![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 90
![]() இதழ் 90 [ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2012 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் தஞ்சைத் தரணியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள திருமங்கலம் விக்கிரம சோழீசுவரர் திருக்கோயில்! மயிலாடுதுறை வட்டத்தில், குத்தாலம் அருகே திருமங்கலம் அமைந்துள்ளது. இவ்வூரின் அருகாமையில் புகழ்பெற்ற திருமணஞ்சேரி (எதிர்கொள்பாடி), திருவேள்விக்குடி, முருகமங்கலம் போன்ற கோயில்கள் அமைந்துள்ளன. திருமங்கலத்தில் உள்ள கோயில் பூலோகநாதசுவாமி திருக்கோயில் என இன்று அழைக்கப்படுகிறது. கல்வெட்டுகளில் 'விக்கிரம சோழீசுவரம்' எனக் குறிக்கப்படுகிறது. ![]() இக்கோயிலின் தெற்குச்சுவரில் காணப்படும் திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மைக் கொண்டான் என அரசர் பெயரைக் குறிப்பிடும் கல்வெட்டில், கணிதசக்கரவர்த்தி என்பவர் இராஜேந்திர சோழீசுவரம் உடையார் கோயிலுக்கு திருமதில், திருவாசல் கட்டுவதற்காக நிலம் தானமாக அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. மேலும் இதே கல்வெட்டில் 'விருதராஜ பயங்கர வளநாட்டில் ராஜராஜன் திருமங்கலத்தில் அமைந்துள்ள விக்கிரம சோழீசுவரம் உடையார் கோயிலுக்கும்' நிலம் தானம் அளிக்கப்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டில் 'ராஜராஜன் திருமங்கலம்' என்று இவ்வூர் பெயரிட்டு அழைக்கப்படுவதைக் காண்கிறோம். திருமங்கலத்திற்கு அருகில் உள்ள திருமணஞ்சேரி கோயிலுக்கு முன்பு காணப்படும் ஒரு கல்வெட்டில் இராஜராஜன் திருமங்கலம் விக்கிரமசோழீசுவரர் திருக்கோயிலுக்கு நிலம் அளித்த செய்தி காணப்படுகிறது. திருமங்கலம் கோயிலின் வடக்குச் சுவரில் காணப்படும் வீரராஜேந்திரன் (மூன்றாம் குலோத்துங்கசோழன்) 6 ஆம் ஆண்டு கல்வெட்டில் 'விக்கிரமசோழபேரேரி' என்று பெயர் கொண்ட ஏரி வெள்ளத்தினால் உடைந்து போக நிலங்கள் அழிந்தன. மீண்டும் பல கோயில்களுக்கு நிலங்களை அளித்த செய்தி கூறப்படுகின்றது. இங்கு ஏரி 'விக்கிரமசோழன்' எனப் பெயரிட்டு அழைக்கப்படுவது சிறப்பானது. இக்கோயில் விக்கிரமசோழன் காலத்தில் (கி.பி. 1118 - 1135) கட்டப்பெற்றிருக்கலாம் எனக் கருதமுடிகிறது. இக்கோயிலின் கிழக்குச் சுவரில் காணப்படும் மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டில், 'விருதராஜ பயங்கர வளநாட்டில், குறுக்கை நாட்டில் உள்ள ராஜராஜன் திருமங்கலத்தில் அமைந்துள்ள விக்கிரம சோழீசுவரம் உடையார் கோயிலில் காச்யபன் திருநட்டமாடி அவிமுத்தீசுவரம் உடையான் ஆன ஆனந்த நாயக பட்டன் என்பவர் வழிபாடு செய்ய நிலம் தானம் அளித்த செய்தி காணப்படுகிறது. எனவே, இக்கோயிலில் நாள்தோறும் சிறப்பான வழிபாடுகள் உரிய முறையில் நடைபெற்றன என்பதை அறிகிறோம். மேலும் திருமங்கலம் கோயிலின் தூண்களில் நடனமாடும் மகளிர் சிற்பங்களையும் காணலாம். முன் மண்டபத் தூண்களில் இரு பெண்கள் கவரியை வைத்துக் கொண்டு நடனமாடும் நிலையில் இரு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அச்சிற்பங்களுக்கு மேற்புறம் அவர்களின் பெயர்கள் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுக் காணப்படுவது சிறப்பு. ![]() இடப்புறம் காணப்படும் நடனமங்கையின் பெயர் 'போக மத்தளி ஆன புவன நாயகி மாணிக்கம்'. ![]() வலப்புறம் காணப்படும் நடனமங்கையின் பெயர் 'யெற்றி ஆன வீரப்பெருமாள் மாணிக்கம்'. ![]() மேலும் அருகே ஒரு தூணில் மத்தளம் வாசிக்கும் நிலையில் காணப்படும் சிற்பம் காணப்படுகிறது. இச்சிற்பத்திற்கு மேலே 'மத்தளப் பெருமாள்' என்ற கல்வெட்டுப் பொறிப்பு காணப்படுகிறது. இவர்கள் இக்கோயில் இறைப்பணி செய்து புகழ் பெற்றவர்களாக இருக்கவேண்டும். ![]() ![]() ![]() விக்கிரமசோழனாலும், மூன்றாம் குலோத்துங்க சோழனாலும் போற்றப்பட்ட இக்கோயிலின் தற்போதைய நிலை மிகவும் வருத்தம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. கோயில் விமானம், மண்டபம், திருச்சுற்று முழுவதும் மரம், செடிகள் முளைத்து அழியும் நிலையில் உள்ளது. எனவே, இக்கோயிலுக்கு விரைவில் திருப்பணி மேற்கொண்டு வழிபாடு சிறக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். ![]() ![]() (நிழற்படங்கள் உதவி : கோ.முத்துசாமி) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |