http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 22

இதழ் 22
[ ஏப்ரல் 16 - மே 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழகத் தேர்தல்
பாராட்டுவோம்
வரலாற்றின் வரலாறு - 2
Perspectives On Hindu Iconography
கல்வெட்டாய்வு - 15
குடும்பில் குடவோலை
தரிசனமான தக்ஷ¢ணமேரு
ஆயிரம் வருஷத்துப் புன்னகை - 2
Links of the Month
சங்கச் சிந்தனைகள் - 9
இதழ் எண். 22 > இலக்கியச் சுவை
சங்கச் சிந்தனைகள் - 9
கோகுல் சேஷாத்ரி
பிரபஞ்ச இரகசியம்


முதலில் எல்லாம் ஒரே அந்தகாரமாக - இருளாக இருந்தது. ஒன்றும் புலப்படவில்லை. எதுவும் - எவையும் அசையவில்லை. ஒரு மோனம் நிரந்தரமாகப் படர்ந்திருந்தது. அந்த இருளில் - மோனத்தில் அது அமைதியாக இருந்தது. ஒரு ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் ஞானியைப்போல அது இருளோடு இருளாகப் படர்ந்து கிடந்தது.

ஆண்டுகள் பல்லாயிரம் கழிந்தன. யுக யுகாந்திரங்கள் வந்து போயின. அப்படிச் சொல்வது ஒருவகையில் தவறு. ஏனெனில் காலம் என்று ஒன்று அப்போது இல்லை. முடிவில்லாத மோனப்பெருவெளியில் அந்தகாரந்தின் ஆழ்ந்த அமைதியில் ஒரு வெளியாக உருவின்றி அது அங்கிங்கெனாதபடி எங்கும் எப்போதும் எல்லாமாய் பரந்து விரிந்திருந்தது.

திடீரென்று ஒருநாள் ஏதோ தோன்றியது. உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு படர்ந்தது. ஒரு ஆசை ஒரு தவிப்பு ஒரு உணர்வு என்று பலவாறாக அதைச் சொல்லலாம்.

அது உருவாக வெளிப்பட முடிவெடுத்தது.

அண்ட சராசரங்களும் அதனால் - அதற்காக - அதன்பாற்பட்டு இயங்குபவன என்பதால் அதன் வெளிப்பாடு ஒரு கவித்துவம்போல மிக அழகாக நிதானமாக எந்த அவசரமுமின்றி நிகழ்ந்தது.

அந்த வெளிப்பாட்டின் மூலம் அதற்கு உடல் என்று ஒன்று உண்டானது. உலகின் முதல் உயிரினம் தோன்றியது.

உயிராக வெளிப்பட்டது அதற்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் தன்மையிலிருந்து ஓரிடத்தில் குறுகி அமர்ந்திருப்பதை அது இன்ப வேதனையாக உணர்ந்தது. அந்த இன்ப துன்பங்களை அது மெளனமாக அனுபவித்தது.

காலங்கள் மேலும் கழிந்தன.

உள்ளுக்குள் படர்ந்த அந்தக் குறுகுறுப்பு மேலும் சுடர்விட்டது.

சுவை என்று ஒரு தத்துவத்தைப் பற்றி அது சிந்தித்தது. பல ஆயிரமாயிரம் ஆண்டுகள் சிந்தித்தன் பலனாக அதற்கு நாவுகள் முளைத்தன. அது ஆசையோடும் தவிப்போடும் எல்லாவற்றையும் சுவைத்தது. போதும் போதும் என்று தோன்றுமளவிற்கு அதன் சுவைக்காக - அதனால் சுவைக்கப்படவேண்டும் என்பதற்காக பலப்பல உணவுகள் தோன்றின.

நாட்கள் சென்றன.

சுவையைப்போலவே மணமும் அதற்குத் தேவைப்படவே நாசி (மூக்கு) உருவாயிற்று. அண்ட சராசரங்களின் விசித்திர நறுமணங்களெல்லாம் அந்த உயிரின் நாசியில் புகுந்து புறப்பட்டன.

ஒலி என்கிற தத்துவம் புரிந்துபோக செவியும் உண்டாயிற்று.

ஒரு கட்டத்தில் அதற்கு இத்தனை பரிமாணங்கள்கூட போதுமானதாக இல்லை. உயிராக இருந்த அது நகர ஆசைப்பட்டது. சில காலத்திற்குப்பிறகு உடலிலிருந்து கால்கள் முளைத்தன. அது இப்போது தன்னுடைய மூன்று அவதாரங்களையும் பார்த்துப் பெருமைப்பட்டது. நகர்தலால் அதற்கு மேலும் சில அனுபவங்கள் உண்டாயின.

இப்படி உடல் கண், நாசி வாய், செவி என்கிற ஐம்புலன்களையும் கொண்டு அது பல்லாயிரக்கணக்கான வருடங்கள் மிக மிக சந்தோஷமாக அது பாடிக் களித்தது.

பின் வழக்கம்போல ஒரு நாள் ஏக்கம் படர்ந்தது. ஏதோ ஒன்று அதனிடம் இல்லை. ஆனால் என்ன அது என்பது புரியவில்லை.

நாள் செல்லச் செல்ல அந்த ஏக்கம் ஒரு பசலையாக அதனை வாட்ட அது மெலிந்து படுத்தது. உடலை வெப்பம் வாட்டி எடுத்தது. ஒரு விடியற்காலையில் சட்டென்று அதற்கு எது தேவை என்பது புரிந்துபோனது.

இப்போதுதான் மனம் உண்டாயிற்று. ஆறாவது அறிவு என்று பின்னாளில் அழைக்கப்பெற்ற அந்த அறிவு அப்போதுதான் உண்டாயிற்று. மனிதம் அப்போதுதான் உருவாயிற்று.

அருவமாக ஒரு காலத்தில் இருந்தது இப்போது உருவமாக மாறிவிட்டது. எங்கும் இருந்தது இப்போது இங்கு இருக்கிறது. எப்போதும் இருந்தது இன்று இப்போது இருக்கிறது.

இவற்றைப் பரிணாண வளர்ச்சி என்கிறது விஞ்ஞானம்.

இதில் வளர்ச்சி என்ற சொல் பிழையானது. ஏனெனில் நடப்பது வெளிப்பாடே. கொஞ்சங்கொஞ்சமாக அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இதனைப் பரிணாமம் என்று சொல்வதை விடப் பரிமாணம் என்று சொல்வதே சரியானது.

பரிணாம வளர்ச்சி என்று விஞ்ஞானம் சொல்வது உண்மையில் வெவ்வேறு பரிமாணங்களின் வெளிப்பாடாகும்.

உயிர்கள் எதனால் உருவாயின ? ஏன் உருவாயின என்கிற கேள்விக்கு விஞ்ஞானம் திருதிருவென்று விழிக்கிறது. பிரபஞ்சமும் கிரகங்களும் உயிர்களும் உருவாவதற்கு முன்னால் என்ன இருந்தது ? என்று கேட்டால் விழி மேலும் பிதுங்குகிறது.

பூமியிலுள்ள உயிர்களனைத்தும் மனிதனுக்காகவே உருவாக்கப்பட்டவை - அனைத்தும் மனிதனை மையமாகக் கொண்டு இயங்குகின்றன என்பது ஒரு சில மதங்களின் கோட்பாடு. இது மிகவும் தவறான - எதேச்சதிகாரக் கோட்பாடாகும். உண்மையில் மனிதன்தான் மற்ற உயிர்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறான். பிரபஞ்சச் சங்கிலியில் அவனும் ஒரு கண்ணி - அவ்வளவுதான். நாளை மனிதனினும் சிறந்த உயிரினம் உருவானால் அவன் புறந்தள்ளப்படுவான். அழிக்கப்படுவான். இதுவே நியதி. அல்லது நியதியின்மை.

இந்தப் பின்னணியில் தொல்காப்பியர் சுட்டும் உயிர்களின் பாகுபாடு பற்றிய சிறப்பு மரபை படித்துப் பாருங்கள்.



"ஒன்று அறிவது உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அதனொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.."

(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - மரபியல் - எண் 1517)


உற்று அறிவது - உடம்பினால் அறிவது என்று பொருள்படும். ஐம்புலன்களோடு மனம் சேர்ந்து ஆறறிவாகின்றது என்கிறார்.

உயிர்கள் எதனால் உருவாயின ? எந்த மூலத்திலிருந்து வெளிப்பட்டன என்கிற கேள்விக்கு மெய்ஞானமும் மெளனமாயிருக்கிறது.

ஏனெனில் ஒன்று பலதாவதும் பலது ஒன்றில் ஒடுங்குவதுமான அந்த அலகிலா விளையாட்டை வார்த்தைச் சிறைக்குள் சிக்க வைக்க முடியாது.

தவத்தாலும் தியானத்தாலும் பெறப்படவேண்டிய ஞானம் அது.

ஏனெனில் அது ஒரு இரகசியம்.

பிரபஞ்ச இரகசியம்.

(மேலும் சிந்திப்போம்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.