http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 106

இதழ் 106
[ ஏப்ரல் 2014]


இந்த இதழில்..
In this Issue..

பானை, குடம், கலம்
Gokarneswara - 4
Chola Ramayana 13
தேடலில் தெறித்தவை - 12
திருநறையூர்
வாசிப்பில் வந்த வரலாறு - 5
புத்தகத் தெருக்களில் - நான், ஆனந்த ரங்கம்பிள்ளையின் நாட்குறிப்புகளுடன் - 1
இதழ் எண். 106 > கலையும் ஆய்வும்
கும்பகோணம் திருவாரூர்ப் பெருவழியில் கும்பகோணத்திலிருந்து 15 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது திருநறையூர். திருமங்கையாழ்வார் பாசுரம் பெற்ற மணிமாடக்கோயில்(1) சீனிவாசப் பெருமாள் கோயிலாய்ப் பெயர் கொண்டு இங்குத் திகழ்கிறது.(2) கபோதபந்தத் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி, எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுக் கிழக்குப் பார்வையாக உள்ள முதற் கோபுரத்தின் ஐந்து தளங்களுமே மிகக் குறைவான அளவில் சுதையுருவங்களைப் பெற்றுள்ளன. கீழ்த்தளப் பத்திகளுக்கு இடைப்பட்ட ஒடுக்கங்களை ஒருகால் பஞ்சரங்கள் அலங்கரிக்கின்றன. கோபுரத்தின் தென்புறத்தே உள்ள ஒருதள வேசரத் திருமுன்னில் பிள்ளையார் எழுந்தருளியுள்ளார்.

வெளிச்சுற்று

இவ்வாயிலை அடுத்து விரியும் வெளிச்சுற்றின் வடக்கில் அலுவலகம், வாகன அறை இவை உள்ளன. அலுவலக உள்அறையில் வணக்க முத்திரையுடன் நின்றகோலத்தில் மங்கையாழ்வார் சிற்பம் காணப்படுகிறது. தெற்கில் நந்தவனமும் அதற்கு முன்னிருக்குமாறு நம்மாழ்வார், உடையவர் திருமுன்களும் திராவிட சிகரம் பெற்ற மண்டபமும் உள்ளன. இம்மண்டபம் கீழ்வேளூர் வெளிச்சுற்றில் உள்ள திராவிட சிகரக் கட்டுமானத் துடன் ஒப்பிடத்தக்கது.



முதற் கோபுரத்திற்கும் நான்கு தளங்கள் பெற்றுள்ள இரண்டாம் கோபுரத்திற்கும் இடைப்பட்ட நடைப்பத்தியின் கூரையைத் தெற்கிலும் வடக்கிலுமாய் அமைந்த பதினாறு பேருருளைத் தூண்கள் தாங்குகின்றன. வேறெந்த மாடக்கோயிலிலும் காணப்படாத இத்தூண்கள் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனைத் தூண்களை ஒத்து அமைந்துள்ளன.

இரண்டாம் கோபுரம்

உயரமான துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ள இரண்டாம் கோபுரக் கீழ்த்தளத்தின் சாலைப்பத்திகளை எண்முக அரைத் தூண்கள் அணைத்துள்ளன. இப்பத்திகளின் தாங்குதளம் கபோதபந்தமாக மாற்றப்பட்டுள்ளது. வாயிலில் உள்ள தெற்கு, வடக்குக் கோட்டங்களில் காளிங்க நர்த்தனச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆரஉறுப்புகளில் குறைவான சுதையுருவங்கள் இடம்பெற்றுள்ளன. நடைப்பத்தியிலிருந்து கோபுரவாயிலை அடைய ஏழு படிகள் உள்ளன.
அட்டவணை அரங்கப்பையன் மண்டபம்

கோபுரவாயிலை அடுத்து அமைந்துள்ள மண்டபத்தை அடைய வண்டிக்கூடு கூரை பெற்ற இரண்டாம் நடைப்பத்தி உதவுகிறது. பேரளவிலான நான்முகத் தூண்கள் தாங்கும் இந்நடைப்பத்தியின் தெற்கிலும் வடக்கிலும் திறப்புகள் உள்ளன. மண்டபத்தை இரண்டு அல்லது மூன்றாக அமைந்த ஒட்டுத் தூண்கள் மதலைகளின் உதவியோடு தாங்குகின்றன. பேரளவினதாக விளங்கும் இம்மண்டபத்தின் வடபுறத்தே பெருமண்டபம், முகமண்டபம், விமானம் பெற்ற இராமர் திருமுன்னும் தென்புறத்தே சுற்றுக்கான வழியும் அமைந்துள்ளன.

இராமர் திருமுன்

துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்ட இராமரின் இருதளச் சாலை விமானக் கீழ்த்தளச் சுவரின் முப்புறக் கோட்டப் பஞ்சரங்கள், ஆரச்சாலைகள், கிரீவகோட்டங்கள் வெறுமையாக உள்ளன. கருவறையில் உள்ள மேடையில் சீதை, இராமர், இலட்சுமணன் மூவரும் நின்றகோலத்தில் உள்ளனர். சீதையின் வலக்கை நெகிழ்ந்திருக்க இடக்கையில் மலர். இராமர் வலக்கையில் அம்பும் இடக்கையில் வில்லும் கொண்டுள்ளார். வணங்கிய நிலையில் உள்ள இலட்சுமணன் வில்லை மார்போடு அணைத்த நிலையில் உள்ளார். அனைவரும் பட்டாடை, கிரீடமகுடம் பெற்றுள்ளனர்.

மண்டபத்தின் தென்கிழக்குச் சுவரிலிருந்து படியெடுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு கி. பி. 1618ல் வெட்டப்பட்டுள்ளது. ‘அட்டவணை bரங்கப்பையன் திருமண்டபம்’ என்று இந்த மண்டபத்தை அழைக்கும் இக்கல்வெட்டு, இதை நாச்சியார் அம்மனுக்கு இரகுநாத நாயக்கர் நலம் கருதி bரங்கப்பையன் அமைத்தளித்ததாகக் கூறுகிறது.(3)

இம்மண்டபத்தின் புறச்சுவர் தெற்கிலும் வடக்கிலும் கபோதபந்தத் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுக் கருங்கல் கட்டுமானமாக உள்ளது. சுவரிலுள்ள கோட்டப் பஞ்சரங்கள் சில வெறுமையாகவும் சில சாளரமாக மாற்றப்பட்டும் உள்ளன. தெற்குச் சுவரின் தென்கிழக்குப்பகுதி செங்கல் கட்டுமானமாக அமைந்துள்ளது. பத்மபந்தத் தாங்குதளத்துடன் புறந்தள்ளலாக உள்ள வடசுவரின் இடைப்பகுதியை எண்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. அதன் சாலைப்பத்தி வெறுமையான கோட்டப் பஞ்சரத்துடன் கூடுதலாகப் புறந்தள்ளியுள்ளது. இப்புறந்தள்ளல் தவிர்த்த வடசுவரில் காணப்படும் ஏழு கோட்டப் பஞ்சரங்களும் சாளரங்களாக்கப்பட்டுள்ளன.

சுற்றின் தென்புறத்தே தென்கிழக்கில் மடைப்பள்ளியும் ஆஞ்சநேயர் திருமுன்னும் கருடமோட்ச நினைவகமும் தென்மேற்கு மூலையில் சக்கரத்தாழ்வார் வளாகமும் அமைந்துள்ளன. 18. 1. 1999 சிரவணத்தன்று இக்கோயில் வளாகத்தில் உயிர் துறந்த இரண்டு கருடப்பறவைகளின் நினைவாக அமைந்துள்ள ஒரு தள வேசர விமானத்தின் கருவறையில் இறந்த பறவைகளின் படமும் கபோதத்தில் அவற்றின் சுதைவடிவமும் இடம்பெற்றுள்ளன.4 சக்கரத்தாழ்வார் திருமுன் வண்டிக்கூடு கூரை பெற்ற பெருமண்டபம், முகமண்டபம், இருதள வேசர விமானம் கொண்டுள்ளது. சுற்றின் வடகிழக்கு மூலையில் உள்ள ஒருதள நாகர விமானம் வெறுமையாக உள்ளது.

வெற்றுத்தளம்

மண்டபப் புறச்சுவரின் தொடர்ச்சியாகத் தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் விரியும் 5. 60 மீ. உயரமுள்ள வெற்றுத் தளம் கல்லடுக்கப் பெற்ற நெடிய சுவராகவே அமைந்துள்ளது. மண்டபப் புறச்சுவர் போலவே அமைந்திருக்க வேண்டிய இவ்வெற்றுத்தளம் திருப்பணிகளால் இத்தகு மாற்றத்தை அடைந்ததாகக் கொள்ளலாம்.



தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் திருக்கோயிலிலும் தெற்கு, மேற்கு, வடக்குப் பகுதிகளில் வெற்றுத்தளம் இது போலவே இருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது. வடபுறத்தே சேனைமுதலியார் திருமுன்னிற்காகப் புறந்தள்ளியிருக்கும் வெற்றுத்தளப் பகுதி உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், கூரையுறுப்புகள் பெற்று அமைந்துள்ளது.

இடைச்சுற்று

அட்டவணை அரங்கப்பையன் திருமண்டபத்திலிருந்து இடைச்சுற்றை அடையப் பத்துப் படிகள் உதவுகின்றன. கிழக்கில் மண்டபமாகவும் தெற்கு, மேற்கு, வடக்கு முத்திசைகளிலும் மாளிகையுடனான சுற்றாகவும் அமைந்துள்ள இவ்விடைச் சுற்றின் கிழக்கு விரிவு நாற்சதுர, இருகட்டுத் தூண்களும் நான்முகத் தூண்களும் இணைந்தமைந்த ஒட்டுத்தூண்களைப் பெற்றுள்ளது. தூண்களின் சதுரங்களில் கொடிக்கருக்குகளும் சிற்பங்களும் உள்ளன. பூமொட்டுப் போதிகைகளுடன் அமர்யாளிப் பலகையும் மதலைகளும் கொண்டுள்ள கூரையுறுப்புகள் அரவணை மண்டபத்தை ஒத்துள்ளன. இம்மண்டப வாயில் நிலையில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு இக்கோயிலில் திருப்பணிக் கணக்காக இருந்த வேணுமாலை என்பவரை அடையாளப்படுத்துகிறது.(5)

திருமுன்கள்

இவ்விரிவின் கிழக்கில் இரண்டு திருமுன்கள் உள்ளன. அவற்றுள் வாயிலை ஒட்டியுள்ள முதல் திருமுன்னில் யோகநரசிம்மர் இடம்பெற்றுள்ளார். கரண்டமகுடம், தோள்வளைகள் அணிந்து குத்துக்கால் அமர்வுடன் யோகாசனத்தில் உள்ள நரசிம்மரின் முன்கைகள் முழங்கால்கள் மேல் நெகிழ, பின்கைகளில் சங்கு, சக்கரம். மண்டப விரிவின் தென்கிழக்கில் ஆஞ்சநேயர் திருமுன் அமைந்துள்ளது. வடக்கே உள்ள மூன்று திருமுன்களில் கிழக்கிலிருந்து மேற்காக தேசிகன், மணவாள மாமுனிகள், சேனைமுதலியார் இடம்பெற்றுள்ளனர். இந்தத் திருமுன்களுள் கபோதபந்தத் தாங்குதளம், சதுரபாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கபோதம் இவற்றுடன் விளங்கும் சேனைமுதலியார் திருமுன் புறந்தள்ளிய நிலையில் வெற்றுத்தளம் பெற்றுள்ளது.

சுற்றுமாளிகை

துணைத்தளம் பெற்றுள்ள இச்சுற்றின் மாளிகைக் கூரையை வெட்டுப் போதிகைகளின் துணையுடன் முச்சதுர, இருகட்டுத் தூண்களும் நாற்சதுர, இருகட்டுத் தூண்களும் தாங்குகின்றன. சில சதுரங்களில் கொடிக்கருக்குகளும் சிலவற்றில் தாமரைப் பதக்கங்களும் உள்ளன. மாளிகைச் சுவரிலுள்ள ஆழமான கோட்டங்களில் தென்புறம் பசுக்கள், பறவைகளுடன் வேணுகோபாலரும் வடக்கில் கவரிப்பெண்களுடன் சுகாசனத்தில் இலட்சுமி நரசிம்மரும் அமைய, மேற்கில் உள்ள மூன்று கோட்டங்களில் செளரிராஜப்பெருமாள், வரதராஜப்பெருமாள், தேவியருடன் அரங்கநாதர் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இச்சுற்றின் புறச்சுவர் தெற்கு, மேற்கு, வடக்கு முப்புறத்தும் வெற்றுத்தளம் போலவே கல்லடுக்குச் சுவராகக் கூரையுறுப்புகளுடன் அமைந்துள்ளது.

உள்சுற்று

இடைச்சுற்றிலிருந்து இறைவன் விமான வளாகத்திற்குள் நுழைய நான்கு படிகள் உள்ளன. வளாகத்தின் கூரையைச் சுற்றின் கிழக்கு விரிவில் உள்ளவை போன்ற தூண்கள் தாங்குகின்றன. வடபுறத்தே கல் கருடன் திருமுன்னும் அதையடுத்துச் செப்புத்திருமேனிகள், மூலவர்கள் அறையும் தென்கிழக்கில் பொன்னியம்மன் திருமுன்னும் அதன் அருகே சிறிய அளவிலான செப்புத்திருமேனிகள் கொண்ட மேடையும் உள்ளன. கிழக்கில் மண்டபமாக அமைந்து தெற்கு, மேற்கு, வடக்கு முப்புறத்தும் விமானம், முகமண்டபம் இவற்றுக்குரிய உள் சுற்றாக விரியும் இவ்வளாகத்தின் வடகிழக்கில் உள்ள அறை வெறுமையாக உள்ளது. உள்சுற்றின் தெற்குச் சுவரில் உள்ள வாயில் கல் கருடன் திருமுன்னுக்கு நேbரதிராக உள்ளது.

விமானம்

முத்தளச் சாலையாக உள்ள விமானத்தின் கீழ்த்தளம் தென் வடலாக 6. 57 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 5. 21 மீ. அகலமும் கொண்டு கபோதபந்தத் துணைத்தளம், தாமரை உபானம், பாதபந்தத் தாங்குதளம், கண்டம், கபோதம், நாகபந்தம் - கொடிக்கருக்குப் பெற்ற பாதங்களுடனான எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கூடுவளைவுகளுடனான கபோதம் இவற்றுடன் கருங்கல் கட்டுமானமாக உள்ளது. சுவரின் முப்புறத்தும் உள்ள கோட்டப்பஞ்சரங்கள் வெறுமையாக உள்ளன. துணைத் தளத்தின் கண்டபாதங்களில் ஆங்காங்கே சிற்பங்கள் உள்ளன.

முதல் தள ஆரஉறுப்புகள் சுதையுருவங்கள் இன்றி அமைய, இரண்டாம் தள ஆரஉறுப்புகளும் கிரீவகோட்டங்களும் நாற்றிசைகளிலும் இறைத்திருமேனிகளைப் பெற்றுள்ளன. தெற்கு ஆரச்சாலை, கிரீவகோட்டத்தில் யோகநரசிம்மரும் மேற்கு ஆரச்சாலையில் உத்குடியில் பரமபதநாதரும் கிரீவகோட்டத்தில் சுகாசன விஷ்ணுவும் வடக்கு ஆரச்சாலையிலும் கிரீவ கோட்டத்திலும் தேவியருடன் சுகாசனத்தில் வராகரும் கிழக்கு ஆரச்சாலையில் கருவறையில் உள்ளாற் போலவே நான்முகன், பலராமன், வஞ்சுளவல்லி, விஷ்ணு, அநிருத்தன், பிரத்யும்னன், புருnஷhத்தமன் இவர்தம் சுதையுருவங்களும் கிரீவகோட்டத்தில் தேவியுடன் சுகாசன விஷ்ணுவும் இடம்பெற்றுள்ளனர்.

முகமண்டபம்

அதே கட்டமைப்பில் உள்ள முகமண்டபத்தின் தாங்குதளத்திற்கு மேற்பட்ட பகுதியில் வேதிகைத்தொகுதி இடம்பெற்றுள்ளது. மண்டபச் சுவரின் தெற்கிலும் வடக்கிலும் உள்ள கோட்டப்பஞ்சரங்கள் வெறுமையாக உள்ளன. முகமண்டபத்தின் கிழக்கில் உள்ள பத்துப் படிகள் ஈரடுக்காக அமைந்து யாளித்துளைக்கைப் பிடிச்சுவர் பெற்றுள்ளன. மண்டப வாயிலின் இருபுறத்தும் உள்ள காவலர்கள் கிரீடமகுடம், சரப்பளி, பட்டாடை அணிந்து பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளனர். முன்கைகளில் ஒரு கை அச்சுறுத்த, மறுகை அருகிலுள்ள உருள்பெருந்தடி மேல் உள்ளது.

கருவறை

தூண்களற்ற சதுரமான முகமண்டபத்தை அடுத்துள்ள கருவறையின் வாயிலை வெட்டுப் போதிகைகள் தாங்கும் உத்திரம், தாமரை வலபி, கபோதம் அலங்கரிக்கின்றன. கருவறையுள் தெற்குச் சுவரருகே வடக்குப் பார்வையாகச் சடைமகுடம், பட்டாடை, தோள்மாலை, பூட்டுக்குண்டலங்கள் கொண்டு கடகத்தில் அமைந்த இருகையினராய் நான்முகனும் வடக்குச் சுவரருகே தெற்குப் பார்வையாகக் கிரீடமகுடம், பட்டாடை அணிந்து, வலக்கையால் அருள்செய்து, இடக்கையைக் கடியவலம்பிதமாகக் கொண்ட அநிருத்தரும் கரண்டமகுடம், பட்டாடை அணிந்து வலக்கையைக் காப்பு முத்திரையில் இருத்தி, இடக்கையைக் கடியவலம்பிதமாகக் கொண்டவராய்ப் புருஷோத்தமரும் நின்றகோலத்தில் காட்சிதருகின்றனர்.

மேற்குச் சுவரொட்டிக் கிழக்குப் பார்வையாகக் கரண்டமகுடம், சரப்பளி, பட்டாடை அணிந்து வலக்கையில் காப்பு முத்திரையும் இடக்கையில் அச்சுறுத்தும் முத்திரையும் காட்டியவாறு சங்கிருஷ்ணராகக் கொண்டாடப்படும் பலராமரும் பட்டாடை, வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம், கழுத்தணிகள், கையணிகள் அணிந்து வலக்கையால் அருள்செய்து, இடக்கையை நெகிழ்த்தியவாறு வஞ்சுளவல்லி நாச்சியாரும் கிரீடமகுடம், மகர குண்டலங்கள், பட்டாடை அணிந்து, சங்கு, சக்கரம் ஏந்திய இருகையினராய் சீனிவாசப் பெருமாளும் கரண்டமகுடம், முப்புரிநூல், பட்டாடை அணிந்து, வலக்கையைக் காப்பு முத்திரையில் இருத்தி, இடக்கையைக் கடியவலம்பிதமாய்க் கொண்டவராய் பிரத்யும்னரும் அமைந்துள்ளனர்.

நான்முகனுக்கு இங்கு நான்கு முகங்களும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். அது போலவே சீனிவாசப் பெருமாள் இரண்டு கைகள் மட்டுமே பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. உற்சவர்களுள் வஞ்சுளவல்லி வலக்கையில் மலரேந்தி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். சீனிவாசப் பெருமாள் பின்கைகளில் சங்கு, சக்கரம் கொண்டு, வல முன் கையால் அருள் செய்து இட முன் கையைக் கடியவலம்பிதமாக்கியுள்ளார்.

கல் கருடன் திருமுன்

உள்சுற்றின் கிழக்கு விரிவில் தெற்குப் பார்வையாக அமைந்திருக்கும் கல் கருடன் திருமுன் தனித்தன்மையது எனலாம். இத்திருமுன்னின் வாயிலை நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளை அடுத்துக் கபோதம் அமைந்துள்ளது. பளிங்குக் கற்கள் போர்த்தியுள்ள கருவறையில் இருகைகளையும் ஏந்தலாகக் கொண்டு இறக்கை கள் விரிந்த நிலையில் கிரீடமகுடம், பாம்புக் குண்டலங்களுடன் இருக்கை ஒன்றின்மீது கருடாசனத்தில் உள்ளார் கருடர்.

மூலவர், உற்சவர் அறை

கல் கருடன் திருமுன்னுக்கு வலப்புறம் உள்ள அறையில் யோகநரசிம்மர், பரமபதநாதர், சனீசுவரன் குடும்பம், தாசர், சேனைமுதலியார் இவர்தம் செப்புத்திருமேனிகளும் பல மூலவர் மேனிகளும் உள்ளன. பரமபதநாதர் தொகுதியில் உள்ள விஷ்ணு, திருமகள், நிலமகள், நீலாதேவி அனைவருமே பாம்பணையின் மீது அமர்ந்துள்ளனர். வீராசனத்தில் உள்ள விஷ்ணுவின் வலக்கை முழங்கால் மேல் அமைய, இடக்கை இருக்கையில் இருத்தப்பட்டுள்ளது. கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், பதக்கமாலை, கடகவளைகள், பட்டாடை அணிந்து பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ள இறைவனின் தலைக்கு மேல் குடைவிரித்தாற் போல் ஆதிசேடனின் ஐந்து தலைகளும் கவிந்துள்ளன.

சுகாசனத்தில் உள்ள தேவியர் மூவருள் திருமகள் கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், பட்டாடை அணிந்து வலக்கையைத் தளத்தில் இருத்தி, இடக்கையில் தாமரை ஏந்தியுள்ளார். இடப்புறமுள்ள நிலமகள் கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், பட்டாடை அணிந்தவராய் வலக்கையில் நீலோத்பலம் ஏந்தி, இடக்கையை இருக்கையில் இருத்தியுள்ளார். நிலமகளை அடுத்துள்ள நீலாதேவி கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், முப்புரிநூல், பட்டாடை அணிந்தவராய் நிலமகள் ஒப்பக் கைகளைக் கொண்டுள்ளார்.

யோகபட்டத்துடன் தாமரை மலர் மீது யோகாசனத்தில் உள்ள யோகநரசிம்மரின் தலையில் கிரீடமகுடம். சரப்பளி, ஸ்வர்ணவைகாக்ஷம், உதரபந்தம், தோள், கடக, கை வளைகள் அணிந்துள்ள நரசிம்மரின் முன்கைகள் முழங்கால்களின் மீது நெகிழ்ந்துள்ளன. பின்கைகளில் சங்கு, சக்கரம். மழித்த தலையும் நீள்செவிகளும் முப்புரிநூல், உதரபந்தம், கோவணஆடை இவையும் கொண்டு தாமரைமலரில் அர்த்த பத்மாசனத்தில் உள்ள தாசரின் வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கையில் எழுத்துப் பொறிப்புடன் சுவடி உள்ளது.

உள்சுற்றின் புறச்சுவர்

உள்சுற்றின் புறச்சுவர் கபோதபந்தத் துணைத்தளம், கபோதபந்தத் தாங்குதளம், நாகபந்தம், கொடிக்கருக்குப் பெற்ற பாதங்களுடனான எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கூடு வளைவுகளுடனான கபோதம் பெற்றுள்ளது. துணைத்தளக் கண்டப்பகுதியில் தெற்கு, மேற்கு, வடக்கு முப்புறத்தும் எண்ணற்ற ஆடற்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. தலைக்கோலிகள், தளியிலார்கள், கூத்திகள், பெருமைக்குரிய இசையறிஞர்கள், இசைக்கலைஞர்கள் எனப் பெரும் புதையலாய் அமைந்துள்ளது இச்சிற்பத்தொகுதி.

சுவர்ப்பகுதியில் தெற்கில் மூன்று கோட்டங்களும் மேற்கில் ஐந்து கோட்டங்களும் வடக்கில் மூன்று கோட்டங்களும் உள்ளன. தெற்குக் கோட்டங்களில் மீன், ஆமை, பன்றி ஆகிய திருத்தோற்றங்களில் விஷ்ணு இடம்பெற்றுள்ளார். மூன்று தோற்றங்களிலும் பின்கைகள் சங்கு, சக்கரம் கொள்ள, மீன் தோற்றத்தின் முன்கைகளில் வலப்புறம் கத்தி. இடக்கை கடகத்தில் உள்ளது. பிற இரண்டு தோற்றங்களிலும் வல முன் கை காக்கும் குறிப்பில் அமைய, இட முன் கை உருள்பெருந்தடி மீது உள்ளது.

மேற்குக் கோட்டங்களிலுள்ள நரசிம்மர், வாமனர், பரசுராமர், இராமர், பலராமர் இவர்களுள் நரசிம்மர் மட்டுமே நான்கு கைகள் பெற்றுள்ளார். பின்கைகளில் சங்கு, சக்கரம் அமைய, முன்கைகள் காக்கும், அருட்குறிப்பில் உள்ளன. வாமனரின் வலக்கை நெகிழ்ந்திருக்க, இடக்கை உருள்தடியின்மீது உள்ளது. பரசுராமரின் வலக்கை கரண்டி ஏந்தியிருக்க, இடக்கை கடியவலம்பிதமாக உள்ளது. இராமரின் கைகளில் அம்பும் வில்லும் உள்ளன. பலராமர் வலக்கையில் கலப்பை கொண்டு இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். வடக்குக் கோட்டங்களில் இரண்டில் கண்ணனும் ஒன்றில் கல்கி திருத்தோற்றமும் உள்ளன. கல்கியின் பின்கைகளில் சங்கு, சக்கரம் அமைய, முன்கைகள் கத்தியும் கேடயமும் கொண்டுள்ளன.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் இருந்து நடுவண் அரசின் கல்வெட்டுத்துறையால் மூன்று கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், சடையவர்மர் சுந்தரபாண்டியரின் பதிbனட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, குலோத்துங்க சோழ வளநாட்டு நறையூர் நாட்டு நறையூரில் உலகுய்ய நின்றருளின எம்பெருமானுக்கு திருநாமத்துக்காணியாக ஜயங்கொண்ட சோழ மண்டலத்து மேலூர் நாட்டு மணல்பாக்கத்தை சேர்ந்த மணல்பாங்கிழான் அரையன் திருவம்பலச் சொக்கனான பாண்டியதரையன் நிலம் விற்ற தகவலைத் தருகிறது.(6)



கி. பி. 1514ல் வெட்டப்பட்டுள்ள கிருஷ்ணதேவ மகாராயரின் கல்வெட்டு, தொண்டைமண்டலத்து அரிகண்டபுரம் வாழ் களப்பாளன் திருவேங்கடமுடையார் வடமலை அண்ணகள் வேண்டுகோளை ஏற்றுச் சோழமண்டலத்துத் திருநறையூரில் உள்ள இறைவன், இறைவி, ஸ்ரீராமன் பயன்பெறுமாறு சோடி, சூலவரி, புறவரி, கல்லணை நாட்டுக் காணிக்கை, இராயசவர்த்தனை முதலான வரிகளை மன்னர் ஒதுக்கியதாகக் கூறுகிறது.7 மூன்றாம் கல்வெட்டு அரங்கப்பையன் மண்டபத்தைச் சுட்டுகிறது.

குறிப்புகள்

1. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 1078, 1329, 1470, 1478-1577, 1611, 1659, 1852, 2067, 2068, 2673, 2674.
2. ஆய்வு நாட்கள் 12. 2. 1983, 10. 8. 1991, 24. 12. 2000, 24. 10. 2009. உடனிருந்து உதவிய நிருவாக அலுவலர் வெ. இராதா கிருஷ்ணன், மேலாளர் ம. சந்திரபோசு, பட்டாச்சாரியார் ப. கோபிநாதன் ஆகியோர் நன்றிக்குரியவர்கள்.
3. ARE 1927 : 287.
4. மு. நளினி, பாதைகளைத் தேடிய பயணங்கள், பக். 32 - 33.
5. இக்கல்வெட்டைக் கண்டறிந்தவர் பேராசிரியர் முனைவர் மு. நளினி.
6. ARE 1931-32 : 132.
7. ARE 1931-32 : 133. this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.