http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 76

இதழ் 76
[ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழமுடியாத ஊரும் தொல்லியல் துறையும்
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 2
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 1
மேற்றளியாரும் நலக்குன்றத்தாரும் - 1
சிபியும் நானும் - 2
கனிவின் பாலை
இதழ் எண். 76 > கலையும் ஆய்வும்
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 1
மு. நளினி

சோழர்களுடையதாகக் கிடைத்திருக்கும் பல்வேறு செப்பேடுகள் அதிகம் பேசப்படாத தொகுதி உத்தமசோழரின் சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகளாகும். எப்படி, எப்போது, எங்கிருந்து இத்தொகுதி சென்னை அருங்காட்சியகத்திற்கு வந்து சேர்ந்தது என்பது குறித்துத் தகவல் இல்லை(1). இச்செப்பேட்டுத் தொகுதியில் ஐந்து ஏடுகளே உள்ளன. முன்னால் இருக்க வேண்டிய சில ஏடுகளும் பின்னால் ஓர் ஏடும் கிடைக்காமல் போய்விட்டன. கிடைத்திருக்கும் ஐந்து ஏடுகளின் இரு புறங்களிலும் செய்தி வெட்டப்பட்டுள்ளது. முதல் ஏட்டின் முன்புறம் பன்னிரண்டு வரிகள் உள்ளன. இவற்றுள் பதினொரு வரிகள் வடமொழியில் உள்ளன. பதினொன்றாம் வரியின் பிற்பகுதியில் தொடங்கும் தமிழ்ப்பகுதி ஐந்தாம் ஏட்டின் இறுதிவரை தொடர்கிறது. உரைநடையாகவும் பாடல்களாகவும் கலந்து அமைந்துள்ள வடமொழிப் பகுதி கிரந்த எழுத்துக்களில் வெட்டப்பட்டுள்ளது. தமிழ்ப்பகுதி முழுவதும் உரைநடையாகவே அமைந்துள்ளது.

இந்த ஏடுகளின் வலப்புறம், ஏட்டின் மையப்பகுதியில் வட்டமாகத் துளையிடப்பெற்றுள்ளது. இத்துளைகளின் வழியே இவ்வேடுகளைப் பிணைத்திருக்கும் வளையத்திலுள்ள முத்திரை மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையில் சோழர்களின் சின்னமான புலி அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதன் முன்னால் இரண்டு மீன்கள். இந்த மூன்றையும் அரவணைத்தாற்போல், கீழ்ப்பகுதியில் சேரரைக் குறிக்கும் வில். மேலே கொற்றக்குடையும் அதற்குச் சற்றுக் கீழாகப் பக்கவாட்டில் இருபுறமும் சாமரங்களும் உள்ளன. மையத்திலுள்ள பாண்டிய, சோழச் சின்னங்களின் இருபுறமும் பக்கத்திற்கொன்றாய் இரண்டு குத்துவிளக்குகள். முத்திரையின் விளிம்பையொட்டீ, 'அரசர் பரகேசரிவர்மரின் இணையற்ற இந்த ஆணை, அவரது ஆட்சிப் பகுதியிலுள்ள அரசர்களுக்கு நீதியைக் கற்பிக்கிறது' என்னும் பொருளில் அமைந்த வடமொழி சுலோகம் வெட்டப்பட்டுள்ளது(2).

இச்செப்பேட்டின் எஞ்சியிருக்கும் வடமொழிப்பகுதியால் கச்சிப்பேட்டிலுள்ள கருவுழான்பாடி, கம்சகப்பாடி(3), அதிமானப்பாடி, எற்றுவழிச்சேரி ஆகிய பகுதிகளில் குடியிருந்த இருவகுப்புப் பட்டு நெசவாளர்களிடம் இருநூறு பொன் வைப்புநிதியாகத் தரப்பட்டதையும், மேற்கண்ட நான்கு குடியிருப்புகளுள் அதிமானப்பாடி, கருவுழான்பாடி ஆகியவற்றில் குடியிருந்தாரைக் கோயில் மேலாளர்களாக உத்தமசோழர் நியமித்ததையும், கச்சிப்பேட்டிலுள்ள மற்றொரு பகுதியான சோழர் நியமத்தில் குடியிருந்தோர் ஊரகத்திலிருக்கும் கடவுளுக்குத் திங்கள் தோறும் இரண்டு பிரஸ்தம் ஒரு குடுபகம் அரிசியும், ஒரு பிரஸ்தம் எண்ணெயும் தரவேண்டும் என்பதோடு அரசருக்குத் தரவேண்டிய அனைத்து வரிகளில் இருந்தும் அவர்களுக்கு விலக்களித்து மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மர்(4) ஆணையிட்டதையும் அறிகிறோம். மேலும் ஊரகத்திலுள்ள பெருமாள் கோயில் கணக்குகளை இச்சோழர் நியமத்தாரும், கோயில் மேலாளர்களுமாய் முறை வைத்து எழுதி அவற்றை ஒவ்வொரு மாதமும் இந்நான்கு குடியிருப்புகளில் இருந்த அரச ஆடைகள் தயாரிக்கும் நெசவாளர்களிடம் காட்டுதல் வேண்டும்.

இந்த வடமொழிப் பகுதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் திரு எச். கிருஷ்ண சாஸ்திரி, இறுதிச் செய்தியைத் தம் மொழிபெயர்ப்பில் சரியாகச் சொல்லியிருக்கிறார்(5). ஆனால் இச்செப்பேடுகளுக்கான முன்னுரை விளக்கம் எழுதுமிடத்தில் வேறுவிதமாகப் பொருள் தந்து எழுதியிருக்கிறார்(6). அதன்படி சோழர் நியமத்தார், அரசர்க்குரிய ஆடைகள் தயாரிக்கும் நெசவாளர்களாக அதிமானப்பாடி, கம்சகப்பாடி, கம்புழான்பாடி, ஏற்றுவழிச்சேரி ஆகிய நான்கு குடியிருப்புகளிலும் வாழ்ந்து வந்தவர்களிலிருந்து நியமிக்கப்படும் கோயில் மேலாளர்களுடன் இணைந்து முறைவைத்து, ஊரகத்துப் பெருமாள் கோயில் கணக்குகளை எழுதுதல் வேண்டும்.

நூற்றுப் பத்தேகால் வரிகளில் அமைந்துள்ள தமிழ்ப்பகுதி, கச்சிப்பேட்டிலுள்ள ஊரகப் பெருமாள் கோயிலுக்குரிய வரவினங்களைக் கோயிற் செயற்பாடுகளுக்காக ஒழுங்குபெற ஒதுக்கீடு செய்தும் கச்சிப்பேட்டின் இரண்டு சேரிகளில் குடியிருப்பாரில் இருந்து கோயிற் கணக்குகளை எழுதவும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் அலுவலர்களை அமைத்தும் அரசர் உத்தமசோழர் ஆணையிட வேண்டுமென, அரச அலுவலர் சிக்கருடையான் நக்கன் கணிச்சனான சோழமூவேந்த வேளார் அரசரது பதினாறாம் ஆட்சியாண்டில், கச்சிப்பேட்டு அரண்மனையிலுள் தென்புறத்தே அமைந்திருந்த சித்திரமண்டபத்தில் அரசர் பெருமான் எழுந்தருளியிருந்தபோது, வேண்டுதல் வைத்ததையும், அதன் விளைவுகளையும் மிக விரிவாக எடுத்துரைக்கிறது.

கோயிலுக்குரிய வரவினங்களாகக் கச்சிப்பேட்டுக் கோல்நிறை கூலி, காலளவு கூலி, கச்சிப்பேட்டிலும், துண்டுணுக்கச் சேரியிலிம் ஊரகப் பெருமாளுக்காக விலைக்குப் பெறப்பட்ட நிலங்களிலிருந்து வந்த விளைவு, பல பழங்கல்வெட்டுகளின் வாயிலாகக் கோயிலுக்குத் தரப்பட்டுப் பல ஊரவைகளால் நிர்வகிக்கப்பட்ட வைப்புநிதிகளின் வட்டி வருவாய் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன.

குறிப்புகள்

1. SII 3 : p.264

2. ARE 1891, pp. 4-5; Epigraphica Indica Vol III, plate facing p.104, Fig.3.

3. தமிழ்ப் பகுதியில் கருவுழான்பாடி, கம்புழான்பாடி என்றும் கம்சகப்பாடி, கஞ்சகப்பாடி என்றும் குறிக்கப்பட்டுள்ளன.

4. இவரை உத்தமசோழர் என்று திரு. எச். கிருஷ்ண சாஸ்திரி குறித்துள்ளமை சரியன்று.

5. SII 3 : p.272.

6. Ibid. p.266.


(தொடரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.