http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 72

இதழ் 72
[ ஜூன் 16 - ஜூலை 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆயிரம் ஆக்கங்கள்
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 1
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - இனிய பயணம்
நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர்கள் குழு
பங்கேற்பாளன் பார்வையில் செம்மொழி மாநாடு
விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை
நலமிகு கார்த்திகையே!
இதழ் எண். 72 > ஆலாபனை
விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை
லலிதாராம்
(சொல்வனத்தில் வெளியான கட்டுரை.)

இவ்வருடம் மறைந்த இசைக் கலைஞர்கள் பட்டியலில் விதுஷி வித்யா சங்கர் ஜூன் 29-ம் தேதி இணைந்து கொண்டார்.

ஒருவர் மறைந்தவுடன் அஞ்சலிக் கட்டுரை எழுதுபவருக்கு, மறைந்தவரின் பரிச்சயம் நிச்சயம் இருக்க வேண்டும். நேரடிப் பழக்கமோ அல்லது அவர் மீதான உண்மையான ஆர்வமும், அவர் படைப்புகளில் நல்ல பரிச்சயமுமோ இருத்தல் அவசியம். அப்படி பரிச்சயம் இல்லாதவர் எழுதும் கட்டுரை நிச்சயம் ஒரு சடங்குக்காக எழுதப்பட்டதே அன்றி, உண்மையான அஞ்சலி ஆகாது.

வித்யா சங்கர் என்ற இசைக் கலைஞரைப் பற்றி தெரிந்து கொள்ள இணையத்தில் நிறைய தளங்கள் உதவக் கூடும். அவையெல்லாம் போதாது என்று நினைப்பவர்கள் ‘ஸ்ருதி’ பத்திரிக்கையின் May 2007 இதழை வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம். (ஸ்ருதி அலுவலகத்தில் பழைய இதழ்களும் விற்பனைக்கு உண்டு).



எனக்கு விதுஷி வித்யா சங்கர் என்ற மனிதரிடமோ, அவருடைய இசையிடமோ பரிச்சயம் கொஞ்சம் கூட இல்லை. ஆனால் வித்யா சங்கர் என்ற ஆய்வாளரிடம் பரிச்சயம் உண்டு. அவர் எழுதிய புத்தகங்களைப் பல முறை படித்துப் பெரும் பயனடைந்திருக்கிறேன். முறையாக இசை கற்காமல், நிறைய கேட்டும் படித்தும் இசை கற்க முனைந்த எனக்கு அவரின் இரு நூல்கள் மிகவும் உதவியாய் இருந்தன/இருக்கின்றன.

சடங்குக்காய் திருமதி வித்யா சங்கரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையை அமைக்காமல், அவர் மறைந்த இவ் வேளையில் அவர் எழுதியுள்ள அற்புத புத்தகங்கள் இரண்டினைப் பற்றி பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யக் கூடிய சிறந்த அஞ்சலி என்றெண்ணுகிறேன்.

ஒரு பாமர ரசிகனுக்கு இசையின் அழகை (aesthetics) ரசிக்க அதனுள் பொதிந்திருக்கும் அறிவியல் (scientific aspects) சார் விஷயங்கள் தேவைப்படுவதில்லை. இசை ரசனையில் முதல் நிலையைக் கடந்து அடுத்த நிலைக்குச் செல்லும் போது, ரசிகானுபவம் அழகுணர்ச்சி மட்டுமின்றி அறிவியல் பார்வையையும் சார்ந்துள்ளது. இவை அற்புதமானவை, இவை புதியவை, இவை அரியவை என்று நம்மால் அழகுணர்ச்சியின் துணை கொண்டே உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், அவை ஏன் அற்புதமானவை/புதியவை/அரியவை/ என்று விளங்கிக் கொள்ள அறிவியல் பின் புலம் இன்றியமையாததாகிறது. "The more scientific, classicism is presented, the more aesthetic and sublime it becomes", என்று வித்யா சங்கரே ஒரு கட்டுரையில் அழகாகக் கூறுகிறார்.

ஒரு கலையை கலையாகவும், அக் கலைக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் நியதிகளாகவும், இவ்விரு பரிமாணங்கள் இணைத்துப் பெரும் உருவாகவும் அணுகுதல் சுலபமன்று. இப் பரிமாணங்களை வெளிக் கொணரும் நோக்கோடு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் விளக்கும் அறிவியல் உண்மைகள் பண்டிதரிடையே புழக்கத்தில் இருப்பினும், அவற்றை இசையில் ஓரளவு தேர்ச்சியுடைய ரசிகன் கூட புரிந்து கொள்வது கடினம். எப்படி பலருக்கு கார் ஓட்டத் தெரிந்தாலும், கார் ஓடுவதற்கு பின் இருக்கும் அறிவியல் விஷயங்களை காருடன் கொடுக்கப்படும் துணை நூலைக் கொண்டு மட்டும் உணர்ந்து கொள்ள முடிவதில்லையோ, இசையிலும் இசையை ரசிப்பவர்களால் அதன் பின்னால் இருக்கும் விஷயங்களை ஆய்வுக் கட்டுரைகளை மட்டும் வைத்துக் கொண்டு புரிந்து கொள்வது கடினம்.

அப்படியெனில் இசை பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள என்னதான் வழி?

அறிமுக நூல்கள் மூலமே இவ்விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

அறிமுக நூல்கள் என்றால்?

அடிப்படை விஷயங்கள் தெளிவாக விளக்கப்படிருக்கும் நூல்கள். விஷயமும் இருக்க வேண்டும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும். சொல்கிற விஷயம் எத்தனை சிக்கலானதாக இருந்தாலும் சொல்லப்பட்ட விதத்தில் சிக்கலின்று இருத்தல் அவசியம். சாத்தியமா?

சத்தியமாய் சாத்தியம். "The Art and Science of Carnatic Music" என்ற தலைப்பில் 18 கட்டுரைகள் கொண்ட நூல் மேற் சொன்ன இலக்கணங்களில் கச்சிதமாய் பொருந்துகிறது.

இந் நூலில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வித்யா சங்கர் வழங்கிய பொழிவுகளின் தொகுப்பே. தன் பொழிவுகளின் நோக்கங்களைக் கூறும் போது, "initiate them (young lay music lovers) into the fundamental aspects of the structure, science and art of Carnatic music, so as to enable them to appreciate the art better", என்கிறார் வித்யா சங்கர்.

70-களின் கடைசியில் முதன் முறையாகக் நிகழ்த்தப்பட்ட இப் பொழிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்றதனால், தொடர்ந்து இப்பொழிவுகளை பல இடங்களில் நிகழ்த்தப்பட்டன. 1983-ல், இப் பொழிவுகளின் தொகுப்பை நூலாக மியூசிக் அகாடமி வெளியிட்டது. "Her success in expressing the most subtle thoughts on the subject of Carnatic Music, her exposition of the delicacies of patterns of several ragas supporting her thesis with illustrations from the composers is masterly", என்று எழுத்தாளர் தி.ஜானகிராமன் தனது பாராட்டுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

தன் புத்தகத்தை ‘ஒலி’ என்கிற பதத்திலிருந்து தொடங்கியுள்ளார் வித்யா சங்கர். ‘இனிமையான ஒலியே நாதம்’ என்று விளக்கி, ஒலிக்கும் இசைக்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை விளக்குகிறார். தன் விளக்கங்களுக்கு அடித்தளமாய் சங்கீத ரத்னாகரம் போன்ற நூல்களை குறிப்பிடுவதோடன்றி, இன்று புழக்கத்தில் இருக்கும் பாடல்களிலும் சொல்லப்பட்டிருக்கும் அதே கருத்துகளையும் உடனுக்குடன் குறிப்பிட்டு இருப்பது வெகு நேர்த்தியாய் அமைந்துள்ளது.

ஒலி, அதனின்று உருவாகும் நாதம்,நாதத்தின் கூறுகள், நாதத்துக்கு ஆதாரமாய் விளங்கும் ஸ்ருதி, ஸ்ருதியுடன் இணைந்து இசைக்கும் கருவிகள், அக் கருவிகளில் இசை பிறக்கத் தேவைப் படும் ஸ்வரஸ்தானங்கள், ஸ்வரஸ்தானங்களுக்கும் ஸ்வரங்களுக்கும் உள்ள வேறுபாடு, ஸ்வரங்கள் கையாளப்பட வேண்டிய முறைகள் என்று அடுத்தடுத்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு சரளமாய் புத்தகத்தின் எந்த ஒரு வாசகனாலும் பயணிக்க முடியும்.

அடிப்படைகள் தெளிவானதும், ஸ்வரக் கோவைகளான ‘Scales’, அவை உருவான விதம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்திய இசைக்கே உரியதான ராகங்கள் பற்றி விரிவாக இடம் பெற்றுள்ளது. தானாகத் தோன்றிய ஸ்வயம்பு ராகங்கள், அவற்றிலிருந்து கிருஹ பேதம் மூலம் பிறக்கும் ராகங்கள், காலப்போக்கில் அட்டவணைப்படுத்தப்பட்ட மேளகர்த்தா முறை, தாய் ராகங்களில் இருந்து பிறக்கும் ஜன்ய ராகங்கள் என்று பல விவரங்கள் இப்பகுதியில் நுணுக்கமாய் தொகுக்கப்பட்டுள்ளன.

விவரங்களின் அடுக்காக மட்டுமே அல்லாமல், அவ்விவரங்களின் பயன்பாட்டையும் தெரிவித்திருப்பது இப்புத்தகத்தின் தனிச் சிறபபாகும். உதாரணமாக, 12 ஸ்வரஸ்தான நியதிப் படி இரண்டு ரிஷபம் ஆனால் 22 ஸ்ருதிகள் அடிப்படையில் பார்க்கும் போது ரிஷபத்தில் நான்கு வகையுண்டு என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவற்றின் பயன்பாட்டை புழக்கத்தில் இருக்கும் ராகங்களான பைரவியிலும், கரஹரப்ரியாவிலும் வரும் ரிஷபத்தைக் கொண்டு விளக்கியிருக்கிறார். இவ்வாறு செய்யும் போது, புத்தகத்தைப் படிக்கும் மாணவன் வெறும் விவரங்களை நெற்று அடிக்கிறோம் என்று எண்ணாமல், படிக்கும் விஷயத்தில் பொதிந்திருக்கும் பயன்பாட்டையும் சேர்த்து உணரக் கூடும்.

பெரும்பாலான சமயங்களில் பண்டிதர்களால் தங்கள் நிலையை விட்டு இறங்கி பாமரனுக்காய் பேசுவதென்பது முடியாத காரியமாய் இருக்கிறது. பல்லாண்டு காலம் இசையிலும், ஆய்விலும் ஊரிய வித்யா சங்கர், தன் பாண்டித்யத்தை பறை சாற்றுவதில் கிஞ்சித்தும் ஈடுபடாதிருப்பதே இந் நூலின் எளிமைக்கு முக்கிய காரணம்.

வித்யா சங்கரின் மற்றொரு பிரபலமான நூல், "Aesthetic and Scientific Values in Carnatic Music".

இந் நூலில் 1946-லிருந்து 1996 வரை மியூசிக் அகாடமியில் வித்யா சங்கர் அளித்துள்ள செயல்முறை விளக்கங்களின் தொகுக்கப்பட்டுள்ளன. (இதன் இரண்டாம் தொகுதியும் வெளியாகியிருப்பது சமீபத்தில்தான் தெரிந்தது.) 50 வருட உழைப்பின் பயனாய் 20 கட்டுரைகள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பல கட்டுரைகள் தமிழ்க் கட்டுரைகள்.

1946-ல் டைகர் வரதாச்சாரியாரின் தலைமையில் படிக்கப்பட்ட ‘தியாகராஜரைப்’ பற்றிய கட்டுரை, இள வயதிலும் வித்யா சங்கருக்குள் இருந்த ஆய்வு நோக்கைப் பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளது. ஷ்யாமா சாஸ்திரி, கமகங்கள், வீணை கற்றுக் கொடுக்கும் முறை, மேளராகமாலிகை என்று பலதரப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இது போன்ற கட்டுரைகள் பெரும்பாலும், அனுபவம் பகிர்தலாகவோ, அரிய விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகளாகவோ அமைந்துள்ளன.

இவை தவிர, வித்யா சங்கர் என்ற ஆய்வாளரின் தனிப்பட்ட ஆராய்ச்சிகளின் பதிவாய் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் இரண்டு.

முதல் கட்டுரை – "Derivation and Application of additional srutis." ஒரு ஸ்தாயிக்குள் 22 ஸ்ருதிகளை தேர்ந்த காதுகளால் தெளிவாக பாகுபடுத்திவிட முடியும் என்பது பரவலான கூற்று. இந்த 22 ஸ்ருதிகளில், பிரக்ருதி ஸ்வரங்களான ஷட்ஜம், பஞ்சமம் தவிர, ஐந்து விக்ருதி ஸ்வரங்களான ரிஷபம், காந்தாரம், மத்யமம், தைவதம், நிஷாதம் ஆகியவை நான்கு நிலைகளில் இடம் பெற்றுள்ளன. அனைத்தையும் சேர்ப்பின் 2+(2*2*5) = 22.

வித்யா சங்கர் தன் ஆய்வில், இந்த 22 ஸ்ருதிகளைத் தவிரவும் வேறு ஸ்ருதிகள் உபயோகத்தில் உள்ளதையும், அவற்றை சரியாக பாகுபடுத்த முடியும் என்றும், அந்த ஸ்ருதிகளின் Relative Frequency-ஐயும் நிறுவியுள்ளார். ஏற்கெனவே இருந்த 22-ஐத் தவிர 10 ஸ்ருதிகளை எப்படி நிறுவினார் என்பதை சுருக்கமாய் விளக்குதல் முடியாத காரியம். ஆர்வம் இருப்பவர்கள் புத்தகத்தை வாங்கிப் படிப்பதே சாலச் சிறந்தது. "The calculation of sruti intervals constitutes the author’s own contribution to Musicology", என்கிறார் டி.எஸ்.பார்த்தசாரதி.

இவ்வாய்வுக்காக ‘ஸ்ருதி வீணை’ என்றொரு வகை வீணையை தானே வடிவமைத்துள்ளார்.

அந்த வீணையின் வடிவமைப்பின் விவரமே முன் சொன்ன இரு கட்டுரைகளுள் இரண்டாம் கட்டுரை. ‘Sruti Vina’ என்ற தலைப்பில் 1985-ல் படிக்கப்பட்ட கட்டுரையில் இந்த வீணையில் எந்தெந்த இடத்தில் fret-கள் அமைக்க வேண்டும் என்று நிறுவியிருக்கும் விதம் ஸ்வாரஸ்யமானது. கையால் வரையப்பட்ட தெளிவான அட்டவணைகளையும் கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டிருப்பது நிச்சயம் மாணவர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும். வேண்டா வெறுப்பாய் படித்த Theory of Vibration-ம், மாய்ந்து போய் போட்ட சிறு வயது L.C.M கணக்குகளும் ஓர் உன்னத இசைக் கருவி உருவாக்க உதவியாய் இருக்கும் அதிசயத்தை எண்ணி அறிவியலில் ஈடுபாடுள்ளவர்கள் நிச்சயம் மகிழ்வர்.

இசை ஆய்வாளர்களுள் பலர் செயல் முறை விளக்கங்களை சிறப்பாகச் செய்யக் கூடியவர்கள். அவற்றை நேரில் கேட்கும் போது சுலபமாகவும், தெளிவாகவும் விளங்கும். ஆனால், அதே விளக்கத்தை நேரில் கேட்காமல் கட்டுரையாகப் படிக்கும் போது, பல விஷயங்கள் விளங்காமல் போகும். வித்யா சங்கரைப் பொறுத்த மட்டில், அவரது செயல்முறை விளக்கங்கள் தொகுக்கப்பட்டிருக்கும் இரு புத்தகங்களிலும், வாசகனை சென்றடைவதில் சுலபமாய் வெற்றியடைந்துவிடுகிறார்.

பாவம்! காலன்தான் என் செய்வான். அவனால், தொண்ணூறு வயதில் உடல் தளர்ந்த பெண்மணியைத்தான் வீழ்த்த முடியும். அந்தப் பெண்மணி வாழ்ந்த காலத்தில் சாதித்தையா வீழத்த முடியும்?

பி.கு: புத்தகங்கள் இரண்டும் carnaticbooks.com-ல் கிடைக்கின்றனthis is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.