http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 71

இதழ் 71
[ மே 15 - ஜூன் 14, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

சமச்சீர் வரலாறு
திருக்கோயில் ஆடலரங்குகள்
சங்க இலக்கியத்தில் விடுகதை - 2
உறந்தை சோழர் அறம் போல! என் காதலே!
சங்கச்சாரல் - 20
சங்கச்சாரல் - 19
இதழ் எண். 71 > இலக்கியச் சுவை
உறந்தை சோழர் அறம் போல! என் காதலே!
ரிஷியா

சோழ மன்னர்களை எண்ணும்போது வியப்பும் மலைப்பும் ஏற்படுவது இயல்பே. இந்தச் சூர்யவம்சத்து மன்னர்களைப் பற்றிய கதைகளைச் சிறுவயது முதலே கேட்டுள்ளோம். புறாவுக்காகத் தன் சதையை அரிந்து கொடுத்த சிபிச்சக்ரவர்த்தி, பசுவிற்காகத் தன் மகனான இளவரசனைத் தேர்க்காலில் இடறிய மனுநீதிச்சோழன் - அடுக்கிக்கொண்டே போகலாம். அறம், மறம், தியாகம், சோழர்களை மிஞ்ச யார் உளர்?

அதற்கு இலக்கியச் சான்று ஒன்று கிடைத்தது. நற்றிணையில், பரத்தை தான் கூடிய தலைவனைப் புகழும் ஒரு பாடல் வருகிறது. அவள் அன்புதான் எத்தகையது? சோழர்தம் அறத்தின் மாட்சிமைதனை உவமையாகக் கூறுகிறாள் தான் கொண்ட காதலுக்கு. அப்பரத்தை மொழி வாயிலாக அவர்களுள்ளும் அன்பினால் சிறந்தவர்கள் உள்ளனர், சோழர்கள் அறநெறி தவறாதவர்கள் எனப் புலப்படுகின்றது. இனிப் பாடலைக் காண்போம்.

நற்றிணை : 400
திணை : மருதம்
துறை : பரத்தை தலைவனைப் புகழ்ந்தது.
ஆசிரியர் : ஆலங்குடி வங்கனார்

வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர
நினின்று அமைகுவென்ஆயின் இவண் நின்று
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் கெட அறியாதாங்கு சிறந்த
கேண்மையடு அளைஇ நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே

விளக்கம் :-


என் நெஞ்சத்தானே! வாழையின் மெல்லிய காற்றின் நுனியில் நாறும் பூவை நிலத்தினின்று ஓங்கி வளர்ந்துற்று அசையச் செய்கின்ற நெற்கதிர் விளையாநின்ற வயலிலே கண்ணுக்கு இனிய சேற்றில், கதிர் அறுக்கும் மள்ளர் அறுத்துப் போட்ட அரிச்சூட்டின் பக்கத்தில் பெரிய கரிய பிடரியையுடைய வாளைமீன் பிறழாநிற்கும் ஊரனே!

நீயின்றி யான் பொருந்தியிருப்பேனாயின், இங்கு நின்று இனிமையைத் தராத நோக்கத்துடனே என்ன பிழைப்புண்டு? யாதுமில்லை! மறம் சிறந்த சோழர்தம் உறையூர்க்கண் அவைக்களத்து அறமானது கெடல் அறியாது, நின்று நிலைப் பெற்றாற்போல நீதான் சிறந்த நட்புடனே அளாவி என் நெஞ்சில் நின்று நீங்கும் தன்மை இல்லையாய் இருந்தாய். அதனால், நீ உளனாயிருப்பின் யானும் உளனாவேன் என்று கூறுகிறாள் மருத நிலத்துப் பரத்தை.

நான் படித்த மட்டில் சோழரின் உறையூர் அவைக்களத்து அறம், நீதி வழுவாத திறனாட்சி புகழப்படுவதும் உவமையாய் அமைவதும் இப்பாடல் வழியே.

நேர்மையான அன்பும், மரியாதையும், நற்பெயரும் தலைவன் தலைவிக்கு மட்டுந்தானா விதிமுறை? பரத்தையரும் பெண்கள்தானே! பொருள் பறிக்கும் தீயவர்களாகவே அவர்கள் சித்தரிக்கப்படுவது ஏன்? அவர்கள் மத்தியிலும் மேன்மையானவர்கள் இல்லையோ? அரசவை நேர்மைத் திறத்தைத் தன் காதலோடு ஒப்பிடும் ஒரு நற்காரிகையைக் கண்டேன் இப்பாடல் வழியே. பரத்தை என்றாலும் அவள் காதலும் உயர்வானதே சோழரின் அறத்தைப் போல.

இனிய தமிழச்சிகள் ஹாரி பாட்டர் கதைகளைத் தமிழ்க் குழந்தைகளுக்குச் சொல்வதுபோல் தமிழ் மன்னர்களின் கதைகளையும் சொல்லி வளர்க்கலாமே.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.