http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 38

இதழ் 38[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2007 ]
3ம் ஆண்டு நிறைவு - வாசகர் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

தரிசனம் கிடைக்காதா!!!
பிராமி தோன்றிய இடமும் உடையாளூர் அறக்கட்டளையும்
கதை 11 - ஒளி
திரும்பிப் பார்க்கிறோம் - 10
இராஜசிம்மர் கலைப்பட விருந்து (புகைப்படத்தொகுப்பு)
இராஜசிம்மர் நினைத்தார்; இராஜராஜர் முடித்தார்
A Megalithic Pottery Inscription and a Harappan Tablet : A case of extra-ordinary resemblance
Agricultural Terms in the Indus Script - 2
அங்கும் இங்கும் (ஆக. 15- செப். 15)
Silpi's Corner-Introduction
Silpi's Corner-01
Links of the Month
ஆனங்கூர் - உத்தமரா? பராந்தகரா?
நீலப் பூக்களும் நெடிய வரலாறும்
இதழ் எண். 38 > சுடச்சுட
பிராமி தோன்றிய இடமும் உடையாளூர் அறக்கட்டளையும்
மு. நளினி
இந்தியாவில் வழங்கிய மொழிகளை எழுதப் பழங்காலத்தே பயன்படுத்தப்பட்ட எழுத்து வகைகளுள் ஒன்றே பிராமி. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த பிராமி எழுத்துமுறை மெளரியப் பேரரசர் அசோகர் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதென்ற கருத்து வலிமை பெற்றிருந்தது. தமிழ்நாட்டில் கிடைக்கும் கணக்கற்ற பழந்தமிழ்க் கல்வெட்டுகளை ஆராய்ந்த திரு.கே. வி. ரமேஷ், இவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிராமி எழுத்துகள் அசோகர் காலக் கல்வெட்டு எழுத்துகளினும் பழைமையானதாக இருப்பதாகத் தெரிவித்தார். அவரது ஆய்வைத் தொடர்ந்து, திரு. சு. இராசவேல், திரு. கா. இராஜன் இவர்களும் தங்கள் கண்டுபிடிப்புகளின் வழி இக்கல்வெட்டு எழுத்துகளின் காலத்தைக் கி. மு. நான்காம் நூற்றாண்டிற்குக் கொண்டு சென்றனர்.

தமிழ்நாட்டு அகழ்வாய்வுகளுள் பெரும்பான்மையன இப்பழந்தமிழ் எழுத்து வடிவங்களைக் கொண்ட பானையோடுகளைத் தந்துள்ளன. இவற்றை ஆராய்ந்த திரு. ஐராவதம் மகாதேவன் சங்க காலத்தில் தமிழக மக்கள் பரவலான அளவில் எழுத்தறிவு பெற்றிருந்தமையை வெளிச்சப்படுத்தி, 'சங்க காலத்தில் அறிவொளி இயக்கம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள்.

தேனி மாவட்டப் புலிமான் கோம்பையில் கண்டறியப்பட்ட நடுகற்களில் பொறிக்கப் பட்டிருக்கும் பழந்தமிழ் எழுத்துகள் கி. மு. நான்காம் நூற்றாண்டிற்கும் முந்தைய காலத்தவை ஆகலாம் என்று கா. ராஜன், நடன. காசிநாதன் உள்ளிட்ட பெரும்பாலான கல்வெட்டறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் எழுத்துகள் முதன் முதல் தோன்றிய இடமாகவும் மக்கள் பரவலான அளவில் எழுத்தறிவு பெற்றவர்களாக விளங்கிய நிலமாகவும் தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கண்டுபிடிப்புகளின் வழியாகவும் நூற்றுக்கணக்கான கருத்தரங்கத் தடை விடைகளுக்குப் பிறகும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்த உண்மையை, 1941லேயே தாம் எழுதிய மொஹெஞ்சொ-தரோ (ப. 225) எனும் நூலில் சிறந்த தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான நூற்றாண்டு நாயகர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் மிகத் தெளிவாகக் கூறியுள்ளமை வியப்பூட்டுகிறது. 'பிராமி எழுத்துக்கள் தமிழ் மொழிக்கென்றே அமைக்கப்பட்டுப் பின்னர் வடமொழிக்கும் பயன்பெறப் புதிய குறிகள் உண்டாக்கப்பட்டன.'




உடையாளூர்த் திருக்கோயிலில் இருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் பல மூன்றாம் குலோத்துங்கரின் பல்வேறு ஆட்சியாண்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. மன்னரின் 22ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, சிவபாதசேகர மங்கலத்தை ஸ்ரீமாஹேசுவர தானமாக அறிவிப்பதுடன், திருநறையூர் நாட்டின் கீழிருந்த ஊர்களுள் ஒன்றாய் அடையாளப்படுத்துகிறது. இத்திருநறையூர் நாடு அருமொழிதேவ வளநாட்டில் இணைக்கப் பட்டிருந்த நாடுகளுள் ஒன்றாகும்.

சிவபாதசேகர மங்கலத்தைச் சேர்ந்த தவசி நாகதேவன் திருச்சிற்றம்பலம் உடையானான குலோத்துங்க சோழப் பிச்சர் என்பார் புரவரீசுவரமுடையார் எனும் இறைத்திருமேனியை எழுந்தருளுவித்ததுடன் அவ்விறைத்திருமேனிக்கு திருவமுது படைக்கவும் இறைத்திருமுன்னில் விளக்கேற்றவும் வாய்ப்பாக நிலமொன்றைக் கொடையளித்திருந்தார். நிலத்தைப் பெற்றுக் கொண்டு அறக்கட்டளையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த கிழான் ஆண்டானிடம் ஊரார் அது தொடர்பான ஆவணத்தைக் காட்டுமாறு கேட்டபோது அவரால் ஆவணத்தைக் காட்டக்கூடவில்லை.

அதனால், ஊரார் நிலம் தொடர்பான அறக்கட்டளையை உறுதிப்படுத்தும் நோக்கோடு கொடையளித்தவரின் மகனான இராஜராஜ தேவன் இராஜேந்திர சிங்கப் பிச்சரை அந்நிலம் பற்றிய விரிவான தகவல்களைத் தந்து புதிய ஆவணம் அமைத்திடக் கேட்டபோது, அவரும் இசைந்து, தந்தையார் கொடையளித்த நிலத்திற்குப் புதிய ஆவணம் செய்தளித்தார். அந்தப் புதிய ஆவணம் கல்வெட்டில் 'புணை பிராமாணம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'புணை' என்பது பிணைப்படுதல் எனப் பொருள் தரும். கல்வெட்டுச் சொல்லகராதி 'புணை' என்றால் 'ஆள் ஜாமீன்' என்கிறது.

கொடையளிக்கப்பட்ட நிலம் 12591/4 குழி அளவினது. இந்தக் கொடை ஆணவத்தை எழுதியவர் ஊர்க் கரணத்தாரான தேவர்கள் தேவன் சர்வதேவன். இந்த ஆவணத்தின் வழி அருமொழி தேவ வாய்க்கால், திருச்சிற்றம்பல வதி எனும் பாசனக் கால்களும், ஊரின் கீழைப் புறத் தெருவும், விளை நிலம், கல்ல விளைகிற நிலம் எனும் நிலப் பாகுபாடுகளும் திருக்கோயில், அதன் முன்னிருந்த திருமுற்றம், சிவஅந்தணர்களின் குடியிருப்பு இவையும் வெளிச்சத்திற்கு வருகின்றன.

இக்கல்வெட்டுக் கண்டுபிடிப்பிற்குத் துணைநின்ற திரு. பால பத்மனாபன், திரு. சு. சீதாராமன், அவர்தம் துணைவர்கள் இவர்களுக்கு வரலாற்றின் நன்றி உரியது.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.