http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 82

இதழ் 82
[ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழ்க்கையா? தொழில்நுட்பமா?
சிங்கப்பெருமாள் கோயில் குடைவரை
திருவரங்கம் கோயிலில் மூன்று புதிய கல்வெட்டுகள்
செருவென்ற சோழனின் செப்பேடுகள் - 3
வ.உ.சிதம்பரனாரின் ஆளுமைத்திறன்
புத்தகத் தெருக்களில் - நானும் 'சோழநிலா'வும்
இதழ் எண். 82 > இலக்கியச் சுவை
வ.உ.சிதம்பரனாரின் ஆளுமைத்திறன்
மா.இரா. அரசு


வ.உ.சியின் தமிழ்ப்பணிகளை - அவற்றின் ஊடே புலப்படும் தமிழ் ஆளுமை வீச்சின் திறத்தை எண்ணும்போதெல்லாம் தவிர்க்க இயலாமல் அவர் வாழ்ந்த காலத்தையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

அறியாமை இருளில் முடங்கிக் கிடந்த மக்கள் கூட்டத்தை நீண்ட உறக்கத்தில் இருந்து விழித்தெழச் செய்தவர் வ.உ.சி. தம்முடைய வலிமை மிக்க பேச்சாற்றலால் தமிழகத்தில் புதியதொரு எழுச்சியை ஏற்படுத்தியவர்; பாமர மக்களுக்கு அரசியல் அறிவை ஊட்டி அவர்களைச் சிந்திக்கப் பழக்கியவர்; விடுதலை இயக்க வரலாற்றில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் முதன் முறையாகப் 'பொதுமக்கள் கருத்து' என்ற ஒன்றை உருவாக்க முனைந்தவர்; தம்முடைய பேச்சாற்றலை முழுவீச்சில் அதற்குப் பயன்படுத்தி வெற்றி கண்டவர். தம்முடைய 'முரசம் போன்ற பேச்சால்', 'மேடைப்பேச்சு' என்ற ஒரு புதிய கலையைத் தமிழுக்கு உருவாக்கி வழங்கியவர். இது வ.உ.சியின் தமிழ் ஆளுமையின் தலையாயதொரு கூறு.

வ.உ.சி தனிமனித மேம்பாட்டில் அக்கறை கொண்டவர்; ஒவ்வொரு மனிதனும் தன்னை நெறிப்படுத்திக் கொள்ளவேண்டும்; அதன்வழி அவன் வாழ்வு நலம் பெறவேண்டும் என்று விரும்பியவர். தனிமனித ஒழுக்க மேன்மை அவன் சார்ந்த குடும்பத்தையும் அவன் வாழும் நாட்டையும் சென்றடையும் வலிமை சேர்க்கும் என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.

இளவயது முதலே அவருள் கனன்றுகொண்டிருந்த ஆன்மிக நாட்டம் தனிமனித வாழ்வின் உயர்வு பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. ஆன்மிக உணர்வுகளில் தோய்ந்த அவர், அதில் ஆழ்ந்த கவனம் செலுத்தினார். 'எண்ணங்களே வாழ்க்கை' என்பதை உணர்ந்து தெளிந்த அவர், மக்களை நெறிப்படுத்துவது தம் தலையாய கடமை என்று கருதினார்.

அதன் வெளிப்பாடே அவருடைய ஆன்மிகக் கட்டுரைகள். எளிதில் புரிந்துகொண்டு, நடைமுறைப் படுத்தும் வண்ணம் - தம்முடைய பேச்சைப்போன்றே எழுத்தும் இருக்கவேண்டும் என்று விழைந்தவர் அவர். அதனால், எளிமையான - மிக மிக எளிமையான நடையைப் பின்பற்றினார். சொல்லும் செய்தி - அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் - படிப்பவரை உரியவாறு சென்றடைய வேண்டும்; உரிய பயனைத் தரவேண்டும் என்பது வ.உ.சியின் நோக்கமாக இருந்தது. அதுவே தம்முடைய தமிழ்நடை எளிமையானதாக இருக்கவேண்டும் என்ற உறுதியை அவருள் ஏற்படுத்தியது.

வ.உ.சி. பேச்சு மொழியிலுள்ள சொற்கள், சொற்றொடர்கள், இலக்கண அமைதிகள் முதலியவற்றைப் பயன்படுத்தி, சிறுசிறு தொடர்களால் தம் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மக்கள் விரும்பிப் படிப்பதற்கு ஏற்றவாறு தெளிவாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளார். இது அவருடைய தமிழ்நடையின் ஆற்றலைப் புலப்படுத்தும்.

பேச்சு வழக்கைத் தழுவி எழுதும் இடங்களில் எல்லாம் அவர் நடையில் ஒரு வேகமும் உயிர்த்துடிப்பும் இருத்தலைக் காணலாம். சொற்களே தொடர்களாகி - தனித்தனித் தொடர்களாக நின்று, கருதிய பொருளை - வ.உ.சி. சொல்லக் கருதிய பொருளைத் தெளிவாக உணர்த்துகின்றன; அவருக்குத் தமிழ் உரைநடை வரலாற்றில் ஓர் இடத்தைப் பெற்றுத் தருகின்றன.

தனிமனித ஒழுக்க மேம்பாட்டிற்காக வ.உ.சி. எழுதிய, மொழிபெயர்த்த ஆன்மிகம் சார்ந்த படைப்புகள் வாழும் நெறிகளை மக்களுக்கு அறிவுறுத்தின.

தக்கது - பொருத்தமானது என்று தாம் கருதியதை எவ்விதத் தயக்கமும் இன்றி வெளிப்படுத்தும் துணிவு, திட்பமும் நுட்பமும் செறிந்த தருக்கநெறி சார்ந்த வெளிப்பாட்டுத்திறன், எளிமை - இவற்றை வ.உ.சியின் உரைநடைத் தமிழின் தனித்த பண்புகளாகக் கொள்ள முடியும்.

தம்முடைய பேச்சாற்றலால் தமிழுக்குப் புதியதொரு கலையை - 'மேடைத்தமிழ்' என்னும் துறையை வழங்கினார். தம்முடைய ஆன்மிக எழுத்துகளால் பின்னாளில் பல்கிப் பெருகித் தழைத்த 'வாழ்வியல் நூல்கள்' என்ற புதிய துறையைத் தமிழில் தொடங்கி வைத்தார்.

இவை வ.உ.சியின் தமிழ் ஆளுமையின் தனிச்சிறப்புகளாகக் குறிக்கத்தக்கவை. இவற்றின்வழி, மேடைத்தமிழ் வரலாற்றிலும் தமிழ் உரைநடை வரலாற்றிலும் அவர்தம் தமிழ் முத்திரைகளைப் பதித்தார்; வரலாற்றில் இடம் பெற்றார்.

(சாகித்திய அகாடமியால் வெளியிடப்பட்ட 'இந்திய இலக்கியச் சிற்பிகள்' என்ற தொடரில் பேராசிரியர் முனைவர் மா.ரா. அரசு அவர்களால் எழுதப்பட்ட 'வ.உ.சிதம்பரனார்' என்ற நூலில் வெளியான கட்டுரை)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.