![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 96
![]() இதழ் 96 [ ஜூன் 2013 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
கழி பெருஞ்சிறப்பின் வஞ்சி வஞ்சிப் பூவைச் சூடிப் பகைவன் நாட்டின் மேல் பேராண்மையுடன் போர் தொடுத்து அவன் மண்னைக் கைக்கொள்ளுதல் வஞ்சித்திணை. "மாராயம் பெற்ற நெடுமொழி யானும் பொருளின்று உய்த்த பேராண் பக்கமும் வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை யானும் பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும் வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும் குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்" விளக்கம் போர் மறவர்கள் வேந்தனால் "மாராயம்" எனும் சிறப்புப் பட்டம் பெற்றார்கள். புலவர்களால் புகழப்பட்டார்கள். மிகவும் சிறந்த "கொற்றவள்ளை" என்றும் பாடிக் கொண்டாடினார்கள். போர் வெற்றி கண்ட அரசனின் வெற்றிச் சிறப்பினையும், களத்தில் தோற்று வீரமரணம் கண்ட பகைவீரரின் வீரத்தையும் சிறப்பித்தும், இரங்கல் பாடியும் பாடப்பெற்ற இப்பாடல்கள் "கொற்ற வள்ளை" எனப்பட்டன. (என்னே! தமிழனின் மாண்புமிகு வீரமும், சீர்மிகு ஈரமும்! களத்தில் தோற்றாலும் அவனும் வீரனே என்று அவனுக்கும் இரங்கி அவன் வீரத்தைப் பாடுவது என்பது எத்தகைய நனிசிறந்த தமிழன் நாகரிகம், உயர்ந்த பண்பாடு!!) ஓள்வாள் சிறப்பின் தும்பை கூலிமையைப் பெரிதாகக் கருதிப் போரிட வந்த அரசனிடம் எதிர்சென்று அவனின் தலைமையைத் தீர்க்கும் சிறப்பினையுடையது தும்பைத் திணையாகும். "களிறு எறிந்து எதிர்த்தோர் பாடு களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும்" புறம் : 14:9:10 விளக்கம் களிற்றோடு வந்த வேந்தனைக் கொன்ற வெற்றிவேந்தன் தன் படை மறவர்களோடு குழுமி நின்று வெற்றிக் களிப்பில் வாளை உயர்த்திப் பிடித்து ஆரவாரமாய்ப் பாட்டுப்பாடி நடனமாடினார்கள் என்பதாம். வென்றிச் சிறப்பின் வாகை போர்புரிந்து வெற்றிகண்டு வாகை சூடினார்கள். புலவர்களோ வென்றவனைக் குறித்து போற்றிப் பாடினார்கள். அவர்கள் பாடிய போர்க்கள வெற்றிப் பாடல்கள் தான் "களவழி" எனப்படும். "ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர் வென்ற கோமான் முன் தேர்க் குரவையும் ஒன்றிய மரபின் பின் தேர்க் குரவையும்" புறம் : 17:3:6 விளக்கம் அரசன் போர்க்களத்துப் பகைவர்களைக் கொன்று கைக்கொண்ட பொருட்களைப் பரிசிலர்க்கு அளிக்கும் அறதிறத்தினைப் புலவர்கள் 'களவழி"யாகப் பாடினார்கள். தேர்கொண்டு போர்புரிய வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் தன் தேர் முன் வெற்றிக்களிப்பிலே குரவைக் கூத்தாடினான். வீரமறவர்கள் அந்தத் தேருக்குப் பின் "பின் தேர்" குரவைக் கூத்தாடினார்கள். சங்க காலத்திற்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்தில் மேற்கூறப்பட்ட சமர்க்கள ஆடலும் பாடலும் நிகழ்ந்தாலும் இவற்றின் தொடர்ச்சிகளைச் சங்க காலத்திலும் காணலாம். அன்றைய இவ்வாடல்களைக் கூர்ந்து அவதானிக்கும்போது இவையனைத்தும் குழு ஆடல்களாகவே அமைந்துள்ளன. ஓற்றுடையுடன் தன் பெருமை நாட்டிக் கூடி வாழ்ந்த வீரயுகச் சமுதாயம் அது. அதனால் நிகழ்த்தபட்ட ஆடல்கள் எல்லாம் குழு ஆடல்களாகவே அமைந்துள்ளன. போர்க்களம் சார்ந்து இவை நிகழ்த்தப்பட்டவை என்பதால் இவை அனைத்தும் ஆடவர்கள் நிகழ்த்திய குழு ஆடல்கள் எனக் கொள்ளலாம். முன் தேர்க் குரவை என்பது இன்றைய தேவராட்டம் எனப்படும் நாட்டுப்புறக் கலைக்கு முன்னோடி என்பது சில தமிழ் அறிஞர்கள் கருத்தாகும். இவ்வீர சமர்க்கள ஆடல் பாடல் குறிப்புகளைச் சங்க இலக்கியச் சோலையில் நாம் பரவலாக காணலாம். (முற்றும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |