http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 26

இதழ் 26 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2006 ]
2ம் ஆண்டு நிறைவு - மகேந்திரர் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

தேடலும் தெளிதலும்
கதை 7 - கொம்மை
மகுடாகமம் - பரசிவம் - தங்கவிமானம்
பேரறிவாளர்
விசித்திரசித்தர் கல்வெட்டுகள்
சத்ருமல்லேஸ்வராலயம் - II
The Creation of the Pallava Grantha Tamil Script
Links of the Month
SamkIrNa Jaathi
பகவதஜ்ஜுகம் - அர்த்தமுள்ள அரட்டை
சங்கச் சிந்தனைகள் (தொடர்)
நாத்திகர்களா? போலிச்சாமியார்களா?
இதழ் எண். 26 > தலையங்கம்
தேடலும் தெளிதலும்
ஆசிரியர் குழு
மூன்றாண்டுகள் முடிவில் நாங்கள் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்க்கிறோம். இரண்டாண்டுகளா? மூன்றாண்டுகளா? வரலாறு.காம் பிறந்து இரண்டு ஆண்டுகள் மட்டும் முடிந்திருந்தாலும், அதற்கு முன் ஒரு வருடம் கற்றவை விதைத்த நம்பிக்கை விதையில்தான் இதழ் மலர்ந்து வரலாற்றுத்தரு செழித்து வளர்ந்து 400 கனிகளை ஆன்லைனில் உங்கள் பார்வைக்குப் படர விட்டிருக்கிறது. இந்நிலையில், இதற்குத் தண்ணீர் ஊற்றியவர்களை நினைவு கூராமல் இருக்க முடியுமா? அதற்காகத்தானே யார் மறந்தாலும் காலதேவர் மறக்காமல் தேதியையும் மாதத்தையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறார். முதல் ஒரு வருடம் கற்றவை பாடத்திட்டத்திலிருக்கும் பாடங்கள் என்றால், பொன்னியின் செல்வன் குழுவினருடன் முதல் யாத்திரை சென்று வந்த பிறகு கற்றவை நுழைவுத்தேர்வுக்குத் தயார் செய்ததைப் போலாகும். வரலாற்றுப் பாடங்களைக் கற்றுக்கொண்டு நாங்கள் அப்படி ஒன்றையும் பெரிதாகச் சாதித்து விடவில்லை என்றாலும், வரலாற்று ஆய்வாளர்களின் முன் வைக்கப்படும் எங்கள் கேள்விகள் அலட்சியப்படுத்தப்படாமல் சற்று ஏறிட்டு நோக்கப்பட்ட பார்வையோடு பதிலிறுக்கப்படுவது எல்லோரும் பெறக்கூடிய வாய்ப்பல்ல என்பதை உணர்ந்திருக்கிறோம். எங்களுடைய இந்தத் தேடலுக்கு விடைதந்து தெளிய வைத்தவர்கள் நான்கு பேர். இது ஏற்கனவே சிலருக்குத் தெரிந்திருந்தாலும், புதியவர்களுக்காகச் சொல்லவேண்டியது எங்கள் கடமை.





மாமண்டூரில் மகேந்திரரின் குடைவரை அமைப்பை புரிந்துகொள்ள முயற்சிக்கும் வரலாறு டாட் காம் குழு (வெண்பாப் புலி கிருபா, பயணப்புலி ம.இராம்நாத் நீங்கலாக)
இடமிருந்து வலம் - சே.கோகுல், ச.கமலக்கண்ணன், லலிதா (ம. இராம்), மா.லாவண்யா


முழுமுதற்காரணம் அமரர் கல்கி. இரா. கிருஷ்ணமூர்த்தி. எங்களுக்கு மட்டுமல்ல. இன்று வரலாற்றாய்வில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான ஆய்வாளர்களுக்கு மண்ணுலகச் சக்கரவர்த்திகள் இராஜராஜசோழரையும் மகேந்திரவர்மரையும் அறிமுகப்படுத்திய ஈடு இணையற்ற எழுத்துலகச் சக்கரவர்த்தி. பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் என்னும் பொந்திடை வைக்கப்பட்ட அக்கினிக்குஞ்சுகள் எக்காலத்திலும் அணையாமல் எதிர்காலத் தலைமுறைகள் அனைத்தின் நெஞ்சிலும் அக்கனலைப் பற்ற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. பொன்னியின் செல்வன் மட்டுமல்ல. பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்துக்கும் எங்கள் வளர்ச்சியில் பங்குண்டு.

கல்கி பற்ற வைத்த இந்த நெருப்பைத் தகுந்த காலம் வரும் வரை அணையாமல் பாதுகாத்தவர் எங்கள் பெரியண்ணன் திரு. சுந்தர் பரத்வாஜ். கருவுற்ற ஒரு தாய், அக்கரு வளர்ந்து தன் சொந்த பலத்தில் உலகை எதிர்கொள்ளும் நிலை வரும்வரை பாதுகாத்து, காலம் வந்தவுடன் பெற்றுத் தந்தையின் கையில் ஒப்படைப்பதைப் போல, இன்றும் சோழர் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்குத் தார்மீக பலமாக விளங்கி வரும் இச்சிவபாதசேகரர் எங்களுக்குக் கிடைத்தது நாங்கள் என்றோ செய்த புண்ணியத்தின் பலன். ஏற்கனவே பலமுறை பல கட்டுரைகளின் வாயிலாக நன்றி தெரிவித்திருந்தபோதும்கூட, இதை எழுதும்போதும் உள்ளம் நெகிழத்தான் செய்கிறது.

பெரியண்ணனின் அரவணைப்பிலும் வழிகாட்டலிலும் வளர்ந்து வந்த எங்களை அறிவூட்டும் தந்தையின் நிலையிலிருந்து தத்தெடுத்த முனைவர் இரா. கலைக்கோவன் மூன்றாமவர். நாங்கள் எதிர்கொண்ட வரிசையில்தான் மூன்றாவது மனிதரேயொழிய, அணுகுமுறையில் மூன்றாம் மனிதராக என்றுமே உணர்ந்ததில்லை. எங்களில் ஒருவராக, தந்தை - மக்கள் என்ற தலைமுறை இடைவெளியுடனோ, ஆசிரியர் - மாணவர்கள் என்ற மரியாதை கலந்த பயத்துடனோ இல்லாமல், அனைவரும் நண்பர்கள் என்ற உயர்ந்த உள்ளத்துடன் எங்களை வழிநடத்திச் செல்பவர். ஒருமுறைக்குப் பலமுறை உறுதி செய்யப்பட்ட உண்மைகள் மட்டுமே வரலாறு என்னும் மகுடம் தாங்கத் தகுதி படைத்தவை என்ற தாரக மந்திரத்துடன் ஆய்வுலகிற்குள் எங்களைக் கைப்பிடித்து உடன் அழைத்துச் செல்பவர்.

மூவர் வளர்த்த இந்த வேள்வித்தீயினால் யாராவது பயன் பெறவேண்டாமா? ஒவ்வொரு மாத வேள்வியின் முடிவிலும் கிடைக்கும் அவிர்பாகத்தைச் சுவைத்துவரும் வாசகர்களாகிய நீங்கள்தான் வரலாறு.காம் கட்டடத்தின் நான்காவது தூண். இதுவரை வெளியாகியுள்ள 25 இதழ்களுக்கும் தாங்கள் அளித்து வந்த ஆதரவு உள்ளம் நிறையச் செய்கிறது. படித்ததோடு மட்டும் நில்லாமல், கட்டுரைகளைப் பற்றிய ஆக்கபூர்வமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டது, அடுத்த இதழ்களைக் கவனத்துடன் வெளியிடப் பேருதவியாய் அமைந்தது. இதுவரை வெளியான 400 கட்டுரைகளுக்கும் தவறாமல் பின்னூட்டமளித்து, வரலாற்று ஆர்வலர்களை ஊக்குவிப்பதே தன் தலையாய பணி என்று நிரூபித்திருக்கிறார் பெரியண்ணன் சுந்தர் பரத்வாஜ்.

இங்கு இதுவரை முகம் காட்டாத ஒரு வாசகரைப் பற்றிக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. வரலாறு.காம் இதழை இதுவரை இரண்டே தடவைகள்தான் படித்திருக்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் படித்த நேரம் எவ்வளவு தெரியுமா? மொத்தம் 42 மணிநேரங்கள். 24-அக்டோபர்-2005 அன்று மாலை 6:30 மணியிலிருந்து மறுநாள் மதியம் 3:30 மணி வரையிலும், 13-மே-2006 அன்று அதிகாலை 2:30 மணியிலிருந்து இரவு 10:30 மணி வரையிலும் சிறிதுகூட ஓய்வின்றி அதுவரை வெளியான அனைத்துக் கட்டுரைகளையும் படித்து முடித்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார். இதோ ஒவ்வொரு கட்டுரையையும் அவர் படித்த நேர அட்டவணை. அவரது ஐ.பி முகவரியிலிருந்து ஜப்பானில் வசிக்கிறார் என்று தெரிய வருகிறது. அவர் உடனடியாக ஆசிரியர் குழுவை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஜப்பானில் எந்த மூலையில் இருந்தாலும் சரி! அவரது இருப்பிடத்திற்கே நேரில் சென்று சந்தித்து நன்றி கூற கமலக்கண்ணன் தயாராக உள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் நாங்கள் கற்றுக்கொண்டவைகளைவிட கற்க எண்ணி முடியாமல் போனவைதான் அதிகம். முதல் இரண்டு வருடங்களை விட இந்த வருடம் மேற்கொண்ட பயணங்களும் குறைவுதான். ஆனாலும், இராஜராஜீசுவரம் விமானத்தின் சிகரத்தைத் தொட எண்ணியிருந்தது ஈடேறியது அனைத்து இழப்புகளையும் ஈடு செய்து விட்டது. தற்பொழுது ஆசிரியர் குழுவினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருப்பதால் வரும் ஆண்டிலும் பயணங்கள் குறைவாகத்தான் இருக்கும் என்ற போதிலும், அவ்வப்போது மேற்கொள்ளும் பாரதப் பயணங்களைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வோம். பயணங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் அனுபவ அறிவைப் பெருக்கும் முதல் ஆசான் என்பது வரலாறு காட்டும் உண்மை. வரலாறு.காம் காட்டும் உண்மை. பல்லவ மாமன்னர் மகேந்திரவர்மரை சிவகாமியின் சபத்தின் வாயிலாக, கலைகளை ஆதரிக்கும் ஒரு அரசராக மட்டுமே அறிந்திருந்த எங்களுக்கு அவருடைய பல்வேறு பரிமாணங்களைப் புரிய வைத்து, இராஜராஜருக்கு இணையாக அவரது பிம்பத்தை எங்கள் உள்ளத்தில் உயர்த்தியது முனைவர் கலைக்கோவன் அவர்களின் 'மகேந்திரர் குடைவரைகள்' நூலுக்காக மேற்கொண்ட பயணங்கள்தான். அப்போது கற்றவற்றைச் சிறப்பிதழாக்கி உங்கள் முன் தவழவிட்டிருக்கிறோம்.

வழக்கம்போல் என்றும் உங்கள் ஆதரவைக் கோரும்
ஆசிரியர் குழு
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.