http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 92

இதழ் 92
[ பிப்ரவரி 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

திரும்பிப்பார்க்கிறோம் - 39
Malayakkovil
தேடலில் தெறித்தவை - 1
சேய்ஞலூர்
Chola Ramayana 03
நெய்யுடை அடிசில்
இதழ் எண். 92 > கலையும் ஆய்வும்
கும்பகோணம் சென்னைச் சாலையில் ஏறத்தாழ 17 கி. மீ. தொலைவில் உள்ள சேய்ஞலூர் சண்டேசுவரரின் பிறப்புத் தலமாகக் குறிக்கப்பட்டுள்ளது.1 சம்பந்தரின் பாடல் பெற்ற2 இவ்வூரிலுள்ள மாடக்கோயில் இறைவன் சக்திகிரீசுவரர் என்று அழைக்கப்படுகிறார். துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம் இவற்றின் மீதெழும் இரட்டை நான்முகத் தூண்கள் தெற்கிலும் வடக்கிலும் அமைய, அவற்றின் மேல் கூரையுறுப்புகளும் கபோதமும் என அமைந்துள்ளது கோபுரமற்ற இக்கோயிலின் நுழைவாயில்.3 செங்கல் கட்டுமானமான அதன் மேல் எழும் பெருஞ்சாலையில் சிவபெருமானும் உமையும் நந்தியின் மீது அமர்ந்துள்ளனர். வலச்சாலையில் மூஞ்சுறு மீது பிள்ளையாரும் இடச்சாலையில் மயில்மீது முருகனும் சுகாசனத்தில் உள்ளனர். முருகனின் இருபுறத்தும் தேவியர். ஓரங்களில் கர்ணகூடங்கள் இடம்பெற்றுள்ளன. வாயிலை அடுத்து நீளும் பாதை கோயில் வளாகத்தில் முடிகிறது.

வளாகத்தின் நடுப்பகுதியில் ஒரு மண்டபமும் அதை அடுத்து வெற்றுத்தளமும் வெற்றுத்தளத்தின் மீது இறைவன் விமானம், முகமண்டபம், சுற்றுவெளி, அம்மன் விமானம், ஆடவல்லான் விமானம் இவையும் அமைந்துள்ளன. வளாகத்தின் வடகிழக்கு மூலையில் செங்கல் கட்டுமானமாக உள்ள ஒருதள நாகர விமானத்தில் இலிங்கத்திருமேனி இடம்பெற்றுள்ளது.

முன்மண்டபம்

செங்கல் கட்டுமானமாக உள்ள இம்மண்டபத்தின் வாயிலுக்கு மேலே கயிலாய மலையும் அதில் அமர்ந்துள்ளவர்களாய் சிவபெருமான், உமை, பிள்ளையார் இவர்களும் நிற்பவராய் முருகனும் சுதைவடிவங்களாகக் காட்டப்பட்டுள்ளனர். மண்டபத்துள், வடபுறத்தே ஒருதள வேசர விமானத்தில் சுப்பிர மணியர் இடம்பெற்றுள்ளார். மண்டபத்தின் கிழக்கு வாயிலில் உயரமான இரண்டடுக்கு மேடையில் நந்தி அமர்ந்துள்ளது. மண்டபத்தின் மேற்கில் வெற்றுத்தளமும் அதன் மேல் சுற்றுவெளியின் கிழக்கு விரிவும் காட்சிதருகின்றன.

வெற்றுத்தளம்

2. 83 மீ. உயரமுள்ள வெற்றுத்தளம் உபானமும் கருங்கல் சுவருமாய் நாற்புறத்தும் விரிந்துள்ளது. மேற்கில் வெற்றுத்தளத்தை ஒட்டி அமைந்துள்ள மண்டபத் தளியில் பிள்ளையார் இடம்பெற்றுள்ளார். முன்மண்டபத்திலிருந்து மேலேறும் பதினொரு படிகள் சுற்றுவெளியின் கிழக்கு விரிவில் முடிகின்றன. அவ்விரிவின் வாயில் இருபுறத்தும் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர்த்துண்டுகள் கூரையுறுப்புகள் பெற்றுச் சற்றுப் பிதுக்கமாக அமைந்துள்ளது.


வெற்றுத்தளப் படிகள்



வெற்றுத்தளத்தின் மேல் மாடக்கோயில்


மேற்சுற்று

வாயில் வழி வளரும் மேற்சுற்றின் வெளிச்சுவரை நாற்புறத்தும் நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. மேலே வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள். செங்கல் கட்டுமானமாக உள்ள இச்சுற்றின் கிழக்கு விரிவுக் கூரையை இருசதுர, நீள்கட்டு உடல் பெற்ற தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகைகளின் உதவியுடன் கூரையுறுப்புகள் கொண்டு தாங்குகின்றன. தூண்களின் கீழ்ச்சதுரங்களில் அடியவர் சிற்பங்களும் மான், குரங்கு போன்ற விலங்குகளின் சிற்பங்களும் பிள்ளையார், முருகன், சண்டேசுவரர் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.

இலலிதாசனத்தில் உள்ள தூண் பிள்ளையாரின் பின்கைகளில் மழுவும் பாசமும் உள்ளன. முன்கைகளில் தந்தமும் மோதகமும் கொண்டுள்ள அவரது தலையைக் கரண்டமகுடம் அணிசெய்கிறது. இடம்புரியாக உள்ள துளைக்கை இடக்கை மோதகத்தைச் சுவைக்க, மார்பில் முப்புரிநூல். இவ்விரிவின் வடபுறத்தே தெற்குப் பார்வையாய் சகிதேவியின் ஒருதள வேசர விமானமும் முகமண்டபமும் அமைந்துள்ளன. விரிவின் வடகிழக்கில் இரண்டு பைரவர்கள், சூரியன், சந்திரன் சிற்பங்கள் உள்ளன.

சூரியனும் சந்திரனும் ஒன்று போலக் கரண்டமகுடம், மகர குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், பட்டாடை அணிந்து இருகைகளிலும் தாமரைகள் ஏந்தியுள்ளனர். ஒரு சிற்பத்தின் வலக்கை மலர் சிதைந்துள்ளது. ஒரு பைரவரின் பின்னுள்ள நாய் வலப்புறம் தலையிருக்குமாறு நிற்க, மற்றொரு பைரவரின் நாய் தலையை இடப்புறம் திருப்பியுள்ளது. இரண்டு பைரவர்களுமே பின்கைகளில் உடுக்கை, பாசம் கொண்டு, முன்கைகளில் முத்தலைஈட்டி, தலையோடு கொண்டுள்ளனர். இருவருமே சுடர்முடியும் கோரைப்பற்களும் பெற்றுள்ளனர். தாமரைத் தளத்தின்மீது நிற்கும் பைரவர், தலையின் இடப்புறம் பிறை சூடியுள்ளார். அவரது வலச்செவியில் மகரகுண்டலம்; இடச்செவியில் பனையோலைக் குண்டலம். மற்றொரு பைரவரின் செவிகளில் பனையோலைக் குண்டலங்களே உள்ளன.

அம்மன் விமானம்

செங்கல் கட்டுமானமாய் விளங்கும் இவ்வேசர விமானம் கபோதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெறக் கருவறையில் சகிதேவி சடைமகுடம், பட்டாடை இவற்றுடன் பின்கைகளில் அக்கமாலை, தாமரை ஏந்தி, முன்கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண்டுள்ளார். அம்மன் திருமுன்னுக்கு முன்னுள்ள தூண்களில் புலிக்கால் முனிவரும் பதஞ்சலியும் சிற்பங்களாகியுள்ளனர்.

விரிவின் மேற்கில் பெருமண்டபம், முகமண்டபம், இறைவன் விமானம் இவை அமைந்துள்ளன. பெருமண்டபத்திற்கு வடக்கிலும் தெற்கிலும் உள்ள வாயில்கள் மேற்சுற்றுக்கு வழி தருகின்றன.

பெருமண்டபம்

உபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ள பெருமண்டப வாயிலின் இருபுறச் சுவர்களில் ஓவியங்களாகக் காவலர்களும் நால்வர் பெருமக்களும் காட்டப்பட்டுள்ளனர். மண்டபக் கூரையை இருசதுர, நீள்கட்டு உடல்பெற்ற தூண்கள் தாங்குகின்றன. கூரையில் பிற்கால ஓவியம் உள்ளது. மண்டபத்தின் தெற்குச் சுவரை ஒட்டி நால்வர் சிற்பங்களும் வடபுறம் ஆடவல்லானுக்கான ஒருதள நாகர விமானமும் இடம்பெற்றுள்ளன. விமானத்தின் வாயில் சாலைப் புறந்தள்ளலாகக் கபோதத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள்ளே மேடையில் ஆடவல்லானும் உமையும் இடம்பெற்றுள்ளனர்.

ஆடவல்லான்

வலக்காலை முயலகன் மீது இருத்தி, இடக்காலை வலப்புறம் வீசி ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் காட்சிதரும் ஆடவல்லானின் பின்கைகளில் உடுக்கையும் தீச்சுடரும் உள்ளன. முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை வேழக்கையாய் நீண்டுள்ளது. கொக்கிறகு, ஊமத்தம்பூ, நெருஞ்சிப்பூ விளங்கும் தலையில் வலப்புறம் பிறை. சடை ஒன்றில் ஒன்றியவராய் கங்கை. வலச்செவி வெறுஞ்செவியாக, இடச்செவியில் பனையோலைக் குண்டலம். சவடி, தோள், கை வளைகள், சிற்றாடை, முறுக்கி முடிச்சிடப்பெற்ற உதரபந்தம், முப்புரிநூலாய் அணியப்பெற்ற மடித்த துண்டு இவற்றுடன் காட்சிதரும் இறைவனின் இடப்புறம் நிற்கும் இறைவியின் வலக்கை கடகத்தில் அமைய, இடக்கை நெகிழ்ந்துள்ளது. சடைமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, ஸ்வர்ணவைகாக்ஷம், ஸ்கந்தமாலை, குறங்குசெறி, தோள்வளைகள், அடுக்கிய கைவளைகள் கொண்டு சிரித்த முகத்துடன் காட்சிதரும் இறைவியின் இடையில் பட்டாடை.

இடைநாழிகை, கருவறை

பெருமண்டபத்தை அடுத்து, வடக்கிலும் தெற்கிலும் வாயில் பெற்றுள்ள இடைநாழிகையில் நந்தியும் பலித்தளமும் இடம்பெற்றுள்ளன. கூரையில் பிற்கால ஓவியம். எளிமையான வாயில் பெற்றுள்ள முகமண்டபம் வெறுமையாக உள்ளது. கருவறையில் சக்திகிரீசுவரர் வேசர ஆவுடையாரும் உருளைப் பாணமும் கொண்டு இலிங்கத்திருமேனியராய் எழுந்தருளியுள்ளார்.

சுற்றுவெளி

சுற்றுவெளியின் தெற்கிலும் வடக்கிலும் அமைந்துள்ள உயரக் குறைவான மேடை வெறுமையாக உள்ளது. மேற்கில் இம்மேடையின் மீதுள்ள மாளிகையின் கூரையை இருசதுர, நீள்கட்டு உடல்பெற்ற தூண்கள் தாங்குகின்றன. மாளிகையின் அறைகள் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத் தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ளன. முதல் அறையில் மூஞ்சுறுவின் மேல் நிற்கும் பிள்ளையாரும் மூன்றாம் அறையில் காசிவிசுவநாதர், விசாலாட்சி இவர்களும் அடுத்துள்ள ஒருதளத் திராவிட விமானத்தில் ஆறுமுகனும் வடபுற ஒருதளத் திராவிட விமானத்தில் யானைத்திருமகளும் இடம்பெற்றுள்ளனர்.

பூப்பதக்க நெற்றிப்பட்டம் சூழ்க் கரண்டமகுடம், சரப்பளி, அலங்கார உதரபந்தம், குறங்குசெறி, இடைக்கட்டுடனான பட்டாடை அணிந்து மூஞ்சுறுவின் மேல் நிற்கும் பிள்ளையார் பின்கைகளில் அங்குசம், பாசம் ஏந்தி, முன்கைகளில் தந்தம், மோதகம் கொண்டுள்ளார். அவரது இடம்புரித் துளைக்கை மோதகத்தைச் சுவைக்கிறது.

ஆறுமுகன் மயில் மேல் சுகாசனத்தில் உள்ளார். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், பட்டாடை இவற்றுடன் காட்சிதரும் ஆறுமுகனின் முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்பில் அமைய, இடக்கை மயில் மேல் கடகத்தில் உள்ளது. பிற கைக்கருவிகளுள் வில், அம்பு, வஜ்ரம், சக்தி, குறுந்தடி இவை அடக்கம். சடைமகுடம், சரப்பளி, மகரகுண்டலங்கள், ஸ்கந்தமாலை, முப்புரிநூல், இடைக் கட்டுடனான பட்டாடை அணிந்து நிற்கும் விசாலாட்சியின் பின்கைகளில் அக்கமாலையும் மலர்மொட்டும் அமைய, முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் உள்ளன.

சண்டேசுவரர்

சுற்றுவெளியின் வடக்கில் ஒருதள வேசர விமானத்தில் சுகாசனத்தில் உள்ள சண்டேசுவரர் சோழர் காலச் சிற்பமாகும். வலக்கையில் மழுவேந்தி, இடக்கையைக் கால் மேல் இருத்தியுள்ள அவரது சடைப்பாரத்தின் கீழ்ப்பகுதிகள் சிரஸ்திரகமாய் அமைய, முகப்பில் மண்டையோடும் வலப்புறம் பிறையும் காட்டப்பட்டுள்ளன. இடைக்கட்டுடனான சிற்றாடை, சரப்பளி, உதரபந்தம், முப்புரிநூல், தோள், கை வளைகள் அணிந்துள்ள சண்டேசுவரரின் வலச்செவியில் மகரகுண்டலம்; இடச்செவி யில் பனையோலைக் குண்டலம்.


சண்டேசுவரர்


வடக்குச் சுற்றுவெளியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து கல்வெட்டொன்று கண்டறியப்பட்டது.4 கி. பி. 1886 விய ஆண்டு வைகாசித்திங்கள் பதின்மூன்றாம் நாள் தொடங்கப்பட்ட அக்கிணற்றின் பணி ஆனித்திங்கள் இருபதாம் நாள் முற்றுப்பெற்றதாகக் கல்வெட்டுக் கூறுகிறது.

இறைவன் விமானம்

4. 86 மீ. பக்கமுடைய சதுர ஒருதளத் திரவிடமாக அமைந்துள்ள இறைவன் விமானம் பத்மஉபானம், பிரதிபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, பாதம் கொண்டெழும் எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் உத்திரம், வாஜனம், பூதவரி வலபி, ஆழமற்ற கூடுகளுடனான கபோதம், பூமிதேசம் பெற்றுக் கருங்கல் பணியாகக் காட்சிதருகிறது. புறந்தள்ளியுள்ள சாலைப்பத்திகளின் மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்களை உருளை அரைத்தூண்கள் அணைத்துள்ளன. தெற்கு மகரதோரணத்தில் அழகிய சோழர் காலச் சிற்பமாய் சிவபெருமான் இடம்பெற்றுள்ளார். இன்னதென அடையாளப்படுத்த முடியாத அமர்வில் உள்ள இறைவனின் வல முன் கை சின்முத்திரையில் அமைய, இட முன் கை முழங்கால் மீதுள்ளது. சடைப்பாரம் மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, உதரபந்தம் பெற்றுள்ள இறைவனின் வலப் பின் கையில் அக்கமாலை. இடப் பின் கைப் பொருளை அடையாளம் காணக்கூடவில்லை.

பிற்கால மண்டப இணைப்புப் பெற்றுள்ள தெற்குக் கோட்டத்தில் வீராசனத்தில் உள்ள இறைவனின் பின்கைகளில் அக்கமாலையும் முத்தலைஈட்டியென விரிந்த தீச்சுடரும் உள்ளன. வல முன் கை சின்முத்திரை கொள்ள, இட முன் கை சுவடி தாங்கியுள்ளது. மண்டையோடு அணிந்த சடைப்பாரம் மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை, தாள் செறிகள் அணிந்துள்ள இறைவனின் இருபுறத்தும் கோட்டம் நீங்கிய நிலையில் வேதிகையின் மேல் அமர்ந்தவர்களாய்ப் பக்கத்திற்கிரு முனிவர்கள்.


தட்சிணாமூர்த்தி


மேற்குக் கோட்டம் வெறுமையாக உள்ளது. வடக்குக் கோட்டத்தில் சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், பட்டாடை, அணிந்து நிற்கும் நான்முகனின் பின்கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் இடம்பெற்றுள்ளன. முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை கடியவலம்பிதமாக உள்ளது.

கிரீவ கோட்டங்களில் தெற்கில் வீராசனத்தில் ஆலமர்அண்ணலும் மேற்கில் தேவியருடன் சுகாசனத்தில் பரமபதநாதரும் வடக்கில் தேவியருடன் அர்த்தபத்மாசனத்தில் நான்முகனும் சுதைவடிவங்களாக இடம்பெற்றுள்ளனர்.

முகமண்டபம்

விமானக் கட்டமைப்பில் உள்ள முகமண்டபத்தில் சாலைப் பிதுக்கம் இல்லை. கோட்டங்களில் தென்புறம் ஆலமர்அண்ணல் சிற்பம் காணப்படுகிறது. வடகோட்டம் வெறுமையாக உள்ளது. தெற்குக் கோட்ட மகரதோரணத்தில் உள்ள ஊர்த்வஜாநு கரணப் பிள்ளையார் சிற்பம் சோழர் காலத்தது. கோட்டத்தில் வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணல் விமானத் தென்கோட்ட முன்னவராகலாம். பின்கைகளில் அக்கமாலையும் தீச்சுடரும் கொண்டுள்ள அவரது முன்கைகளில் வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கை சுவடி கொண்டுள்ளது. சடைப்பாரம் மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம் பெற்றுள்ள இறைவன் அமர்ந்துள்ள தளத்தில் இருபுறத்தும் பக்கத்திற்கொருவராக முனிவர்கள்.

குறிப்புகள்

1. திருத்தொண்டர்புராணம், திருப்பனந்தாள் பதிப்பு, ப. 156.
2. சம்பந்தர் 1 : 48. 'கோச்செங்கணாற்கு அருள்செய்' என்று இறைவனை வேண்டும் சம்பந்தர், ஏழாம் செய்யுளில் சண்டேசுவரர் வரலாற்றை முன் வைக்கிறார்.
3. ஆய்வு நாள் 21. 3. 2010. இம்மாடக்கோயிலை வெளிச்சப்படுத்தியவர் திரு. பால. பத்மநாபன். உடனிருந்து உதவிய திரு. கா. இராமகிருஷ்ணன் நன்றிக்குரியவர்.
4. இக்கல்வெட்டைக் கண்டறிந்தவர் முனைவர் மு. நளினி.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.