![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 102
![]() இதழ் 102 [ டிசம்பர் 2013] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
பல்லவர் பாதையில்
மகேந்திரவர்மர் செய்வித்த குடைவரைகளுள் சிறியதும், மிகச் சிறந்த கற்பனை வளத்துடன் உருவாக்கப்பட்டது மகேந்திரவாடி குடைவரை என்றால் அது மிகையாகாது தான்! அதே சமயம் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் குடைவரைகளைக் கொண்டு விளங்குவது மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் ஆகும். மன்னரின் பிரம்மாண்டம் படைக்கும் மனோபாவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவது மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் எனலாம். ஆம், மாமண்டூர் நரசமங்கல வளாகத்தில் மட்டும் நான்கு குடைவரைகள் அமையப் பெற்றுள்ளன. ![]() இக்குடைவரைகள் அமைந்துள்ள மாமண்டூர், காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் தூசி மாமண்டூர் என்று வருவாய்த் துறையினர் பதிவுகளில் அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்திருக்கும் தூசி மாமண்டூருக்கு கிளம்பி அதற்கு பதிலாக செங்கற்பட்டு மாமண்டூர் செல்ல நேர்ந்தால் தயவு செய்து வருத்தப்பட வேண்டாம்...! அப்படியே திருக்கழுக்குன்றம், மாமல்லபுரக் குடைவரைகளின் அழகினைப் பருகி விட்டு அப்படியே ஒரு “U” turn எடுத்து வந்தால் இக்குடைவரைகளை அடையலாம். இக்குடைவரைகளை நோக்கி 23.5.2010, 16.10.2010, 23.10.2010 மற்றும் 30.102.10 ஆகிய தேதிகளில் எனது பயணத்தினை மேற்கொண்டிருக்கிறேன். மனதிற்கு பிடித்து விட்டால் மறுபடி மறுபடி செல்லத் தோன்றுவது இயற்கை தானே! 23.5.2010 அன்று காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலை இரசித்து விட்டு முதன்முறையாக மாமண்டூரை நான் அடையும் போது மாலை 5 மணி. வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. மாமண்டூரிலிருந்து 1 கி.மீ. தொலைவு சென்று நரசமங்கலம் பிரிவு சாலையிருந்து மேற்கு முகமாக சென்றால் நரசமங்கலம் என்று விசாரித்து அறிந்து கொண்டேன். மழை வருவதற்கான அறிகுறிகள் இருந்ததால் சாலை மனித நடமாட்டமின்றிக் காணப்பட்டது. ஒருவழியாக பிரிவு சாலையை அடைந்து குடைவரை செல்லும் மண் சாலையை அடைந்தேன். மண்சாலை நரசமங்கலம் ஊருக்குள் நுழைந்ததும், வலமும் இடமுமாகப் பிரிந்து செல்வதைக் காணலாம். இந்த இடத்திலிருந்து எதிரே நோக்கினால் நீண்ட மலைத்தொடரின் மடியில் முகிழ்த்து பொன்னிடை முத்துக்களைப் பதித்தாற்போல் காட்சியளிக்கும் இந்நான்கு குடைவரைகளின் கம்பீரமான அழகினை குடைவரைகளின் மஞ்சரி (Cluster) என்று நாம் அழைப்பது மிகையாகாது தானே! (இவ்வழகு தான் என்னை 16.10.2010, 23.10.2010, 30.102.10 தேதிகளில் திரும்பத் திரும்பச் செல்லத் தூண்டியது.) ![]() இடப்புறம் பிரியும் தடத்தில் இரு மருங்கிலும் அழகிய பச்சை வயல்களைத் தாண்டிச் சென்றால் குடைவரைகள் அமைந்துள்ள தொடர் குன்றுகளை அடையலாம். இக்குடைவரைகளை படமெடுக்க உடனிருந்து உதவியவை நிகான் D90, நிகான் D5000 மற்றும் கெனான் 7D காமிராக்கள். குடைவரைகள் அமையப் பெற்றுள்ள இக்குன்றுத்தொடரிடையே ஓடும் ஓடையினை எல்லையாகக் கொண்டு இத்தொடர், மாமண்டூர் மற்றும் நரசமங்கலம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஓடையின் வடப்புறத்தே மாமண்டூர் வருவாய்க் கிராம எல்லையில் பெரும்பகுதி நிறைவடைந்த இரண்டு குடைவரைகளும், தென்புறத்தே நரசமங்கலம் வருவாய்க் கிராம எல்லையில் சிறியதும், பெரியதுமாக இரண்டு நிறைவடையா குடைவரைகளும் அமைந்துள்ளன. தென்வடலாக உயர்ந்து விரியும் இக்குன்றுத் தொடரின் பின்புறம் முதலாம் மகேந்திரவர்மரால் உருவாக்கப்பட்ட “சித்ரமேகத் தடாகம்” பரந்து விரிந்து காணக் கிடைக்கும். ஆனால் தற்போது மகேந்திரர் காலத்தைய சிறப்பின்றி வறண்டு கிடக்கிறது. இக்குடைவரைகளை அவை அமைந்துள்ள வருவாய்க் கிராமங்களையொட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்: I. நரசமங்கல குடைவரைகள்: a. முற்றுப் பெறாத சிறிய குடைவரை b. முற்றுப் பெறாத பெரிய குடைவரை II. மாமண்டூர் குடைவரைகள்: a. ருத்ர வாலீஸ்வரம் b. வடக்கு குடைவரை இனி இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம் I.a நரசமங்கல குடைவரைகள் - முற்றுப் பெறாத சிறிய குடைவரை குன்றுத்தொடரின் தெற்கு மூலையில் கிழக்கு திசைப் பார்வையில் இக்குடைவரை குடையப் பெற்றுள்ளது. மிக எளிமையான கட்டடக்கூறுகளைக் கொண்ட இக்குடைவரையை அணுக ஏதுவாக படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரைப்பணிகள் தொடங்கி முழுமை பெறாமல் இடையிலேயே கைவிடப்பட்டுள்ளன. ![]() இக்குடைவரையின் முகப்பில் இரண்டு முழுத்தூண்களும், தென்,வட புறங்களில் பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. முழுத்தூண்களுள் முதல் தூணில் சதுரம், கட்டு, சதுரமெனப் பிரிக்கும் பணி நிறைவுறாமல் கைவிடப்பட்டுள்ளது. கீழ்ச் சதுரம் மேற்சதுரத்தை விட அதிக உயரத்துடன் காணப்படுகிறது. இரண்டாம் முழுத்தூண், சதுரம், கட்டு, சதுரம் போன்ற எவ்வித அமைப்பும் துவங்கப் பெறாமல் எளிமையாக விடப்பட்டுள்ளது. ![]() அரைத்தூண்களும் எவ்வித அமைப்புமின்றி எளிமையாக, நான்முகமாகவே உள்ளன. வளைந்த போதிகைகள் உத்திரத்தை தாங்குவது போல அமைக்கப்பட்டுள்ளன. முகப்புத் தூண்களையடுத்த முகமண்டபத்தின் கூரை, தரை மற்றும் பக்க்ச் சுவர்கள் வெறுமையாகவும், சமன் செய்யப்படாமலும் உள்ளன. குடைவரையின் பின்புறச்சுவரில் மூன்று கருவறைகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டு அது நிறைவுறாமல் கைவிடப்பட்டுள்ளது. இப்பணி துவங்கியமைக்கு அத்தாட்சியாக பின்சுவற்றில் உளிகளால் பொளியப்பட்டுள்ள சுவடுகள் பாறைகளில் வெளிப்படுகிறது. ![]() இக்குடைவரையிலிருந்து மீள வரும் போது மனதில் தோன்றிய வினாக்கள்: 1. குடைவரை முற்றுப் பெறாமைக்குக் காரணம் என்னவாயிருக்கும்? இடைவிடாத போர்களா? அல்லது தெரிவு செய்யப்பட்ட பாறையின் தரக் குறைவா? 2. மூன்று கருவறைகள் எந்ததெந்தக் கடவுளருக்காக அமைக்கவிருந்தனர்? விடைகளைத் தேடி நம் பயணத்தைத் தொடர்வோம்!! this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |