![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 17
![]() இதழ் 17 [ நவம்பர் 16 - டிசம்பர் 15 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம்,
எந்த ஒரு துறையிலும் பல கருத்தரங்குகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. இக்கருத்தரங்குகள் பெரும்பாலும் கல்லூரிகளிலோ, பல்கலைக்கழகங்களின் துணையுடனோ நடைபெறும். தொல்லியல் கழகம், திருநாவுக்கரசர் இசை ஆய்வு மையம் போன்ற இயக்கங்களும் வருடத்திற்கொருமுறை கருத்தரங்குகளை செவ்வனே நடத்துகின்றன. ஆய்வாளர்கள் சந்தித்துக் கொள்ளவும், தங்களது புதிய கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளவும், சர்ச்சைகளைப் பற்றி விவாதித்து தகுந்த முடிவுக்கு வரவும், ஓர் நல்ல வாய்ப்பாக அமைய வேண்டியதே ஒரு நல்ல கருத்தரங்கின் இலக்கணம். உண்மையில், ஒரு சில கருத்தரங்குகளைத் தவிர, பெரும்பான்மையான கருத்தரங்குகள் மேற்கூறிய இலக்கணத்திற்கு பொருந்தாது. கருத்தரங்குகளின் மையக் கருத்தை முடிவு செய்த பின், ஆய்வாளர்ளுக்கு கட்டுரை வேண்டி ஓர் அழைப்பு மடல் வரும். அம்மடலில், கட்டுரை அனுப்ப வேண்டிய கடைசி நாள் தெளிவாக கூறப்பட்டிருப்பினும், கருத்தரங்கு நடக்கப் போகும் நாள் ஒரு சில சமயங்களிலேயே குறிக்கப்பட்டிருக்கும். இதனால், கருத்தரங்கிற்கு சில நாட்கள் முன்பு வரும் அழைப்பிதழ் மூலமே கருத்தரங்கு நடக்கும் நாள் தெரிய வரும். இவ்விஷயம், முன்பதிவு செய்து வர விழைவோருக்கு பெரும் பிரச்சனையாக அமைகிறது. பெரும்பாலான கருத்தரங்குகளில், ஆய்வாளர்கள் அனுப்பிய கட்டுரைகள் ஆய்வுக் கோவையாகப் பதிக்கப்படுகிறது. கட்டுரையைப் படிப்பதும் விவாதிப்பதும் பதிக்கப்படாத போனால், காற்றோடு கரைந்துவிடும். அதனால், இப்பதிப்பு பாராட்டப் படவேண்டிய விஷயம். எனினும், கட்டுரைகளின் தேர்வு முறையைப் பற்றி இதே வகையில் கூறுவதற்கில்லை. ஒரு சில கருத்தரங்குகளைத் தவிர, கருத்தரங்குகளுக்கு வரும் கட்டுரையை படித்துப் பார்கிறார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. தென்னை மரத்தைப் பற்றி தெரிந்தவனிடம், கால்நடையைப் பற்றி கேட்டதற்கு, தென்னை மரத்தைப் பற்றி விலாவாரியாகக் கூறியபின், "இப்படிப்பட்ட தென்னை மரத்தில் கால்நடைகளைக் கட்டலாம்", என்று எழுதினானாம். இந்த வகையான கட்டுரைகள் ஆய்வுக் கோவைகளில் இடம் பெறுவது மன வருத்தத்தை அளிக்கிறது. உதாரணமாக, சமீபத்தில் நாங்கள் சென்ற இசைக் கருத்தரங்கின் தலைப்பு " இருபதாம் நூற்றாண்டு இசைக் கலைஞர்கள்". இக்கருத்தரங்கில் பல கட்டுரைகள் பாவேந்தர் பாரதிதாசனைப் பற்றியே இருந்தன. அவரின் இசைத் தொண்டாக, அவரது 'துன்பம் நேர்கையில்' பாடலில், 'யாழ்' என்ற இசைக் கருவியைக் குறிப்பிட்டுள்ளதாகவும், இதைப் போல பல பாடல்களை பல இசைக் கருவியின் பெயர்கள் வருவதாகவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையைப் பரிசீலனை செய்தவர்கள் எல்லாம் இசையை நன்கு கற்றவர்கள்தாம் என்பதில் ஐயம் ஏதுமில்லை. இருப்பினும், ஒரு ஆய்வாளர் தமது அழைப்பை மதித்து கட்டுரையை குறிப்பிட்ட நாளுக்குள், பதிவுப் பணத்துடன் அனுப்பியதால் மட்டுமே, கருத்தரங்கில் அக்கட்டுரைக்கு இடமளித்தல் வேண்டும் என்ற எண்ணங்களே இக்கட்டுரைகளை அனுமதிக்கச் செய்து ஆய்வுக் கோவைகளை அபத்தக் களஞ்சியமாக மாற்றிவிடுகின்றன. " இப்படிப் பட்ட கட்டுரைகளை அனுமதித்தாலே 30-40 கட்டுரைகள்தான் தேறும். அதிலும் வடிகட்டினால், விரல்விட்டு எண்ணக்கூடிய கட்டுரைகளே மிஞ்சும்", என்று கருத்தரங்கு நடத்துபவர்கள் வாதிடலாம். இவர்களுக்கான பதில், எண்ணங்கள் முக்கியமே தவிர எண்ணிக்கை முக்கியமல்ல. எண்ணிக்கைக்காக தரமில்லா கட்டுரைகளை பதிப்பிப்பது எவ்வகையிலும் ஏற்பிற்குரியதல்ல. பல சமையங்களில் அவசர அவசரமாக இக்கருத்தரங்குகள் நிகழ்வதாலேயே, இக்கட்டுரைப் பஞ்சம் எழுகிறது. சரியான திட்டமிடல் இருப்பின், நல்ல தரமான கட்டுரையை அனுப்ப நமது நாட்டில் ஆய்வாளர்களுக்குப் பஞ்சம் இல்லை என்பதை ஆணித்தரமாக நம்புகிறோம். கருத்தரங்குகள் நடக்கும் விதத்தைப் பற்றியும் சில வார்த்தைகள். கட்டுரைகள் படிக்கப்படுமுன், அமர்வின் தலைவரோ, அல்லது வேறு யாராவது சிறந்த ஆய்வாளரோ, தலைமையுரை நிகழ்த்துவார்கள். இவரது உரை பெரும்பாலும் தரமானதாக இருப்பினும், நீளமானதாகவும் இருக்கும். இதனால், கட்டுரை வாசிக்க கொடுக்கப்படும் நேரம் சற்று சுருக்கப்படும். ஆனால், காலை அமர்வில் படிப்பவர்கள், இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். அவர்கள் போக்கிற்கு, கட்டுரைக்கு சம்பந்தமில்லாத விஷயங்களையெல்லாம் அலசி, அலுக்கும் வரையில் பேசலாம். அமர்வுத் தலைவரும், கட்டுரை படித்து முடித்த பின், சம்பிரதாயமாக, கட்டுரையை விவாதத்திற்குத் திறந்து வைத்து, தன்னுடைய கருத்துக்களை வேறு கூறுவார். இதனால், மதியமோ, மாலையோ கட்டுரை படிப்பவருக்கு, தன்னுடைய வாய்ப்பு வருமா என்ற சந்தேகம் எழுந்துவிடும். கடைசியில், " நீங்க எல்லாம் வந்து தொலைச்சுட்டீங்க, ஒரு இரண்டு நிமிஷம் பேசிட்டு போங்க", என்று வேண்டா வெறுப்பாக சில கட்டுரைகளுக்கு நேரம் அளிக்கப்படும். இந்நிலையைத் தவிர்ப்பது அத்தனை கடினமான காரியமா என்ன? கட்டுரையைக் கேட்கும் பொழுதே, பக்க அளவும் குறிக்கப்படுகிறது. ஐந்து பக்கங்களுக்கு மிகாத கட்டுரையைப் படிக்க, அதிக பட்சம் பத்து நிமிடங்கள் ஆகும், அடுத்த ஐந்து நிமிடங்களை விவாதத்துக்கு வைத்துக் கொண்டால், எல்லா கட்டுரைகளுய்க்கு சம உரிமை கிடைக்குமே! ஆய்வுக் கோவையில் வந்த கட்டுரையை அப்படியே படிக்க விரும்பாமல், வேறு வகையில் பேச நினைப்பவர்களை அனுமதித்தல் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. அப்படி பேசுபவர்களும், கால் வரையரைகளைக் கடைபிடிக்குமாறு அமர்வுத் தலைவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறோம். கருத்தரங்குகள், வெளியில் வராத விஷயங்களுக்கு இட்டுச் செல்லும் கதவுகளைத் திறக்கக் கிடைத்திருக்கும் அற்புத வாய்ப்புக்கள். இவ்வாய்ப்புகள் கேளிக்கைக் கூத்தாக மாறாதிருத்தல் வேண்டும். அன்புடன், ஆசிரியர் குழு.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |