![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 68
![]() இதழ் 68 [ பிப்ரவரி 27 - எஸ். ராஜம் சிறப்பிதழ் ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மயிலை நடுத்தெருவில் நடுநாயகமாய் வீற்றிருந்த எஸ். ராஜம் அவர்கள் பற்றி நான் அவ்வளவாக அறிந்தவன் இல்லை. கோடிஸ்வர ஐயருடைய படைப்புகளை பிரபலப்படுத்தி புத்தக வடிவில் வெளியிட்டு மகிழ்ந்தவர் என்பதும், அவருடைய தூரிகை தீட்டிய சங்கீத மும்மூர்த்திகளின் வாக்கேயக்காரர்களுடைய ஓவியங்கள் இல்லாத சபா அமைப்புகளே இல்லை என்பதும், எழுபத்திரண்டு மேள கர்த்தா ராகங்களுக்கும் வடிவம் கொடுத்து இவர் தீட்டிய ஓவியங்கள் புகழ் பெற்ற எல் அண்ட் டி நிறுவன காலெண்டரில் இடம்பெற்றது என்பதும் நண்பர் லலித ராமின் மூலமாக எஸ். ராஜம் பற்றி நானறிந்த சங்கதிகள்.
எப்படியும் ராஜம் அவர்களை ஆவணப்படுத்தி எதிர்கால தலைமுறைக்கு அவர் பற்றி தகவல்களை கொடுப்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். ![]() சங்கீத வித்வான், பாடகர், ஓவியர், சிறந்த ஒளிப்படக் கலைஞர், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்று அவரது பன்முக ஆளுமைப் பற்றி கேள்விப்படும்போதே அவர் பற்றிய பிம்பம் என் மனதில் உருவானது. நானாக சில கற்பனைகள் செய்து, என் எண்ணத் தூரிகை மூலம் மனதுக்குள் வரைந்து வைத்த ராஜம் அவர்களின் ஓவியத்திற்கும், நான் அவரை நேரில் பார்த்தபோது பார்த்த தோற்றத்திற்கும் அவ்வளவாக ஒன்றும் வேறுபாடு இல்லை. செயல்பாடுகளைத் தவிர. 91 வயது இளைஞர் என்று அவரை, சற்றும் தாமதிக்காமல் கூறி விடலாம். கலைஞர்கள் என்றாலே ஒரு சிறு கர்வம் இருக்கும், யாருக்கும் கட்டுப்படாத பேச்சாற்றல் இருக்கும். ஒரு துறையில் கோலோச்சிய கலைஞர்களே அப்படிஎன்றால், பல துறை மன்னர் ராஜம் இன்னும் விரைப்பாகத்தான் இருப்பார் என்று என் மனதுக்குள் நான் நினைத்து வைத்திருந்தேன். ஆனால் அவரை நேரில் பார்த்தபோது அந்த எண்ணங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனித்துளிபோல் விலகிப் போனது. மிகக் கனிவானப் பார்வை. நிதானப் பேச்சு, இன்னும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும் கலையார்வம், தூரிகையோடு, தூரிகையாக கலந்துப் போன கைவிரல்கள் என முதல் பார்வையிலேயே, மனிதர் என்னை திக்கு முக்காட செய்துவிட்டார். அறுபது வயதை தாண்டிவிட்டாலே, பேசக் கூட மறுக்கும் நிறையக் கலைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். காரணம் அவர்களின் இயலாமை. ஆனால் ராஜம் அவர்கள் 91 வயதில் கூட, மிக ஆர்வமாக பேசுவதற்கு எத்தனித்தபோது என்னை மட்டுமல்ல. சுற்றியிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தன்னுடைய பால்ய கால அனுபவங்கள், சங்கீதக் கலைஞர்கள், தன்னுடைய ஓவியம், நடிப்பு, ஒளிப்படங்கள் என எதைப் பற்றி பேசினாலும், எந்த வித தயக்கமும் இன்றி, கேட்டு முடிக்கும் அடுத்த கணம் பேசத் தொடங்கும் அவரது நினைவாற்றல் எல்லாம், எங்களுக்கு எங்களைப் பற்றி சுய எள்ளல் கொள்ள செய்தது. இருபைத்தைந்து வயதில், எண்ணத்தில், பேச்சில் இல்லாத ஒழுங்கமைப்பு, 91 வயதில் ஒரு மனிதருக்கு இருக்கிறது என்றால் அவர் சாதாரணன் அல்ல. அசாதாரணன். கேமராவில் பதிவு செய்யும்போது, ஒளிப்பதிவாளருக்கே தெரியாத ஒளியமைப்பு (lightings) பற்றிய பல நுணுக்கங்களை அவர் சொன்னபோது உடன் வந்த நண்பர், ஒளிப்பதிவாளர் என்னிடம் கேட்ட கேள்வி, "என்ன மாதிரியான மனுசங்க இவர்?". மிக சிறிய வயதில் இருப்பவர்கள் கூட தாங்க முடியாத சூட்டோடு இருக்கும் மெர்குரி வெளிச்சத்தில், படப்பதிவு நடந்தபோது அந்த சூட்டைக் கூட பொருட்படுத்தாமல் படப்பதிவு முடியும் வரை நன்றாக ஒத்துழைத்தார் ராஜம். பின்னர், பேச்சு அவருடைய ஓவியங்கள் பற்றி பாதை மாறியதும், நாங்கள் கண்ட சில ஓவியங்கள், இன்றைய நவீன யுகத்தில் கணிப்பொறி யுகத்தில் கூட செய்து முடிக்க முடியாதவை. அவ்வளவு நேர்த்தி. ஸ்ரீமுத்துசாமி தீட்சிதருடைய பூலோக பஞ்சலிங்க கிருதியின் முழு சாராம்சத்தையும் உள்ளடக்கிய ஓவியத்தை அவர் வரைந்திருக்கும் அழகு இன்னும் கண்முன் நிற்கின்றது. 91 வயதில் தூரிகைப் பிடித்து ராஜம் அவர்கள் ஓவியம் வரைந்துக் கொண்டிருந்தபோது படப்பதிவு செய்துக் கொண்டிருந்த 28 வயது நண்பரின் கைகள் நடுங்கியது. அன்றைய நாள் முழுவதும், ஒரு மகானுடன் வாழ்ந்ததுப் போன்ற மன நிறைவு. இந்த நூற்றாண்டின் சிறந்த ஒரு கலைஞன் கூட உரையாடியதால் எனக்கு கூட ஒரு சிறு கர்வம் ஏற்பட்டது. படப்பதிவு முடிந்ததும், மனதில் எழுந்த கேள்வி, ஏன் இங்கு கலைஞர்கள் வாழும்போதே அவர்களுக்கான அங்கிகாரம் கிடைப்பதில்லை. மிக வல்லமைப் பெற்ற சில கலைஞர்கள் கூட தங்களின் அங்கீகாரத்திற்கு ஏங்கிய அவலம் மிக்க தேசம் இது. ஒரு சில கலைஞர்களுக்கு அவர்கள் இறந்த பிறகாவது ஓர் அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. ஆனால் ராஜம் அவர்கள் இறந்த போது எத்தனை ஊடகங்கள் அவர் பற்றி செய்தி வெளியிட்டது? ஏன் இங்கே கலைஞர்கள் இப்படி ஒதுக்கப்படுகின்றனர். இதுப் போன்ற விடை தெரியாத இன்னும் பல இருக்கின்றன. கோடீஸ்வர ஐயருக்கென்று ஒர் தினம் கொண்டாடி, நாள் முழுவதும் அகண்டமாக அவர் பாடல்களைப் பாட வைக்க வேண்டும் என்பதே அவரின் கடைசி ஆசை என்பதை நண்பர் ராமின் மூலம் அறிய நேர்ந்தது. அவரின் இந்த ஆசையாவது நிறைவேற அனைவரும் பிரார்த்திப்போம். உடலும் மனமும், காற்றோடு கரைந்தாலும், ராஜம் தன் கலை மூலம் இந்த மண்ணில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |