http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 167

இதழ் 167
[ நவம்பர் 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

திருமங்கலம் கல்வெட்டுகள் – 1
திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயில் - 1
ஜப்பானியப் பழங்குறுநூறு - 25 (கொடிவழிச் செய்தி)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 24 (செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 23 (துயர் கூட்டும் நிலவு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 22 (மலைவளி வீழ்த்து தருக்கள்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 21 (நீ வருவாயென!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 20 (உயிரையும் தருவேன் உனைக்காண)
இதழ் எண். 167 > கலையும் ஆய்வும்
திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயில் - 1
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

சிராப்பள்ளிச் சிதம்பரம் பெருவழியில் லால்குடிக்கு 4 கி. மீ. முன்பாக இடப்புறம் பிரியும் சாலையில் 3 கி. மீ. பயணித்தால் திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலை அடையலாம். கிழக்கிலும் மேற்கிலுமான சாலைப்பத்தி முன்தள்ளலுடன் உயரமான துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், மேலோட்டமான கூடுவளைவுகள் பெற்ற கபோதம் எனக் கீழ்த்தளம் அமைய, முத்தளக் கோபுரமாய்த் திகழும் இக்கோயில் நுழைவாயிலின் நிலைக்கால்கள் கொடிப்பெண்களுடன் திருப்பணிக் களை பொலிய முறுவலிக்கிறது. வாயில் மேலுள்ள கபோதப்பகுதியில் யானைத்திருமகள். கபோதத்தின் மேல் பூமிதேசக் குறியீடாகச் செவ்வகப்பட்டியும் வேதிகையும் அமைய, மேலே கர்ணகூடங்கள், சாலை, அவற்றை இணைக்கும் சுவர் என ஆரம்.

ஆரக் கிழக்குமுகக் கர்ணகூடங்களில் ஊர்திகளில் சுகாசனத்தில் பிள்ளையாரும் முருகனும். சாலைநாசிகை திறப்பாக அமைய, அதன் இருபுறத்தும் உருள்பெருந்தடி மேல் காலிருத்தி அச்சுறுத்தும் காவலர்கள். அடுத்துக் கவரிப்பெண்கள் நிற்க, ஆரச்சுவர்க் குறுநாசிகைகளில் நந்தி மீதமர்ந்தவர்களாய்த் தெற்கில் சுகாசன சிவபெருமானும் உமையும். வடக்கில் வலக்கையில் மலருடன் சுகாசனத்தில் உமை.

மேற்குமுக ஆரம் சுதையுருவங்களின்றி அமைய, தெற்கிலும் வடக்கிலும் சாலையில் மட்டும் முறையே வீராசன ஆலமர்அண்ணலும் சுகாசன நான்முகனும். ஆலமர்அண்ணலின் பின்கைகளில் பாம்பு சுற்றிய உடுக்கையும் தீச்சுடரும் அமைய, முன்கைகள் சின்முத்திரையிலும் சுவடியேந்தியும் உள்ளன. நான்முகன் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை விளங்க, முன்கைகளில் வலப்புறம் கடகம் காட்டி, இடப்புறம் சுவடியேந்தியுள்ளார்.

இரண்டாம் மூன்றாம் தளங்கள் உயரக்குறுக்கமாய்க் கீழ்த்தளம் போலவே கிழக்கிலும் மேற்கிலும் சாலைப்பத்தி முன்தள்ளலுடன் நான்முக அரைத்தூண்கள் தழுவும் சுவரும் கூரையுறுப்புகளும் கூரைத்தாங்கிகளாய்த் திசைக்கொரு ஆணும் பெண்ணும் பெற்றுச் சிறக்கின்றன. இரண்டாம் தள ஆரக் கிழக்குமுகக் கர்ணகூடங்களில் தெற்கில் ஆமையாகவும் வடக்கில் மீனாகவும் விஷ்ணு. சாலைக் காவலர்கள் ஒரு கை அச்சுறுத்த, ஒருகையை உருள்பெருந்தடி மேலிருத்தியுள்ளனர். அருகில் கவரிப்பெண்கள். ஆரச்சுவர் வலப்புறம் சங்கரநாராயணரையும் இடப்புறம் அம்மையப்பரையும் கொண்டுள்ளது. மேற்குமுகத்தில் சாலையில் மட்டும் காவலர்களும் கவரிப்பெண்களும். தெற்கிலும் வடக்கிலும் மேற்கு முகம் போலவே கர்ணகூடங்களும் ஆரச்சுவரும் வெறுமையாக அமைய, சாலைச் சுதையுருவங்களாய்த் தெற்கில் உத்குடி ஆலமர்அண்ணலும் வடக்கில் அர்த்தபத்மாசன நான்முகனும் காட்சியாகின்றனர்.

மூன்றாம் தளத்தையடுத்து விரியும் வேதிகையின் நான்கு மூலைகளிலும் நந்திகளுக்கிடைப்பட்டுப் பூதர்கள். கிழக்கு, மேற்கு கிரீவகோட்டங்கள் திறப்பாக அமைய, கிரீவசுவரில் காவலர்களும் லலிதாசன பூதர்களும். அடுத்துப் பிள்ளையாரும் முருகனும். கீர்த்திமுகங்களில் கிழக்கில் லிங்கம், மேற்கில் தாமரையில் அர்த்தபத்மாசனத்தில் குழலூதும் கண்ணன். தெற்கு கிரீவகோட்டத்தில் வீராசனத்திலுள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் தமருகம், தீச்சுடர். முன்கைகள் சின்முத்திரையிலும் சுவடியேந்தியும் உள்ளன. கீர்த்திமுகத்தில் பின்கைகளில் தாமரைகளுடன் அர்த்தபத்மாசன மகாலட்சுமி. வடக்கு கிரீவகோட்டம், தாமரையில் அர்த்தபத்மாசனத்திலுள்ள நான்முகன் கொள்ள கீர்த்திமுகத்தில் வீணையுடன் அக்கமாலையும் சுவடியுமாய்க் கலைமகள்.

வெளிச்சுற்று

கோபுர வாயிலையடுத்து விரியும் பரந்த வெளிச்சுற்றின் தென், வடமதில்கள் வாயில் பெற்றுள்ளன. தெற்கு வாயில் மேற்பகுதியில் இரண்டு கர்ணகூடங்களும் இடையில் சாலையும் பெற்றுள்ளது. சாலையில் தெற்குப் பார்வையாகச் சிம்மஇருக்கையில் சுகாசனத்தில் முன்கைகளில் கரும்புவில்லும் அம்புமாய் அம்மனின் சுதைவடிவம். அவரது பின்கைகளில் பாசம், அங்குசம். மகுடம், புடவை, குறங்குசெறியுடனான இடுப்பணி பெற்றுள்ள அவரது வலப்புறக் கர்ணகூடத்தில் யானைகள் முழுக்காட்டும் திருமகள். சுகாசனத்திலுள்ள அம்மையின் பின்கைகளில் மலர்மொட்டுகள். முன்கைகள் காக்கும், அருள்முத்திரைகளில். இடப்புறக் கர்ணகூடத்தில் கலைமகள் வல முன் கையும் இடப் பின் கையும் வீணை வாசிக்க, பிற இரு கைகளில் அக்கமாலை, சுவடியுடன் அமர்ந்துள்ளார். அவரது வலப்புறம் வீணையின் இசையில் மயங்கிய மயில். கர்ணகூடங்களின் பக்கங்களில் சிம்மங்கள். சாலையில் வடபார்வையாக சமபாதத்திலுள்ள அம்மனின் சுதைவடிவம் பின்கைகளில் தாமரைகள் கொள்ள, முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். கர்ணகூடங்கள் வெறுமையாக உள்ளன. சுற்றின் வடகிழக்கில் அலுவலக அறைகளும் வடபுறம் இறையூர்திகளுக்கான மண்டபமும் மற்றொரு மண்டபமும் உள்ளன. நெடிய தூண்கள் தாங்கும் இரண்டாம் மண்டபத்தில் கோயில் தொடர்பான வண்டிகள், விளக்குகள், பிற பொருள்கள் உள்ளன. இதையடுத்துள்ள மதிலில் இரண்டு வாயில்கள் உள்ளன. முதல் வாயிலின் தலைப்பில் இரு நான்முக அரைத்தூண்கள் தாங்கும் கீர்த்திமுகத்துடனான வளைவுத் தோரணம். அதில் வடபார்வையாக எருமைத்தலை மீது நிற்கும் மகிடாசுரமர்த்தினி. முன்கைகள் காக்கும், கடியவலம்பிதக் குறிப்புகளில் அமைய, பின்கைகளில் சங்கு, சக்கரம். இவ்வாயிலை ஒட்டி அதன் வலப்புறத்தே அமைந்துள்ள படிகள் வடக்கு மண்டபங்களின் கூரைக்கு வழியாக உள்ளன.



சுற்றின் நடுப்பகுதியிலுள்ள இறைவன், இறைவி திருமுன்களையடைய, கோபுரவாயிலிலிருந்து நீளும் நடையின் கூரையை இருவகைத் தூண்கள் போதிகைத் துணையுடன் தாங்குகின்றன. கிழக்கிலிருந்து மேற்காக ஒருதள வேசரத் திருமுன்னில் நந்தியும் அடுத்துக் கொடிமரம், பலித்தளம் ஆகியனவும் அமைந்துள்ளன. தூண்கள் சிலவற்றின் செவ்வகங்களில் மோகினி, பைரவர் உள்ளிட்ட சிற்பங்கள். இறைவன் திருமுன்னுக்கான வாயிலின் முன் இருபுறத்தும் தென்வடலாக விரியும் இந்நடையின் தென்புற மேடை அருகிலுள்ள சுவரில் மகிடனை அழிக்கும் சிம்மவாகினியின் ஓவியம். வடபுறம் பெருமண்டபம், முகமண்டபம், இருதள வேசர விமானம் என அமைந்த உலகநாயகி அம்மன் திருமுன். இத்திருமுன்னைச் சுற்றிவருமாறு கட்டமைப்பின் வலப்புறத்தே வெளிச்சுற்றின் வடபகுதியை இணைக்குமாறு நீள்நடை. முகமண்டபத்தை ஒட்டிய கிழக்குப்புறச் சுற்றுத்தரையில் சோழர் காலக் கல்வெட்டுத் துணுக்கொன்று பதியப்பட்டுள்ளது.

அம்மன் திருமுன்

துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவும் சுவர், வெட்டுப்போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், மேலோட்டமான கூடுவளைவுகளுடன் இறங்கும் கபோதம் என அமைந்துள்ள அம்மன் விமானக் கீழ்த்தளத்தின் முப்புறக் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. கபோதத்தின் மேல் பூமிதேசக் குறியீடும் வேதிகையும் அமைய, மேலுள்ள ஆரம் ஆறங்க அமைப்பினது. அதன் கர்ணகூடங்களில் தெற்கு, மேற்கு, வடக்கு முத்திசைகளிலும் மலரேந்திய கையினராய்ப் பெண்கள். கிழக்கில் தென்புறம் நெருப்புக்கடவுளின் தேவியும் வடபுறம் குழலூதும் கண்ணனும் காட்டப்பட்டுள்ளனர்.



ஆரச்சுவரில் சாலையின் இருபுறத்தும் சுகாசனத்தில் இறைவியின் தோற்றங்கள். நான்முக அரைத்தூண்களால் தழுவப்பெற்ற சாலை நாசிகையின் மேற்புறத்தே கீர்த்திமுகத்துடன் மகரதோரணம். நாசிகையின் இருபுறத்தும் கவரி அல்லது மலரேந்திய பெண்கள். கிழக்கு நாசிகையில் உத்குடியிலுள்ள அம்மையின் பின்கைகளில் பாம்பு சுற்றிய உடுக்கை, பாசம். முன்கைகளில் கத்தி, தலையோடு. மேற்குச்சாலை நாசிகையில் சுகாசனத்திலுள்ள வைணவியின் பின்கைகளில் சங்கு, சக்கரம். முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். வடக்கு நாசிகையில் தாமரையில் அர்த்தபத்மாசனத்திலுள்ள நான்முகியின் பின்கைகளில் குண்டிகை, அக்கமாலை. முன்கைகள் வைணவி போல். வடபுறக் கிழக்குக் குறுநாசிகைத் தேவி எட்டுக் கைகள், நான்கு முகங்களுடன் அடுக்கிய பிணங்கள் மீது அர்த்தபத்மாசனத்திலுள்ளார். வடபுற மேற்குக் குறுநாசிகை சுகாசனத்தேவி பத்துக் கைகளுடன் காட்சிதருகிறார். தெற்குச் சாலை நாசிகையிலுள்ள சுகாசனத்தேவி பின்கைகளில் மலர் கொண்டுள்ளார். முன்கைகள் காக்கும், அருட்குறிப்பில்.

சாலை முன்தள்ளலுடன் உயரக்குறுக்கமாக உள்ள இரண்டாம் தளக்கூரையைத் திசைக்கிரு பெண்கள் தாங்க, மேலே வேதிகை. கிரீவதளத்தின் நான்கு மூலைகளிலும் வீராசனத்தில் வணங்கிய வானவர். கிரீவகோட்டங்களை நான்முக அரைத்தூண்கள் தழுவ, கீர்த்திமுகத்தில் வானவர் தலைகளும் பூங்கொத்துக்களும். கிரீவத்தின் நாற்புறத்துமுள்ள கர்ணகூடங்களில் நிற்கும் வானவப் பெண்கள் ஒருகையில் மலர்கொண்டு, ஒரு கையை நெகிழ்த்தியுள்ளனர். மேற்கு கிரீவகோட்டத்தில் கவரிப்பெண்களுடன் வைணவி சுகாசனத்தில். வடக்கில் அதே அமர்வில் நான்முகி. கிழக்கில் பின்கைகளில் உடுக்கை சுற்றிய பாம்பும் பாசமும் கொண்டவராய் சுகாசனத்தில் மகேசுவரி. தெற்கிலுள்ள சுகாசனத் தேவியின் பின்கைகளில் தாமரைகள். கிரீவதேவியர் அனைவருமே முன்கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண்டுள்னர்.

மண்டபங்கள்

விமானம் ஒத்த கட்டமைப்பில் கோட்டங்களற்ற கட்டுமானங்களாய் முக, பெருமண்டபங்கள். பெருமண்டப வாயிலின் இருபுறத்தும் சிம்மங்களின் துணையுடன் பின்கைகளில் பாசம், அங்குசம் ஏந்திய பெண் காவலர்கள். அவர்தம் முன்கைகளுள் ஒன்று அருகிலுள்ள உருள்பெருந்தடி மீதமர, மற்றொன்று அச்சுறுத்துகிறது. இருவருக்கும் இடைப்பட்டு வாயிலுக்கான படிகள். வாயிலின் இருபுறத்துமுள்ள நான்முக அரைத்தூண்களில் கவரிப்பெண்கள். காவல் பெண்களை அணைத்துள்ள உயரக்குறைவான நான்முக அரைத்தூண்கள் மகரதோரணத்துடன் கீர்த்திமுகம் பெற்றுள்ளன. பெருமண்டப வாயிலின் மேல் இருபுறத்தும் யானைகள் நீரூற்ற பின்கைகளில் மலர்களும் முன்கைகளில் காக்கும், அருட்குறிப்புமாய் அர்த்தபத்மாசனத்தில் யானைத்திருமகள். யானைகளின் புறத்தே கவரிப்பெண்களும் வீணைக்கலைஞர்களும்.

முச்சதுர இருகட்டுத் தூண்கள் தரங்க வெட்டுப் போதிகைகளுடன் கூரையுறுப்புகள் தாங்கும் இம்மண்டபத்தின் வடவாயில் முகமண்டபத்திற்கான வழியாகிறது. பெருமண்டபத் தூண் சதுரங்களில் யாளி, பிள்ளையார் உள்ளிட்ட சிற்பச் செதுக்கல்களும் மலர்ப்பதக்கங்களும் அமைய, கூரையில் தாமரைப்பதக்கம். அளவில் சிறியதாக உள்ள முகமண்டபத்தில் தூண்களில்லை. கருவறையில் சமபங்கத்தில் பட்டாடையுடன் பரவலாக அணிகலன்கள் பெற்று விளங்கும் அம்மையின் பின் கைகளில் மலர்மொட்டுகள். சடைமகுடரான அவரது முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில்.

இரண்டாம் வாயில்

விமானம், முகமண்டபம், பெருமண்டபம், உள்சுற்று கொண்டு விளங்கும் இறைவன் திருமுன்னுக்கான வாயில், மேலுறுப்புகளற்ற கோபுரப் பெருவாயிலாய் திருநடையின் மேற்கில் அமைந்துள்ளது. துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், தரங்க வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கூடுவளைவுகளும் சந்திரமண்டலமும் பெற்ற கபோதம் கொண்டுள்ள இக்கோபுரவாயிலின் உட்புறச்சுவரில் தெற்கில் அதிகாரநந்தியும் வடக்கில் ஊர்த்வஜாநுப் பிள்ளையாரும் எழிலார்ந்த சோழச் சிற்பங்களாய் வரவேற்கின்றனர்.

மார்போடணைத்த வாளுடன் கைகளைக் கூப்பியிருக்கும் அதிகாரநந்தியின் பின்கைகளில் மழு, மான். சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணிகள், தோள், கை வளைகள், இடைக்கட்டுடன் சிம்மமுகக் கச்சும் அழகிய தொங் கல்களும் விளங்கும் தொடை வரையிலான ஆடை பெற்றுள்ள அவரின் இடப்புறமுள்ள அம்மை இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். அவரைப் போலவே குண்டலங்கள், கடகக் கைவளைகள், முப்புரிநூல், சரப்பளி, குறங்குசெறி தழுவும் பட்டாடை அணிந்துள்ள அம்மையின் வலக்கையில் நீலோத்பலம்.

வடக்கில் வலப்பாதத்தை சூசியிலும் இடப்பாதத்தைப் பார்சுவத்திலுமிருத்தி ஆடும் பிள்ளையாரின் இடக்கை மோதகத்தைத் துளைக்கை சுவைக்க, வலக்கையில் உடைந்த தந்தம். கரண்டமகுடம், செவிப்பூக்கள், முப்புரிநூல், உதரபந்தமாய்ச் சுற்றி வளைத்த பாம்பு, சிற்றாடை, தோள், கை வளைகள், தாள்செறி எனத் திகழும் அவரது இடப்பின்கையில் பாசம். வலப் பின் கையில் அங்குசம். இடப்புறம் தந்தமற்றுள்ள அவரது வலத்தந்தம் உடைந்துள்ளது.

உள்சுற்று

இறைவன் விமானம், மண்டபங்களைச் சூழவுள்ள உள்சுற்றின் மதிலொட்டிய பகுதி, விளிம்பில் முச்சதுர இருகட்டுத் தூண்கள் வெட்டுப் போதிகைகளுடன் கூரையுறுப்புகள் தாங்கும் துணைத்தள மேடையுடன், நாற்புறத்தும் மாளிகையாகத் திகழ்கிறது. தெற்கு மாளிகையொட்டி நீளும் நடையின் கூரையைச் சிறு சதுரங்களுக்கு இடைப்பட்ட நீள்கட்டுத் தூண்களும் முச்சதுர இருகட்டுத் தூண்களும் தாங்குகின்றன. இரண்டாம் வாயிலின் வடபுறமுள்ள கிழக்குச் சுற்றுமாளிகையில் ஒன்பான் கோள்களுக்கான மேடையும் சந்திரன், கதிரவன், சோழர் கால பைரவர், பின்னாளைய பைரவர் சிற்பங்களும் உள்ளன.



வடபுறத்தே ஆடவல்லானுக்கான தனியரங்கு கபோதபந்தத் துணைத்தள மேடையுடன் சிறக்க அமைந்துள்ளது. துணைத் தளக் கண்டபாதங்கள் கொடிக்கருக்கு அலங்கரிப்புக் கொள்ள, மேடை விளிம்பிலுள்ள நான்கு முச்சதுர இருகட்டுத் தூண்கள் தரங்க வெட்டுப் போதிகைகளுடன் கூரையுறுப்புகள் தாங்குகின்றன. தூண்களின் கீழ்ச்சதுரம் பாம்புப்படத்துடன் விளங்க, நடுச்சதுரங்கள் மலர்ப்பதக்கம் பெற்றுள்ளன. மேடையின் பின்னுள்ள ஆடவல்லான் திருமுன் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், தரங்க வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளுடன் தெற்குச் சுவரில் வாயில் பெற்று விளங்குகிறது. இவ்வாயிலுக்கான துளைக்கைப் பிடிச்சுவருடனான படிகள் மேடையின் வடபுறம் அமைய, அரங்கின் வடபுறத்துள்ள பின்னாளைய அறையில் ஊர்த் தெய்வமான செல்லாண்டியம்மனின் செப்புத்திருமேனி. கால்களில் கனத்த மிதியடிகளுடனுள்ள சுடர்முடி அம்மனின் அருகே தோளில் பாம்புடன் வீழ்ந்துள்ள அரக்கன் கைகளில் கத்தி, கேடயம். அம்மனின் முன்கைகளில் வலப்புறம் முத்தலைஈட்டி, இடப்புறம் தலையோடு. இடப் பின் கைகள் வேல், கேடயம், பாம்பு கொள்ள, அவரது வலக்கைகளுள் ஒன்று கிளிக்கொத்தும் மலர் பெற்றுள்ளது. பிற வலக்கைகளில் கத்தி, தமருகம்.

தெற்கு மாளிகையின் கிழக்கில் மடைப்பள்ளியும் மேற்கில் பரசுராமர் வழிபட்டதாகக் கோயிலார் கருதும் சிவலிங்கமும் அமைய, மேற்கு மாளிகையில், தெற்கிலிருந்து வடக்காக மூன்று திருமுன்கள் நான்கு வாயில்களுடன் உள்ளன. தென்மேற்குத் திருமுன்னில் பிள்ளையாரும் மூன்று குடங்களுடன் ஒருதள நீள்வேசர விமானமாய் மாற்றப்பட்டுள்ள அடுத்த திருமுன்னில் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகனும் உள்ளனர். மூன்றாவது திருமுன் உட்புறம் ஒரே திருமுன்னாக இருந்தபோதும் இரண்டு வாயில்கள் பெற்றுள்ளது. இவ்வாயில்களின் இருபுறச் சுவர்களும் பாதபந்தத் தாங்குதளத்தின் மீது எழுகின்றன. முதல் வாயிலுக்கு நேரிருக்குமாறு முருகனும் இரண்டாம் வாயிலுக்கு நேரிருக்குமாறு யானைத்திருமகளும் உள்ளனர்.

இரண்டாம் திருமுன் கருங்கல் கீழ்த்தளமும் கூரைக்கு மேல் செங்கல் கட்டுமானமுமாய் உயரக்குறுக்கமான இரண்டாம் தளமும் மேலே வேதிகை, கிரீவம், சிகரம், குடங்கள் ஆகியனவும் கொண்டு இருதள நீள்வேசரமாய் உள்ளது. இரண்டாம் தளச் சுவர்த் திருப்பங்களில் நான்முக அரைத்தூண்கள் அமைய, கிழக்கு, தெற்கு, வடக்கு முத்திசைகளிலும் சுவரின் நடுப்பகுதியில் வெறுமையான கோட்டங்கள். மேற்கில் இப்பகுதியில் கவரிப்பெண்களுடன் இருபுறத்தும் தேவியர் விளங்க, நடுவில் விஷ்ணுவின் நின்றகோலம். தளக் கபோதம் திசைக்கு நான்கு கந்தருவத் தலைகளுடனான கூடுவளைவுகள் பெற்றுள்ளது.

கிரீவகோட்டங்களில் நாற்புறத்தும் முருகன். கிழக்கில் இருபுறத்தும் தேவிகள் நிற்க, மயில் மேல் உத்குடியில் முருகன். தெற்கில் மயில் மேல் வலக்காலிருத்தி, இடக்காலைத் தரையில் ஊன்றியுள்ள முருகனின் பின்கைளில் வஜ்ரம், சக்தி. முன்கைகளில் ஒன்று அம்பு கொள்ள, மற்றொன்று வில் பற்றிய மெய்ப்பாட்டில். மேற்கில் இருபுறத்தும் இடும்பனும் கடம்பனும் நிற்க, நடுவில் வலக்கையில் வேலுடன் நிற்கும் பழனியாண்டியின் இடக்கை கடியவலம்பிதத்தில். வடக்கில் இருபுறத்தும் காவலர் நிற்க, பன்னிரு கைகளுடன் லலிதாசன ஆறுமுகன். வேதிகையின் மேல் நாற்புறத்துமுள்ள கர்ணகூடங்களில் எண்திசைக் காவலர்கள்.

மேற்கு மாளிகையின் வடக்கு மூலையில் கிழக்குப் பார்வையாகவுள்ள லிங்கம் ஆனாயநாயனாருக்கு முக்தியளித்த இறையாகக் கருதப்படுகிறது. அதன் முன் நந்தி அமைய, தூணையொட்டிக் கிழக்குப்பார்வையில் இடம்புரிப் பிள்ளையார். மேற்கு மாளிகையின் வடசுவரருகே தெற்குப் பார்வையில் மேற்கிலிருந்து கிழக்காக அப்பர், சம்பந்தர், ஆனாயநாயனார், சண்டேசுவரர் சிற்பங்கள். வடக்கு மாளிகையின் மேற்கு மூலைத் திருமுன்னில் தென்பார்வையாக விளங்கும் இறைவி ஆனாயநாயனாருக்கு முக்தியளித்த தேவியாக வணங்கப்படுகிறார். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், பட்டாடையுடன் விளங்கும் அவரது முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் விளங்க, பின்கைகளில் தாமரைமொட்டுகள்.

தேவி திருமுன்னையடுத்து இறை ஊர்தி அறைகளும் வடக்கு மாளிகையின் கிழக்கு மூலையில் சரக்கறையும் அமைய, இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட சிறு பகுதி மட்டும் திறப்பாக உள்ளது. ஏனைய பிரிவுகள் செங்கல் கட்டுமானங்களால் அறைகளாக்கப்பட்டுள்ளன. வடசுற்றின் கிழக்குக் கோடியில் ஆடவல்லான் அரங்கு. சுற்றுவெளியில் இறைவன் விமானம், முக, பெருமண்டபங்கள் அமைய, முகமண்டபத்தின் வடபுறத்தே சண்டேசுவரரின் ஒருதள வேசர விமானம். துணைத்தளமும் தூண்களற்ற சுவரும் கூரையுறுப்புகளும் பெற்றுள்ள அவ்விமானத்தின் கருவறையில் சுகாசனத்திலுள்ள சண்டேசுவரரின் வலக்கையில் மழு. சடைப்பாரம், குண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், சிற்றாடை பெற்றுள்ள அவரது இடக்கை தொடையில் விமான கிரீவகோட்டங்களில் அதே அமைப்பில் சுதையாலான சண்டேசுவரர். சுற்றுமாளிகைத் தூண்களின் நடுச்சதுரங்களில் மடைப்பள்ளியருகே லிங்கத்திற்குப் பால் சுரக்கும் பசுவின் சிற்பமும் மேற்கில் லலிதாசனப் பிள்ளையாரின் சிற்பமும் உள்ளன.



மாளிகைச் சிற்பங்கள்

கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை பெற்றவராய்க் கைகளில் மலர்களுடன் ஒளிவட்டம் சூழக் காட்சிதரும் கதிரவன் சோழர் காலத்தவர். எட்டுக்கைகளுடன் தொடைகளைப் பாம்பு சுற்றியிருக்க, கோரைப்பற்களும் மென்சிரிப்புமாய்ச் சுடர்முடி, பனையோலைக் குண்டலங்கள், மணிமாலை, சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள் அணிந்தவராய்ப் பின்கைகள் உடுக்கை, பாம்பு கொள்ள, முன்கைகளில் முத்தலைஈட்டியும் தலையோடும் விளங்க நிற்கும் பைரவரும் சோழர் காலத்தவரே. அவர் பின்னுள்ள நாய் பல்வேறு அணிகலன்களும் அகலத்திறந்த வாயுமாய்க் காட்சிதருகிறது.



மற்றொரு பைரவர் பின்கைகளில் பாம்பும் உடுக்கையும் கொண்டு சுடர்முடியும் மணிமாலையுமாய் நிற்கிறார். தொடைகளைச் சுற்றிப் பாம்பு. முன்கைப் பொருட்கள் முன்னவர் போலவே. வலச்செவி நீள்செவியாகவுள்ள அவரது இடச்செவியில் பனையோலைக் குண்டலம். மோதிரங்கள் பெற்றுள்ள அவர் பின்னும் நாய். மேற்குமாளிகையிலுள்ள அப்பர் சமபங்கத்தில் குண்டலங்களுடனான நீள்செவிகளும் ருத்திராக்கமாலை, வளைகளும் இடமார்பில் உழவாரப்படையும் விளங்கச் சிற்றாடையுடன் வணங்கிய கையராய்த் திகழ, பட்டாடை, சடைமகுடம், சரப்பளி, தோள், கை வளைகளுடனுள்ள சம்பந்தரின் கைகளில் செண்டு தாளங்கள்.

சடைகளைக் கொண்டையாய் முடித்துக் கைகளில் புல்லாங்குழலுடன் பசுக்களும் கன்றுகளும் சூழ மரத்தடியில் நிற்கும் ஆனாயநாயனாரில் இடையில் சிற்றாடை. செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். சுற்றியுள்ள பசுக்களில் ஒன்று அவரது இடமுழங்கையை நாவால் வருடுகிறது. சற்றே சிதைந்துள்ள சிறிய சிற்பத்தில் இடப்பாதத்தை வலப்பாதத்தின் முன் சூசியாக்கிக் குழல் வாசிக்கும் ஆனாயர். சுகாசனத்தில் சிற்றாடையுடன் சடைப் பாரராய்ப் பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம் கொண்டு காட்சிதரும் சண்டேசுவரரின் வலக்கையில் மழு. இடக்கை தொடைமீது.



அர்த்தபத்மாசனத்தில் கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், மார்புக்கச்சு, பட்டாடை கொண்டுள்ள யானைத்திருமகளின் முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். பின்கைகளில் மலர்கள். இருபுறத்துமுள்ள யானைகள் குடநீரை மலர்களில் சொரிகின்றன. அம்மையின் வலப்புறத் திருமுன்னிலுள்ள முருகன் பின்கைகளில் சக்தி, வஜ்ரம் கொண்டுள்ளார். கரண்டமகுடம், அரும்புச்சரம், தோள், கை வளைகள், சிற்றாடை பெற்றுள்ள அவரது வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கை கடியவலம்பிதத்தில்.

தென்மேற்குத் திருமுன்னில் கரண்டமகுடம், முப்புரிநூல், உதரபந்தம், சரப்பளி, சிற்றாடையுடன் லலிதாசனத்திலுள்ள சோழப் பிள்ளையாரின் பின்கைகளில் அங்குசம், பாசம். வல முன் கை உடைந்த தந்தம் கொள்ள, இட முன் கை மோதகத்தைத் துளைக்கை சுவைக்கிறது. அவருக்கு அருகிலுள்ள சற்றே அளவில் சிறிய மற்றொரு பிள்ளையார் இடக்கையிலும் இடம்புரித் துளைக்கையிலும் மோதகம் கொண்டு, கூடுதலாகத் தோள்மாலையும் பெற்றுள்ளார். அடுத்துள்ள திருமுன்னில் மயில் பின்னணியாக சமபங்கத்தில் கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், தோள்மாலை, தோள், கை வளைகள், உதரபந்தம், முப்புரிநூல், வீரக்கழல், சிற்றாடை பெற்று நிற்கும் முருகனின் பின்கைகளில் சக்தி, வஜ்ரம். முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். முருகனின் வலப்புறம் வாயில் பாம்பைக் கவ்வியுள்ள மயில் மேல் சுகாசனத்திலுள்ள தெய்வானையின் வலக்கை அருள்முத்திரை காட்ட, இடக்கையில் தாமரை. கரண்டமகுடம், பட்டாடை, பனையோலைக் குண்டலங்கள், சுவர்ணவைகாக்ஷம் என விளங்கும் மார்புக்கச்சற்ற அம்மையின் மயில் மேலமர்ந்த கோலம் சிறப்புக்குரியது என்பதைச் சுட்டுமாறு அவரது இருபுறத்தும் நான்முக அரைத்தூண்களும் அவற்றின் மேலமைந்தஅழகிய மகர திருவாசியும். சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களில் இத்தகு சிறப்புக் கோலத் தெய்வானை வேறெங்கும் இல்லையெனலாம். இடப்புறம் நிற்கும் வள்ளி இடக்கையை நெகிழ்த்தி, வலக்கையில் மலர் கொண்டுள்ளார். அவரது ஆடை, அணிகலன்கள் தெய்வானை போலவே.

(தொடரும்)
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.