![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 176
![]() இதழ் 176 [ மார்ச் 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 朝ぼらけ 宇治の川霧 たえだえに あらはれわたる 瀬々の網代木 கனா எழுத்துருக்களில் あさぼらけ うぢのかはぎり たえだえに あらはれわたる せぜのあじろぎ ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் சதாயொரி காலம்: கி.பி. 995-1045. இத்தொடரின் 55வது பாடலை (நெஞ்சம் மறப்பதில்லை) இயற்றிய புலவர் கின்த்தோவின் மகனும் பேரரசர் முராகமியின் மகள் வயிற்றுப் பேரனும் ஆவார். 60வது பாடலை (தனிவழியில் கவிப்பயணம்) இயற்றிய புலவர் கொஷிக்கிபுவைப் போட்டியின்போது எள்ளி நகையாடியவர் இவர்தான். அரசவையில் பல உயர்பொறுப்புகளை வகித்த இவர் கவிஞர், ஓவியர், இசை வல்லுநர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 45 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 புலவர்களின் பிற்காலப் பட்டியலில் இடம்பெற்றவர். பாடுபொருள்: காலைப் பனியின் அழகு பாடலின் பொருள்: காலைநேரப் பனி மெல்லமெல்ல விலக உஜி ஆற்றின் அக்கரையில் உள்ள மூங்கில்கூட்டம் மீன்பிடி முறம்போல் தெரிகிறது. இயற்கையை வர்ணிக்கும் நேரடியாகப் பொருள்தரும் இன்னோர் எளிய பாடல். தலைநகர் கியோத்தோவின் தெற்கில் ஓடும் நதிதான் உஜி. தற்போதைய ஷிகா மாகாணத்தின் பிவா ஏரியிலிருந்து உற்பத்தியாகும் செதா நதி தெற்கில் பாய்ந்து அமாகசே அணையிலிருந்து உஜி நதியாக மாறி மேற்கு நோக்கிப் பாய்ந்து ஓயமசாகி என்னும் இடத்தில் கட்சுரா மற்றும் கிஜு நதிகளுடன் இணைந்து யொதொகவா ஆறாக மாறி ஓஸகாவை நோக்கிப் பயணிக்கிறது. இந்த உஜி நதியின் கரைகளில் அரச குடும்பத்தினரும் அரசவை உயர்நிலை அதிகாரிகளும் தங்கள் ஓய்வு மாளிகைகளைக் கொண்டிருந்தனர். இப்புலவர் அத்தகைய மாளிகைகளில் ஒன்றிலிருந்து பனிக்காலத்தில் இக்காட்சியைக் கண்டிருக்கலாம். இந்த நதியின் கரையில் அஜிரோகி என்றொரு வகையான மூங்கில் செடிகள் வளர்கின்றன. மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்படும் முன் இம்மூங்கிலின் பட்டைகளைச் சிறிது இடைவெளியுடன் முறம்போல் பின்னி ஜப்பானியர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்தி வந்தார்கள் என்ற தகவலை இப்பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது. வெண்பா: எண்டிசை யாங்கனும் தண்ணம் பரவிட வெண்பனி சூழ்வது கண்டிடக் - கண்விழி அன்ன கயல்கொள் முறமெனத் தோன்றும் தெவிட்டப் பருகும் விருந்து தண்ணம் - குளிர்ச்சி (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |