http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 83

இதழ் 83
[ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

நூலகம் மட்டும் என்ன விதிவிலக்கா?
பொய்யாமை அன்ன புகழில்லை - 1
கரூர்த் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணர்
சேக்கிழாரும் அவர் காலமும் - 1
துருவ நட்சத்திரம் - நூல் வெளியீடு
புத்தகத் தெருக்களில் - ஆனைக்கா கதாநாயகனும் நானும் - 1
இதழ் எண். 83 > கலையும் ஆய்வும்
கரூர்த் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணர்
இரா.கலைக்கோவன், மு.நளினி
கரூர்த் திண்டுக்கல் சாலையில் கரூரிலிருந்து ஏறத்தாழ 4 கி. மீ. தொலைவில் உள்ளது தான்தோன்றிமலை. சிறிய அளவிலான இக்குன்றில் மேற்கு நோக்கிய பேரளவிலான குடைவரை ஒன்றும் வடமேற்குப் பார்வையில் சிறிய அளவிலான குடைவரை ஒன்றும் அகழப்பட்டுள்ளன.1 இரண்டுமே நிறைவுறாதவை என்றாலும் கருவறைத் தெய்வத்தின் வரிவடிவத்தைப் பெற்றுள்ள பெரிய குடைவரை சிறியதினும் வளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்குடைவரையை உள்ளடக்கியே வெங்கடரமணர் கோயில் வளாகம் வளர்ந்துள்ளது. குடைவரையின் முன்னால் பின்னாளில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு செவ்வகக் கூடங்களே மலை மேல் வளாகமாக உருவெடுத்துள்ளன. இவ்வளாகம் அடைய அடிவாரத்தில் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய முத்திசைகளிலும் வளைவுகளுடனான வாயில்கள் உள்ளன. வடக்கு, மேற்குத் திசைகளில் குன்றேற வாய்ப்பாகப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கில் படித்தொடரின் முன் கூரையில் சாலை, கர்ணகூடங்கள் பெற்ற நடைமண்டபமும் கிழக்கில் இருதள வேசர ஆஞ்சநேயர் திருமுன்னும் உள்ளன. மேற்கில் கோயில் அலுவலகமும் அதற்குக் கிழக்கில் ஆஞ்சநேயர் சிற்பம் பெற்ற கம்பமும் உள்ளன.



பெருமண்டபங்கள்

படித்தொடர்கள் வழி உள் நுழைவாரைப் பேரளவிலான மண்டபம் வரவேற்கிறது. முச்சதுர, இருகட்டு உடல் பெற்ற தூண்கள் பெருமொட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்கும் அம்மண்டபம் தென், வடலாகப் பரந்து மேற்கில் நீண்டுள்ளது. அதனை அடுத்துச் சற்று உயரத்திலுள்ள மற்றொரு மண்டபம் படிகள் பெற்றுள்ளது. வடக்கில் ஆழ்வார்கள் மண்டபமாகவும் தெற்கில் திருமண மண்டபம், மடைப்பள்ளி என இரண்டு பிரிவுகளாகவும் அமைந்துள்ள இந்த இரண்டாம் மண்டபத்தின் நடுப்பகுதி, குடைவரைக்கு முன்னால் தெற்கு, வடக்கு, மேற்கு முப்புறத்தும் வாயில்கள் பெற்ற முன்மண்டபமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆழ்வார்கள் மண்டபத்தின் பின்சுவர் மேடையில் ஆழ்வார் சிற்பங்கள் உள்ளன. இங்கிருந்து, குடைவரைக்கு முன்னுள்ள மண்டபத்தை அடைய வழி தரும் வாயிலின் தலைப்பை யானைத்திருமகள் சிற்பம் அலங்கரிக்கிறது.

முன்மண்டபக் காவலர்கள்

முன்மண்டப மேற்கு வாயிலைப் பக்கத்திற்கொரு காவலர் காக்கின்றனர். பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்திக் கிரீடமகுடம், கோரைப்பற்கள், முப்புரிநூல் இவற்றுடன் காட்சித ரும் அவ்விருவருள், வடக்கர் வல முன் கையால் அச்சுறுத்தி, இட முன் கையை அருகிலுள்ள உருள்பெருந்தடிமேல் இருத்தியுள்ளார். தெற்கர் இட முன் கையால் அச்சுறுத்தி, வல முன் கையை உருள்பெருந்தடிமேல் அமர்த்தியுள்ளார். வாயில் மேற்புறத்தே யானைத்திருமகள்.

பெருமண்டபத் திருமுன்கள்

முன்மண்டப வாயிலின் தென்புறம் பெருமண்ட இருப்பாய் வீரஆஞ்சநேயர், பால கருடன் இவர்தம் திருமுன்கள் உள்ளன. வாயிலை நோக்கிய நிலையில் பெருமண்டபத்தில் உள்ள ஒருதள வேசரத் திருமுன்னில் கருடன் பெருமாளை வணங்கிய கைகளுடன் நிற்கிறார். இம்மண்டபத் தூண்கள் இரண்டில் மண்டபத்தைக் கட்டிய பெருந்தனக்கார ரும் அவரது துணைவியாரும் வணங்கிய கைகளுடன் சிற்பங்களாகியுள்ளனர்.

முன்மண்டபம்

உயரமான சதுர பாதத்தின் மீதெழும் இருசதுர, இருகட்டு உடலும் கீழ்ச்சதுரத்தில் நாகபந்தமும் பெற்ற ஆறு தூண்கள் கிழக்கு மேற்காக இருவரிசைகளில் நின்று பூமொட்டுப் போதிகைகளுடன் முன்மண்டபக் கூரை தாங்குகின்றன. மண்டபத்தின் மேற்கில் இத்தூண் வரிசைகளுக்கு நேர் இருக்குமாறு இரண்டு அரைத்தூண்கள் காட்டப்பட்டுள்ளன. மண்டபத்தின் வடசுவர்அருகே உள்ள உயரமான மேடையில் விஷ்வக்சேனரும் கிழக்குச் சுவரருகே உள்ள உயரமான மேடையில் வலமிருந்து இடமாகக் கருடன், காளிங்கநர்த்தனர், வேணுகோபாலர், மற்றொரு காளிங்கநர்த்தனர் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. குடைவரை முகப்பின் தென்சுவரையொட்டி ஆஞ்சநேயர் சிற்பம் சுவரோடு பொருத்தப்பட்டுள்ளது.



முகப்பு

முன்மண்டபத்திலிருந்து குடைவரை முகப்பை அடைய நான்கு படிகள் காட்டப் பட்டுள்ளன. தென்வடலாக 7.88 மீ. நீளம், கிழக்கு மேற்காக 71 செ. மீ. அகலம், 3. 85 மீ. உயரம் பெற்றுள்ள முகப்பின் நடுவில் சதுரம், கட்டு, சதுரம் அமைப்பிலான இரண்டு முழுத்தூண்களும் பாறைச்சுரொட்டி நான்முகமாய் இரண்டு அரைத்தூண்களும் உள்ளன.2 இந்நான்கு தூண்களுக்கும் இடையில் அமைந்த மூன்று அங்கணங்களுள் வட, தென் அங்கணங்களைப் பின்னாளில் சுவரெழுப்பி மறைத்தவர்கள், நடு அங்கணத் தூண்களை ஒட்டி நிலையமைத்து, இருமடிப்பு வாயிற் கதவுகளும் பொருத்தியுள்ளமையால், முதல் பார்வையில் முகப்பின் அமைப்பை விளங்கிக் கொள்வது எளிதானதன்று.

நடுத் தூண்களின் கட்டு நீளமாகவும் கீழ்ச்சதுரம் மேற்சதுரத்தினும் கூடுதல் உயரம் பெற்றதாகவும் அமைய, தூண்களின் மேலுள்ள கனமான போதிகைகள் வளைமுகக் கைகளால் உத்திரம் தாங்குகின்றன. போதிகைகளும் உத்திரமும் நிறைவடையா நிலையில் உள்ளன. போதிகைகளின் மேற்கைகள் கீழ்க்கைகளைப் போல் மூன்று மடங்கு நீளம் பெற்று உத்திரம் தொடுகின்றன. மேற்குப் பார்வையில் சுவராகக் காட்சிதரும் முகப்பு, கிழக்கு முகத்தில் ஓரளவிற்குத் தன் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது.

உத்திரத்தை அடுத்துள்ள வாஜனமும் 16 பூதங்கள் இடம் பெற்றுள்ள பேரளவு வலபியும்3 நன்கு முன்னோக்கி இழுக்கப்பட்டுள்ள கூரையும் முகப்பின் மேற்கு முகம் பெருமளவிற்கு நிறைவு பெற்றுள்ளமையை உணர்த்துகின்றன. முகப்பு ஒட்டித் தெற்கில் 1. 34 மீ. அகலத்திற்கும் வடக்கில் 1. 46 மீ. அகலத்திற்கும் மேற்கு முகமாக விரியும் பாறைச் சுவர்கள் குன்றின் சரிவிற்கேற்ப மேலிருந்து கீழாக அகலக் குறுக்கத்தில் உள்ளன. இரண்டு பாறைச் சுவர்களிலுமே காவலர்களைச் செதுக்குவதற்கான முயற்சியைக் காணமுடிந்தாலும் தென்சுவர்ச் சிற்பம் ஓரளவிற்கு வடிவம் பெற, வடசிற்பம் முகம், தோள் மட்டுமே பெற்றுள்ளது. நிறைவடைந்திருப்பின், இரண்டு சிற்பங்களுமே பேரளவிலான காவலர்களாய்க் காட்சி தந்திருப்பர். வாயிற் கதவுகளில் விஷ்ணுவின் திருத்தோற்றங்கள் பொருந்திய வெள்ளித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. வாயிலை அடுத்துள்ள குடைவரை மண்டபத்தில் இறங்க வாய்ப்பாக இரண்டு படிகள் காட்டப்பட்டுள்ளன.



மண்டபம்

முகப்பை அடுத்துத் தென்வடலாக 7. 80 மீ. நீளம், கிழக்கு மேற்காக 4. 89 மீ. அகலம் 3. 67 மீ. உயரம் கொண்ட மண்டபம் அமைந்துள்ளது.4 மண்டபத்தின் வட, தென்சுவர்கள் சீரமைக்கப்பட்ட நிலையில் வெறுமையாக உள்ளன. இச்சுவர்கள் பின்சுவரைத் தொடுமிடத்துப் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மெல்லிய நான்முக அரைத்தூண்கள் காட்டப்பட்டுள்ளன. மண்டபக் கூரையில் சீர்மையில்லை.

முன்றில்

மண்டபப் பின்சுவரின் நடுப்பகுதியில் இருந்து மேற்கு நோக்கிப் பரவிய நிலையில் மண்டபத் தரையிலிருந்து 55 செ. மீ. உயரத்தில், தென்வடலாக 3. 54 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 3. 20 மீ. அகலமும் கொண்ட தளம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தளத்திலிருந்து பின்சுவ ரொட்டி வடபுறத்திருந்து 2. 31 மீ. தள்ளி ஒன்றும் தென்புறத்திருந்து 2. 28 மீ. தள்ளி ஒன்றுமாக இரண்டு கனமான நான்முக அரைத்தூண்கள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றிற்கு நேர் அமையுமாறு, தள முன்புறத்தின் வடக்கு, தெற்கு மூலைகளில் இரண்டு கனமான நான்முகத் தூண்கள் எழுந்து, தளஅமைப்பை 2. 68 மீ. உயரமுள்ள முன்றிலாகப் படம்பிடிக்கின்றன.5

முன்தூண்கள் தாங்கும் கனமான போதிகைகள்6 மேற்கில் வளைமுகக் கைகளை வீசி உத்திரம் தாங்க, மேலே வாஜனமும் ஒழுங்கற்ற கபோதமும் உள்ளன. போதிகைக் கைகளுள் மேற்கை, கீழ்க்கை போல இருமடங்கு நீளம் பெற்றுள்ளது. போதிகைகளின் இடையில் உத்திரத்திற்குக் கீழ் இருக்குமாறு அகற்றப்படாத பாறைப்பகுதி உள்ளது.

முன்றிலின் முன்தூண்களுக்கும் பின்சுவர் சார்ந்த முன்றிலின் அரைத்தூண்களுக்கும் இடையில் போதிகைகள் அற்ற நிலையில் உத்திரம் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. வாஜனம் பிரிக்கப்படாத நிலையில், ஒழுங்கற்ற இந்த உத்திரத்தையடுத்து வெளிப்புறத்தே மண்டபக் கூரையும் உட்புறத்தே முன்றில் கூரையும் உள்ளன. முன்றிலுக்கு முன் இருக்குமாறு மண்டபத் தரையில் படியொன்று பொருத்தப்பட்டுள்ளது. குடைவரைக்கு மேலிருக்குமாறு குன்றின் மீது செங்கல் கட்டுமானமாய் முத்தள வேசர விமானம் சுதைச் சிற்பங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

கோட்டச் சிற்பம்

முன்றில் அரைத்தூண்களுக்கு இடைப்பட்ட தரையில் இருந்து 42 செ. மீ. உயரத்தில், 2.41 மீ. உயர, 1. 60 மீ. அகல, 24 செ. மீ. ஆழக் கோட்டம் அகழப்பட்டுள்ளது. கோட்டத்தில் நெடிய இறைத்திருமேனி ஒன்றைச் செதுக்கும் முயற்சி பாதியில் கைவிடப்பட்டுள்ளது. சமபங்கத்தில் நிற்கும் இறைவடிவத்தின் வல முன் கை காக்கும் குறிப்பில்7 உள்ளது. இட முன் கை கடியவலம்பிதமாக,8 பின்கைப் பொருட்கள் உருவாகவில்லை.9 கோயிலார் அலங்கரிப்பில் இந்த இறைத் திருமேனி பின்கைகளில் சங்கு, சக்கரம் பெற்று விஷ்ணுவின் திருவுருவமாக வடிவெடுத்துள்ளது.

உற்சவர்

பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ள உற்சவர் சீனிவாசரின் வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை அருகில் உள்ள உருள்தடி மீதுள்ளது. அவரது தேவியரான திருமகளும் நிலமகளும் வெளிக் கைகளை நெகிழ்த்தி, உட்கைகளில் மலர் கொண்டுள்ளனர்.

பூதவரி

வலபியில் உருவாக்கப்பட்டுள்ள பதினாறு10 பூதங்களுள் இரண்டு முழுமையுறவில்லை. மூன்று பூதங்கள் செண்டுதாளம், வீணை, குழல் ஆகிய இசைக்கருவிகளை இசைக்குமாறு காட்டப்பட்டுள்ளன. ஒரு பூதம் தவிர ஏனைய அனைத்தும் அமர்நிலையில் உள்ளன. குடைவரை வாயிலுக்கு மேலுள்ள பூதம் மட்டுமே தலைகீழாக நிற்கிறது. பெ ரும் பாலான பூதங்கள் உரையாடுமாறு பல்வேறு வகையான கையசைவுகளுடன் உள்ளன. பதினான்கு பூதங்கள் உருவாகியுள்ளபோதும் சிலவற்றிலேயே ஆடை, அணிகள் முழுமையடைந்துள்ளன.. முப்புரிநூல், உதரபந்தம், பனையோலைக் குண்டலங்கள், சடைப்பாரம் கொண்டவையாய்ப் பெ ரும் பாலன அமைய, அணிகலன்கள் சரியாக உருவாகாத நிலையில் சில உள்ளன. வடிப்புக் கூர்மை பெற்றவையாய்ச் சிறக்கத் தோன்றுவன மூன்று பூதங்களே.



இரண்டாம் குடைவரை

பெருங் குடைவரையின் வடபுறத்தே, வளாகத்திற்கு வெளியே உள்ள பாறைச் சரிவில்,வடமேற்குப் பார்வையாக, பாறைத் தரையிலிருந்து 1. 57 மீ. உயரத்தில் வெட்டப்பட்டுள்ள சிறிய குடைவரை முகப்புப் பெற்ற மண்டபமாகக் காட்சிதருகிறது.11



முகப்பு

தென்வடலாக 2. 54 மீ. நீளம், கிழக்கு மேற்காகத் தெற்கில் 46 செ. மீ., வடக்கில் 59 செ. மீ. அகலம், 1. 86 மீ. உயரம் பெற்றுள்ள முகப்பின், பாறை ஒட்டிய நான்முக அரைத்தூண்கள் சீர்மையுறவில்லை. அவற்றின் மேலுள்ள போதிகைகள் விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்க, கூரை வடிவமைக்கப்படாத கபோதமாக நீண்டுள்ளது. முகப்பு அரைத்தூண் களை ஒட்டி விரியும் பக்கச் சுவர்கள் வடக்கில் 41 செ. மீ. அகலமும் தெற்கில் 39 செ. மீ. அகலமும் பெற்று வெறுமையாக உள்ளன.

மண்டபம்

முகப்பை அடுத்துள்ள மண்டபம் தென்வடலாக 2. 96 மீ. நீளம், கிழக்கு மேற்காக 56 செ. மீ. அகலம், 1. 97 மீ. உயரம் பெற்ற நிலையில் சீர்மையுறாது உள்ளது. முப்புறச் சுவர்கள், கூரை, தரை ஆகியவை முழுமை பெற்றுள்ளபோதும் வெறுமையாக உள்ளன.

குடைவரையின் காலம்

கரூர் மாவட்டத்தின் ஒரே குடைவரையாகத் திகழும் தான்தோன்றீசுவரம் அளவில் பெரியதாகவும் முகப்பில் முழுமையுற்ற பூதவரியுடனான வலபி பெற்றதாகவும் குடைவரை மண்டபத்தில் இறைத்திருமுன் முன்னால் இருக்குமாறு முன்றில் கொண்டதாகவும் முகப்பின் பக்கச் சுவர்களில் பேரளவிலான காவலர் சிற்பங்கள் அமைந்ததாகவும் உள்ளமை அதன் பல்லவச் சார்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. குடைவரையிலோ, கோயில் வளாகத்திலோ இதுநாள்வரையிலும் பழங் கல்வெட்டுகள் கிடைத்திராத நிலையில் குடைவரையின் காலத்தை அதன் அமைப்புக் கொண்டு கி. பி. 9ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளலாம்.

குறிப்புகள்

1. ஆய்வு நாள் 7. 8. 2011. ஆய்வுக்குத் துணைநின்ற இணை ஆணையர்திரு. ஜெயராமன், ஆய்வாளர் திரு. கனகரத்தினம், உதவி ஆணையர் திருமதி முல்லை, பேஷ்கார் திரு. பா. கணேசன், பட்டாச்சாரியார்கள் திருவாளர்கள் வ. அரவிந்தன், ஆ. சீதாராமன், வெ. வெங்கட கிருஷ்ணன், மைய உதவியாளர் திரு. பி. லோகநாதன் ஆகியோர் நன்றிக்குரியவர்கள்.
2. அ. கி. சேஷாத்திரி, சு. இராசவேல் ஆகியோர் முகப்பில் தூண்களோ, அரைத்தூண்களோ காணப்படவில்லை என்று எழுதியுள்ளனர். தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், ப. 201.
3. அ. கி. சேஷாத்திரி, சு. இராசவேல் ஆகியோர் பூதங்கள் முகப்பின் மேற்றளத்தில் உள்ளன என்கின்றனர். மு. கு. நூல், ப. 201.
4. முகப்பையும் மண்டபத்தையும் சுவர்கள் வைத்து மறைத்து நடுவில் நுழைவாயில் மட்டும் வைத்துள்ளனர் எனக் கூறுகின்றனர் அ. கி. சேஷாத்திரியும் சு. இராசவேலும். மு. கு. நூல், ப. 202.
5. அ. கி. சேஷாத்திரி, சு. இராசவேல் ஆகியோர் இதை மேடை போன்ற கருவறை என்றும் முற்றுப் பெறாத, பகுக்கப்படாத தூண்கள் கருவறை மேடை முன்விளிம்புகளில் உள்ளன என்றும் குறித்துள்ளனர். மு. கு. நூல், ப. 202.
6. அ. கி. சேஷாத்திரி, சு. இராசவேல் ஆகியோர் தூண்களின் மேற்பகுதி போதிகை போல் காணப்படுவதாகக் கூறுகின்றனர். மு. கு. நூல், ப. 202.
7. கோயிலார் வெள்ளி வார்ப்பு மூலம் இக்கைக் குறிப்பை வரதமாகக் காட்டியுள்ளனர்.
8. அ. கி. சேஷாத்திரி, சு. இராசவேல் ஆகியோர் இடக்கை வரத முத்திரை காட்டுவது போல் இருப்பதாகக் கூறுகின்றனர். மு. கு. நூல், ப. 202.
9. அ. கி. சேஷாத்திரியும் சு. இராசவேலும் மேலிரு கைகளில் சங்கு, சக்கரம் இருப்பதாகச் சொல்கின்றனர். மு. கு. நூல், ப. 202.
10. அ. கி. சேஷாத்திரியும் சு. இராசவேலும் பதினைந்து என்கின்றனர். மு. கு. நூல், ப. 202.
11. இக்குடைவரை இதுநாள்வரை வரலாற்று வெளிச்சத்திற்கு வராத அமைப்பாகும்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.