http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 154

இதழ் 154
[ மே, 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

ஒரு நாடகக் காணி கல்வெட்டான வரலாறு
புள்ளமங்கை ஆலந்துறையார் முகமண்டபம்
பிறவாதான் ஈசுவரம்
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 1
இதழ் எண். 154 > கலையும் ஆய்வும்
புள்ளமங்கை ஆலந்துறையார் முகமண்டபம்
இரா.கலைக்கோவன், மு.நளினி

புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் முற்சோழர் கால விமானமும் முகமண்டபமும் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற பெருமண்டபமும் பின்னாளில் அமைந்த முன்மண்டபமும் கொண்டமைந்த வளாகம். அதன் முத்தள விமானத்தின் கீழ்த்தளம் உபானத்தின் மீதெழும் கபோதக்கட்டுத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி, அரைத்தூண்கள் தழுவிய சுவர், கூரையுறுப்புகள் பெற்றுள்ளது. விமானத்தின் முன் அமைந்துள்ள முகமண்டபம் விமானக் கீழ்த்தளம் போலவே சாலைப்பத்தி, அதன் இருபுறத்துமான தாய்ச்சுவரில் தளப்பஞ்சரங்கள், கிழக்குக் கர்ணபத்தி என எழிலுற கட்டமைக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் தெற்குச் சாலைப்பத்தித் தாங்குதளக் கபோத நடுப்பட்டத்தில் பதக்கமும் அதன் இருபுறத்தும் வளைவுகளும் காட்டப்பட்டுள்ளன. வலவளைவுச் சிற்பம் சிதைந்துள்ளது. இடப்புறத்தே சுவஸ்திகக் கரணத்தில் பாதங்கள் சூசியில் அமைய, புல்லாங்குழல் இசைக்கும் காரிகை. அவரது இடக்கை, முகம் சிதைந்துள்ளன. பதக்கத்தின் நடுவிலுள்ள ஆடலரசி சுவஸ்திகக் கரணத்தில் இடக்கையை நெகிழ்த்தி, வலக்கையில் பதாகம் காட்டி ஆடுகிறார். இச்சாலைப்பத்திக் கூரைக் கபோத நடுப்பட்டம் அழகிய நெற்றிச்சுட்டியென இறங்கி இரு பூப்பதக்கங்களுடன் மிளிர, வடபுற நடுப்பட்டம் விமானச் சாலைப்பத்தி நடுப்பட்டங்களை ஒத்துள்ளது. பெருமண்டபத்தின் வட, தென்சுவர்கள் முகமண்டபக் கர்ணபத்திகளின் ஒரு பகுதியை மறைத்துள்ளன. சாலைப்பத்திக் கோட்டங்களில் தெற்கில் பிள்ளையாரும் வடக்கில் மகிடாசுரமர்த்தினியும் இடம்பெற, பத்திச்சுவர்களில் கோட்டச் சிற்பம் தொடர்புடைய காட்சிகள். தெற்கில் பக்கத்திற்கு 3 அடுக்குகளில் சிற்பங்கள் அமைய, வடக்கில் ஒவ்வொருபுறத்தும் ஈரடுக்குச் சிற்பங்கள். இச்சார்புச் சிற்பங்கள் விமானத்திலுள்ளாற் போலவே சிறுதளத்தின் மீது செயற்படுமாறு உள்ளன.

பிள்ளையார்

உயரமான தாமரைத்தளத்தில் திருவாசி சூழ லலிதாசனத்திலுள்ள பிள்ளையாரின் வல முன் கையில் மோதகம். பின் கையில் தந்தம். இட முன் கை தொடை மீதமர, பின் கையில் கரும்புத் தோகை. இடம்புரித் துளைக்கையின் வளைவிலும் மோதகம். சரப்பளி, தோள், கை வளைகள், அலங்கார உதரபந்தம், சிற்றாடை பெற்றுள்ள அவரது இடத்தந்தம் உடைந்துள்ளது. வலப்புறம் தந்தமில்லை. பிள்ளையாரின் தலைக்கு மேலுள்ள குடையின் புறத்தே தாமரையிதழ்களும் முத்துச்சர வளையங்களும் அழகூட்ட, குடையின் நடுப்பகுதியிலிருந்து மலர்ச்சரங்களின் தொங்கல். அதன் இருபுறத்தும் கவரிகள். பிள்ளையாரின் இருபுறத்தும் ஒரு கையில் மலரேந்தி, மற்றொரு கையால் இறைவனைப் போற்றும் கதிரும் நிலவும்.



பிள்ளையாரின் வலப்புற மூன்று அடுக்குகளில் முதலிரண்டில் லலிதாசனத் தனியர்களும் மூன்றாவதில் இரு அடியவர்களும் காட்டப்பட்டுள்ளனர். மேலுள்ளவர் நடுப்புரி வைத்துக் கட் டப்பெற்ற சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், சிற்றாடையுடன் இடக்கையில் ஏந்திய சிரட்டைக்கின்னரியைத் தோளில் சாய்த்து வலக்கைக் குச்சியால் இசைத்தவாறே பாடுகிறார். இரண்டாமவர் சடைப்பாரம், முப்புரிநூல், உதரபந்தம், சரப்பளி, சிற்றாடையுடன் வலக்கையில் கவரியுடன் இடக்கையால் பிள்ளையாரைப் போற்றுகிறார். அவரது இடச்செவி நீள்செவியாக, வலச்செவியில் பனையோலைக் குண்டலம்.

ஒருவரையொருவர் பார்த்தவாறு லலிதாசனத்திலுள்ள கீழவரில், இடக்கை பிடித்திருக்கும் பலாப்பழத்தை வலக்கைக் கத்தி கொண்டு அறுக்கும் முன்னவர் சடைப்பாரத்தர். வலச்செவி நீள்செவியாக, இடச்செவியில் பனையோலைக் குண்டலம் பெற் றுள்ள அவருக்கும் மேலவர் போலவே ஆடை, அணிகலன்கள். அவரின் இடமுள்ளவர் சடைமகுடத்தர். இடச்செவி நீள்செவியாக, வலச்செவியில் பனையோலைக் குண்டலம் பெற்றுள்ள அவரது இடக்கையில் சீத்தாப்பழம். பலா அறுக்கும் காட்சியைக் கண்கொட்டாது பார்க்கும் அவரது கழுத்திலும் சரப்பளி.

இடப்புற மூன்றில் மேலே பிள்ளையாரின் அடியவர் மூஞ்சுறுவைக் கயிற்றால் பிணைத்து, அழைத்து வருகிறார். சடைப்பாரத்துடன் பனையோலைக் குண்டலங்கள், சவடி, முப்புரிநூல் அணிந்துள்ள அவரது வலக்கை பதாகமாக வழிநடத்தும் மெய்ப்பாட்டில். இடையில் லலிதாசனத்தில் சடைப்பாரத்துடன் வலச்செவியில் பூட்டுக்குண்டலமும் இடச்செவியில் பனையோலைக் குண்டலமும் அணிந்துள்ளவர் கழுத்தில் மீன்வடிவ நீள்பதக்கத்துடன் மாலை. முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள் சிற்றாடையுடன் புன்னகை மலர, மோதகம் நிறைந்த பாத்திரத்தை இடக்கையில் கொண்டுள்ள அவரது வலக்கை இறைவனைப் போற்றுகிறது. கீழடுக்கில் சடைமகுடம், முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், சிற்றாடை, தாள்செறிகளுடன் ஒருவர் பின் ஒருவராக இருவர் லலிதாசனத்தில். பிள்ளையாருக்காய் ஒருக்கணித்துள்ள அவர்களுள், பனையோலைக் குண்டலங்களுடன் முத்துமாலையும் பதக்கம் வைத்த ஆரமும் அணிந்துள்ள முன்னவர் இடக்கையில் வாழைப்பழ அடுக்குடன் வலக்கையில் சுட்டுமுத்திரை காட்ட, இடச்செவியை நீளவளர்த்து வலச்செவியில் பனையோலைக் குண்டலம் பெய்து, மெலிதான புன்னகையுடனுள்ள பின்னவர் கையில் மோதகம். அவர் கழுத்தில் சவடி.

மகிடாசுரமர்த்தினி

வடகோட்டக் கருங்கல் தளத்தில் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த மகிடாசுரமர்த்தினியின் சிற்பம் அமைந்துள்ளது. தளமுகப்பிலுள்ள மகிடத்தலையில் மணித்தொங்கலுடன் கற்கள் பதித்த நெற்றிப்பட்டம். அதன் பட்டைக்கொம்புகள் நன்கு வளைந்து மர்த்தினியின் முழங்கால்வரை நீண்டுள்ளன. வலப்பாதத்தைத் திரயச்ரமாக்கி, இடப்பாதத்தை சமத்திலிருத்தித் தொடைவரையிலான சிற்றாடையுடன் முவ்வளைவுக் கோலத்தில் எழில் விளங்கக் காட்சிதரும் அம்மையின் கால்களில் தாள்செறிகள், வீரக்கழல்கள். இடுப்பைத் தழுவி வளையமாய்த் தொங்கும் இடைக்கட்டின் முடிச்சுத்தொங்கல்கள் இருபுறத்தும் நெகிழ, தொடைகளுக்கிடையில் முழங்கால்வரை நீளும் மூன்றடுக்குக் குஞ்சம். இடுப்பின் இடப்புறம் முந்தானை. வல முன் கையைக் காக்கும் குறிப்பில் வைத்து, இட முன் கையைக் கடியவலம்பிதமாக்கியுள்ள அம்மை முதுகின் இருபுறத்தும் அம்புக்கூடுகள்.



வலப் பின் கைகளுள் இரண்டு முத்தலைஈட்டி, வாள் கொள்ள, கர்த்தரீயிலுள்ள மேற்கைக்குச் சற்று மேலே எறிநிலைச் சக்கரம், இடப் பின் கைகளில் வில், கேடயம், சங்கு. சங்கும் சக்கரமும் தீக்கங்குகள் சூழ விளங்க, இறைவியின் இடுப்பில் கற்கள் பதித்த அரைக்கச்சு. கைகளில் பட்டைவளைகள். கழுத்தில் சவடி, கற்கள் பதித்த பதக்கமாலை, நீள்முத்துமாலை. முப்புரி நூலும் கரண்டமகுடமும் பனையோலைக் குண்டலங்களும் மார்புக்கச்சும் பெற்றுள்ள அம்மையின் சடைப்புரிகள் தோளின் இருபுறத்தும் நெகிழ்ந்துள்ளாற் போலவே மகுடம் மீறியும் படர்ந்துள்ளன.

வலச்சாய்வான உடலும் இடஒருக்கணிப்பிலுள்ள முகமும் இடப்புறம் ஏற்றமாய் விளங்கும் இடையும் அம்மையின் எழிலை இணையற்றதாக்குகின்றன. மழுங்கிய நிலையிலும் மந்தகாச முறுவலை அவரின் இதழ்களிலும் கருணையின் குளிர்மையை முகக்குறிப்பிலும் உணரமுடிகிறது. எத்தனைமுறை பார்த்தாலும் நெக்குருகச்செய்யும் மர்த்தினியின் இத்தோற்றம் பராந்தகர் காலக் கலையாற்றலின் உச்ச நளினம். அம்மையின் தலைக்கு மேல் பிள்ளையார் போலவே அழகிய முத்துப் பூத்தொங்கலும் தோரண வளைவுகளும் பொருந்திய தாமரையிதழ்கள் தழுவிய குடை.

பத்திச்சுவரின் மேலடுக்குகளில் அம்மையின் வலப்புறம் சிம்மமும் இடப்புறம் மானும் நிற்கின்றன. பிடரிச்சுருளும் மேல் நோக்கி வளைந்திறங்கும் வாலும் அம்மை அமர வாகாக முதுகில் வயிற்றைச் சுற்றிக் கட்டப்பட்ட இருக்கையும் கொண்டு விளங்கும் சிம்மத்தின் பின்புறத்தே சிப்பிமாலை. கிளைத்த முரட்டுக் கொம்புகளுடன் கழுத்திலும் உடலிலும் மணிமாலைகள் பெற்று முதுகில் இருக்கையுடன் இறைவியை நோக்கி நிற்கும் இடப்புற மானின் மூக்கணாங்கயிற்றைப் பற்றியவாறு நிற்கும் அடியவர் வலக்கையால் போற்றுகிறார். சிரஸ்திரக முடியமைப்பும் தோள், கை வளைகளும் முடிச்சிடப்பெற்ற உதரபந்தமும் முப்புரிநூலும் சிற்றாடையும் கொண்டுள்ள அவரது கழுத்தில் மூன்று தொங்கல்களுடனான மாலை.

பத்திச்சுவரின் கீழடுக்குகளில் வலப்புறம் உயிர்க்கொடையும் இடப்புறம் தசைக்கொடையும் சிற்பங்களாகியுள்ளன. பூட்டுக்குண்டலங்கள், ருத்திராக்கத் தோள், கை, தலை வளைகள், கற்களாலான முப்பதக்கமாலை, அடர்த்தியான எழிலார்ந்த வீரச்சங்கிலி, இடைத்தொங்கலுடனான சிற்றாடையுடன் கருடாசனத்திலுள்ள வலஆடவர் இடக்கையால் தலைமுடியைப் பிடித்தவாறு வலக்கைக் கத்தி கொண்டு தம் கழுத்தை அறுத்துக்கொள்கிறார். நீள் மீசை, தாடி பெற்றுள்ள அவரது இடுப்பின் வலப்புறம் உறையுடன் குத்துவாள். முதுகின் வலப்புறம் முந்தானை.

உருத்திராக்கம் சுற்றிய சடைமகுடம், மகரகுண்டலங்கள், வீரச்சங்கிலி, சிற்றாடை, இடுப்பின் இடப்புறத்தே நீளும் கத்தி, ருத்திராக்கத் தோள், கை வளைகள், தாள்செறிகள் எனக் காட்சிதரும் இடஆடவரும் கருடாசனரே. குத்துக்காலாய் வைத்துள்ள இடத்தொடையில் வலக்கைக் கத்தி கொண்டு தசைக்கொடை முயற்சியில் ஈடுபட்டுள்ள அவரது முகம் இறைவியின் முகம் நோக்கியுள்ளது. இடக்கை தசைத்துண்டைப் பற்றியுள்ளது. இரு வீரர்களுமே இறைவிக்காய் ஒருக்கணித்துள்ளனர்.

முகமண்டப ஆரம்

முற்சோழர் காலக் கட்டுமானங்களின் முகமண்டபக் கூரையில் பொதுவாக ஆரம் இடம்பெறுவதில்லை. ஆனால், இங்குக் கூரையின் கிழக்கு மூலைகளில் கர்ணகூடங்களும் நடுப்பகுதியில் சாலைகளும் ஆரச்சுவரின்றி அமைந்துள்ளன. விமானத்தின் கிழக்குக் கர்ணகூடங்கள் முகமண்டபத்திற்கான மேற்குக் கர்ணகூடங்கள் போல் தோற்றம் தருகின்றன. தமிழ்நாட்டின் வேறெந்த முற்சோழர் கோயில் கட்டுமானத்திலும் முகமண்டபக் கூரையில் காணமுடியாத கூடுதல் புதுமையாகச் சாலையின் இருபுறத்தும் பக்கத்திற்கு இரண்டெனத் தெற்கிலும் வடக்கிலும் பேரளவிலான எட்டுப் பூதங்கள். ஆரச்சுவரற்ற நிலையிலும் ஆரஉறுப்பு களுக்கு இடைப்பட்டு இப்பூதங்கள் அமர்ந்துள்ளமை முகமண்டபக் கூரையில் தொடர் ஒழுங்கான ஆரம் அமைந்திருக்குமாறு போலவே காட்சியாகிறது.

முகமண்டபச் சாலைகளில் தெற்குச்சாலை சிதைந்து பின்னாளில் செங்கல் கட்டுமானமாய் உருவாக்கப்பட்டுள்ளது. சோழர் பணியாய் நிலைத்திருக்கும் வடசாலை நாசிகையில் எழிலார்ந்த நந்தியணுக்கர். தமிழ்நாட்டின் நந்தியணுக்கர் சிற்பங்களில் இப்படைப்பிற்குத் தனியிடமுண்டு. நேர்ப்பார்வையராக வலப்பாதத்தை சமத்திலும் இடக்காலை முழங்காலளவில் மடக்கிப் பாதத்தைத் திரயச்ரத்திலும் நிறுத்தி இட முன் கையைப் பின் நிற்கும் நந்தியின் திமிலிலும் தலையிலும் படரவிட்டுள்ள சிவபெருமானின் பின் கைகளில் மழு, மான். சடைமகுடராய் மகர, பனையோலைக் குண்டலங்கள், வளையத் தொங்கல்களுடன் சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள அவரது தொடையைத் தன் நாவால் வருடும் நந்தியின் நெற்றியில் முத்துமாலை. இறைவனின் வல முன் கை காக்கும் குறிப்பில்.

இச்சாலையின் தெற்குநாசிகை வெறுமையாக அமைய, பிற முத்திசைகளிலும் கீழ்ப்பகுதியில் இருபுறத்தும் மதலைகளும் மேலே நடுவிருக்குமாறு சந்திரமண்டலத்துடன் கபோதத் துண் டொத்த செதுக்கலும் காட்டப்பட்டுள்ளன. வடமுகத்தில் மதலைகளுக்கு இடைப்பட்ட கோட்டத்தில் சதுரஆவுடையார் மீது லிங்கத்திருமேனி. சிகரமுகப்பில் இருபுறத்தும் அழகிய தோகையுடன் பக்கத்திற்கொன்றாய் மயில்கள். சிகரம் தாங்கிகளாய் நிற்கும் இளைஞர்கள் ஒருகையால் சிகரம் தாங்கி, மறு கையைப் பதாகத்தில் கொண்டுள்ளனர். சடைமகுடம், பனை யோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடையுடன் இடைக்கட்டுப் பெற்றுள்ள அவர்தம் அழகிய முகத்தில் புன்னகை.

கர்ணகூடங்கள்

முகமண்டபக் கூரையின் கிழக்குக் கர்ணகூடங்கள் இரண்டும் விமானக் கர்ணகூடங்களிலிருந்து சற்றே மாறுபட்ட அமைப்பில் உள்ளன. அவற்றின் நாற்புறச் சிறுநாசிகைகளிலும் சோழர் கைவண்ணத்தில் அழகிய ஆண், பெண் சிற்பங்கள். வடகிழக்குக் கர்ணகூடத்திலுள்ள ஆடவர்கள் இருவருமே முழு ஒருக்கணிப்பிலுள்ளனர். சடைமகுடர்களாய்த் தோள், கை வளைகளுடன் முப்புரிநூல், இடைக்கட்டுடன் சிற்றாடை பெற்றுள்ள அவர்களுள் ஒருவர் நீள்செவியராய் விளங்க, மற்றொருவரின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். உதரபந்தத்துடன் தலை குனிந்துள்ள தெற்கரின் வலக்கை கடியவலம்பிதமாக, இடக்கை கடகத்தில். கிழக்கரின் இடக்கை கடியவலம்பிதத்தில். தூணைப் பற்றியுள்ள அவரது வலக்கையில் பூ. இவர் இருக்கும் நாசிகையின் மேல்வளைவில் குஞ்சுக்கு உணவூட்டும் தாய் வாத்து.

வடக்கு, மேற்கு நாசிகைகளில் சடைமகுடம், தோள், கை வளைகள், இடைச்சிற்றாடையுடன் இடஒருக்கணிப்பிலுள்ள இரு பெண்களும் வலத்திருப்பமாய்த் தலையைக் குனிந்துள்ளனர். பூட்டுக்குண்டலங்களும் சரப்பளியும் பெற்றுள்ள வடக்கரின் வலக்கை தொடையில். இடக்கையில் பூ. பனையோலைக் குண்டலங்களுடன் இடக்கையைத் தூணருகே கடகமாய்க் கொண்டுள்ள மேற்கரின் வலக்கை வயிற்றருகே ஏந்தலாய்.

தென்கிழக்குக் கர்ணகூடத்தின் நாசிகைகளிலும் வடகிழக்குப் போலவே இரண்டில் ஆடவர்கள், இரண்டில் பெண்கள். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், சிற்றாடை பெற்றுள்ள பெண்கள் இருவரில் தெற்கிலுள்ளவர் வலக்கை முகத்திற்குத் தாங்கலாக, மார்பிற்குக் குறுக்காக நீட்டப்பட்டுள்ள இடக்கை ஏந்தலாக அமைந்துள்ளது. இலே சான இடஒருக்கணிப்பிலுள்ள அவரது முகம் இடச்சாய்வாக அமைய, சரப்பளியுடன் வலஒருக்கணிப்பிலுள்ள கிழக்கரின் இடக்கை இடுப்பிற்குக் குறுக்காக நீண்டு ஏந்தலாக உள்ளது. வலக்கை வலக்குண்டலத்தருகே.

வடக்கிலும் மேற்கிலும் வலக்கையைத் தொடையிலிருத்தி, இடக்கையை மார்பருகே கொண்டு முழுஒருக்கணிப்பிலுள்ள ஆடவர்கள் நீள்செவியர்களாய்ச் சடைமகுடம், உதரபந்தம், தோள், கை வளைகளுடன் சற்றே குனிந்த தலையினராய்க் காட்சிதருகின்றனர். மேற்கர் வலமிருந்து இடமாக அணிந்த முப்புரிநூலுடன் காட்சிதர, வடக்கரின் இடத்தோளில் துண்டு.

பெரும்பூதங்கள்

உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில் துணைத்தளப் பூதங்களினும் அளவில் பெரியனவாய் அழகில் நிறைந்தனவாய்க் காட்சிதரும் புள்ளமங்கைப் பூதங்கள் சோழர் கலைத்திற னுக்குக் காலம் காத்துத் தந்திருக்கும் புன்னகைப் புதையல்கள். இலலிதாசனம் அல்லது குத்துக்கால் அமர்வில் பெருவயிற்றுடன் வட்டப் பதக்கத்துடனான முகப்பணிகள் பெற்ற சடைமகுடமும் நெறித்த புருவங்களும் கோரைப்பற்களும் பின்புறம் விரிந்த முந்தானையுடன் விளங்கும் சிற்றாடையுமாய்க் காட்சிதரும் இப்பூதங்களைப் பனையோலைக் குண்டலங்கள், தொங்கல் பெற்ற சரப்பளி, தோள், கை வளைகள், உதரபந்தம், பல்வேறு அமைப்பிலான முப்புரிநூல், கிண்கிணிகள் முதலியன அழகுபடுத்துகின்றன.





சில பூதங்கள் சடைக்கற்றைகளின் மேற்பகுதியையும் பின்பகுதியையும் சிரஸ்திரக முடியமைப்பில் கொள்ள, அனைத்துமே உள்ளக்களிப்பை விரிந்த இதழ்களின் வழி மலர்ந்த சிரிப்பாய் வெளிப்படுத்தி உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. பூட்டுக்குண்டலங்களுடன் தெற்கில் உடுக்கை அடிக்கும் பூதம் மட்டும் தாளக்குறிப்பில் ஈடுபட்டுச் சற்றே செம்மாந்த நிலையில் புன்னகைக்கிறது. சில பூதங்களின் கால்கள் உயர்த்தப்பட்டுள்ள முகமண்டபக் கூரையில் புதைந்துள்ளன. தெற்குப் பூதங்களில் விமானக் கர்ணகூட்டை அடுத்தமர்ந்துள்ள கைத்தாளப் பூதம் லேசான இடஒருக்கணிப்பில் முகத்தை இடச்சாய்வாக்கி, வலப்பார்வையில் அமர்ந்துள்ளது. அதன் இருகைகளின் அமைப்பும் இசையரங்குகளில் கைத்தாளமிடும் ஆடலாசான்களை ஒத்துள்ளது. நம்பி, நட்டுவர் போலும். அதன் இடப்புறமுள்ள பூதத்தின் கைகளில் செண்டுதாளங்கள். கழுத்தில் அரும்புச்சரம் ஒத்த சரப்பளி.

தெற்குச்சாலையின் இடப்புறம் முகத்தை இடந்திருப்பியுள்ள பூதத்தின் இடக்கையில் உடுக்கை. வயிற்றோடு அணைத் துள்ள அதை வலக்கையால் தட்டி இசையெழுப்பும் மெய்ப்பாட்டிலுள்ள அதன் மிடுக்கும் பெருமிதமும் சொற்களைத் தாண்டிய சுந்தரம். பூட்டுக்குண்டலங்களுடன் விளங்கும் அதன் முப்புரிநூல் பூப்பதக்கங்களுடன் முறுக்கேற்றிய வடமாய்த் திகழ்கிறது. நான்காம் பூதம் இருமுகப் பூதமாய் வயிற்றின் மேலுள்ள வாய்பிளந்த சிம்மமுக அலங்கரிப்பை இருகைகளாலும் பற்றியவாறு, 'இப்படியொரு கோலமா எனக்கு' என்பது போல் தன்னிரக்கம் காட்டுகிறது. அதன் கழுத்தில் பதக்கமாலை. இவ்விரு பூதங்களுமே தலைச்சக்கரத்துடன் தோள்களில் புரளும் சிரஸ்திரக முடிச்சுருள்கள் கொண்டுள்ளன.

வடக்கில் கிழக்குக் கர்ணகூடத்தை அடுத்துள்ள பூதம் கருவியிசைக்கலைஞராய் வலக்கையில் குணிலுடன் இடஉள்ளங்கையில் உடுக்கையேந்தி மலர்ந்த முகத்துடன் தாளம் தருகிறது. தலைச்சக்கரமும் தோள்களில் புரளும் சிரஸ்திரக முடிச்சுருள்களும் கொண்டுள்ள அதன் முப்புரிநூலென மடித்த துண்டு முறுக்கேற்றிய நிலையில். அதன் இடப்புறமுள்ள பூதத்தின் கைகளில் வீணை. ஒரு கை விரல்கள் சுவரஸ்தானங்களில் மேவ, மற்றொரு கை விரல்கள் தந்திகளில் நடமிட, வெளிப்படும் இசையில் மயக்கமும் மலர்ச்சியுமாய் முகம் இடப்புறம் சாய, சிரஸ்திரகச் சுருள்களுடன் எடுப்பான முகப்பணியும் சடைப்பாரமுமாய் விளங்கும் லேசான வல ஒருக்கணிப்பிலுள்ள இந்த வீணைக்கலைஞரை உயிர்ப்பித்த சோழச்சிற்பிதான் எத்தனை திறனாளர்.

நந்தியணுக்கரின் இடப்புறத்துள்ள பூதம் இந்த இசையரங்கின் சுவைஞர்களுள் தலைமையர் போலும். சிரஸ்திரக முடியமைப்பும் தலைச்சக்கரமும் முத்துவளைகளும் கொண்டுள்ள அதன் வலக்கை கடகமாய் வலமுழங்கால் மேல். இடக்கை மார்பருகே கடகத்தில். அதன் முகமலர்ச்சி இசைநிகழ்வின் சிறப்பை உணர்த்துகிறது. அதையடுத்து மலர்ந்த முகத்துடன் சிரிப்பு சிந்த லலிதாசனத்திலுள்ள பூதத்தின் வலக்கை கடகமாய் மார்பருகே அமைய, இடக்கையும் அதே குறிப்பில் வயிற்றருகே. முன்னதைப் போலவே இப்பூதமும் சிரஸ்திரக முடியமைப்புக் கொண்டிருந் தாலும் அவை முதுகில் படரவில்லை.

புறம் போலவே முகமண்டபத்தின் அகமும் அழகியதே. அதை ரசிக்க ஒரு திங்கள் காத்திருக்கலாமா?
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.