![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 91
![]() இதழ் 91 [ ஜனவரி 2013 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
மாடக்கோயில்கள்
மேற்றளங்களை இழந்து, கபோதபந்தத் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி, நாகபந்தப் பாதம் பெற்ற உயரக் குறைவான எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்பு கள் இவற்றுடனான கீழ்த்தளம் மட்டுமே கொண்டுள்ள, அப்பரின் பதிகம் பெற்ற1 ஆறைவடதளிக் கோயிலின் கோபுர வாயில் மேற்குப் பார்வையாக உள்ளது.2 வாயிலின் இருபுறத்தும் தொடரும் மதில்கள் வளாகத்தைச் சுற்றி வளைத்துள்ளன. வெளிச்சுற்றின் வடபுறத்தே மதிலையொட்டியுள்ள மாடம் ஒன்றில், வடதளியைச் சமணர்களிடமிருந்து மீட்க அப்பர் உண்ணா நோன்பு இருந்த இடம் என்ற சுட்டலுடன், அப்பர் பெருமானின் சுதைவடிவம் உள்ளது.3 வடக்குச் சுற்றில் சில சிவலிங்கங்களும் காணப்படுகின்றன.
வெற்றுத்தளம் ![]() ஆறைவடதளி இறைவனின் விமானம், முகமண்டபம், பெருமண்டபம், இறைவி விமானம் இவற்றைத் தாங்கும் 3 மீ. உயர வெற்றுத்தளம் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், கூரையுறுப்புகள் எனக் கருங்கல் கட்டுமானமாக உள்ளது. அதன் கபோதம் மட்டும் செங்கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெற்றுத்தளத்தின் மேற்கு முகத்தில் தெற்கிலிருந்து வளரும் பதினைந்து படிகள் இறைவன் கோயில் மேற்சுற்றின் மேற்கு வாயிலுக்கு அழைத்துச் செல்கின்றன. படிகளை ஒட்டியுள்ள வெற்றுத்தளத்தின் மேற்குச் சுவரில் வீணையேந்திய சிவபெருமானின் சிற்பமும் அமர்நீதிநாயனார், அவர் துணைவியார் இவர்தம் சிற்பங்களும்4 ஆடற்தொகுதியொன்றும் உள்ளன. ![]() அமர்நீதிநாயனார், அவர் துணைவியார் சிற்பங்கள் கால்களை ஸ்வஸ்திகமாக்கிச் சடைமகுடம், மகர, பனை யோலைக் குண்டலங்கள், சரப்பளி, ஸ்கந்தமாலை, தோள், கை வளைகள் புலிமுகக் கச்சு இறுக்கும் சிற்றாடை அணிந்து நெற்றிக்கண்ணுடன் விளங்கும் சிவபெருமானின் முன்கைகள் வீணை மீட்டுகின்றன. வலப் பின் கை சிதைந்துள்ளது. இடப் பின் கையில் மான். இறைவனின் பின் நிற்கும் நந்தியின் தலை மீது இறைவனின் இடக்கைகள் தாங்கலாக உள்ளன. உச்சிக் கொண்டை, தாடி, மீசை, சிற்றாடை இவற்றுடன் காட்சிதரும் அமர்நீதிநாயனாரின் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை தொடைமீது உள்ளது. அவரது துணைவியார் தமிழம் கொண்டையும் பனையோலைக் குண்டலங்களுமாய் இடுப்பில் ஏந்திய குழந்தையுடன் காட்சிதருகிறார். மேற்சுற்று சுற்றின் வாயில் புறந்தள்ளிய சாலையாக அமைந்துள்ளது. அதற்கேற்ப வெற்றுத்தளத்திலும் பிதுக்கம் காட்டப்பட்டுள்ளது. வாயிலை ஒட்டி வளரும் சுற்று மதில் செங்கல் கட்டுமானமாய் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், உத்திரம், வாஜனம், வலபி, கபோதம் பெற்றுள்ளது. விமானம், முகமண்டபம், பெருமண்டபம் என அமைந்துள்ள இறைவன் கோயில் சுற்றின் வடகிழக்கு மூலையில் செங்கல் கட்டுமானமாக உள்ள ஒருதள வேசர விமானத்தில் சண்டேசுவரர் சுகாசனத்தில் உள்ளார். சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை அணிந்துள்ள அவரது இடக்கை கடகத்தில் அமைய, வலக்கையில் மழு. இறைவன் விமானம் கிழக்கு மேற்காக 6. 40 மீ. நீளமும் தென்வடலாக 6. 32 மீ. அகலமும் பெற்றுள்ள இறைவனின் இருதள வேசர விமானத்தின் கீழ்த்தளம் கருங்கல் பணியாக உள்ளது. தாமரை உபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள், வெறுமையான வலபி உள்ளிட்ட கூரையுறுப்புகள், ஆழமற்ற கூடுகள் பெற்ற கபோதம் என அமைந்த இத்தளத்தின் சாலைப்பத்திகள் பிதுக்கமாக உள்ளன. இப்பத்திகளில் உள்ள பஞ்சர அலங்கரிப்புப் பெற்ற கோட்டங்களையும் எண்முக அரைத்தூண்களே அணைத்துள்ளன. கோட்டங்களில் தெற்கில் ஆலமர் அண்ணலும் மேற்கில் இலிங்கோத்பவரும் வடக்கில் நான்முகனும் இடம்பெற்றுள்ளனர். மலை மேல் வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகள் அக்கமாலை, பாம்பு, தீச்சுடர் கொள்ள முன்கைகளுள் வலக்கை சின்முத்திரையிலும் இடக்கை ஏடேந்தியும் உள்ளன. மண்டையோடு பெற்ற சடைப்பாரம், உருத்திராக்கமாலை, வஸ்திரமுப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை பெற்றுள்ள பெருமானின் வலச்செவியில் மகரகுண்டலம்; இடச்செவியில் பனையோலைக் குண்டலம். மலர்ந்த சிரிப்புடன் காட்சிதரும் இந்தச் சோழர் காலச் சிற்பம் மாடக்கோயில் ஆலமர்அண்ணல்களுள் எழிலார்ந்த ஒன்றெனலாம். சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், புலிமுகக் கச்சுப் பெற்ற பட்டாடை, இடைக்கட்டு இவற்றுடன் காட்சிதரும் இலிங்கோத்பவரின் பின்கைகளில் மான், மழு. முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை கடியவலம்பிதமாக உள்ளது. பாணத்தின் மேற்பகுதியில் அன்னமாக நான்முகனும் கீழ்ப்பகுதியில் பன்றியாக விஷ்ணுவும் காட்டப்பட்டுள்ளனர். கோட்டத்தின் இருபுறத்தும் உள்ள சுவர்ப்பகுதியில் நான்முகனும் விஷ்ணுவும் அஞ்சலியில் நிற்கின்றனர். சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள், சரப்பளி, உதரபந்தம், முப்புரிநூல், புலிமுகக் கச்சுடனான பட்டாடை அணிந்துள்ள நான்முகனின் முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்பிலும் இடக்கை கடியவலம்பிதத்திலும் அமைய, பின்கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் உள்ளன. நான்முகன் நிற்கும் தளத்தின் முகப்பில் அர்த்தபத்மாசனத்தில் இருகைகளையும் குவித்து வணங்கியவாறு காட்சிதரும் ஆடவர் நான்முகன் திருமேனி அமையக் கொடையளித்தவராகலாம். விமானத்தின் மேற்றளமும் கிரீவம், சிகரம் இவையும் செங்கல் கட்டுமானமாக உள்ளன. ![]() நான்முகனும் கொடையளித்தவரும் முகமண்டபம் விமானக் கட்டமைப்பை ஒத்துள்ள முகமண்டபத்தின் சாலைப் புறந்தள்ளல்களில் உள்ள கோட்டங்களில் தெற்கில் பிள்ளையாரும் வடக்கில் கொற்றவையும் இடம்பெற்றுள்ளனர். கரண்டமகுடம், சிற்றாடை அணிந்து நிற்கும் பிள்ளையாரின் பின்கைகளில் அங்குசம், பாசம் அமைய, முன்கைகளில் வலக்கையில் உடைந்த தந்தமும் இடக்கையில் மோதகமும் உள்ளன. இடம்புரித் துளைக்கை இடக்கை மோதகத்தைச் சுவைக்கிறது. பொதுவாகக் கோட்டப் பிள்ளையார் இலலிதாசனத்திலோ, ஊர்த்வஜாநுவிலோ காட்டப்படுவதே வழக்கம். இங்கு மாறுபட்ட அமைப்பாக நின்றகோலப் பிள்ளையார் இடம்பெற்றுள்ளார். சடைமகுடம், இடைக்கட்டுடனான பட்டாடை அணிந்து நிற்கும் கொற்றவையின் பின்கைகளில் சங்கு, சக்கரம். முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் உள்ளன. முகமண்டபத்தின் வடசுவரில் உள்ள இசைக்கலைஞர் தொகுதி சோழர் காலப் புதையலாகும். மூன்று கலைஞர்கள் இடம்பெற்றுள்ள இத்தொகுதியின் வலக்கோடியில் உள்ளவர் வலக்கையை உயர்த்தி, இடக்கையால் முழவை ஒலிக்கிறார். இடக்கோடியில் இருப்பவர் தோலிசைக் கருவியான இடக்கை கொண்டுள்ளார். கருவியின் கயிற்றுப் பின்னலில் அவரது இடக்கை நுழைந்திருக்க, வலக்கை, குணில் கொண்டு ஒலிக்கிறது. இருவருமே தமிழம் கொண்டையும் பனையோலைக் குண்டலங்களுமாகக் காட்சிதருகின்றனர். இருவருக்கும் இடையில் இருப்பவர் சடைமகுடமும் பனையோலைக் குண்டலங்களும் பெற்ற தேவருலகக் குடமுழவுக் கலைஞர். அவரது முன்கைகள் முழவொலிக்க, பின்கைகளில் இடக்கை போற்ற, வலக்கை வியப்பில் உள்ளது. ![]() இசைக்கலைஞர் தொகுதி பெருமண்டபம் முகமண்டபத்தின் முன் அதே கட்டமைப்பில் உள்ள பெருமண்டபம் மேற்கிலும், வட, தென்மேற்கிலும் செங்கல் கட்டுமானமாய் விரிவடைந்துள்ளது. மேற்குச் சுவரில் சாளரம். தெற்கில் வாயில் பெற்றுள்ள அதன் தென்கிழக்குச் சுவரில் உள்ள கோட்டமும் சாளரமாக்கப்பட்டுள்ளது. வடக்கில் பெருமண்டபத்தின் வெளிநீட்டலாக விமலநாயகி அம்மனின் ஒருதள வேசர விமானம் அமைந்துள்ளது. உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், கூரையுறுப்புகள் பெற்றுக் கருங்கல் கட்டுமானமாக உள்ள விமானத்தின் கிழக்குக் கோட்டமும் வடக்குக் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. மேற்குக் கோட்டத்தில் அம்மையப்பர் இடம்பெற்றுள்ளார். வல முன் கையைப் பின்னுள்ள நந்தியின் தலை மேல் இருத்திப் பின்கையில் மழு ஏந்தியுள்ள அம்மையப்பரின் சிவன்பாதி சிற்றாடையும் உமைப் பாதி பட்டாடையும் கொண்டுள்ளன. சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம் கொண்டுள்ள இத்திருமேனியின் உமைப்பகுதி கையில் மலர். இடுப்பின் இடப்புறம் முந்தானை காட்டப்பட்டுள்ளது. புறந்தள்ளிய வாயில் பெற்றுள்ள பெருமண்டபக் கூரையை முச்சதுர, இருகட்டுத் தூண்கள் பூமொட்டுப் போதிகைகளுடன் தாங்குகின்றன. கூரையில் பிற்கால ஓவியங்கள். தூண்களின் சதுரங்கள் சிலவற்றில் கொடிக்கருக்குகள்; சிலவற்றில் சிற்பங்கள். சிற்பங்களுள் ஒன்று ஊர்த்வஜாநு பிள்ளையாரைப் படம்பிடிக்கிறது. முன்கைகளில் தந்தமும் அர்த்தரேசித வீச்சும் அமைய, பின்கைகளில் அங்குசம், மோதகம் பெற்றுள்ள பிள்ளையாரின் இடம்புரித் துளைக்கை இடக்கை மோதகத்தைச் சுவைக்கிறது. மண்டபத்தின் நடுவில் பலித்தளமும் நந்தியும் அமைய, தென்மேற்கு அறை வெறுமையாக உள்ளது. வடசுவரில் வாயில் பெற்றுள்ள விமலநாயகி அம்மனின் கருவறை தென்பார்வையாக உள்ளது. சடைமகுடம், பட்டாடை இவற்றுடன் நிற்கும் தேவியின் முன்கைகள் காக்கும், அருட் குறிப்புகளில் அமைய, பின்கைகளில் முத்தலைஈட்டியும் மலரும் உள்ளன. அம்மனின் வலப்புறம் உள்ள அறையில் முருகன் தேவியருடன் எழுந்தருளியுள்ளார். மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் சூரியனும் பைரவரும் காட்சிதருகின்றனர். கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை இவற்றுடன் காட்சிதரும் சூரியனின் கைகளில் தாமரை மொட்டுக்கள். மண்டையோட்டு முகப்புடன் சுடர்முடி, இடுப்புக் கயிறாய்ப் பாம்பு, சரப்பளி, பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம் கொண்டு நாயுடன் நிற்கும் பைரவரின் பின்கைகளில் உடுக்கையும் பாசமும் உள்ளன. முன்கைகளில் வலப்புறம் முத்தலைஈட்டியும் இடப்புறம் தலையோடும் கொண்டுள்ளார். மண்டபத்தின் வடமேற்குப் பகுதியில் அமர்நீதிநாயனாரும் அவரது துணைவியாரும் உள்ளனர். தாடி, மீசை, நீள்செவிகள், சிற்றாடை இவற்றுடன் காட்சிதரும் அமர்நீதிநாயனாரின் கைகள் வணக்க முத்திரையில் உள்ளன. அருகிலுள்ள துணைவியின் வலக்கை நெகிழ்கையாக அமைய, இடக்கை இடுப்பில் உள்ள குழந்தையை அணைத்துள்ளது. முகமண்டபம், கருவறை பெருமண்டபத்தின் கிழக்கிலுள்ள முகமண்டப வாயிலின் வலப்புறத்தே கரண்டமகுடம், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம் இவற்றுடன் இலலிதாசனத்தில் உள்ள பிள்ளையார் பின்கைகளில் அங்குசம், பாசம் ஏந்தி, முன்கைகளில் தந்தம், மோதகம் கொண்டுள்ளார். இடம்புரித் துளைக்கை இடக்கை மோதகத்தைச் சுவைக்கிறது. முகமண்டபக் கூரையில் சிதைந்த நிலையிலான கல்வெட்டு காணப்படுகிறது.5 வாயில் நிலைக்கு மேல் யானைத்திருமகள் சிற்பம் அமைந்துள்ள கருவறையில் வேசர ஆவுடையாரும் உருளைப்பாணமுமாய் இறைவன் தருமபுரீசுவரர், வள்ளலார் எனும் திருப்பெயர்களுடன் இலிங்கத்திருமேனியராய் எழுந்தருளியுள்ளார். ஆவுடையாரின் பாதபந்த அமைப்பில் உள்ள குமுதம் சிலம்புவரி பெற்றுள்ளமைகுறிப்பிடத்தக்கதாகும். யானைத்திருமகள் சிற்பத்தில் அம்மை யுடன் காட்சியளிக்கும் யானைகள் தவிர, வடக்கிலும் தெற்கிலும் பக்கத்திற்கொன்றாய் இரண்டு யானைகள் நீர் கொணரச் செல்லுமாறு குடங்களுடன் காட்டப்பட்டுள்ளமை மாறுபட்ட அமைப்பாகும். குறிப்புகள் 1. அப்பர் 5 : 58. 2. ஆய்வு நாட்கள் 1. 4. 1983, 25. 11. 2000, 21. 3. 2010. 3. அப்பரின் போராட்டம் அறிய: இரா. கலைக்கோவன், அப்பர் பாடிய ஆறைவடதளி, கலை வளர்த்த திருக்கோயில்கள், பக். 9-26. 4. பழையாறை அமர்நீதி நாயனாரின் பிறப்பிடம். நல்லூர் அவர் வணிகம் வளர்த்த இடம். 5. இக்கல்வெட்டுப் பற்றிய தகவல் நடுவண் அரசின் கல்வெட்டுத் துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |