http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 158

இதழ் 158
[ செப்டம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

துடி, தமருகம், உடுக்கை
மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு -3
சேக்கிழான் செல்வனும் மூன்று விழாக்களும்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 7
நண்பருமாய் நல்லாசிரியருமாய்
இதழ் எண். 158 > கலையும் ஆய்வும்
சேக்கிழான் செல்வனும் மூன்று விழாக்களும்
மு.நளினி, அர.அகிலா

திருவள்ளூர் மாவட்டம் கூவம் ஊரிலுள்ள திரிபுராந்தகேசுவரர் கோயில் முதல் குலோத்துங்க சோழர் காலத்தில் திருவிற்கோலமுடைய மகாதேவர் கோயிலாக அறியப்பட்டது. ஜயங்கொண்டசோழ மண்டலத்து மணவிற்கோட்டத்துக் கன்றூர் நாட்டின் கீழிருந்த கூவம் மதுராந்தகநல்லூர் என்றும் அழைக்கப்பட்டது. அதே மண்டலத்தின் ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீர்வாளூர் நாட்டுத் தீங்காடுபாக்கமான சோழ திவாகரநல்லூரில் வாழ்ந்த சேக்கிழான் செல்வன் சந்திரசேகரனான சகலவிச்சாதிர விழுப்பரையன் திருவிற்கோலமுடைய மகாதேவர் மீது கொண்டிருந்த பத்திமையால், சிவபெருமானும் உமையும் நந்தியுடன் நிற்கும் கோயில் உலாத்திருமேனியான நந்திதேவருக்குப் படையலிட, ஊராரிடம் பொன் கொடையளித்தார். இந்த அறம் தொடர்ந்து செயல்படக் கொடைப் பொன்னுக்கான பொலியூட்டாக (வட்டியீனும் முதல்) 16 சாண் கோலால் அளக்கப்பட்ட 2180 1/2 குழி நிலத்தை வரி நீக்கித் தேவதானமாகக் கோயில் சிவபிராமணர்களிடம் மதுராந்தகநல்லூர் ஊரார் ஒப்புவித்தனர்.

இந்நிலத்தொகுதியின் வரலாற்றைக் கல்வெட்டு பதிவுசெய்துள்ளது. இத்தொகுதியின் மூன்று நிலத்துண்டுகள் அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ஊராரால் விலைக்குப் பெறப்பட்டன. குலோத்துங்கசோழரின் 9ஆம் ஆட்சியாண்டிலிருந்து 41ஆம் ஆட்சியாண்டுவரை ஒழுங்காக வரிகட்டிய சிவக்கொழுந்து என்பார், அதன் பிறகு வரிகட்டமுடியாமல் போனதால் விட்டுப்போன நிலத்துண்டும் பிற வழிகளில் பெறப்பட்ட நிலத்துண்டுகளும் மாற்று நிலம் தந்து பெற்ற காத்துழாற்பட்டியும் இந்நிலத்தொகுதியில் அடங்கும். இதன் எல்லைகளாக அப்பகுதியிலிருந்த கலியத்தீசுவரமுடைய மகாதேவர் கோயில் நிலமும் வரிகட்டமுடியாமல் சிலர் விட்டுப்போன நிலங்களும் ஆவணத்தில் சுட்டப்பட்டுள்ளன.

இந்நிலத்தொகுதியின் வருவாய் கொண்டு மாசி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று திங்கள்களில் கோயில் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடக் கோயிலார் முடிவுசெய்தனர். இம்மூன்று விழாக்களிலும் பங்கேற்று இறைவனை வழிபடும் அடியவர்களுக்கு உணவிட 294 1/2 குழி நில விளைவு ஒதுக்கப்பட்டது. சித்திரைத் திருவிழாவில் கூத்தாடுவாருக்கு ஊதியமாக 100 குழி நிலம் தரப்பட்டது. நந்திதேவரிலுள்ள சிவபெருமானுக்கும் உமைக்கும் நாளும் இருசந்திகளில் படையலிடவும் நந்திக்கு நாளும் ஒரு சந்தி உணவு படைக்கவும் 228 கலம் 2 தூணி நெல் ஒதுக்கப்பட்டது.

இம்மூன்று விழாக்களில் சித்திரை விழாவே பெருஞ்சிறப்புடன் நிகழ்ந்தது. விழாவிற்காகப் பொன்னால் திருக்காப்புநாண் செய்ய ஒரு கலம் நெல் அளிக்கப்பட்டது. அதை அணிவிக்கும் முன் தூய்மை பிறப்பிக்கும் செயலும் (புண்ணியாகம்), முன்னோருக்கான சடங்குகளும் (அந்நுவாகாரியம்) நிகழ்ந்தன. அவற்றுக்கும் திருக்காப்புநாணை அணிவிக்கவும் கழற்றவுமான செய்கைக்கும் தேவையான நெல் ஒதுக்கப்பட்டது. விழாவின்போது பத்திமையாளர்களுக்குக் காட்சியளிக்குமாறு (திருவோலக்கமாக) நந்திதேவரைக் கோயில் மண்டபத்தில் எழுந்தருளுவித்து ஒரு கலம் அரிசி, உழக்கு நெய், நாழி சர்க்கரை, இருநாழித் தயிர் கொண்டு செய்த களியமுது, 30 பாக்கு, 80 வெற்றிலைகள் படைத்தனர். களியமுதுக்கான அரிசிக்குத் தரப்பெற்ற நெல்லைக் குற்றவும் பின் மாவிடிக்கவும் கூலியாக ஒரு தூணி நெல் ஒதுக்கப்பட்டது. பகல்போதில் இறைவனுக்குக் காய்கறி, நெய், தயிர், உப்பு, மிளகு, பாக்குடன் மாவு அமுது அளிக்கப்பட்டது.

நந்திதேவருக்குத் திருக்கோலம் கொண்டு திருவாசி அமைத்தவர்கள், இறைவழிபாடு நிகழ்த்தியவர், திண்பண்டங்கள் செய்த எழுவர், எழுந்தருளும்போது இறைத்திருமேனியைச் சுமந்த (ஸ்ரீபாதம் தாங்குவார்) அறுவர், இறைவனுக்கு வெண்கொற்றக்குடை (தவளச்சத்திரம்), மணி பிடித்தவர், விளக்குகளுக்கு இடும் எண்ணெய்க்குடம் சுமந்தவர் ஒருவர், எண்ணெய் இடுவார் இருவர், விளக்குப் பிடிப்பார் ஐம்பதின்மர், விழாவுக்கான கலங்கள் செய்யும் குயவர் ஒருவர், திருவோலக்கத்தில் விளக்குப் பிடிப்பார் ஒருவர் ஆகியோருக்கு ஊதியமாக உரிய நெல் அளிக்கப்பட்டது. அத்துடன், விழாநாள்களில் ஒளிவிட்ட ஐம்பது விளக்குகளுக்கான பன்னிரு நாழி உரி எண்ணெய்க்கான நெல்லும் திருவோலக்கத்து விளக்கிற்கிட்ட நாழி எண்ணெய்க்கான நெல்லும் கூத்துக்குத் தரப்பெற்ற ஒன்பது நாழி எண்ணெய்க்கான நெல்லும் கணக்கிடப்பெற்று வழங்கப்பட்டது.

மாசித்திருநாளில் திருவோலக்கம் செய்த நந்திதேவருக்குப் பகல், இரவு இரண்டு சந்தியிலும் ஒரு கலம் ஒரு பதக்கு இரு நாழி நெல் கொண்டு சிறப்புப் படையல் அளிக்கப்பட்டது. அது போலவே வைகாசித் திருநாளிலும் சிறப்புப் படையல் வழங்கப்பெற்றதுடன் சிறப்பு நிகழ்வுக்காக ஐந்து நாழி எண்ணெய் தரப்பட்டது.

இந்த ஆவணத்தில் பொலியூட்டாக நிலமளித்த குறுமுடி நந்திகணவதியான மதுராந்தக விழுப்பரையர் உள்ளிட்ட ஊரார் பெருமக்களும் நிலத்தைப் பெற்றுக்கொண்டு சேக்கிழான் செல்வனின் அறக்கட்டளையை நிறைவேற்ற இசைந்த கோயில் சிவபிராமணர்களும் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களுடன் மதுராந்தகநல்லூர் ஊர்க்கணக்கர் வள்ளல் தேடிய மாநெதியும் மற்றோர் ஊர்க்கணக்கரான ஊர்பிராமணர் சங்கரநாராயணனும் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களுடன் இக்கல்வெட்டை வெட்டிய வீதிவிடங்கன் கூவவிடங்க ஆசாரியன், செல்வதிருஉண்ணாழிகை ஆசாரியன் ஆகியோரும் வயிரமேகன் கொழுந்தின், தம்பி போத்தன் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

சேக்கிழான் செல்வனின் கொடையால் கூவம் கோயிலில் மூன்று திருவிழாக்கள் செழித்த வரலாற்றையும் அதன் வழி உருவான பணிப்பொறுப்புகளால் ஊரார் பலர் வாழ்வு வளம் பெற்றமையையும் இந்த ஒரு கல்வெட்டால் அறியமுடிகிறது.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.