http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 147

இதழ் 147
[ ஆகஸ்ட் 2019 ]


இந்த இதழில்..
In this Issue..

புள்ளமங்கைக் கல்வெட்டுகள் ‍-1
திருப்புள்ளமங்கை விமானம் - 1
கரை தழுவும் நினைவலைகள் - 4
கரை தழுவும் நினைவலைகள் - 3
சான்றோர் சினம்
இதழ் எண். 147 > கலையும் ஆய்வும்
திருப்புள்ளமங்கை விமானம் - 1
சு.சீதாராமன்
திருப்புள்ளமங்கை வளாகம்

கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டையைத் தாண்டி வலப்புறமாகப் பிரியும் கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் ஒரு கி.மி தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள அழகிய கிராமத்தில் "பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான் போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கை" என்று ஆளுடைய பிள்ளையால் பதிகம் அருளிச்செய்யப்பட்ட "திருஆலந்துறை மகாதேவர் கோயில்" அமைந்துள்ளது.



(புவியியல் அமைவிடம் நன்றி : கூகள் எர்த்)

புவியியல் ரீதியாக பூமத்தியரேகைக்கு வடக்கே 10*53"24" இலும் கிரீன்விச்சிற்கு கிழக்கே 79*10.29'28" லும் அமையப்பெற்ற இந்த அற்புத ஆலயம் முற்சோழர் ஆலயங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்



(குடமுருட்டியிலிருந்து திரு ஆலந்துறையாரின் கோவில் அமைவிடம்)

இத்திருக்கோயில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் சுமார் 700 மீட்டர் தொலைவிலும் அய்யம்பேட்டை கண்டியூர் சாலைக்கு வடக்கில் சுமார் 200 மீட்டர் தொலைவிலும் கோவிலைச்சுற்றிலும் கோவிலின் கிழக்கேயும் விரிந்து பரந்த அழகிய "பசுபதி கோவில்" கிராமத்தில் பாங்குற அமைந்துள்ளது.



பொன்னி நதியின் கிளைநதியாகிய குடமுருட்டி ஆற்றையும் பொன்னியாகவே பாவித்த ஆளுடைய பிள்ளையார் இக்கிராமத்தின் அமைவிடத்தை இவ்வாறு விளக்குகிறார்

"மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப்
புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே"

மேலும்

"பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்
கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே"

இத்திருத்தலத்தின் அமைவிடப்பெருமையைக்கூறி சந்தத்துடன் பாடி ஆட தவநிலை கிட்டும் என்று உறுதிபட எடுத்துரைக்கிறார்! (தன் பெயர் சொல்லி சொல்லும் இச்செய்தியை ஞானசம்மந்தப்பெருமானின் அனுபவமாகவே நாம் கொள்ளலாம்)

கருவறை விமானம்

கருவறை விமானம் ஆதிதளத்தில் 25'3"X25'3" அளவில் அதிஷ்டானம்,சுவர்,கூரை,முதல் தள ஆர உறுப்புகள்,இரண்டாம் தளம்(19'6"X19'6"),மூன்றாம் தளம் (13'9"X 13'9"),கிரீவம்,சிகரம் மற்றும் ஸ்தூபி ஆகிய எட்டு அங்கங்களுடன் அஷ்டாங்க நாகர விமானமாக எழுகிறது. ஆதிதளத்திற்கு மேல் எழும் இரண்டு தளங்களின் கட்டுமானமும் கருங்கற்களால் கட்டப்பட்டிருப்பது சிறப்பானதாகும்.



உபானம்,ஜகதி,உருள் குமுதம்,கம்புகளுடன் கூடிய கண்ட பாதம்,கபோதம் அதன் மேல் யாழிவரியும் அதற்கும் மேல் வேதிகைத்தொகுதியும் பெற்றுக் கபோதபந்த தாங்குதளமாக அதிஷ்டானம் அமைகிறது.கபோத்திற்கு மேலெழும் வேதிகைத்தொகுதி கம்புகள் தழுவிய கண்டபாதங்களுடன் காட்டப்பட்டுள்ளது. வேதிகை தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கண்ட பாதங்களிலும் வேதிகை பாதங்களிலும் இராமாயண மற்றும் சிவபுராண சிற்றுருவச்சிற்பங்கள் சிறந்த முறையில் வேறெங்கும் இல்லாத எழிலுடன் செதுக்கப்பட்டுள்ளன.வேதிகைக்கு மேல் ஒரு மெல்லிய கம்பு காட்டப்பட்டுள்ளது.



இக்கம்பிலிருந்து எழும் சுவர் சாலைப்பகுதிகள் தவிர்த்து பிரம்ம காந்த அரைத்தூண்களால் அணைவு பெறுகிறது.சாலைப்பகுதியில் மட்டும் விஷ்ணு காந்த தூண்கள் இடம் பெறுகிறது.இச்சுவரின் கிழக்குப் பகுதி கருவறை வாயிலாகவும், தெற்கு,மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கோட்டங்கள் அமைந்து அவைகளில் முறையே தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர் மற்றும் பிரம்மா ஆகியோரின் மூர்த்தங்கள் இடம் பெற்றுள்ளன. கருவறை விமானம் கர்ணகூடு,பஞ்சரம்,சாலை, பஞ்சரம் , கர்ணகூடு என்ற முறையில் அமைந்துள்ளது. பத்திப்பிரிப்பு கர்ணகூடு, சாலை, கர்ணகூடு என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கர்ணகூடு சுவற்றிலிருந்து சற்று முன்னிழுக்கப்பட்டுள்ளது. சாலை கர்ணகூடைக் காட்டிலும் சற்று கூடுதலாக முன்னிழுக்கப்பட்டுள்ளது. சாலைக்கும் கர்ணகூட்டிற்கும் இடையில் பக்கத்திற்கொன்றாக நிஷ்கராந்த பஞ்சரம் பொருத்தப்பட்டுள்ளது. நிஷ்கராந்த பஞ்சரத்தின் அதிஷ்டானம் விமான அதிஷ்டானத்திலிருந்து வேறுபட்டு உபானம்,பத்ம ஜகதி,உருள்குமுதம் மற்றும் வேதிகை பெற்று பத்ம பந்த தாங்கு தளமாக அமைந்து இடமாறு தோற்றப்பிழை ஏற்பட ஏதுவாக வர்க்கபேத அதிஷ்டானமோ என்று பார்ப்பவர்களை ஒரு நிமிடம் குழப்பத்திற்குள்ளாக்கும் வகையில் எழிலுற அமைந்து அழகூட்டுகிறது . கர்ணகூடுகளை அணைத்து எழும் பிரம்ம காந்த அரைத்தூண்களின் தலை உறுப்புகளாக மாலஸ்தானம்,கட்டு,கலசம்,தாடி,கும்பம்,பாலி,பலகை மற்றும் வீரகண்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.வீரகண்டத்தின் மேலெழும் தரங்கப்போதிகைகள் உத்திரம் தாங்க, உத்திரத்தின் மேல் வலபியும்,வலபியில் பூதவரியும் இடம்பெற்று வலபி மேல் கூரையும், கூரை நீட்சியான கபோதமும் காட்டப்பட்டுள்ளன.

பிரம்ம காந்த அரைத்தூண்களுக்கு சற்று உட்பக்கமாக நேர் மேலே கபோதத்தில் கூடுகள் காட்டப்பட்டுள்ளன.கபோதத்தின் மேலே யாளி வரிகளால் அமையப்பெற்ற பூமிதேசத்துடன் தளம் முடிவடைகிறது.

கோட்டங்கள்

வேதிகையின் மேலெழும் கோட்டம், மையத்தில் மாலஸ்தானம்,கட்டு,கலசம்,தாடி,கும்பம்,பாலி,பலகை மற்றும் வீரகண்டம் ஆகிய தலையுறுப்புகள் பெற்ற ருத்ர காந்த அரைத்தூண்கள் அணைய வீரகண்டத்தின் மேல் உத்திரம் மற்றும் வேதிகை பெற்று அதன் மேல் மகர தோரணத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது . சாலையின் இருமருங்கிலும் மாலாஸ்தானம்,கட்டு,கலசம்,தாடி,கும்பம்,பாலி,பலகை மற்றும் வீரகண்டம் ஆகிய தலை உறுப்புகளுடன் கூடிய விஷ்ணு காந்த அரைத்தூண்களில் மேலெழும் தரங்கப்போதிகைகள் உத்திரம் தாங்க, உத்திரத்தின் மேல் வலபியும்,வலபியில் பூதவரியும் இடம்பெற்று வலபி மேல் கூரையும், கூரை நீட்சியான கபோதமும் காட்டப்பட்டுள்ளன. விஷ்ணு காந்த அரைத்தூண்களுக்கு நேர் மேலே கபோதத்தில் கூடுகள் காட்டப்பட்டுள்ளன.கபோதத்தின் மேலே யாளி வரிகளால் அமையப்பெற்ற பூமிதேசத்துடன் தளம் முடிவடைகிறது. இக்கோட்டங்களில் தெற்கு,மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் முறையே தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர் மற்றும் பிரம்மா ஆகியோரின் மூர்த்தங்கள் இடம் பெற்றுள்ளன.



நிஷ்கராந்த பஞ்சரம்

இப்பஞ்சரங்கள் விமானத்தின் அங்கங்களைப் பெற்று எழிலுற அமைந்துள்ளன.

இப்பஞ்சரத்தின் அதிஷ்டானம், உபானம்,பத்மஜகதி,உருள்குமுதம் வேதிகைத்தொகுதி,அதன் மேல் கண்டபாதம் பெற்று பத்ம பந்த அதிஷ்டானமாக அமைகிறது. வேதிகைத்தொகுதியின் மேல் எழும் பிரம்மகாந்த அணைவுத்தூண்கள் தலையுருப்புகளாக மாலாஸ்தானம்,கட்டு,கலசம்,தாடி,கும்பம்,பாலி,பலகை மற்றும் வீரகண்டம் பெறுகிறது.

வீரகண்டத்தின் மேலெழும் தரங்கப்போதிகைகள் உத்திரம் தாங்க, உத்திரத்தின் மேல் வலபியும்,வலபியில் பூதவரியும் இடம்பெற்று வலபி மேல் கூரையும், கூரை நீட்சியான கபோதமும் காட்டப்பட்டுள்ளன. பிரம்ம காந்த அரைத்தூண்களுக்கு சற்று உட்பக்கமாக நேர் மேலே கபோதத்தில் கூடுகள் காட்டப்பட்டுள்ளன.கபோத்தின் மேலெழும் பூமிதேசம் அதன் மேல் வேதிகைத்தொகுதி தாங்கும் கிரீவமும் அதன் மேல் அமைந்த நாசிகை சிகரம் போல் அமைந்து அதன் மேலுள்ள கீர்த்திமுகம் ஸ்தூபி போல் பொலிய இப்பஞ்சரம் ஒரு விமானமாகவே காட்சியளிக்கிறது. கருவறை விமானத்தின் நான்கு திசைகளிலிலும் பக்கத்திற்கு இரண்டாக கிழக்கு பக்கம் தவிர்த்து மொத்தம் ஆறு நிஷ்கராந்த பஞ்சரங்கள் கருவறையில் மட்டும் பொருத்தப்பட்டுள்ளன.



ஆதிதள ஆரச் சுவர்

பூமிதேசத்திற்கு சற்று உள்ளடங்கி எழும் ஆதிதள ஆரச்சுவர்கள் சாலை,பஞ்சரம் மற்றும் கர்ணகூடுகளாலான அலங்கரிப்புகளுடன் எழுகின்றன. முதன்மைத்திசைகளில் சாலைகளும்,இரண்டாம் நிலைத்திசைகளில் கர்ணகூடுகளுடனும் இவைகளை இணைக்கும் இணைவுச்சுவர்களின் மத்தியில் பக்கத்திற்கு இரண்டு பஞ்சரங்களும் எழிலுற அமைக்கப்பட்டு ஆதிதள ஆரச் சுவர் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவ்வாரச்சுவரில் இடம் பெறும் சாலை,பஞ்சரம் மற்றும் கர்ணகூடுகள் யாவும் நாலங்கம் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.



பூமிதேசத்தின் மேலெழும் பொதுவான வேதிகைத்தொகுதியில் இடம் பெறும் ஆர உறுப்புகள் அரைத்தூண்களால் அணைவு பெற்ற சுவர்களும் கூரை உறுப்புகளும் கொண்டுள்ளன.வேதிக்கண்டங்கள் அதிஷ்டானத்தில் அமைந்தது போலவே சிற்பங்கள் பெறுகின்றன. ஆனால் அவைகள் அதிஷ்டானம் போலல்லாமைல் மலர் வளைய அலங்கரிப்பாகவே பெரும்பாலும் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு ஆர உறுப்பும் கிரீவம்,சிகரம் மற்றும் ஸ்தூபி பெற்று எழிலுற அமைகிறது. ஆரச்சுவரில் இடம்பெற்ற அல்ப நாசிகைகளில் பல்வேறு கந்தர்வர்களின் ஆண்,பெண் சிற்பங்கள் அமைந்துள்ளன. அவைகளில் பிச்சாடனர்,முருகன்,பரமபதநாதர் மற்றும் பிரம்மா ஆகியோர் சாலைகளில் அமைந்த நாசிகைகளில் முறையே தெற்கு,கிழக்கு,மேற்கு மற்றும் வடக்கில் அமைந்தன குறிப்பிடத்தக்கதாகும்.இச்சாலைகளை இருமருங்கிலும் கந்தர்வர்கள் தாங்குகின்றனர். கர்ணகூடுகளிலும் பஞ்சரங்களிலும் அமைந்த நாசிகைகளில் பல்வேறு கந்தர்வர்களின் ஆண்,பெண் சிற்பங்கள் அமைந்து விமான அமைப்பிற்கு அழகூட்டுகிறது.

இரண்டாம் தளம்

முதல் தள ஆரச்சுவரை ஒட்டி அதன் பின் எழும் இரண்டாம் தளம் தாய்ச்சுவரிலிருந்து ஆதிதளம் போலவே கர்ணகூடுகள் முன்னிழுக்கப்பட்டு, சாலை மேலும் சற்று முன்னிழுக்கப்பட்டு கட்டு,கலசம்,தாடி,கும்பம்,பாலி,பலகை மற்றும் வீரகண்டம் ஆகிய தலை உறுப்புகளுடன் கூடிய பிரம்ம காந்த அரைத்தூண்களால் அணைய வீரகண்டத்தின் மேலெழும் தரங்கப்போதிகைகள் உத்திரம் தாங்க, உத்திரத்தின் மேல் வலபியும்,வலபியில் பூதவரியும் இடம்பெற்று வலபி மேல் கூரையும் கூரை நீட்சியான கபோதமும் காட்டப்பட்டுள்ளன. பிரம்ம காந்த அரைத்தூண்களுக்கு நேர் மேலே கபோதத்தில் கூடுகள் சாலையிலும் சற்று உள்ளடக்கி கர்ணகூடுகளிலும் காட்டப்பட்டுள்ளன.கபோதத்தின் மேலே யாளி வரிகளால் அமையப்பெற்ற பூமிதேசத்துடன் தளம் முடிவடைகிறது

இரண்டாம் தள ஆரச்சுவர்

பூமிதேசத்திற்கு சற்று உள்ளடங்கி எழும் இரண்டாம் தள ஆரச்சுவர்கள் சாலை,பஞ்சரம் மற்றும் கர்ணகூடுகளாலான அலங்கரிப்புகளுடன் எழுகின்றன. முதன்மைத்திசைகளில் சாலைகளும்,இரண்டாம் நிலைத்திசைகளில் கர்ணகூடுகளுடனும் இவைகளை இணைக்கும் இணைவுச்சுவர்களின் மத்தியில் பக்கத்திற்கு ஒன்றாக பஞ்சரங்களும் எழிலுற அமைக்கப்பட்டு இரண்டாம் தள ஆரச் சுவர் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவ்வாரச்சுவரில் இடம் பெறும் சாலை,பஞ்சரம் மற்றும் கர்ணகூடுகள் யாவும் ஆதிதள ஆரச்சுவர் போலவே நாலங்கம் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.



பூமிதேசத்தின் மேலெழும் பொதுவான வேதிகைத்தொகுதியில் இடம் பெறும் ஆர உறுப்புகள் அரைத்தூண்களால் அணைவு பெற்ற சுவர்களும் கூரை உறுப்புகளும் கொண்டுள்ளன. வேதிக்கண்டங்கள் சிற்பங்கள் பெறுகின்றன. ஆனால் அவைகள் மலர் வளைய அலங்கரிப்பாகவே அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.ஒவ்வொரு ஆர உறுப்பும் கிரீவம்,சிகரம் மற்றும் ஸ்தூபி பெற்று எழிலுற அமைகிறது. ஆரச்சுவரில் இடம்பெற்ற அல்ப நாசிகைகளில் பல்வேறு கந்தர்வர்களின் ஆண்,பெண் சிற்பங்கள் அமைந்துள்ளன. அவைகளில் ரிஷபாந்திகர்,அம்மையப்பர்,நரசிம்மர் மற்றும் திரிபுராந்தகர் ஆகியோர் சாலைகளில் அமைந்த நாசிகைகளில் முறையே தெற்கு,கிழக்கு,மேற்கு மற்றும் வடக்கில் அமைந்தன குறிப்பிடத்தக்கதாகும். இச்சாலைகளை இருமருங்கிலும் கந்தர்வர்கள் தாங்குகின்றனர். கர்ணகூடுகளிலும் பஞ்சரங்களிலும் அமைந்த நாசிகைகளில் பல்வேறு கந்தர்வர்களின் ஆண்,பெண் சிற்பங்கள் அமைந்து அழகூட்டுகிறது.

மூன்றாம் தளம்

இரண்டாம் தள ஆரச்சுவரை ஒட்டி அதன் பின் எழும் இரண்டாம் தளம் தாய்ச்சுவரிலிருந்து சாலை மட்டும் சற்று முன்னிழுக்கப்பட்டு கலசம்,தாடி,கும்பம்,பாலி,பலகை மற்றும் வீரகண்டம் ஆகிய தலை உறுப்புகளுடன் கூடிய பிரம்ம காந்த அரைத்தூண்களால் அணைய வீரகண்டத்தின் மேலெழும் தரங்கப்போதிகைகள் உத்திரம் தாங்க, உத்திரத்தின் மேல் வலபியும்,வலபியில் பூதவரியும் இடம்பெற்று வலபி மேல் கூரையும் கூரை நீட்சியான கபோதமும் காட்டப்பட்டுள்ளன. பிரம்ம காந்த அரைத்தூண்களுக்கு நேர் மேலே கபோதத்தில் கூடுகள் சாலையிலும் கர்ணகூடுகளிலும் காட்டப்பட்டுள்ளன.கபோதத்தின் மேலே யாளி வரிகளால் அமையப்பெற்ற பூமிதேசத்துடன் தளம் முடிவடைகிறது .

கிரீவம்,சிகரம் மற்றும் ஸ்தூபி

மூன்றாம் தள பூமிதேசத்தின் மேலெழும் வேதிகையில் கிரீவமும் சிகரமும் சுதையால்அமைகின்றன. முதன்மைத்திசைகளில் கிரீவ கோட்டங்களும் கோட்டங்களுக்கிடையில் சுவர்துண்டுகளும் அமைந்துள்ளன. கோட்டங்கள் கீர்த்தி முகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை.

கிரீவத்தின் நான்கு மூலைகளிலும் ஒரு ஜோடி நந்திகள் இடம் பெற்றுள்ளன. குவிமாடமாக எழும் சிகரம் நாகரமாக வைரப் பட்டைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிகரத்தின் மேலெழும் விளிம்பு சந்திரமண்டலங்கள் பெற்று உச்சி தாமரை இதழ்களால் எழிலுற அலங்கரிக்கப்பட்டு அதன் மேல் உலோக ஸ்தூபி அமைந்து விமானம் விண்ணில் உறைகிறது.



(தொடரும்)
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.