http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 23

இதழ் 23
[ மே 16 - ஜூன் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு
வரலாற்று வரைவுகள்
பழுவூர் - 11
வரலாற்றின் வரலாறு - 3
நங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் கோயில் கட்டமைப்பும் கல்வெட்டுகளும்
தன்னிகரில்லாத தமிழ்
Perspectives On Hindu Iconography
சத்ருமல்லேஸ்வராலயம் - I
சிகரத்தை நோக்கி...
கடல்மல்லை ஜப்பானிலிருந்தால்...
Links of the Month
சங்கச் சிந்தனைகள் - 10
இதழ் எண். 23 > பயணப்பட்டோம்
சத்ருமல்லேஸ்வராலயம் - I
ம.இராம்நாத்

பல்லவ நாட்டின் ஒரு பகுதியைச் சுற்றிப்பார்த்துவிட்டு வருவது என முடிவு செய்து நமது நண்பர்களுடன், சென்னையில் இருந்து திண்டிவனத்தை நோக்கி காலை சுமார் 7.00 மணியளவில் புறப்பட்டோம். 8.30 மணியளவில் வயிற்றில் உள்ள பசி அசுரன் தனது வேலையை ஆரம்பிக்க, முதலில் அவனை அடக்கும் பொருட்டு அச்சிரப்பாக்கத்தில் உள்ள கணேஷ்பவனில் காலைச்சிற்றுண்டியை முடித்துக்கொண்டோம்.

சற்று வித்தியாசமாகக் கட்டுமானக் கோவில்களுக்கு செல்லாமல் குடைவரை கோவில்களை சென்று பார்க்க விரும்பினோம். குடைவரைக்கோவில்கள் என்றால் எனது நினைவிற்கு வருபவர்கள் பல்லவர்களே. பல்லவர்களில் மகேந்திரவர்மபல்லவனே சுமார் 11 இடங்களில் மலைகளை குடைந்து கோவில்களை அமைத்துள்ளார். இவற்றில் மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்கவரம் ஆகிய இடங்களில் விஷ்ணு கோவில்களும், பல்லாவரம், சீயமங்கலம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் சிவன் கோவில்களும், மண்டகப்பட்டில் மும்மூர்த்தி கோவிலும் குடையப்பட்டன.

முதலில் சத்ருமல்லேஸ்வராலயம் (சிவன் கோவில்) செல்வது என முடிவாகி திண்டிவனத்தை அடைவதற்க்கு சற்று முன்னரே வலதுபுறத்தில் செஞ்சியை நோக்கி செல்லும் பாதையில் வாகனத்தை திருப்பச்சொன்னோம். அப்படியே வழியில் கொறிப்பதற்கு கொஞ்சம் பழங்களை வாங்கிக்கொண்டோம். கொறிப்பதற்கு என்று அப்பொழுது வாங்கிய கனிகளே மாலை 4 மணிக்கு மதியஉணவாக (!) அமைந்தது என்பது வேறு கதை. செஞ்சியில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில் சற்று தூரம் சென்று, இடது பக்கமாக தளவானூரை நோக்கி பயணமானோம். போகும் வழியனைத்தும் நமது மக்களின் அன்றாட வாழ்கையை விட மேடு பள்ளங்கள் அதிகம்.

1. தளவானூர் சத்ருமல்லேஸ்வராலயத்தை தம் பெயரில் உருவாக்கியவர் நரேந்திரனான சத்ருமல்லன். வரலாறு 12-13, பக் - 81.

நாம் தளவானூரை நோக்கி உள்ளே செல்லச் செல்ல பசுமையான வயல்வெளிகளும், மலைகளும் (மலை என்பதை விட - மிகப் பெரிய பாறை எனலாம்) நம்மை வரவேற்கின்றன. இந்த வயல்களுக்கு நடுவே தான் நாம் எதிர்ப்பார்த்து வந்த வெறிச்சோடி இருக்கும் சத்ருமல்லேஸ்வராலயம் - சிவன் கோவில் உள்ளது. நாம் வந்த வண்டியை வயல்வெளிகளுக்கு அருகில் உள்ள சாலையில் நிறுத்திவிட்டு கோவிலை நோக்கி வயல்களின் நடுவே நடக்க ஆரம்பித்தோம் (அரை கிலோ மீட்டருக்கு குறையாது இருக்கும்). கோவிலை நெருங்க நெருங்க நமது கண்களுக்கு இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை (A.S.I.) போட்டுள்ள இரும்பு வேலி கண்களுக்கு தெரிந்தது. அருகில் வந்து பார்த்தால் A.S.I. காவலர் ஒருவரும் இல்லை. உலகத்தையே காக்கும் கடவுளுக்கு காவல் எதற்கு என்று காவலர் நினைத்திருப்பாரோ என்னவோ!

(நேர் வழி) விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் வழியில் 28 கி.மீ. தூரத்தில் வலப்புறம் பிரியும் பாதையில் சுமார் 6 கி.மீ பயணம் செய்தால் தளவானூரை அடையலாம்.

குடைவரைக்கோவில்.
தெற்கு நோக்கிய நிலையில் உள்ள பாறையில் சத்ருமல்லேஸ்வராலயம் கோவில் குடையப்பட்டுள்ளது.




இங்கு உள்ள குன்றின் கீழ்ப்பகுதியில் முற்றிலும் முடிக்கப்படாத நிலையில் செவ்வக வடிவமாக உள்ளது. வெளியில் இருந்து உள்ளே செல்ல இயற்கையாக பாறைகளால் வெட்டப்பட்ட படிகளும், A.S.I அமைத்துள்ள படிகளும் உள்ளன. இங்கு உள்ள பாதபந்த தாங்குதளம், உபானம், ஜகதி, எண்பட்டைக்குமுதன், கண்டம், பட்டிகை என அனைத்து உறுப்புகளையும் கொண்டுள்ளது. குடைவரையின் மேற்பகுதி வாஜனம், வலபி மற்றும் கபோதம் கொண்டு அமைந்துள்ளது.

வாயிற்காவலர்கள் (குடைவரைக்கு வெளியே)
குடைவரைக்கு கிழக்கிலும், மேற்கிலும் உள்ள கோஷ்டங்களில், பக்கத்திற்க்கு ஒருவராக, இரு வாயிற்காவலர் காட்டப்பட்டுள்ளனர். இதில் உள்ள காவலர்கள், இருவருமே தலையில் கரண்ட மகுடமணிந்துள்ளனர். தோளின் இருபுறமும் கற்றையாக சடைக்கற்றைகள் பரவியுள்ளது. காதுகளில் பனையோலைக்குண்டலங்கள், மார்பில் முப்புரிநூல், கழுத்தில் சரப்பளி, மார்பிற்கும் வயிற்றிற்கும் இடையே உதரபந்தம் அணிந்துள்ளனர். கைகளில் வளையல்களும், கங்கணமும் அணிந்துள்ளனர்.

இருவருமே இடையில் இடைக்கட்டு, அரைக்கச்சு மற்றும் முழங்கால் வரை பட்டாடை அணிந்துள்ளனர். துணியின் முடிச்சுகள் பின்னால் பரவியிருப்பதை காணலாம்.

மேற்கில் உள்ள வாயிற்காவலர்
இடதுகால் தரையில் பதிந்தும், வலது கால் பார்சுவமாகவும் (சற்றே திரும்பிய நிலையில்) உள்ளது. வலதுகை தொடைமீதும்,
இடதுகை போற்றி முத்திரையிலும் உள்ளது.





கிழக்கில் உள்ள வாயிற்காவலர்
இடதுகால் தரையில் பதிந்தும், வலது கால் அக்ரதலசஞ்சாரமாகவும் (சற்றே மடங்கிய நிலையில் - முழுவதும் தரையில் படாத நிலை) உள்ளது. இடதுகை துடைமீதும், வலதுகை உருள்பொருந்தடியின் மீதும் உள்ளது.





தூண்கள்
நுழைவாயிலின் இரண்டு பக்கங்களிலும் இரு சதுரத்தூண்களும் (சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்புடன் உள்ளன), சுவற்றை ஒட்டிய நிலையில் இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. இந்த தூண்களில் மீது அமர்ந்துள்ள போதிகைகள், உத்திரத்தை தாங்குவது போல உள்ளன. உத்தரத்தின் மேல்விளிம்பில் வாஜனமும், வலபியும், கபோதமும் அமைந்துள்ளன.

(தொடரும்..)this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.