![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 99
![]() இதழ் 99 [ செப்டம்பர் 2013 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
தேடலில் தெறித்தவை
இன்றைய சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுநாள்வரை கிடைத்திருக்கும் 1936 கல்வெட்டுக்களில் 1181 கல்வெட்டுக்கள் பெருமளவிற்கு முழுமையான நிலையில் அமைந்து கி.பி.500க்கும் கி.பி.1300க்கும் இடைப்பட்ட சிராப்பள்ளி மாவட்ட வரலாற்றை வரைவதற்கு ஏதுவாகின்றன. இந்தக் கல்வெட்டுக்கள் நிறைத்திருக்கும் தரவுகளைத் திரட்டும் பணியில் வெளிப்பட்ட முத்துக்களுள் மூலப்பருடையாரும் ஒன்று. சோழர் காலத்தில் அந்தண ஊர்களை ஆட்சி செய்த மூன்று குழுக்களுள் மூலபருடையார் ஒன்றாகும். சிராப்பள்ளி மாவட்டத்தில் நான்கு ஊர்கள் இக்குழுவினரின் ஆட்சியில் இருந்தன. துடையூர், திருவெள்ளறை, மகேந்திரமங்கலம் எனும் மூன்றும் காவிரியின் வடகரையில் அமைய, ஈசானமங்கலம் தென்கரையில் இருந்தது. இந்நான்கனுள் திருவெள்ளரை தனியூர் எனும் தகுதியுடன் ஒளிர்ந்தது. பெருங்குறி சபை பல அந்தண ஊர்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் மூலபருடையாரின் ஆட்சி இந்த நான்கு ஊர்களில் செழித்திருந்தது. சபை என்ற ஊராட்சிக் குழுவின் முன்னோடியாகவோ அல்லது சமகால மாற்றமைப்பாகவோ கொள்ளத்தக்க இம்மூலபருடையார் குழு, சில நிலைகளில் சபையின் செயல்பாடுகளிலிருந்து மாறுபட்டிருந்தது. சபை தொடர்பான கல்வெட்டுக்கள், சபை கூடிய விதம், கூடிய விதம், அக்கூடல் அறிவிக்கப்பட்ட முறை, நிகழ்வை முன்னின்று நடத்தியவரின் பெயர் ஆகிய செய்திகளைத் தருவதுடன் சபை உறுப்பினர்களையும் கையெழுத்தாளர்களாய்ப் பதிவு செய்துள்ளன. சிராப்பள்ளியில் கிடைக்கும் மூலபருடையார்க் கல்வெட்டுக்கள் ஒன்றிலேனும் குழுச் சார்ந்த உறுப்பினர்களின் பெயர்களைக் காணக்கூடவில்லை. இரண்டு கல்வெட்டுக்கள் அவர்களை நானூற்றுவர், நானூற்றொருவர் என்று எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே அடையாளப்படுத்துகின்றன. மூலபருடையார் கூடிய இடங்களாக வெள்ளறைக் கல்வெட்டுக்கள் மட்டுமே இரண்டு இடங்களைச் சுட்டுகின்றன. அவற்றுள் ஒன்று பெரிய ஸ்ரீகோயிலில் இருந்த கொல்லத்திளங்கோனார் மண்டபம். மற்றொன்று மணியம்பலம். வாரிய அமைப்பு, கோயில் சார்ந்த பணிகள், நில விற்பனை, வரிவிலக்கல், கொடை நிர்வகிப்பு எனப் பெருங்குறி சபை போலவே மூலப்பருதையாரும் செயல்பட்டமைக்குக் கல்வெட்டுக்கள் சான்றாகின்றன. சபைக்கும் ஊரார்க்கும் அனுப்பப்பட்டாற்போலவே அரச ஆணைகள் மூலபருடையாருக்கும் வந்தன. பிற ஆட்சிக் குழுக்கள் போலவே மூலபருடையாரும் சில அறக்கட்டளைகளுக்குக் காப்பாக அமைந்தனர். வேறெந்த ஆட்சிக் குழுவிற்கும் அமையாத சிறப்பு மூலபருடையாருக்கு அமைந்த தை முதலாம் இராஜாதி ராஜரின் கல்வெட்டொன்று பகிர்ந்து கொள்கிறது. மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்று அபிஷேக தட்சணையாக வெள்ளறை மூலபருடையார் நிலம் பெற்றனர். துடையூரிலுள்ள முதலாம் இராஜேந்திரர் காலக் கல்வெட்டு மூலபருடை என்ற அமைப்பு சபையாக மாற்றம் பெறுவதை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான செயல்பாடுகளில் சபை போலவும் பொதுமையைக் காப்பாற்றுவதில் ஊர்களில் அமைந்த ஆட்சிக்குழு போலவும் எளிமையாக ஆட்சி செய்த இந்த ஊராட்சி அமைப்பு சிராப்பள்ளி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இராஜேந்திரர் பிள்ளைகளின் ஆட்சிக் காலத்தோடு வரலாற்று வெளிச்சத்திலிருந்து மறைவதைக் காணமுடிகிறது.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |