http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 176

இதழ் 176
[ மார்ச் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 3
கீழ்வேளூர் மாடக்கோயில் - 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 66 (எனக்கெனவே மலர்ந்தாயோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 65 (அலரினும் கொடிது உண்டோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 64 (பனிவிலகலில் அக்கரை வெண்மை)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 63 (காவலும் தாண்டுவது காதல்)
இதழ் எண். 176 > கலையும் ஆய்வும்
கீழ்வேளூர் மாடக்கோயில் - 2
இரா.கலைக்கோவன், மு.நளினி

கேடிலியப்பர் விமானம்

வெற்றுத்தளம்

சோமாஸ்கந்தர் திருமுன்னிற்கான வெற்றுத்தளத்தை ஒத்து அமைந்துள்ள கேடிலியப்பர் விமான வெற்றுத்தளத்தின் தாங்குதளத்தில் குமுதத்திற்கு மாற்றாகப் பெருந்தாமரையே காணப்படுகிறது. குமுதமற்ற கபோதபந்தத் தளம், கோட்டப் பஞ்சரத்துடன் புறந்தள்ளிய சாலைப்பத்திகள் பெற்ற நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ள இவ்வெற்றுத்தளத்தின் கபோதத்திலும் ஆங்காங்கே சிற்பங்கள் உள்ளன. கோட்டங்களில் தெற்கில் ஆலமர்அண்ணலும் மேற்கில் இலிங்கோத்பவரும் வடக்கில் நான்முகனும் இடம்பெற்றுள்ளனர்.

சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சவடி, சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை அணிந்து, வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் பாம்பும் தீயகலும். முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கையில் சுவடி. இறைவனின் இருபுறத்தும் உள்ள சுவர்ப்பகுதிகளில் பக்கத்திற்கிருவராக முனிவர்கள். மேற்குக் கோட்டத்தில் உள்ள இலிங்கோத்பவரின் மேற்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் பூப்பட்டைகள் சுற்றப்பட்டுள்ளன. கோளத் திறப்பில் காட்சிதரும் இறைவனின் பின்கைகளில் மான், மழு. வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடியவலம்பிதத்தில் உள்ளது.

இலிங்கத்திருமேனியின் மேற்புறத்தே அன்னமும் கீழ்ப்புறத்தே பன்றியும் காட்டப்பட்டுள்ளன. கோட்டத்தின் இருபுறத்தும் உள்ள சுவர்ப்பகுதிகளில் வணங்கியவர்களாய் விஷ்ணுவும் நான்முகனும் நிற்கின்றனர். வடக்குக் கோட்டத்தில் சமபங்கத்தில் பட்டாடையுடன் நிற்கும் நான்முகனின் பின்கைகளில் அக்கமாலையும் குண்டிகையும். வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது.

முகமண்டபத்திற்கான வெற்றுத்தளம் விமான வெற்றுத்தளக் கட்டமைப்பை ஒத்துள்ளது. அதன் தென்கோட்டத்தில் பிள்ளையாரும் வடகோட்டத்தில் மகிடாசுரமர்த்தனியும் இடம் பெற்றுள்ளனர். பிள்ளையார் பின்கைகளில் அங்குசம், பாசம் ஏந்தி முன்கைகளில் தந்தம், மோதகம் கொண்டு இடம்புரியாக உள்ளார். வடகோட்டத்தில் மகிடத்தை அழிப்பவராக எட்டுக் கைகளுடன் மர்த்தனி காட்டப்பட்டுள்ளார். முன்னிரு கைகளி லும் ஏந்தியுள்ள சூலம் கீழே அமர்ந்தபடி தலையை உயர்த்திப் பார்க்கும் மகிடனின் உடலில் நுழைந்துள்ளது. பின்னிரு கைகளில் சங்கும் சக்கரமும் அமைய, இடைக்கைகளில் கத்தி, கேடயம் உள்ளன. இரண்டு கைகளில் உள்ள பொருட்களை அடையாளப்படுத்த முடியவில்லை.

விமானம்

கிழக்கு மேற்காக 6. 73 மீ. அகலமும் தென்வடலாக 6. 89 மீ. நீளமும் கொண்டுள்ள விமானக் கீழ்த்தளத்தின் சாலைப்பத்தி பிதுக்கமாய் உள்ள கர்ணபத்திகளினும் புறந்தள்ளி அமைந்துள்ளது. அதன் சற்றே புறந்தள்ளிய நடுப்பகுதியில் அகலமான கோட்டப்பஞ்சரமும் கர்ணபத்தியில் கோட்டத்துடனான சுவர்ப் பஞ்சரமும் இடம்பெற்றுள்ளன. பத்திகளுக்கு இடைப்பட்ட ஒடுக்கங்களில் குடப்பஞ்சரங்கள் காட்டப்பட்டுள்ளன. பத்திகளும் பஞ்சரங்களும் மாறுபட்ட உறுப்புகளால் அமைந்த தாங்குதளம், வேதிகை பெற்றுள்ளன.

சாலைப்பத்தி உபானம், பத்மஜகதி, உருள் குமுதம், கண்டம், கபோதம் இவற்றாலான கபோதபந்தத் தாங்குதளம், மற்றொரு கண்டம், பெருவாஜனம் பெற, கோட்டப்பஞ்சரங்கள் கபோதபந்தத் துணைத்தளத்தின் மீது ஜகதி, இந்திரகாந்தக் குமுதம், கண்டம், பட்டிகை இவற்றாலான பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி கொண்டுள்ளன.

கர்ணபத்தி உபானம், ஜகதி, இந்திரகாந்தக் குமுதம், கண்டம், பட்டிகை கொண்ட பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி கொள்ள, அப்பத்தியில் பொருந்தியுள்ள சுவர்ப்பஞ்சரம் கபோத பந்தத் துணைத்தளத்தின் மீது, கபோதபந்தத் தாங்குதளம் பெற்று மேலே வேதிகைத்தொகுதி கொண்டுள்ளது. அதன் மேல் எழும் இந்திரகாந்த அரைத்தூண்கள் அணைத்துள்ள கோட்டத்தில் எண்திசைக் காவலர்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கோட்டத்தை மூடும் கூரையுறுப்புகள் நாகர சிகரமும் தூபியும் பெற்று முடிகின்றன.

சாலைப்பத்திகளை இந்திரகாந்த அரைத்தூண்கள் அணைக்க, சாலைக் கோட்டங்களைச் சட்டத்தலை பெற்ற உருளை அரைத்தூண்கள் அணைத்துள்ளன. தெற்குக் கோட்டத்தில் ஆலமர்அண்ணலும் மேற்குக் கோட்டத்தில் இலிங்கோத்பவரும் வடக்குக் கோட்டத்தில் நான்முகனும் காட்டப்பட்டுள்ளனர். அனைத்து அரைத்தூண்களும் சதுரபாதங்கள் பெற்றுள்ளன. முதல் தளக்கூரையில் கிழக்கில் மட்டும் பக்கத்திற்கொன்றாகக் கர்ணகூடங்கள் காட்டப்பட்டுள்ளன.

விமானத்தின் இரண்டாம் தளத்திலும் சாலைப்பத்தி கர்ணபத்திகளினும் புறந்தள்ளியே அமைந்துள்ளது. நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ள தளச்சுவர்களின் கர்ணபத்திகளில் மகரதோரணத் தலைப்பிட்ட அகலக் குறைவான கோட்டங்களும் சாலைப்பத்திகளில் பஞ்சர அலங்கரிப்புப் பெற்ற கோட்டங்களும் ஒடுக்கங்களில் மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்களும் உள்ளன. சாலைக் கோட்டங்களில் தென்புறம் ஆலமர்அண்ணலும் மேற்கில் இலிங்கோத்பவரும் வடக்கில் நான்முகனும் உள்ளனர்.

இரண்டாம் தளக் கூரை ஆறங்க ஆரஉறுப்புகள் பெற்றமைய, பின்னால் மூன்றாம் தளம். அங்கும் சாலைப்பத்தி மட்டும் புறந்தள்ளியுள்ளது. தளத்தில் தூண்களின் மேற்பகுதிகளும் போதிகைகளும் கூரையுறுப்புகளும் காட்டப்பட்டுள்ளன. மேலே திராவிட கிரீவமும் சிகரமும் அமைந்துள்ளன. ஆரச்சாலை களிலும் கிரீவகோட்டங்களிலும் இரண்டாம் தளம் போலவே இறைத்திருமேனிகள் உள்ளன. கிரீவகோட்டத் திருமேனிகள் நின்றகோலத்தில் உள்ளன.

விமானக் கீழ்த்தளத்தில் தெற்குக் கோட்டத்தில் உள்ள ஆலமர்அண்ணல் வீராசனத்தில் பின்கைகளில் பாம்பு, தீயகல் கொண்டு சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், பல்வகை அணிகலன்கள் அணிந்து, இட முன் கையில் சுவடி ஏந்திக் காட்சிதருகிறார். வல முன் கை சின்முத்திரையில் உள்ளது. கோட்டத்தின் இருபுறத்தும் உள்ள சுவரில் பக்கத்திற்கிருவராக முனிவர்கள். இரண்டாம் தளத் தெற்குக் கோட்டத்தில் உள்ள வீராசன ஆலமர்அண்ணல் கீழவரைப் போலவே அமைந்துள்ளார். இட முன் கை தொடையில் படியாமல் மேல் தூக்கலாக உள்ளது. மகுடமுகப்பில் மண்டையோடு.

இரண்டாம் தள ஆரச்சாலையில் உள்ள ஆலமர்அண்ணலும் வீராசனத்திலேயே காட்சியளித்தபோதும் அவரது வல ஒருக்கணிப்பு அந்த அமர்விற்கே சிறப்பளிக்குமாறு அமைந்துள்ளது. இடமுழங்கால் வலமுழங்காலின் மீது படியுமாறு அமைந்த இந்த வீராசனம் கீழையூர்த் தென்வாயில் ஸ்ரீகோயில் வீராசனத்தை ஒத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கிரீவகோட்டத் தில் முன்கைகளால் வீணை வாசித்தவாறு நிற்கும் சிவபெருமா னின் பின்கைகளில் அக்கமாலையும் தீச்சுடரும் உள்ளன.

விமானக் கீழ்த்தள மேற்குக் கோட்டத்தில் காணப்படும் இலிங்கோத்பவர் வெற்றுத்தள இலிங்கோத்பவரை ஒத்துள்ளார். கோட்டத்தை அடுத்துள்ள சுவர்ப்பகுதிகளில் வலப்புறம் விஷ்ணுவும் இடப்புறம் நான்முகனும் வணங்கியவாறு காட்சி தருகின்றனர். இரண்டாம் தளக் கோட்டத்தில் விஷ்ணு பின்கைகளில் சங்கும் சக்கரமும் ஏந்தி, முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் கொண்டு சுகாசனத்தில் உள்ளார். இரண்டாம் தள ஆரத்திலும் அதே நிலையில் விஷ்ணுவைக் காணமுடிகிறது. கிரீவகோட்டத்தில் நின்றநிலையில் காட்சிதரும் விஷ்ணுவின் முன்கைகள் காக்கும், அருட்குறிப்பில் உள்ளன. பின்கைகளில் சங்கும் சக்கரமும்.

விமானக் கீழ்த்தள வடக்குக் கோட்டத்தில் உள்ள நான்முகன், பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை கொண்டு, சடைமகுடம், பட்டாடை, முப்புரிநூல், உதரபந்தம் அணிந்து வல முன் கையைக் காக்கும் குறிப்பிலும் இட முன் கையைக் கடிய வலம்பிதத்திலும் அமைத்துக் காட்சிதருகிறார். கோட்டத்தை அடுத்துள்ள சுவர்ப்பகுதிகளில் பக்கத்திற்கொரு முனிவர் வணங்கிய நிலையில் உள்ளார். இரண்டாம் தளக் கோட்டத்தில் முன்கைகளில் காக்கும் குறிப்பும் அருட்குறிப்பும் காட்டி, அர்த்தபத்மாசனத்தில் உள்ள நான்முகனின் பின்கைகளில் அக்கமாலையும் குண்டிகையும். இரண்டாம் தள ஆரச்சாலை நான்முகன் தளக்கோட்ட நான்முகனை ஒத்துள்ளார். கிரீவ கோட்டத்தில் நின்றகோலத்தில் காட்சிதரும் நான்முகன் அதே கருவிகளுடன் காத்தும் அருள்செய்தும் காட்சிதருகிறார்.

விமானத்தின் இரண்டாம் தளக் கிழக்கு ஆரச்சாலையில் பின்கைகளில் சக்தி, வஜ்ரம் ஏந்தி, முன்கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண்டு சுகாசனத்திலுள்ள முருகனும் கிரீவத்தில் அதே கருவிகள், அதே குறிப்புகளுடன் நின்றகோல முருகனும் காட்டப்பட்டுள்ளனர்.

முகமண்டபம்

முகமண்டபம் விமானத்தின் கட்டமைப்பிலேயே மூன்று விதமான தாங்குதள உறுப்பு வேறுபாடுகளுடன் ஒரு தளம் கொண்டு விளங்குகிறது. அதன் கர்ணபத்திகள் ஜகதி, இந்திரகாந்தக் குமுதம், பாதங்களும் கம்புகளும் பெற்ற கண்டம், பட்டிகை, வேதிகைத்தொகுதி, நாகபந்தம் பெற்ற சதுர பாதங்களின் மீதெழும் எண்முகத் தூண்கள் சூழ்ந்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றமைய, சாலைப் பத்திகள் பத்மஜகதி, உருள்குமுதம், பாதங்களும் கம்புகளும் பெற்ற கண்டம், கூடுவளைவுகளுடனான கபோதம், பூமிதேசம், கண்டம், பெருவாஜனம், இந்திரகாந்த அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொள்ள, சாலைக்கோட்டங்கள் கபோதபந்தத் துணைத்தளம் பாதபந்தத் தாங்குதளம், கண்டம், கபோதம், சட்டத்தலை பெற்ற உருளைத்தூண்களின் அணைவு இவற்றுடன், கூரையுறுப்புகள், கிரீவம், சிகரம் பெற்றுப் பொலிகின்றன.

தென்கோட்டத்தில் பிள்ளையாரும் வடகோட்டத்தில் மகிடாசுரமர்த்தனியும் அமைய, முகமண்டபத்திற்கும் கருவறைக் கும் இடைப்பட்ட ஒடுக்கத்தில் சாளரம் காட்டப்பட்டுள்ளது. இடம்புரியாக நிற்கும் கரண்டமகுடப் பிள்ளையாரின் பின்கை களில் பாசமும் அங்குசமும். வல முன் கை உடைந்த தந்தம் ஏற்க, இட முன் கையில் மோதகம். மகிடத்தலைமீது பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி நிற்கும் மர்த்தனியின் வல முன் கை காக்கும் குறிப்பில் உள்ளது. இட முன் கை கடியவலம்பிதமாக அமைய, கரண்டமகுடம், பட்டாடை, மார்புக்கச்சு அணிந்துள்ள அம்மையின் கைகளில் வளைகள்.

-வளரும்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.