![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 176
![]() இதழ் 176 [ மார்ச் 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் もろともに あはれと思へ 山桜 花よりほかに 知る人もなし கனா எழுத்துருக்களில் もろともに あはれとおもへ やまざくら はなよりほかに しるひともなし ஆசிரியர் குறிப்பு: பெயர்: மதகுரு க்யோசொன் காலம்: கி.பி 1055-1135. இவர் தனது 10 வயதில் தந்தையை இழந்து 12 வயதில் துறவியானவர். மிக்யோ எனும் புத்தமதப் பிரிவில் சேர்ந்த இவர், தற்போதைய ஷிகா மாகாணத்தின் ஓமினே மற்றும் குமானோ மலைத்தொடர்களில் ஷூகெந்தோ எனப்படும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். பல ஆண்டுகள் தொடர்ந்த பயிற்சிக்குப் பின்னர் தெந்தாய் என்ற புத்தமதப் பிரிவுக்குத் தலைவரானார். பேரரசார் டோபா அரியணை ஏறியபோது அரசவையின் தலைமை மதகுருவாக நியமிக்கப்பட்டார். அரசவையில் சிலருக்குத் தீர்க்கமுடியாத சில நோய்களைப் பிரார்த்தனைகளால் குணப்படுத்தியதால் மிகவும் புகழ்பெற்றார். அரசவையிலிருந்து ஓய்வு பெற்றபின்னர் கவிஞராக வாழ்க்கையைத் தொடர்ந்தார். தனது 81வது வயதில் இறந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 48 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பாடுபொருள்: தனிமைக்குத் துணையாதல் பாடலின் பொருள்: ஏ! அழகிய சக்குரா மலரே! என் தனிமையைப் போக்கவே நீ வந்தாயோ? உனக்கு யாரும் துணையில்லாமல் தனிமையில் பூத்திருப்பதுபோல் எனக்கும் யாரும் துணையில்லை. இயற்கையை வியக்கும் ஓர் எளிய பாடல். அந்நாளில் புத்தமதத் துறவிகள் பிரார்த்தனையின்மூலம் நோய்களைக் குணப்படுத்துவதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அதன் ஒரு பகுதியாகப் பல ஆண்டுகள் தொடர்ந்து மனிதர்களையே காணக்கூடாது. இப்பயிற்சி பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டதில்லை. ஓமினே மலைத்தொடரில் தனிமையில் கடுமையான பயிற்சிக்கிடையில் ஓய்வு தேவைப்படும் நேரத்தில் திடீரென்று ஒரு காட்டுப்பூ கண் சிமிட்டினால் ஏற்படும் புத்துணர்ச்சியால் இயற்றப்பட்டது இப்பாடல் என்று கூறுகிறார்கள். யாரும் காணாத அழகு தன் கண்களுக்கு மட்டும் விருந்தாகிறதே என்ற உணர்வு நிச்சயம் புத்துணர்ச்சியைத்தான் தரும். வெண்பா: தனிமையில் வாடிடும் உன்னிதழால் என்னை இனிமையில் மூழ்கிட வைத்த - வனிதையும் நீயே மலைக்காட்டில் புத்துணர்வு தந்தாயே யாரும் ரசிக்கா மலர் (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |