http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 143

இதழ் 143
[ அக்டோபர் 2018 ]


இந்த இதழில்..
In this Issue..

அப்பர் என்னும் அரிய மனிதர் - 3
அரங்கநாதபுரம் திருவானேசுவரர்
அவர் போல்தான்! ஆனால் அவரில்லை!
அரங்கத்தின் ஆடற்சிற்பங்கள் இரண்டு
கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம்
திருவித்தியாசக்குடி
இதழ் எண். 143 > பயணப்பட்டோம்
திருவித்தியாசக்குடி
ச. கமலக்கண்ணன்
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மி. தொலைவில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் திருவேள்விக்குடி. மணவாளேசுவரர் கோயில் என்ற பெயரில் அமைந்திருக்கும் இக்கோயில் சம்பந்தர் மற்றும் சுந்தரரால் திருத்துருத்திக் கோயிலுடன் பொதுப்பதிகமாகப் பாடப்பெற்றது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி அங்குச் சென்ற எங்களுக்குப் பல மாறுபாடான சிற்பங்கள் தென்பட்டன.

உள்ளே நுழைந்தவுடன் கிழக்கு நோக்கி மகாமண்டபம், நடுமண்டபம், கருவறை என அமைந்திருக்கும் இவ்விமானத்தின் தாங்குதளம் பிரதிபந்தமாக உள்ளது. மேற்குத் திசையின் வடபுறக் கோட்டத்தில் அம்மையப்பர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மாதொருபாகனார் அம்மைக்குத் தன் இடப்பக்கத்தையே அளித்திருப்பார். ஆனால் இங்கு வித்தியாசமாக வலப்பக்கத்தைத் தந்துள்ளார். சடைமகுடத்துடன் இரு செவிகளிலும் பனையோலைக் குண்டலத்தைக் கொண்டுள்ள அம்மையப்பரின் கழுத்தைச் சரப்பளி அலங்கரிக்க, முப்புரிநூல் உபவீதமாக அமைந்துள்ளது. இடமுன்கையை நந்தியின்மீது ஊன்றியுள்ளார். இடப்பின்கையில் கர்த்தரி முத்திரையில் இருக்கும் பொருளை அடையாளம் காணவியலவில்லை. வலமுன்கை முழங்கையுடன் சிதைந்திருக்க, வலப்பின்கை முழுவதுமாகச் சிதைந்துள்ளது. வயிற்றில் உதரபந்தம், இடையில் இடப்புறம் தோலாடை, வலப்புறம் பட்டாடை எனக் கொண்டுள்ள இவரது இடக்கால் பார்சுவத்தில் இருக்க, வலக்கால் சமத்தில் உள்ளது.



அந்தரி, ஆலிங்கம், பிரதிமுகம், வாஜனம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்திருக்கும் பிரதிபந்தத் தாங்குதளத்தின் பிரதிமுகத்தில் பொதுவாக யாளிகள் ஒரே திசையை நோக்கியோ அல்லது ஒன்றையொன்று நோக்கிய இணைகளாகவோ அமைந்திருக்கும். ஆனால் இங்கு வித்தியாசமாக இரு யானைகள் சண்டையிட்டுக் கொள்ளும் சிற்பம் அம்மையப்பர் சிற்பத்திற்குக் கீழே இருக்கிறது. வடபுறத்து யானை துதிக்கையைச் சுருட்டிக்கொண்டு தந்தத்தால் எதிரிலிருக்கும் யானையைக் குத்திக் கொண்டிருக்க, தென்புறத்து யானையோ துதிக்கையை மேலே தூக்கியவாறு முன்னங்காலில் பலத்தைச் செலுத்தி ஆக்ரோஷமாகப் போரிடுகிறது. சிறிய அளவினதாக இருக்கும் பிரதிமுகத்துக்குள் அடக்கவியலாப் பெரிய உருவங்களைச் சற்றே சாய்த்தவாறு செதுக்கி மரபை மீறாத சிற்பிகளின் சிந்தனைத்திறன் வியக்கவைக்கிறது.





பல கோயில்களில் சிற்பங்களுக்கு அருகில் அதை எடுப்பித்தவர்களின் சிற்பங்கள் இருப்பதைக் கண்டிருக்கிறோம். அதுபோன்றதொரு சிற்பம் இங்கும் உள்ளது. சடைமகுடத்துடனும் நான்கு கைகளுடனும் சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் பின்னங்கைகளில் உள்ள பொருட்கள் சிதைந்திருப்பதால் இன்ன வடிவம் என அடையாளம் காணக்கூடவில்லை. வலமுன்கை கடக முத்திரையிலும் இடமுன்கை ஆகூயவரதத்திலும் இருக்க, வலக்காலைத் தாமரைப் பீடத்தின்மீது இருத்தியுள்ளார். அத்தாமரைப் பீடத்துக்கருகே கருடாசனத்தில் வணங்கிய நிலையில் ஓர் அடியவர் சிற்பம் காணப்படுகிறது. இவரை இச்சிற்பத்தை எடுப்பித்தவராகக் கருதலாம். ஆனால் எந்தவொரு சான்றும் இல்லாமலேயே ஓர் அறிஞர் இல்லாத உமையைப் புகுத்தி இவரைச் சண்டேசுவரராக அடையாளப்படுத்தி இருக்கிறார்.



இவைதவிர இக்கோயிலில் நாங்கள் கண்ட மற்றுமோர் அரிதான சிற்பம் பிரதிவரியிலுள்ள யாளிகளின் அணிவகுப்பு. பொதுவாகப் பிரதிவரியில் நின்ற நிலையில்தான் பெரும்பாலான இடங்களில் யாளிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் இங்கு இயக்க நிலையில் முன்னங்கால்களை எட்டி வைத்துக்கொண்டும் வாயைப் பிளந்தபடியும் போருக்குச் செல்வதுபோல் நடந்துகொண்டிருக்கும் யாளிகள் வியப்பைத் தருகின்றன. இன்னும் நுணுக ஆராய்ந்தால் இதுபோன்ற மேலும் பல அரிதான விஷயங்கள் வெளிப்பட வாய்ப்புள்ள இத்திருவேள்விக்குடி உண்மையிலேயே திருவித்தியாசக்குடிதான்.

       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.