ரசம் சொட்டும் படியாகவும் அற்புதமாய் அமைத்திருக்கும் பாடல்களை குழந்தை கூடப் பாடிவிட முடியும். இதனை உணர்ந்துதான் அவர் ‘எந்த நேர்ச்சினா’-வில் பாடத்தைத் தொடங்கினார். அதன் பின், எண்ணற்ற தீட்சிதர் கிருதிகள் கற்றேன். அவர் பைரவியில் பாடிய ‘பால கோபால’ இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு பலகை எடுத்து வரச் சொல்லி, அதில் வெவ்வேறு கோள்களின் நிலைகளை வரைந்து விளக்கி, எனக்கு தீட்சிதரின் நவகிரஹ கிருதிகளைச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில், நவகிரஹங்களை ஓவியமாய்த் தீட்ட அந்தக் கிருதிகள் என் மேல் ஏற்படுத்திய தாக்கமே காரணம். கமலாம்பா நவாவர்ணம், பஞ்சலிங்க கிருதிகள் போன்றவற்றை எல்லாம் சொல்லிக் கொடுத்ததோடு மட்டுமின்று ஸ்வரப்படுத்தி எழுதியும் கொடுத்துள்ளார். அன்று அம்பி தீட்சிதர் எழுதிக் கொடுத்த புத்தகத்தை இன்றும் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வருகிறேன்.



இரண்டாமவர் பாபநாசம் சிவன். அவர் சென்னைக்கு வந்தவுடன் எங்கள் வீட்டுக்குத்தான் வந்தார். மிக மிக எளிமையானவர். கையில் பணமிருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி ஒரே விதமாய்த்தான் நடந்து கொள்வார். நாதோபாசனையைத் தவிர வேறொன்றின் மேலும் நாட்டமில்லாதவர். சென்னையில் அவரின் முதல் மாணவனாகும் பெறு எனக்குக் கிடைத்தது. அவரே நூற்றுக் கணக்கில் பாடல்கள் புனைந்திருப்பினும், பெரும்பாலும் தியாகராஜர், கோபாலகிருஷ்ண பாரதி, அருணாசல கவி போன்றோரின் பாடல்களைத்தான் சொல்லிக் கொடுப்பார். ‘நகுமோமு’ கிருதியை, இன்று பாடுவது போல் அல்லாமல் ‘சுத்த தைவதத்தில்’ எனக்குச் சொல்லிக் கொடுத்தது பசுமரத்தாணியாய்ப் பதிந்தது. அம்பி தீட்சிதர் ஸ்வரப்படுத்தி எழுதிக் கொடுப்பார் என்றால், சிவனோ பேனாவைக் கையால் கூடத் தொட மாட்டார். அவர் பாடப்பாட சங்கதிகள் மலர்ந்த வண்ணம் இருக்கும். அதைக் கவனமாகக் கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அவரைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் என் தந்தையார்தான்.



மூன்றாமவர் மயிலாப்பூர் கௌரியம்மாள். கபாலீஸ்வரர் கோயில் சேவையில் ஈடுபட்டிருந்தவர். அபிநயத்தில் பெரும் பேரைப் பெற்ற பாலசரஸ்வதியே கௌரியம்மாளிடம் கற்றுக் கொண்டிருக்கிறார். தாயைப் போல வாஞ்சையுடன் என்னை நடுத்துவார். பதங்கள் பாடி அபிநயம் பிடிப்பதில் கௌரியம்மாளுக்கே நிகரேயில்லை. ‘எத்தனை சொன்னாலும்’ என்று சாவேரியில் பாடினார் என்றால், பாடல் வரிகளின் பாவம் இசையிலும் அபிநயத்திலும் அப்படிப் பரிமளிக்கும். அவரிடம் கேட்டுதான் பாவப்பூர்வமாய்ப் பாடும் முறையை அறிந்து கொண்டேன். அவருக்கு தெரிந்த பதங்கள் சங்கீத வித்வான்களுக்குக் கூடத் தெரியாது. நிறைய தமிழ்ப் பதங்களையும், §க்ஷத்ரக்ஞரின் பதங்களையும் அவரிடம்தான் கற்றேன்.

இவர்களைத் தவிர காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளையும், வீணை தனம்மாளும் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். ஏகலைவ பாவத்தில், அவர்கள் கச்சேரிகளில் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். நாயினாப் பிள்ளை ‘அம்ப பரதேவதே’ என்று ருத்ரப்ரியாவில் பாடக் கேட்டு, அந்த ராகத்தின் மேல் பைத்தியமானேன். வீணை தனம்மாள் ‘அக்ஷயலிங்க விபோ’ வாசித்துக் கேட்டவர்கள் சங்கீதத்தின் உச்சத்தைக் கேட்டு மகிழ்ந்தவர்கள் என்று கொள்ளலாம்.



எனது முதல் கச்சேரி சித்தூருக்கு அருகில், பரமாச்சாரியாரின் முன், எனது பதிமூன்றாவது வயதில் நடை பெற்றது. என் கச்சேரிக்கு முந்தைய நாள் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பாடினார். அவர் கச்சேரிக்கே முப்பது பேர் கூட இல்லை. அப்படியெனில் என் கச்சேரிக்கு எத்தனை பேர் இருந்திருக்கக் கூடும்? பத்து பேர் கூட இல்லாத நிலையில், எனக்குத் தம்புரா போடக் கூட ஆள் இல்லை. நிலைமையைக் கண்ட அரியக்குடி, “ராஜு! நான் தம்புரா போடறேன். நீ தைரியமாப் பாடு.”, என்று உற்சாகப்படுத்தினார். பொடிப்பயல் சிஷ்யன் பாடுகிறான், அவனுக்குப் போய் தம்புரா போடுவதா என்று எண்ணாமல், ஒரு மகானுக்கு முன் நடக்கும் கச்சேரி நன்றாக அமைய வேண்டும் என்று நினைத்த அரியக்குடியின் செயலை எண்ணும் போதெல்லாம் என் நெஞ்சம் நெகிழ்கிறது.

மியூசிக் அகாடமி தொடங்கப்பட்ட காலமது. அங்கு நடக்கும் இசைப் போட்டிகளில் பத்து வயது முதல் ஐம்பத்தைந்து வயது வரை யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். நான் 1928 முதல் அந்தப் போட்டிகளில் கலந்து கொண்டேன். 1931-ல் தொடங்கி மூன்று முறை முதல் பரிசைப் பெற்றேன். அதில் ஒரு வருடம் புரந்தரதாஸர் கிருதிகளிக்கான போட்டி நடந்தது. அதற்காக எம்.எல்.வசந்தகுமாரியின் தாயார் லலிதாங்கியை அணுகி அவரிடம் பல கிருதிகளைக் கற்றேன். போட்டியில் நுழைந்து பார்த்தால் லலிதாங்கியும் போட்டிக்கு வந்திருந்தார். டைகர் வரதாச்சாரி, முத்தையா பாகவதர், சரஸ்வதி பாய் ஆகிய மூவரும் போட்டியின் நடுவர்களாக அமர்ந்திருந்தனர். போட்டியின் முடிவில் எனக்கு 72 மதிப்பெண்கள். என் குருவான லலிதாங்கிக்கும் 72 மதிப்பெண்கள் கிடைத்திருந்தது. முதல் பரிசி யாருக்கென்று முடிவுக்கு வர முடியாத நிலை. அதனால், அடுத்த நாள் எங்கள் இருவரையும் மீண்டும் ஒரு முறைப் பாடச் செய்தனர். என் அதிர்ஷ்டம், எனக்கு முதல் பரிசும் லலிதாங்கிக்கு இரண்டாம் பரிசும் என்று முடிவானது. எனக்கு முதல் பரிசு கிடைத்ததை எண்ணி என்னைவிட அதிகம் மகிழ்ந்தது லலிதாங்கிதான். எவ்வளவு பெரிய மனது!

நான் மியூசிக் அகாடமியில் பரிசு பெற்ற செய்தி ஹிந்து செய்தித்தாளில் என் படத்துடன் வந்தது. அதுவே எனக்குத் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. வி.சாந்தாராம் தயாரித்த ‘சீதா கல்யாணம்’ என்ற படத்தை பாபுராவ் பெண்டார்கர் இயக்கினார். நான் ராமனாகவும், என் தங்கை ஜெயலட்சுமி சீதையாகவும், என் தந்தையார் ஜனகராகவும், என் தம்பி பாலசந்தர் ராவணன் தர்பாரில் கஞ்சிரா வாசிப்பவனாகவும் நடித்தோம். இதுதான் பாபநாசம் சிவன் இசை அமைத்த முதல் படமாகும். ‘அம்ம ராவம்மா’ மெட்டில் ‘நல்விடை தாரும்’ என்று சிவன் அமைத்து, நான் பாடிய பாடல் அன்று பெரும் வரவேற்பைப் பெற்றது. வெற்றிப் படமாக அமைந்த சீதா கல்யாணத்துக்குப் பின், எனக்கு பல கச்சேரி வாய்ப்புகள் அமைந்தன. படம் ஓடும் இடங்களில் எல்லாம், என்னையும் என் தம்பியையும் அழைத்து கௌரவப்படுத்தி, படத்தின் இடைவேளையின் போது எங்களின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தனர். அதன் பின், இந்தியா முழுவதும் நானும் என் தம்பியும் கச்சேரிகள் செய்தோம். நான் பாட, என் தம்பி பாலசந்தர் கஞ்சிரா, தபலா மற்றும் ஹார்மோனியம் வாசிப்பான். பின்னாளில்தான் வீணையில் நல்ல தேர்ச்சியைப் பெற்று பெரும் புகழை அடைந்தான். சீதா கல்யாணத்துக்குப் பின், ‘ராதா கல்யாணம்’, ‘ருக்மிணி கல்யாணம்’ என்று இரு படங்களில் நடித்தேன். அதன் பின் நிஜ கல்யாணம் நடந்ததால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். 1942-ல் ‘சிவகவி’ படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் ஜோடியாக என் தங்கை ஜெயலட்சுமி நடித்தாள். அவளுக்குத் துணையாக நானும் என் தந்தையும் படப்பிடிப்புக்குச் சென்றோம். சென்ற இடத்தில் முருகனின் மூன்று வடிவங்களில் நானும், ஆசிரியராக என் தந்தையும் நடித்தோம்.

இசையில் இருந்தது போலவே எனக்கு ஓவியத்திலும் நாட்டம் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் என் தாயார். அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் நகாசு தெரியும். கோலமிட்டாரெனில் நாள் முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். வரலட்சுமி விரதத்தின் போது முகமெழுதிக் கொடுக்க பலர் என் அன்னையை அழைப்பார்கள். எனக்கு லிங்கையா என்றொரு நண்பன் இருந்தார். அவர் பிரபல ஓவியர் (கல்கி புகழ்) மணியத்தின் சித்தப்பா. படம் வரைவதில் அவருக்கு இருந்த ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டது. என் குடும்பத்தினரும் என்னைப் படம் வரைய உற்சாகப்படுத்தினர். பள்ளிப் படிப்பை முடித்த பின், ஓவியக் கல்லூரியில் சேர முடிவெடுத்தேன். இந்தக் காலத்தைப் போல, பிள்ளைகள் எல்லோரும் டாக்டராகவும் இஞ்சினியராகவும் மட்டுமே ஆக வேண்டும் என்று நினைக்காத காலமது. இரண்டாம் வருடப் படிப்புக்குப் பின் எனக்கு டபுள் பிரமோஷனும் டாக்டர் ரங்காச்சாரி ஸ்காலர்ஷிப்பும் கிடைத்தன. கல்லூரியில் முதல் மாணவனாக தேறிய போதும், அங்கு சொல்லித் தரப்பட்ட மேற்கத்திய ஓவிய முறை என்னைப் பெரிதும் கவரவில்லை. இந்தியக் கலைப்பாணியே என்னைப் பெரிதும் ஈர்த்தது. பல்லவர்களின் சிற்பங்களும், சோழர்களின் செப்புப் படிமங்களும் என் ஓவியங்களைப் பெரிதும் பாதித்தன. அஜந்தா ஓவியங்களைக் கண்டதும் அரண்டு போனேன். அவற்றக் கண்ட பின், பல மாதங்களுக்கு பிரஷ்-ஐ கையால் கூடத் தொடவில்லை.

அஜந்தா, சிகிரியா, தஞ்சாவூர், காஞ்சிபுரம் என்று பல ஊர்களுக்குச் சுற்றி, நமது கலைப் பொக்கிஷங்களைக் கண்டு களித்தேன். அப்போதெல்லாம் மகாபலிபுரம் செல்வதென்றால் பகிங்காம் கால்வாயில் இரவு முழுதும் படகுச் சவாரி செய்ய வேண்டும். பால், ரொட்டி போன்றவற்றை எடுத்துக் கொண்டு மாமல்லபுரத்தில் இரண்டு மூன்று நாட்கள் கூடத் தங்கி படம் வரைவேன். 1940-களின் ஆரம்பத்தில் மியூசிக் அகாடமிக்காக சங்கீத மும்மூர்த்திகளை ஓவியமாகத் தீட்டினேன். இன்று அந்த ஓவியம் இல்லாத இசை ரசிகர்கள் இல்லமே இல்லை எனலாம். கலைமகள் பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்த கி.வ.ஜகன்னாதன் என் ஓவியங்களை விரும்பித் தொடர்ந்து பிரசுரித்தார். இலக்கியங்கள், புராணங்கள் தொடர்பாக பல ஓவியங்கள் வரைய அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. சங்கீதத்தில் உள்ள தேர்ச்சியால், சங்கீத சம்பந்தமான ஓவியங்கள் பல வரைய முடிந்தது. வாக்கேயக்காரர்கள், கீர்த்தனங்கள், ஸப்தஸ்வரங்கள் என்று சங்கீத சம்பந்தமாய் எண்ணற்ற ஓவியங்களை பத்திரிக்கைகளுக்காகவும் என் தனிப்பட்ட நிறைவுக்காகவும் வரைந்துள்ளேன். சுமார் நூறு கீர்த்தனங்களை கோட்டோவியமாய் வரைந்து, தக்க விளக்கங்களுடன் நான் வடிவமைத்த லெட்டர் பேட்-கள் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

1943-ல் அகில இந்திய வானொலியில், ‘சிலம்பு’ என்ற பெயரில் ஒரு ஒபேரா நிகழ்ச்சி தயாரானது. சிலப்பதிகாரக் கதையை இசை வடிவில் கொடுக்கும் நிகழ்ச்சியான அதில், தண்டபாணி தேசிகர், மதுரை சோமசுந்தரம், பி.ஏ.பெரியநாயகி முதலானோர் பங்கு பெற்றனர். ஒபேராவுக்கான முதல் முயற்சி என்பதால் பலருக்கு அந்த வடிவம் பிடிபடவில்லை. ஒத்திகையின் போது நான் வாத்தியக்காரர்களுக்கும் பாடகர்களுக்கும் புரியும்படி விளக்கினேன். இதனைக் கண்ட நிலைய இயக்குனர், என்னை அகில இந்திய வானொலியில் சேரச் சொன்னார். அந்த நிகழ்வு என் வாழ்வில் பெரிய திருப்புமு¨னெயாக அமைந்தது.

அகில இந்திய வானொலியில் நிரந்தர வருவாய் தரும் வேலை ஒன்று கிட்டியதால் கச்சேரிகள் செய்து பிழைக்க வேண்டியிருக்கவில்லை. அதனால், பல புதுமைகளைப் புகுத்தவும், பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடவும் முடிந்தது. கச்சேரியில் பாடும் போது, கேட்க வருபவர்களுக்காகப் பாட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நமக்குப் பிடித்ததைப் பாடினால், பலர் ஆட்சேபிக்கக் கூடும். ரேடியோவில் பாடும் போது அந்த இடைஞ்சல் இல்லை. அதிகபட்சம், நாம் பாடுவது பிடிக்கவில்லை என்றால் வானொலியை அணைத்துவிடக்கூடும். வானொலி வேலையில் வந்த வருவாய் போதுமானதாக இருந்ததால், ஓவியத்திலும், எனக்குப் பிடித்த வகை ஓவியங்களை மட்டும் வரைந்தால் போதும். காசுக்காக என் மனம் ஒவ்வாத ஓவியங்களை வரையத் தேவையிருக்கவில்லை. இதைத் தவிர, வானொலிக்கு வராத இசைக் கலைஞர்களே கிடையாது. அவ்வாறு வருபவரிடமிருந்து எண்ணற்ற சங்கீத விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு முறை மைசூரிலிருந்து ஒரு பெண், “ஸ்ரீகாந்த எனக்கிஷ்டு” என்ற புரந்தரதாசர் பாடலை வழக்கமாகப் பாடும் கானடா ராகத்தில் பாடாமல் கன்னட ராகத்தில் பாடினார். கேட்டதும் மெய் சிலிர்த்துப் போனேன். உடனே அவரை அணுகி பாடலைக் கேட்டறிந்து, அதைப் பல கச்சேரிகளில் பாடினேன். பெரிய பாடகர்கள், அதிகம் தெரியாத பாடகர்கள், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணற்ற பேர்களைச் சந்தித்து, அவர்களிடமிருந்து எல்லாம் அரிய கிருதிகளைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ரேடியோவின் மூலம்தான் கிடைத்தது.

நவராத்திரியின் போது நவாவர்ண கிருதிகள், கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது அந்தக் கோயில் சம்பந்தப்பட்ட கிருதிகள் என்று பல வகையான நிகழ்ச்சிகளை உருவாக்கவும், பாடவும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி திருக்குறளுக்கு அழகான ராகங்களின் மெட்டமைத்துள்ளார். முன்கோபியும், கோபம் வந்தால் அடிக்கக் கூடியவருமான அவரிடம் பாடம் கேட்க எல்லோரும் தயங்கினர். நான் துணிந்து அவரிடம் கற்று, அவற்றை வானொலியில் பாடிப் பரப்பினேன். பல பாடல்களுக்கு மெட்டமைக்கவும், மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு இசையமைக்கவும் அநேக வாய்ப்புகள் வானொலி மூலம் கிடைத்தன.

இத்தனை ஆண்டு கால கலை வாழ்க்கையில் எனக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் நான் மிகவும் உயர்வாகக் கருதும் விருது எனக்கு அமெரிக்காவில் கிடைத்தது. 1982-ல் அமெரிக்கா சென்று 30 கச்சேரிகள் செய்தேன். கடைசி கச்சேரி வாஷிங்டனில் நடந்தது. அன்று, சுத்த சீமந்தினி ராகம் பாடி ‘ஜானகி ரமண’ கிருதியை விஸ்தாரமாகப் பாடினேன். கச்சேரி முடிந்ததும், இரு வயதானப் பெண்கள் என்னை அணுகி, “சுத்த சீமந்தினி ரொம்ப நன்றாக இருந்தது. நீங்கள் பாடுவதைக் கேட்ட போது, அந்தக் காலத்தில் நாங்கள் கேட்ட நாயினாப் பிள்ளையின் ஞாபகம் வந்தது.”, என்றனர். நான் பாடுவதைக் கேட்டு, என் மானசீக குருவான நாயனாப் பிள்ளையின் ஞாபகம் வந்திருக்கிறதென்றால், இதைவிட எனக்கு என்ன பெருமை கிடைத்துவிட முடியும்?

ராகங்கள் அனைத்துமே அற்புதமானவை. ஆனால், சிலர் விவாதி ராகங்கள் என்று அழைக்கப்படும் ராகங்களை, தோஷ ராகங்கள் என்று ஒதுக்கி வந்தனர். காலப்போக்கில், இந்த ராகங்களை யாருமே தீண்டாத நிலை ஏற்பட்டுவிட்டது. உண்மையில் அந்த ராகங்களைப் பாடினால் தோஷம் வராது. சந்தோஷம்தான் வரும்! எனக்கு, வழக்கமான கல்யாணி, காம்போதி பாடுவதை விட விவாதி ராகங்களைப் பாடவே விருப்பம். கோடீஸ்வர ஐயரின் கீர்த்தங்கனளில் ஆழ்ந்து ஊரியது அதற்குக் காரணம். கோடீஸ்வர ஐயர், ‘கந்த கானாமுதம்’ என்ற பெயரில் 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல் புனைந்துள்ளார். அவற்றை துணை நிலைய இயக்குனராக இருந்த த.சங்கரன் எனக்களித்துப் பாடச் சொன்னார். நானும், வானொலி நிலையத்தில் இருந்த வைதேகி என்ற பாடகியும் வாரம் இரு பாடல்களாக தொடர்ந்து வானொலியில் பாடினோம். அன்று தொடங்கி கோடீஸ்வர ஐயரின் பாடல்களையும், விவாதி ராகங்களையும் பரப்புவது என் வாழ்வின் முக்கிய லட்சியங்களாகக் கொண்டேன். இந்த 72 கிருதிகளை, ராகம் நிரவல் கல்பனை ஸ்வரங்களுடன் பாடி குறுந்தகடுகளாக வெளியிட்டுள்ளேன். எண்ணற்ற பேர்களுக்கு, “நிச்சயம் ஒவ்வொரு கச்சேரியிலும் பாடுவேன்”, என்று சத்தியம் வாங்கிக் கொண்டு, கோடீஸ்வர ஐயரின் கிருதிகளைச் சொல்லிக் கொடுத்துள்ளேன். இன்று முன்னணி வித்வான்களாய் விளங்கும் பலர் கோடீஸ்வர ஐயரின் கிருதிகளைப் பரவலாகப் பாடுவதைக் காண நிறைவாக இருக்கிறது.

விவாதி ராகங்களைப் பாடினால் ஆகாது என்பவர்களின் வாக்கில் உள்ள பொய்யை என் வாழ்வே எடுத்துக்காட்டும். எத்தனையோ ஆண்டுகளாய் விவாதி ராகங்களைப் பாடி வருகிறேன் என்ற போதும், 90 வயதைத் தாண்டிவிட்ட போதும் என் வாழ்வு நிறைவானதாகவே அமைந்துள்ளது.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.