http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 89

இதழ் 89
[ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

திரும்பிப்பார்க்கிறோம் - 36
Mangudi
Kulalakottaiyur
நல்லூர் மாடக்கோயில்
சேக்கிழாரும் அவர் காலமும் - 4
இதழ் எண். 89 > கலையும் ஆய்வும்
சேக்கிழாரும் அவர் காலமும் - 4
மா.இராசமாணிக்கனார்

(சென்ற இதழ்த் தொடர்ச்சி...)

பிற சான்றுகள்

திரு ஆனைக்காக் கல்வெட்டு


இதுகாறும் கூறிப்போந்த இலக்கியச் சான்றுகளாலும் கல்வெட்டுச் சான்றுகளாலும் அநபாயன் இரண்டாம் குலோத்துங்கனே என்பது ஐயமற விளங்கும். அம்முடிபை நன்கு வலியுறுத்தும் மற்றொரு கல்வெட்டுச் செய்தியை இங்குக் காண்க. இரண்டாம் இராசராசன் காலத்துத் திருவானைக்காக் கல்வெட்டில், விக்கிரம சோழ நல்லூரிலும் அநபாய மங்கலத்திலும் இருந்த சில நிலங்கள் ஆனைக்காவுடைய மகாதேவர்க்கு விற்கப்பட்டன என்ற சொல் காணப்படுகிறது(31). விக்கிரம சோழற்கு மகன், இரண்டாம் குலோத்துங்கன்; இக்குலோத்துங்கற்கு மகன் இரண்டாம் இராசராசன். எனவே, கல்வெட்டுக் குறித்த 'விக்கிர சோழ நல்லூர்' என்பது விக்கிரம சோழன் பெயர் கொண்டது; அதற்குப் பிற்கூறப்பட்ட 'அநபாய மங்கலம்' என்பது, அவ்விக்கிரமற்குப் பின் பட்டம் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன் பெயர் கொண்டது என்பன மிகவும் தெளிவாகத் தெரிகின்றன. தெரியவே, 'அநபாயன்' என்பது இரண்டாம் குலோத்துங்கனது சிறப்புப் பெயரே என்பது அங்கைக் கனியென விளங்குதல் காண்க.

இராசராசேசுவரத்துச் சிற்பங்கள்

மேற்சொன்ன இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146-1173) இராசராசபுரத்தில் (தாராசுரத்தில்) சிவன் கோயில் ஒன்றைக் கட்டினான். அங்கு அவன், அவன் கோப்பெருந்தேவி ஆகிய இருவர் உருவச் சிலைகளும் இருக்கின்றன(32). அக்கோவில் சிவனார் இறை அகத்தைச் சுற்றி உள்ள வெளிப்புறப் பட்டியற் பகுதிகளில் பெரிய புராண நாயன்மார் வாழ்க்கையிற் சிறப்புடைய ஒவ்வொரு நிகழ்ச்சி குறித்த உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன; அவற்றின்மேல் அந்நிகழ்ச்சியை விளக்கும் சொற்கள் காண்கின்றன(33). நாயன்மார் அனைவர் வரலாற்றுக் குறிப்புக்களும் இவ்வளவு தெளிவாக இவ்வரசற்கு முன் காட்டப்பட்டன என்றுகொள்ள எவ்விதச் சான்றும் இல்லை. ஆதலின், இவன் காலத்தில் நாயன்மார் வரலாற்று விவரங்கள் மக்கள் எல்லோருக்கும் விளங்கக்கூடிய முறையில் வெளிப்பட்டிருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. அங்ஙனம் வெளியாதற்கு உறுதுணையாக இருந்திருக்கக்கூடிய நூல், இவன் தந்தை காலத்தில் பாடப்பெற்ற சேக்கிழார் திருத்தொண்டர் புராணமே ஆதல் வேண்டும் என்பது பொருத்தமன்றோ?

சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்கு முன் இவனிடமே நாயன்மார் வரலாற்றைக் கூறியுள்ளார்; அதன் பிறகே அரசன் அதனை அறிந்து அவரைப் புராணம் பாடச் செய்தான் என்று திருத்தொண்டர் புராண வரலாறு கூறல் முன்னரே கண்டோம் அன்றோ? அது கொள்ளத்தக்கதாயின், இரண்டாம் இராசராசன் தன் இளவரசுக் காலத்திலிருந்தே சேக்கிழாரை நன்கு அறிந்தவன்; நெருங்கிப் பழகியவன்; நாயன்மார் வரலாறுகளை அவர் வாயிலாகவும் பின்னர் அவர் செய்த பெரியபுராண வாயிலாகவும் தெளிவாக அறிந்தவன் என்பன உணரலாம். அவன் அரசனான பின்னர்த் தன் பெயர் கொண்டு கட்டிய பெருங்கோவிலில் சிவபிரான் இறையிடத்துப் புறச்சுவரில், அவ்விறைவனையே பாடித் தொழுது முக்தி அடைந்த நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளைச் சிற்பங்கள் வாயிலாக உலகத்திற்கு உணர்த்தினான் என்பது பெரிதும் பாராட்டத் தக்கதாகும். இச்சிறப்புடைய செயலை நோக்கப் பெரியபுராணம் இரண்டாம் இராசராசன் காலத்திற்றானே மக்களிடம் பரவத் தொடங்கியதென்று ஒருவாறு நம்பலாம்(34).

ஒற்றியூர்க் கல்வெட்டு

மேற்சொன்ன முடிபை அரண் செய்வதுபோலத் திருவொற்றியூர்க் கல்வெட்டு ஒன்று காண்கிறது. அஃது இரண்டாம் இராசராசற்குப் பின்வந்த இரண்டாம் இராசாதிராசனது (கி.பி. 1164-1182) ஒன்பதாம் ஆட்சியாண்டில் (ஏறத்தாழக் கி.பி. 1174இல்) வெளியிடப்பெற்றதாகும். அதனில், "திருப்பங்குனி உத்தரத்து ஆறாந்திருநாளான புதன்கிழமையும் ஏகாதசியும் கூடிய ஆயில்யத்தினன்று மடத்துத் தலைவரான சதுரானன பண்டிதர், காபாலிகரது சோமசித்தாந்தத்தை விரித்த வாகீசப் பண்டிதர், இரண்டாம் இராசாதிராசன் முதலியவர்கட்குமுன் படம்பக்க நாயக தேவர் திருமகிழின் கீழ்த் திருவோலக்கம் செய்து எழுந்தருளியிருந்தது ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம் கேட்டருளா நிற்க......"(35) என்னும் அரிய செய்தி காணப்படுகிறது.

'ஆளுடை நம்பி' என்பது சுந்தரர் பெயர். எனவே, அவரைப்பற்றிய புராணமே கோயிலில் படிக்கப்பட்டது என்பது தெரிகிறது. மக்கள் கேட்கத்தக்க நிலையிலும் கோயிலில் விளக்கமாக வாசிக்கத்தக்க முறையிலும் சுந்தரர் வரலாற்றைக் கூறுவது பெரியபுராணம் ஒன்றேயாகும். மேலும், சுந்தரர் வரலாறு கூறும் வடமொழி நூலோ, வேறு தமிழ் நூலோ சேக்கிழார்க்கு முன் இருந்தது என்று கூறச் சான்றில்லை யாதலின், திருவொற்றியூர்க் கோயிலில் படிக்கப்பட்டது சேக்கிழார் செய்த பெரிய புராணத்துள் அடங்கிய சுந்தரர் புராணமாகவே இருத்தல் வேண்டுமெனக் கோடல் பொருத்தமாகும்.

(தொடரும்)

பின்குறிப்புகள்:-

31. 108 of 1937
32. J.M.Somasundaram Pillai's 'Cholar koirpanigal', p.50
இக்கோயில் இராசராசேச்சரம் என்ற பெயர்கொண்டு இருப்பதும், இங்குள்ள கல்வெட்டுகளிற் பழையன இரண்டாம் இராசராசனுடையனவாக இருப்பதும் காண, இக்கோயில் இரண்டாம் இராசராசன் கட்டினான் எனல் பொருந்தும். இங்ஙனம் இருப்பக் கல்வெட்டறிஞர், இது மூன்றாம் குலோத்துங்கனாற் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டது பொருந்தாது. -A.R.E. 1908, II, 65 & 66
33. A.R.E. 1920, II, Plates I to VI
34. "The Periyapuranam has influenced the lives and thoughts of the Tamil Saiva population almost incessantly form the date of the compositon". - A.R.E. 1920, p.102
35. S.I.I. V, 1358

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.