http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 137

இதழ் 137
[ செப்டம்பர் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

கதவுகள் திறந்து கருணையோடு காத்திருந்தது வரலாறு
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 9
திருவலஞ்சுழி - ஸ்வேத விநாயகர் - அமைவிடம்
புள்ளமங்கையில் நெடியோன் சிற்பம்
பொழில்சூழ் திருப்புள்ளமங்கை வளாகம்
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்! - 1
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 3
ஒரு கல் மண்டபம் எனும் திருக்கழுக்குன்றம் குடைவரை
கலியாப்பட்டி ஆய்வுப்பயணம்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 2
இதழ் எண். 137 > பயணப்பட்டோம்
ஒரு கல் மண்டபம் எனும் திருக்கழுக்குன்றம் குடைவரை
ச.சுந்தரேசன்

    

திருக்கழுக்குன்றம் என்றவுடன் நினைவிற்கு வருவது இரண்டு கழுகுகள் நண்பகல் நேரத்தில் மலையுச்சியில் வட்டமிட்டு வந்து அர்ச்சகர் தரும் உணவைச் சாப்பிட்டுச் செல்லும் என்பதே. ஆனால், கோயிலுக்குச் சென்று கழுகுகள் வருகை பற்றிக் கேட்டபோது கழுகுகள் இப்போது வருவதில்லை என்ற பதில் கிடைத்தது. அதுபோலவே மலையில் கழுமரங்கள் ஊன்றி சமணர்களைக் கழுவேற்றியதால் இவ்வூர் திருக்கழுக்குன்றம் என்று வழங்கலாயிற்று என்றும் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் இவ்விரண்டு பெயர்க் காரணங்களுக்கான தடயங்கள் எதுவும் அங்கு புலப்படவில்லை.



அமைவிடம்:



காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் திருக்கழுக்குன்றம் அமைந்துள்ளது. சாலையில் இடதுபுறத்தில் உள்ள மலையின் உச்சியில் பல்லவர்காலக் கட்டுமானக் கோயிலாக அறியப்படும் வேதபுரீஸ்வரர் கோயிலும், மலைச்சரிவினூடே ஒரு பல்லவர்காலக் குடைவரையும், சாலையின் வலப்புறத்தே எழில்மிகு இயற்கைச் சூழலில் முதலாம் ஆதித்தசோழர்காலக் கட்டுமானக்கோயிலான திரிபுரசுந்தரி உடனுறை பக்தவத்சலேஸ்வரர் கோயிலும் அமைந்து இவ்வூருக்குச் சிறப்பினைச் சேர்க்கின்றன. 





ஒருகல் மண்டபத்திலிருந்து பக்தவத்சலேஸ்வரர் கோயில் 





பக்தவத்சலேஸ்வரர் கோயிலின் தூங்கானைமாட விமானம்





வேதகிரீசுவரர் கோயில்





வேதகிரீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பாதை



திருக்கழுக்குன்றம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் மலையடிவாரத்திலிருந்து வேதபுரீஸ்வரர் கோயிலுக்குச் செல்லத் திருத்தமாக அமைக்கப்பட்டிருக்கும் அகன்ற படிவரிசைகள் உதவுகின்றன. அண்மையில் இப்படிவரிசைகளின் மேலே அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையும், இளைப்பாறத் தங்குமிடங்களும் பயணிப்போரை வெயிலிலிருந்தும், மழையிலிருந்தும் பாதுகாக்கின்றன. இருப்பினும் படிவரிசைகள் மேடாக ஏறிச் செல்வதால் பயணக் களைப்பு ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்றுதான்.





குடைவரை அடையும் பாதை



வேதகிரீஸ்வரர் கோயிலைச் சென்றடைய உதவும் படிவரிசைகளில் பாதிதூரம் ஏறியதும் இடப்புறம் செல்லும் படிக்கட்டுகள் வேதகிரீஸ்வரர் கோயிலுக்கும், வலதுபுறப் படிவரிசைகள் நெடிய பாறைச்சரிவில் கிழக்குப் பார்வையாய் அமைந்துள்ள ஒருகல் மண்டபம் குடைவரைக்கும் அழைத்துச் செல்கின்றன. குடைவரைக்குச் சற்று உயரே படிகளைத் தாண்டிச் சென்றால் கீழே மரகதப் பச்சை வயல்களினூடே திருக்கழுக்குன்றம் ஊரின் அழகும், மையமாய்ப் பக்தவத்சலேசுவரர் திருக்கோயிலும், சங்குத் தீர்த்தமும் கண்களுக்கு விருந்தாய் விரியும்.





குடைவரை



குடைவரை:



மலைக்குச் செல்லும் படிவரிசையின் இடப்புறம் குன்றின் கிழக்குச்சரிவில் அகழப்பட்டுள்ள இம்மண்டபக் குடைவரையை அடைய ஏழு படிகள் உதவுகின்றன. தென்புறமாக அமைந்துள்ள படிவரிசையின் ஏழாவது படியை அடுத்த பரப்பு குடைவரை முகப்பிற்கு முன்னுள்ள தரையைத் தொட்டவாறு அமைந்துள்ளது. இதேபோன்ற வடபுறத்துப் படிவரிசை மலைக்குச் செல்லும் படிகளுக்கிடையே மறைக்கப்பட்டிருக்கலாம். இப்படிகளின் முன்புறம் யானையின் துளைக்கை வடிவப் பிடிச்சுவரால் அணைக்கப்பட்டுள்ளது. 





குடைவரை முகப்பு



குடைவரை முகப்பு:



படிவரிசைகள் முடியும் இடம் குடைவரை முகப்பின் தரையுடன் இணைந்துள்ளது. குடைவரையின் முகப்பு, சதுரம், கட்டு, சதுரம் வடிவில் அமைந்த இரண்டு முழுத்தூண்களையும், பக்கத்திற்கொன்றாக உறுப்பு வேறுபாடற்ற இரண்டு அரைத்தூண்களையும் கொண்டமைந்துள்ளது. தூண்களின் மேல் பேரளவிலான போதிகைகள் தங்கள் விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்குகின்றன. உத்திரத்தின் மேலே வாஜனம் கூரையை ஒட்டியோடுகிறது. கூரையின் நீட்சி வடிவமைக்கப்படாத கபோதமாக நன்கு சமன்படுத்தப்பட்டுள்ளது.



குடைவரை மண்டபம்:



குடைவரையின் மண்டபம் முகப்புத் தூண்களுக்கும், கருவறைக்குமிடையே அமைந்துள்ள மற்றொரு தூண் வரிசையால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முகப்புத் தூண்களையடுத்து அமைந்துள்ள மண்டபப் பரப்பின் தரையும், கூரையும் அழகாக சமன்படுத்தப்பட்டு சீராக்கப்பட்டுள்ளன. கூரையை ஒட்டி நாற்புறமும் ஓடும் வாஜனம் முகப்பின் மேற்குப் பகுதி வாஜனத்தின் மேல் இரண்டாம் சதுரப் பட்டியாகக் காட்டப்பட்டுள்ளது.





பெரு மண்டபம் - தென்திசை





பெருமண்டபம் - வடதிசை



மண்டபத்தின் கிழக்குப்பகுதியின் வடசுவரிலும், தென்சுவரிலும் பெரிய கோட்டங்கள் அகழப்பட்டுள்ளன. அக்கோட்டங்களில் நின்றநிலைக் காவலர்களின் சிற்பங்கள் அகழப்பட்டுள்ளன.





தென் திசைக் காவலர்





வடதிசைக் காவலர்





தென் திசை வாயிற்காவலர் (அருகாமைத் தோற்றம்)





வட திசை வாயிற்காவலர் (அருகாமைத் தோற்றம்)



இரண்டாம் வரிசைத் தூண்கள் மண்டபத்தின் சற்றே உயர்ந்து அமைந்துள்ள தரைப் பரப்பிலிருந்து எழுகின்றன. முகப்புத் தூண்களைப் போலவே சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் மையப்பகுதியில் இரண்டு முழுத்தூண்களும், பக்கத்திற்கொன்றாக உறுப்பு வேறுபாடற்ற இரு நான்முக அரைத்தூண்களும் அமைந்துள்ளன. தூண்களின் மேலுள்ள எளிய, கனமான போதிகைகள் உத்திரம் தாங்க மேலே வாஜனம் ஓடுகிறது. தரைப்பரப்பும், கூரையும், சுவர்களும் சீராகச் சமன் செய்யப்பட்டுள்ளன. 





இரண்டாம் வரிசைத் தூண்கள்





முகமண்டபம்



கருவறை:



குடைவரையின் மேற்குச் சுவரிலிருந்து சற்று முன் தள்ளி அமைந்திருக்கும் கருவறையின் தாங்குதளம் பாதபந்த வகையைச் சேர்ந்தது. இத்தாங்குதளம் உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், பாதம், கம்புகள் அணைப்பில் கண்டம், பட்டிகை, மேற்கம்பு என அனைத்து உறுப்புகளையும் கொண்டமைந்துள்ளது. கருவறை வாயிலை இரண்டு உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் அணைத்தவாறு எழுகின்றன.  





கருவறை 



கருவறைச் சுவர் வடபுறமும், தென்புறமும் திரும்பும் இடங்களில் பக்கத்திற்கொன்றாக இரண்டு உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் வெட்டப்பட்டுள்ளன. இத்தூண்களின் மீது எழும் எளிய போதிகைகள் உத்திரம் தாங்க மேலே வாஜனமும் வலபி மற்றும் கபோதம். கபோதத்தின் மேல் முகமண்டபக் கூரையின் வாஜனம் தொடர்கிறது.



கருவறை வாயிலின் இருபுறத்திலும் தூண்களுக்கிடையில் ஆழமற்ற கோட்டங்களில் வாயிற்காவலர் நிற்கின்றனர். கருவறையை அடைய வாயிலின் முன் வளைந்த பிடிச்சுவர்களுக்கிடையில் மூன்று படிகள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றுள் மூன்றாவது படிக்கட்டு நிலாக்கல்லாக அமைந்துள்ளது.



கருவறை அடுத்துள்ள முகமண்டபப் பின்சுவரில் தென்புறத்துக் கோட்டத்தில் நான்முகனும், வடபுறக்கோட்டத்தில் விஷ்ணுவும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றனர். 





கருவறைத் தென் சுவரில்  நான்முகன்





கருவறை வட சுவரில்  மகாவிஷ்ணு





நான்முகன்





மகாவிஷ்ணு





மகாவிஷ்ணு



கருவறையின் தரையும், சுவர்களும்    நன்கு சமன் செய்யப்பட்டுள்ளன. தரையில் அமைக்கப்பட்டிருக்கும் வேசர ஆவுடையாரும், லிங்கத் திருமேனியும் பிற்காலத்தவையாகும்.



கல்வெட்டு:



முகமண்டபத்து வடபுறத்து முழுத்தூண் மேற்சதுரத்தின் கிழக்கு முகத்தில் மிகவும் சிதைந்த நிலையில் உள்ள நரசிம்மப் பல்லவரின் கல்வெட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் என்று அறியப்படும் ஸ்ரீமூலத்தானத்துப் பெருமானடிகளுக்கு வழிபாட்டுப்புறமாக வாதாபிகொண்ட நரசிங்க போத்தரையர் நிலம் வைத்தமையை சுட்டுவதாக அறிகிறோம்.



இக்குடைவரையைக் காண விரும்புவோர் மாமல்லபுரத்திலுள்ள இந்திய தொல்பொருள் அளவீட்டுத் துறையின் அலுவலகப் பொறுப்பாளரிடம் பயணநாளை முன்னரே தெரிவித்து அனுமதி கோரினால் குறிப்பிட்ட நாளில் மாமல்லபுர அலுவலகத்திலிருந்து துறையின் உதவியாளர் சாவியுடன் வந்து குடைவரையைப் பார்வைக்குத் திறந்து வைப்பார். 



நன்றி: மாமல்லபுரம் குடைவரைகள்,

ஆசிரியர்கள்: டாக்டர். ஆர். கலைகோவன், முனைவர் மு. நளினி



இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.