http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 108

இதழ் 108
[ ஜூன் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

வணிகர்கள்
Kudumiyanmalai - 2
பண்டைய கட்டுமானங்களைப் பாதுகாத்த மேலப்பாதி திருக்கோயில்
வரலாற்றின் பார்வையில்.. நியமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
தேடலில் தெறித்தவை - 14
குடவாயில் மாடக்கோயில்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 5
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 4
செழியனின் நற்கொற்கை
இதழ் எண். 108 > கலையும் ஆய்வும்
குடவாயில் மாடக்கோயில்
இரா.கலைக்கோவன், மு.நளினி
கும்பகோணம் திருவாரூர்ப் பெருவழியில் 15 கி. மீ. தொலைவில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது குடவாயில். இங்குள்ள பாடல் பெற்ற(1) கோணேசுவரர் கோயிலின் மேற்குப் பார்த்த நுழைவாயிலாக உள்ள ஒரு நிலைக் கோபுரம் கபோதபந்தத் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகை தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டு, மேலே வேதிகையும் கர்ணகூடங்களும் பெருஞ்சாலையும் பெற்று அமைந்துள்ளது.(2) கர்ணகூடங்களில் வடபுறம் பிள்ளையாரும் தென்புறம் முருகனும் அமைய, பெருஞ்சாலையின் வட, தென்பிரிவுகளில் முறையே சண்டேசுவரரும் கலைமகளும் இடம்பெற, நடுப்பகுதியில் விடையின்மீது இவர்ந்த சிவபெருமானும் உமையும் காட்டப்பட்டுள்ளனர்.


கோணேசர் திருக்கோயில் விமானம் - வெற்றுத்தளப் படிவரிசை


துணைத்தளத்தின் கண்டப்பகுதியில் மேற்கிலும் கிழக்கிலும் சிற்பங்கள் உள்ள போதும், சுவர்களிலுள்ள கோட்டப் பஞ்சரங்கள் வெறுமையாக உள்ளன. கோபுரத்தை ஒட்டித் தென்மேற்கில் சிறிய அளவிலான பிள்ளையார் திருமுன். வெளிச்சுற்றின் மேற்குப்பகுதியில் விரியும் நடைமண்டபக் கூரையை இரு சதுரப் பெருங்கட்டுத் தூண்கள் தாங்குகின்றன. கீழ்ச்சதுரங்கள் நாகபந்தம் கொள்ள, மேலே பூமொட்டுப் போதிகைகள். மண்டபத்தின் வடபுறம் தென்பார்வையாக இறைவி பெரியநாயகியின் திருமுன் அமைந்துள்ளது.

பெரியநாயகி வளாகம்

பெருமண்டபம், முன்மண்டபம், முகமண்டபம், இருதள வேசர விமானம் என அமைந்துள்ள இத்திருமுன்னின் பெரு மண்டபம் கபோதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கபோதம் பெற்று அமைய, முன்மண்டபம், முகமண்டபம், விமானக் கீழ்த்தளம் இவை பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கபோதம் கொண்டு காட்சிதருகின்றன. விமானம், முகமண்டபச் சுவர்களிலுள்ள கோட்டப் பஞ்சரங்கள் வெறுமையாக உள்ளன. சிறிய அளவில் இரண்டாம் தளம் பெற்றுள்ள விமானத்தின் கீழ்த்தள ஆரமும் கிரீவகோட்டங்களும் சுதையுருவங்களால் நிரப்பப்பட்டுள்ளன.

சோமாஸ்கந்தர்

வண்டிக்கூடு கூரை பெற்றுள்ள பெருமண்டபத்தின் மேற்கில் சோமாஸ்கந்தர் தொகுதியும் தனி உமையும் இடம் பெற்றுள்ளனர். சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங் கள், முப்புரிநூல், உதரபந்தம், சவடி, தோள், கை வளைகள், சிற்றாடை அணிந்து சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் இறைவனின் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை கடகத்தில் உள்ளது. பின்கைகளில் மான், மழு. அருகிலுள்ள அம்மை குண்டலங்களற்ற நீள்செவிகளுடன் சடைமகுடராய்ப் பட்டாடை அணிந்து சுகாசனத்தில் உள்ளார். இரண்டு கைகளும் கடகத்தில் உள்ளன.
இருவருக்கும் இடையே நிற்கும் முருகன் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், ஸ்வர்ணவைகாக்ஷம் பெற்று கைகளில் மலர்களுடன் காட்சிதருகிறார். நின்றகோலத்தில் உள்ள தனி உமை கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், தோள், கடக, கை வளைகள், சரப்பளி, பட்டாடை அணிந்து வலக் கையைக் கடகத்தில் இருத்தி, இடக்கையை நெகிழ்த்தி உள்ளார்.

முன்மண்டபம்

முன்மண்டப வாயிலின் இருபுறத்தும் நிற்கும் சுதையாலான பெண் காவலர்கள் பின்கைகளில் வலப்புறம் மழுவும் இடப்புறம் பாசமும் கொண்டு முன்கைகளில் ஒரு கையைக் கடகத்திலும் மறு கையை கதையின் மீது இருத்தியவாறும் காட்சி தருகின்றனர். வாயிலின் மேற்பகுதியை இருபுறமும் சாமரப் பெண்களுடன் இறைவி அமர்ந்திருக்கும் வளைவு அலங்கரிக்கிறது. நந்தியும் பலித்தளமும் இடம்பெற்றுள்ள முன்மண்டபத் தின் வடகிழக்கில் அம்மையின் உற்சவத் திருமேனி காணப்படுகிறது. சடைமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, பட்டாடை, இடைக்கட்டு, முப்புரிநூல் அணிந்துள்ள இறைவி பெரிய நாயகியின் பின்கைகளில் அக்கமாலையும் தாமரையும் உள்ளன. முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை கடியவலம்பிதமாக உள்ளது.

இரண்டாம் கோபுரம்

கோயிலின் இரண்டாம் வாயில் முத்தளக் கோபுரமாக அமைந்துள்ளது. கபோதபந்தத் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரை யுறுப்புகள் எனக் கீழ்த்தளம் அமைய, மேலே ஆரஉறுப்புகளும் மேற்றளங்களும் கிரீவம், சிகரம் இவையும் உள்ளன. சுவர்களின் கோட்டப் பஞ்சரங்களில் சிற்பங்கள் இல்லை.

மாளிகை

கோபுரத்தை அடுத்து விரியும் மேற்கு மாளிகையின் வடபுறத்தே கலைமகள், யானைத்திருமகள் அமைய, தென்புறத்தே நால்வர், பரவை, கோச்செங்கணான், எழுவர் அன்னையர் சிற்பங்கள் உள்ளன. அன்னையர் அனைவரும் சுகாசனத்தில் வல முன் கையைக் காக்கும் குறிப்பில் காட்டி, இட முன் கையைத் தொடையில் வைத்துள்ளனர். சாமுண்டி தவிர்த்த பிற அனைவருமே கச்சணிந்துள்ளனர்.

கிரீடமகுடம் அணிந்துள்ள வைணவி பின்கைகளில் சங்கு, சக்கரம் கொண்டுள்ளார். சடைமகுடம் அணிந்துள்ள மகேசுவரி மழு, மான் பெற்றுள்ளார். சடைமகுடத்துடன் காட்சிதரும் நான்முகியின் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை. வராகி கலப்பையும் பாசமும் கொண்டு கரண்டமகுடத்துடன் உள்ளார். கிரீடமகுடம் அணிந்துள்ள இந்திராணி வலப் பின் கையில் வ{ரமும் இடப் பின் கையில் சக்தியும் கொண்டுள்ளார். கரண்டமகுடத்துடன் காணப்படும் கெளமாரியின் இரண்டு கைகளிலும் சக்தியே காணப்படுகிறது. சடைப்பாரத்துடன் உள்ள சாமுண்டி வலப் பின் கையில் முத்தலை ஈட்டியும் இடப் பின் கையில் தலையோடும் ஏந்தியுள்ளார்.

சுற்றுத் திருமுன்கள்

வடமேற்கில் உள்ள ஒருதள வேசரத் திருமுன்னில் வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சிதருகிறார். கரண்டமகுடத்துடன் உள்ள தேவியரில் தெய்வானை இடக்கையில் மலரேந்தி வலக்கையை நெகிழ்த்தியுள்ளார். கச்சற்ற மார்பகங்களுடன் காட்சிதரும் வள்ளி வலக்கையில் மலரேந்தி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். கரண்டமகுடம், சரப்பளி, பட்டாடையுடன் காட்சிதரும் முருகனின் பின்கைகளில் சக்தியும் வ{ரமும் உள்ளன. வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை அருட்குறிப்பில் உள்ளது. வடக்கில் உள்ள ஒருதள வேசர விமானத்தில் சண்டேசுவரரும் தென்மேற்கில் உள்ள ஒருதள வேசர விமானத்தில் பிள்ளையாரும் மேற்கிலுள்ள ஒருதள நாகர விமானத்தில் தென்பார்வையாக ஆடவல்லானும் இடம் பெற்றுள்ளனர். கிழக்குச் சுற்றுமாளிகை வெறுமையாக உள்ளது.

ஆடவல்லான்

ஆடவல்லான் தளத்தில் காணப்படும் ஆடவர் சிற்றாடையும் தோள், கை வளைகளும் அணிந்து பின் கொண்டையுடன் கைகளை வணக்க முத்திரையில் வைத்துள்ளார். அவர் அருகே காணப்படும் எழுத்துப் பொறிப்பு, அவரைக் களக்காட்டைச் சேர்ந்த மாலை தாழ் மார்பனாக அடையாளப்படுத்துகிறது.3 வலக்காலை முயலகன் மீது இருத்தி, இடக்காலை வலப்புறம் வீசி ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தும் இறைவனின் சடை மகுடத்தில் நெருஞ்சிப் பூக்களும் படமெடுத்த பாம்பும் பிறையும் காட்சிதருகின்றன. இருபுறத்தும் விரிந்துள்ள சடைகளில் வழக்கமாகக் காணப்படும் கங்கை இடம்பெறவில்லை.

சரப்பளி, உருத்திராக்கமாலை, சவடி, இடச்செவியில் பனையோலைக் குண்டலம், ஆட்டத்திற்கேற்ப இடப்புறம் பறக்கும் உதரபந்த முடிச்சுத்தொங்கல்கள், முப்புரிநூல், சிற்றாடை அணிந்து வலக்கையைக் காக்கும் குறிப்பிலும் இடக்கையை வேழமுத்திரையிலும் கொண்டுள்ள இறைவனின் பின்கைகளில் உடுக்கையும் தீயகலும் உள்ளன. வலச்செவி வெறுஞ் செவியாக அமைய, வலக்கையைப் பாம்பொன்று சுற்றியுள்ளது.

இறைவனின் இடப்புறம் சடைமகுடம், தோள்மாலை, சரப்பளி, அரும்புச்சரம், முப்புரிநூல், தோள், கடக, கை வளைகள், பட்டாடை அணிந்து வலக்காலினும் இடக்காலை சற்றே மடக்கி முன் நிறுத்தி நிற்கும் உமையன்னையின் வலக்கை கடகத்திலிருக்க, இடக்கை நெகிழ்ந்துள்ளது.


கோணேசர் திருக்கோயில் வெற்றுத்தளமும் விமானமும்


வெற்றுத்தளம்

சுற்றின் நடுவில் காணப்படும் மாடக்கோயிலின் வெற்றுத்தளம் கிழக்கில் 3. 50 மீ. உயரம் பெற்றுள்ளது. பாதபந்தத் தாங்குதளத்தின் கண்டம், பட்டிகை இவை மட்டுமே வெளித்தெரிய பிற உறுப்புகள் நிலத்தில் புதைந்துள்ளன. மேலே வேதிகைத் தொகுதி. நான்முகத் தூண்கள் சூழ்ந்த சுவரும் வெட்டுத்தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளும் கபோதமும் பெற்றுள்ள வெற்றுத்தளத்தின் மேல் இறைவன் கோயில் வளாகத்தைச் சூழ வருமாறு இரண்டடி உயரப் பிடிச் சுவர் அமைந்துள்ளது. வலபியில் உள்ள பூதவரி, கபோதக் கூடு வளைவுகள் இவற்றில் காணப்படும் பூதங்களின் விளையாட்டு, ஆடற்பெண், உச்சிஷ்டகணபதி உள்ளிட்ட சில சிற்பங்கள் குறிப்பிடத்தக்க சிறப்புடன் உள்ளன. கோணேசராக அறியப்படும் குடவாயில் இறைவனின் விமானம், முகமண்டபம் இவற்றைத் தாங்கும் வெற்றுத்தளத்தின் அமைப்பிலிருந்து வேறுபட்டு அமைந்துள்ள பெருமண்டபம், முன்மண்டபம் இவற்றிற்கான வெற்றுத்தளம் தாங்குதளமோ, தூண்களோ அற்ற நெடுஞ்சுவராக கூரையுறுப்புகள் மட்டும் பெற்று அமைந்துள்ளது.

விமானத்தை அடைவதற்கான படிக்கட்டுகள் தென்மேற்கில் உள்ளன. பதினெட்டுப் படிகள் இரண்டு நிலைகளில் அமைந்துள்ள இப்படிவரிசையின் அருகே உள்ள ஆடவல்லான் திருமுன் வாயில் இடப்புற நிலையிலிருந்து பதினேழாம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க புதிய கல்வெட்டொன்று கண்டறியப்பட்டது.4 பிலவ ஆண்டு ஆவணித்திங்கள் இருபத்து நான்காம் நாள் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு, குடவாயில் வடக்கு வீதியில் இருந்த சுப்பிரமணிய பிள்ளையின் மனைவி தெய்வானை ஆச்சியும் சுப்பிரமணிய பிள்ளையின் தம்பி அம்பலவாணப் பிள்ளையின் மனைவி வள்ளியம்மை ஆச்சியும் இணைந்து இத்திருநிலையை அமைத்துள்ளனர் எனும் தகவலைத் தருகிறது.

வெற்றுத்தளத்தின் தென்சுவர்க் கோட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆலமர்அண்ணல் சடைப்பாரத்துடன் வீராசனத்தில் உள்ளார். வலக்கால் முயலகன் மீது உள்ளது. வலப் பின் கை அக்கமாலையும் பாம்பும் கொள்ள, இடப் பின் கையில் தீச்சுடர். வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை ஆகூய வரதத்தில் உள்ளது. உதரபந்தமும் கழுத்தணிகளும் சிற்றாடையும் அணிந்துள்ள இறைவனின் வலச்செவியில் மகர குண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம். இறைவன் அமர்ந்துள்ள இருக்கையின் கீழ்ப்பகுதியில் வணங்கிய நிலையில் முனிவர்கள்.

விமானம்

இருதள வேசரமாக அமைந்துள்ள கோணேசர் விமானத்தின் கீழ்த்தளப் பத்திகள் அனைத்துமே புறந்தள்ளியுள்ளன. உபானம் பெற்ற பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் அணைத்த கர்ணபத்திகள், இந்திரகாந்த அரைத்தூண்கள் அணைத்த சாலைப்பத்திகள், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கூடுவளைவுகளுடனான கபோதம் என அமைந்துள்ள இத்தளத்தின் ஒடுக்கங்களில் சுவர்ப்பஞ்சரங்கள் காட்டப்பட்டுள்ளன. வேதிகைத்தொகுதிவரை பத்திகளின் கட்டமைப்பைப் பின்பற்றும் இச்சுவர்ப் பஞ்சரங்கள் தொடர்ந்து இரு நான்முக அரைத்தூண்கள், வெட்டுத் தரங்கப் போதிகைகள், கூரையுறுப்புகள், கபோதம், வேதிகை, கிரீவம், சிகரம் பெற்றுப் பத்திகளின் வலபியளவில் முடிகின்றன.
சாலைப்பத்திகளில் காட்டப்பட்டுள்ள மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்களை உருளை அரைத்தூண்கள் அணைத்துள்ளன. முத்திசைக் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. 6. 73 மீ. பக்கமுடைய சதுரமாக அமைந்துள்ள கீழ்த் தளத்தின் மீது ஆரமும் மேலே உயரக் குறைவான இரண்டாம் தளமும் வேசர கிரீவம், சிகரம் இவையும் அமைந்துள்ளன. மேற்குச் சாலையில் உத்குடியிலும் கிரீவத்தில் சுகாசனத்திலும் விஷ்ணு அமைய, வடக்குச் சாலையில் ஒருபாத மூர்த்தியும் வடக்கு கிரீவகோட்டத்தில் சுகாசனத்தில் நான்முகனும் உள்ளனர். தெற்குச் சாலையில் வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணல், கிரீவகோட்டத்தில் வீணையேந்தியுள்ளார். கிழக்குச் சாலையில் சுகாசனத்தில் அம்மையப்பரும் கிரீவகோட்டத்தில் முருகனும் இடம்பெற்றுள்ளனர்.



ஆடற்தொகுதி


மண்டபங்கள்

விமானத்தின் கட்டமைப்பைப் பெருமளவிற்குப் பின்பற்றி உள்ள முகமண்டபத்தின் சாலைப்பத்தி மட்டுமே புறந்தள்ளியுள்ளது. சாலைக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. தெற்குச் சாலைப்பத்தியை அடுத்த கர்ணபத்தி ஒடுக்கமாக அமைந்து சாளரம் பெற்றுள்ளது. தெற்கில் முன்றிலுடனான சாளரம் பெற்றுள்ள பெருமண்டபம் கபோதபந்தத் துணைத்தளம் பெற்றுள்ளது. அதன் கண்டப்பகுதியில் அருமையான ஆடற்சிற்பங்கள் உள்ளன. மேலே, எண்முக அரைத்தூண்கள் சூழ்ந்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ள இதன் முன் உள்ள முன்மண்டபம் தெற்கிலும் மேற்கிலும் வாயில்கள் பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் தாங்குதளம் பத்மபந்தமாக அமைந்துள்ளது. மேலே வேதிகைத்தொகுதி, நாகபந்தம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத்தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் அமைந்துள்ளன.

முச்சதுர, இருகட்டுத் தூண்கள் பூமொட்டுப் போதிகைகளின் துணையுடன் கூரை தாங்கும் முன்மண்டபம் வெறுமையாக உள்ளது. பெருமண்டப வாயிலைச் சுதையாலான காவலர்கள் பக்கத்திற்கொருவராகக் காக்கின்றனர். பின்கைகளால் போற்றியும் வியப்புணர்த்தியும் நிற்கும் காவலர்களுள் தெற்கர் இட முன் கையால் அச்சுறுத்தி, வல முன் கையை உருள்பெருந் தடியின் மீது இருத்த, வடக்கர் வல முன் கையால் அச்சுறுத்தி, இட முன் கையை உருள்பெருந்தடியின் மீது வைத்துள்ளார். முச்சதுர, இருகட்டுத் தூண்களும் உருளைத் தூண்களும் பூமொட்டுப் போதிகைகளின் உதவியுடன் கூரை தாங்கும் பெருமண்டபத்தில் நந்தி ஒன்றும் பலித்தளங்கள் இரண்டும் உள்ளன.

அதன் தெற்கிலும் தென்கிழக்கிலும் கட்டப்பட்டுள்ள திண்ணை வெறுமையாக உள்ளது. இருவரிசை உருளைத் தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகைகளுடன் கூரை தாங்கும் முகமண்டபம் வெறுமையாக உள்ளது. கருவறையில் சதுர ஆவுடையாரில் உயரமான உருளைப் பாணம் பெற்ற இலிங்கத் திருமேனி இடம்பெற்றுள்ளது.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் இருந்து துணுக்குக் கல்வெட்டுகள் பலவும் மூன்றாம் குலோத்துங்கரின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றும் படியெடுக்கப்பட்டுள்ளன. இறைவிக்கு அணிகலன் செய்வதற்காகக் குற்றாலத்தைச் சேர்ந்த திருச்சிற்றம் பலமுடையாரான காராணை விழுப்பரையர் பதின் கழஞ்சுப் பொன்னளித்த தகவலைத் தரும் மூன்றாம் குலோத்துங்கரின் கல்வெட்டு, குடவாயில் கோயிலைப் பெருந்திருக்கோயில் எனக் குறிப்பிடுகிறது.(5)

அச்சுததேவ மகாராயர் காலத்தில் வெட்டப்பட்டிருக்கும் இரண்டு கல்வெட்டுகளுள் ஒன்று செவ்வப்ப நாயக்கர், வையப்ப நாயக்கர் ஆகிய இருவரின் அன்னை, தந்தை நன்மைக்காகப் பெருந்திருக்கோயில் பெரியநாச்சி அம்மையின் திருஆபரணத் திருநாள் செலவினங்களுக்காக நிலக்கொடை அளிக்கப்பட்ட தகவலைத் தருகிறது.(6)

மற்றொரு கல்வெட்டு, செவ்வப்ப நாயக்கர், வையப்ப நாயக்கர் ஆகிய இருவரின் அன்னை, தந்தை நன்மைக்காக இறைவனுக்குச் செண்பகம் உட்பட்ட மலர்களிட வாய்ப்பாக நந்தவனம் அளிக்கப்பட்ட செய்தியைப் பகிர்ந்துகொள்கிறது.(7) பல்வேறு துணுக்குகளாகச் சிதறியிருக்கும் இரண்டு கல்வெட்டுகளுள் ஒன்று, தோப்புக்கு இறைவன் எழுந்தருளத் திருவீதி அமைக்கப்பட்ட தகவலைத் தருகிறது. மற்றொன்று, அமண்பள்ளி, பள்ளிவளாகம், குளம் இவற்றிற்கான நிலக்கொடை தொடர்பான அரசஆணையாக அமைந்துள்ளது. பள்ளி வாரியப் பிடாரர்களுள் புஷ்பசேனப்
பிடாரர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தெங்கூரான திருச்சிற்றம்பலநல்லூர் உள்ளிட்ட பல ஊர்ப்பெயர்களும் கையெழுத்தாளர்களாக அரசு அலுவலர் களின் பெயர்களும் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.(8)

குறிப்புகள்

1. சம்பந்தர் 2: 22, 58. ‘பெருங்கோயில், எழில்கொள் மாடக் குடவாயில்’ எனும் சம்பந்தரின் சொல்லாட்சிகள் கவனத்தில் கொள்ளத்தக்கன.
2. ஆய்வு நாட்கள் 14. 12. 1982, 24. 3. 2001, 30. 8. 2008, 22. 9. 2009, 23. 10. 2009. உடனிருந்து உதவிய திரு. எஸ். தர்மராஜன், திரு. அ. இராமகிருஷ்ணன் ஆகியோருக்கு உளமார்ந்த நன்றி. இக்கோயில் பற்றிய முதல் கட்டுரை பிப்ருவரி 1983, ‘திருக்கோயில்’ இதழில் வெளியானது.
3. எம். பாலசுப்பிரமணியம், குடவாயிற் கோட்டம், ப. 59.
4. இக்கல்வெட்டைக் களஆய்வின்போது பேராசிரியர் முனைவர் மு. நளினி கண்டறிந்தார். வரலாறு 11, ப. 14. தினமணி 9. 12. 2000.
5. நன்னிலம் கல்வெட்டுகள், தொகுதி -3 , தொடர் எண் 457: 1978.
6. மேலது.தொடர் எண் 458: 1978
7. மேலது.தொடர் எண் 459: 1978
8. மேலது, தொடர் எண்கள் 460 - 467: 1978.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.