http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 53

இதழ் 53
[ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

இயன்றவரை இனிய தமிழில்
ஆரத் தழுவ நீயிருந்தால் அமைதியாகப் பெற்றிடுவேன்!
திரும்பிப் பார்க்கிறோம் - 25
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 7
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - இரண்டாம் பாகம்
Virtual Tour On Kundrandar Koil - 5
Silpis Corner (Series)
Silpi's Corner-06
அவர் வருவாரே!
கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்
இதழ் எண். 53 > கலையும் ஆய்வும்
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 7
நீலன்
விடை ஏறிய சடைமுடிநாதர் - 3


விமானம் (தொடர்ச்சி)

இரண்டாம் தளக் கூரையான கபோதமும் தளமுடிவைக் காட்டும் பூமிதேசமும் தற்சமயம் காணுமாறு இல்லை.இரண்டாம் தள வலபியின்மேல் சமீபத்திய கட்டுமானமாக சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு அதன் நடுவே சிறு சதுரமான திறப்பொன்று வைக்கப்பட்டுள்ளது. வேதிகையில் அமர்ந்த கிரீவம், சிகரம் மற்றும் தூபி இங்கு காணப்படவில்லை. அதனால் செடிகொடிகள் மரமாய் வளர்ந்து மண்டிக் கிடக்கின்றன. கிரீவத்தின் மேல் நாற்புறங்களிலும் இருக்கும் நந்திகளில் தற்போது வடகிழக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் கர்ணக் கூட்டிற்குமேல் இரண்டிரண்டாக நான்கு நந்திகள் உள்ளன.

முகமண்டபம் (வெளிப்புறம்)





17, 1/4 அடி நீளமும் 15, 3/4 அடி அகலமும் உள்ள முகமண்டபம் கபோத பந்தத் தாங்குதளம் பெற்று சதுர பாதம் கொண்ட நான்முக அரைத்தூண்கள் மேலெழும்பும் சுவரை அணைக்கின்றன. சதுர பாதம், கால் தாமரைக் கட்டு என அடைத்து உறுப்புக்களையும் பெற்ற இத்தூண்கள் நான்கும் முகமண்டபத்தின் பக்கச்சுவரை மூன்று பத்திகளாகப் பிரிக்கின்றன. நடுப்பத்தியில் கோட்டம் அமைந்துள்ளது. நான்முக அரைத்துண்கள் கொண்டு அணைக்கப்பெற்ற இக்கோட்டங்களில் தென்புறம் சிற்பமேதுமில்லை. வடபுறக் கோட்டத்தில் முருகன். கோட்டங்களின் மேலுள்ள மகரதோரணங்கள் பணி முடியாமல் அரைகுறையாய் நிற்கின்றன.

சுவரை அணைத்து நிற்கும் நான்முக அரைத்தூண்களில் வீரகண்டத்திலிருந்து எழும் போதிகைகள், பட்டையுடன் கூடிய குழைவுத்தரங்கம் பெற்றிருக்கின்றன.இவை உத்திரம் தாங்க, மேலே தாவும் யாளிகளும் கூரையின் நீட்சியாகக் கபோதமும் காட்டப்பட்டுள்ளன. மேலே தளமுடிவைக் காட்டும் பூமிதேசம். பூமிதேசத்தில் உள்ள யாளிகள் சில இடங்களில் எதிர் எதிர் முகமாய் உள்ளன.

கருவரை தென்கிழக்கு மற்றும் வடகிழக்குக் கர்ணப்பத்திகளின் தூண்களில் உள்ள பாலியும் பலகையும் முகமண்டபத் தென்மேற்கு மற்றும் வடமேற்குத் தூண்களில் உள்ள பாலியும் பலகையும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. பல கோயில்களில் கருவரையும் முகமண்டபமும் நேரடியாக இணைக்கப்படாமல் ஒடுக்கம் கொண்டு இணைக்கப்படுவது வழக்கம். ஆனால் இக்கோயிலில் முகமண்டபம் கருவறையுடன் நேரடியாகவே இணைக்கப்பட்டுள்ளது.

முகமண்டபத்தின் கூரை நீட்சியாகக் காட்டப்பட்டுள்ள கபோதத்தில் கீர்த்தி முகம் கொண்ட நாசிகைகள் நான்கு உள்ளன. முகமண்டபத்தின் தென்மேற்குப் பகுதியில் கபோதம் இடிந்துள்ளதால் இங்கிருக்க வேண்டிய நாசிகை தற்சமயம் காணுமாறு இல்லை. இக்கபோதங்களில் மத்தியிலும் ஓரங்களிலும் கொடிக்கருக்குகள் காட்டப்பட்டுள்ளன. கபோதங்களின் கீழ்விளிம்புகளில் சந்திர மண்டலம் உள்ளது. முகமண்டபத்தின் தென்புறத்தில் அடித்தளத்தில் அமைந்துள்ள கபோதத்திலும் உருள்குமுதத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. முகமண்டபப் பக்கச்சுவர்களிலும் கருவறை பக்கச்சுவர்களிலும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.





முகமண்டபம் மற்றும் கருவறை அடித்தளத்தில் அமைந்த கண்டபாதங்களிலும் வேதிக்கண்டங்களிலும் சிற்றுருவச் சிற்பங்கள் சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டுமாறு சிறப்புற அமைந்துள்ளன. இவற்றில் இராமாயணக் காட்சிகளும், சிவபுராணக் காட்சிகளும், நாடகக் காட்சிகளும் ஆடல் காட்சிகளும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல சிற்றுருவச் சிற்பங்கள் புரப்பார் எவருமின்றி சிதைந்து காணப்படுகின்றன.

முகமண்டபத்தின் கிழக்குச்சுவரை சதுர பாதம் கொண்ட நான்முக அரைத்தூண்கள் அணைத்து இச்சுவரை மூன்று பத்திகளாகப் பிரிக்கின்றன. நடுப்பத்தியில் முகமண்டபத்தின் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாயிலின் நிலைப்படியின் வலப்புறத்தே தெள்ளாற்றெறிந்த மூன்றாம் நந்திவர்மனின் கல்வெட்டும் இடப்புறத்தே முதற்பராந்தகனின் கல்வெட்டும் காணப்படுகின்றன. இவ்வாயிலை ஒட்டிய இரு பத்திகளிலும் அணைவுத் தூண்களின்றி அமைக்கப்பட்ட கோட்டங்கள் வெறுமையாய் உள்ளன. இவ்விரு கோட்டங்களிலும் துவாரபாலர்கள் இருந்திருக்கவேண்டும்.

கூரையின் நீட்சியாகக் காட்டப்பட்டுள்ள கபோதத்தில் நான்கு நாசிகைகள் உள்ளன.

முகமண்டபம் (உட்புறம்)





முகமண்டபத்தினுள் அமைந்துள்ள நான்கு இந்திரகாந்தத் தூண்களும் மேற்கூரை தாங்குகின்றன. முகமண்டபத்தின் மேற்குப்புறத்தே கருவரை நுழைவாயில் அமைந்துள்ளது. முகமண்டபத்தின் மேற்குப்புறச்சுவரை சதுர பாதம் கொண்ட விஷ்ணுகாந்த அரைத்தூண்கள் இரண்டு தாங்குகின்றன. வட - தென் சுவர்களைப் பக்கத்திற்கு இரண்டாக நான்கு அரைத்தூண்கள் மேலே வட தெற்காக குறுக்கில் அமைந்த உத்திரத்தைத் தாங்குகின்றன. இத்தூண்களின் உறுப்புகள் மறு கட்டமைப்பின்போது விடப்பட்டு தற்போது பலகை மட்டும் காணுமாறு உள்ளது.

உத்திரங்கள் மேற்கூரையை மூன்று பத்திகளாகப் பிரிக்கின்றன. மூன்று பத்திகளின் நாற்புறங்களிலும் உள்ள வலபியில் பூதகணங்கள். இப்பூதகணங்கள் இசைக்கருவிகளை வாசிக்கும் நிலையிலும் ஆடற்கோலத்திலும் அமர்த்தப்பட்டுள்ளன. முகமண்டபத்திற்குக் கீழே தரையில் வைக்கோல் சிதறிக்கிடப்பதைக் காணும்போது அண்மைக்காலத்தில் இக்கோயில் மாட்டுக்கொட்டகையாகப் பயன்படுத்தப்பட்டிருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவமன்னரின் நாயகி கண்டன் மாறன்பாவை என்பவர் பல தானங்களும் பின் வந்த முதற்பராந்தகசோழரின் பட்டமகிஷி அருள்மொழிநங்கை என்பவரால் தானமும் பெற்று ஒளிமிகுந்து காணப்பட்ட இக்கோயில் இன்று வழிதெரியாமல் காண்போர் விழிகளைக் குளமாக்கிக் கொண்டுள்ளது.

கருவரை (உட்புறம்)





முகமண்டபத்தின் மேற்குப்புறத்திலுள்ள நுழைவாயிலின் வழியாக கருவறையினுள் நுழைந்தால் காணும் காட்சிகளைக் கண்டு மனம் பதறும். தரையில் பாவப்பட்ட கற்கள் சிதறுண்டு ஆங்காங்கே பள்ளங்கள். பாவங்கள் போக்கும் பரமசிவனாரின் கருவறையில் பாம்புப் புற்றுகள் மட்டும்தான் இல்லை. கருணையே வடிவான கடவுளின் கருவறையில் மக்களின் கருணையற்ற உள்ளத்தினால் கடவுள் வாசம் செய்யவில்லை. கடவுளின் ஆபரணங்களாக விளங்கும் இரு கருநாகங்கள் இங்கே வந்து போவதாகச் சொல்கிறார்கள். நல்ல வேளையாக நாம் சென்றிருக்கும்போது நாக தரிசனம் நடைபெறவில்லை.

கிரீவம் சிகரம் கலசம் இல்லாமையால் மேலே வானம்தான் கண்ணுக்குத் தெரிகிறது. கருவறையின் மேற்தளத்திலிருந்த கந்தர்வர் சிற்பமொன்று கருவறையில் வீழ்ந்து கிடக்கிறது.

பெருமண்டபம்





பெருமண்டபம், கிழக்கே சமீபத்தில் கட்டப்பட்ட செங்கல் படிகள் கொண்டு விமானத் தாங்குதளம் போல் கபோதபந்தத் தாங்குதளமாய் அமைந்துள்ளது. மேலெழும்பும் தூண்கள் மற்றும் சுவர்கள் இல்லாமல் இப்பெருமண்டபம் தாங்குதளத்துடன் மட்டும் காட்சியளிக்கிறது. சில இடங்களில் வேதிகைத் தொகுதி தென்படுகிறது. காலவெள்ளத்தில் கரைந்துபோன தூண்களும் சுவரும் தன் மீது கட்டுமானமாய் இருந்த கற்களைகூடக் காப்பாற்றிக் கரைசேர்க்க முடியவில்லை. இதனால் பெருமண்டபத்தின் கட்டுமானத்தைப் பற்றி அறியக்கூடவில்லை.

பெருமண்டபத்தின் தாங்குதளத்தில் காணப்படும் கபோதங்களின் திருப்புமுனைகளில் கொடிக்கருக்குகள் காணப்படுகின்றன. பெருமண்டபத்தின் தென்கிழக்கு மூலையிலொன்றும் தென்புறத்தில் ஒன்றுமாக இரண்டு கண்டபாதச் சிற்பங்கள். இவை இரண்டுமே உருக்குலைந்துள்ளன.

(தொடரும்...)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.