http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 163

இதழ் 163
[ மார்ச் 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

குரங்கநாதர் கோயில் கல்வெட்டுகள்
மெய்யத்துக் களவும் கொலையும்
உறையூர்த் தான்தோன்றீசுவரம்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 10 (பிறத்தலே இறத்தலின் முதல்படி)
இதழ் எண். 163 > கலையும் ஆய்வும்
மெய்யத்துக் களவும் கொலையும்
இரா.கலைக்கோவன், மு.நளினி

கல்வெட்டுகள் சமுதாயத்தின் செழுமையான பக்கங்களை மட்டுமே பதிவுசெய்துள்ளன எனக் கருதுவாருக்குச் சமுதாயம் நாணயம் போல் இரண்டு முகங்களைக் கொண்டது என நினைவூட்டுமாறு அதன் கறைபடிந்த காட்சிகளையும் கல்வெட்டுகள் சிறைபிடித்துள்ளன.

திருமெய்யம் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருமைக்குரிய ஊராகும். தமிழ்நாட்டளவில் ஒரே குன்றில் மூன்று குடைவரைகள் அமைக்கப்பட்ட சிறப்பான இடங்களுள் மெய்யமும் ஒன்று. மெய்யத்துக் குன்றில் சிவபெருமானுக்கு இரண்டு குடைவரைகளும் விஷ்ணுவின் கிடந்த திருமேனியைப் பெருமைப்படுத்துமாறு ஒரு குடைவரையும் அகழப்பட்டுள்ளன. மலையின் மேற்பகுதியில் மேற்குப் பார்வையாகக் கருவறை மட்டுமே கொண்ட சிறிய குடைவரை சிவலிங்கத்துடன் உருவாகியுள்ளது.

சத்தியகிரீசுவரம் என்றழைக்கப்பெறும் இறைக்கோயில், குன்றின் தென்முகத்தில் அகழப்பட்ட குடைவரையின் வளர்ச்சி பெற்ற வளாகமாக அமைய, அதே தென்முகத்தில் பள்ளிகொண்ட பெருமாளும் மிகப்பெரிய கருவறையுடன் அமைந்து கட்டுமானத் திருமுன்களையும் பெற்றுள்ளார். இவ்விரு கோயில்களுமே கல்வெட்டு வளம் பெற்றவை. களஆய்வின்போது பள்ளி கொண்ட பெருமாள் வளாகத்துள்ள சேனைமுதலியார் திருமுன் சுவரிலும் கோபுரவாயிலின் மேற்கு நிலையிலும் டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் கண்டறிந்த இரண்டு புதிய கல்வெட்டுகளே மெய்யத்தில் நிகழ்ந்த களவையும் கொலையையும் வெளிச்சத்திற்குக் கொணர்ந்தன.

பொ. கா. 17ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க தமிழ்க் கல்வெட்டு, விருதராஜபயங்கர வளநாட்டின் கொல்லர்க் காணியாக நிலத்துண்டொன்றைப் பெற்றவராகக் கோட்டையூரைச் சேர்ந்த கொல்லர் அகத்தியன் பொன் சின்னானை அறிமுகப்படுத்துகிறது. அவருக்கென அளிக்கப் பட்டிருந்த அந்நிலத்துண்டினை அப்பகுதியிலிருந்த தச்சரும் தட்டாரும் கைப்பற்றிக் கொண்டனர். எத்தனையோ முறையிட்டும், ஊரார் தலையிட்டும் சின்னானால் தம் நிலத்தைப் பெறக்கூடவில்லை. அதனால், வளநாட்டின் நிருவாகத்தை மேற்கொண்டிருந்த நாட்டாரிடமும் மெய்யத்துக் கோயில் அலுவலர்களான தானத்தாரிடமும் களவாடப்பட்ட தம் நிலத்தை எப்படியேனும் பெற்றுத்தருமாறு சின்னான் முறையிட்டார். வழக்கை விசாரிக்கத் திருமெய்யம் கோயிலில் நாட்டாரும் தானத்தாரும் ஊரவரும் கூடினர். ஆவணங்கள் ஆராயப்பட்டன. சான்றாளர்கள் தரவுகளை முன்நிறுத்தினர். இருபுறச் செய்திகளையும் ஐயத்திற்கிடமின்றிக் கேட்டுத் தெளிந்த நிலையில் களவாடப்பட்ட கொல்லர்க் காணி நிலம் பொன் சின்னானுக்கே சேரவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. நிலத்தைக் கைப்பற்றியவர்கள் அதைச் சின்னானிடம் திருப்பித் தந்தனர்.

கொலைக் கல்வெட்டும் 17ஆம் நூற்றாண்டளவிலேயே பதிவாகியுள்ளது. கானநாட்டைச் சேர்ந்த கடியார் வயலில் கொற்றவை வழிபாட்டினரான அந்தரிபட்டர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பகையின் காரணமாக ஈசாண்டான் என்பவரைக் கொன்றனர். அக்கொலை குறித்த தகவல் அறிந்தவுடன் மெய்யத்திலுள்ள இரு கோயில் அலுவலர்களும் கானநாட்டு நாட்டவரும் உடன் கூடி வழக்கை முழுமையாகக் கேட்டறிந்தனர். இரு தரப்பு வாதங்களையும் விரிவாக ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டறிந்தனர்.

உயிர்க்கொலை செய்த எருமைபட்டன் உள்ளிட்டாரின் நிலப்பகுதிகளான பாண்டியவேளான் வடகூறு நிலம் ஒருமாவும், எங்குமாய் நின்றான் நிலமான மனம் பெரியவர் வயக்கல் நிலம் முக்கால் வேலியும் உதிரப்பட்டியாக உயிரிழந்த ஈசாண்டானின் மகன் மாக்கயானுக்குத் தரப்படவேண்டுமெனத் தீர்ப்பாயிற்று. நில உரிமை பெறும் மாக்கயான் அந்நிலங்களின் விளைச்சலிலிருந்து ஒருமா நிலத்துக்கு ஒரு கலம் நெல் கோயிலுக்குக் கொடையாகத் தரவேண்டும் என்பதும் தீர்ப்பின் ஒருபகுதியாக அமைந்தது. இத்தீர்ப்பு ஆவணத்தை கானநாட்டுக் கணக்குத் தென்னவதரையர் எழுதிக் கையெழுத்திட்டுள்ளார்.

பொதுக்காலம் 17ஆம் நூற்றாண்டு, அரசியல் அமைதியற்ற காலச்சூழலைக் கொண்டிருந்தது. நிலையான ஆட்சி இல்லாதிருந்தமையால் சமூகத்தில் குற்றங்கள் பெருகின. ஒரே ஊர்ப்பகுதியில் களவும் கொலையும் நிகழ்ந்துள்ளமை அதுவும் ஒரே காலக்கட்டத்தில் இவ்வழுக்கல்கள் நேர்ந்துள்ளமை சமூகப் பாதுகாப்பு சரியில்லாமல் இருந்ததைக் காட்டுவதாக உள்ளது.

நல்லவைகளை மட்டுமே பதிவுசெய்வதோடு நிறுத்திவிடாமல், நிகழ்ந்த குற்றங்களையும், அவை விசாரிக்கப்பட்ட முறைகளையும், அதன் வழிப் பெறப்பட்ட தீர்வுகளையும் சமூகச் சூழல் சரியில்லாதிருந்த காலக்கட்டத்தில்கூட வரலாற்று நோக்கில் சமுதாயப் பெரியவர்கள் கோயில் வளாகங்களில் அவற்றைக் கல்வெட்டுகளாக்கியுள்ளமை, அறம் நிலைநிறுத்தப்படும், அதுவே என்றும் வெல்லும் என்பதை உரக்கச் சொல்லவே எனக்கொள்ளலாம்.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.