![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 106
![]() இதழ் 106 [ ஏப்ரல் 2014] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
தேடலில் தெறித்தவை
பல தமிழ்நாட்டுக் கோயில்களில் குற்றங்களைப் பற்றிய கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. களவு, கொலை, தீ வைத்தல், பொய்க்கணக்கு எனச் சமுதாய ஒழுங்கின்மைகள் கோயில்களையும் தொட்டிருக்கின்றன. கழுக்குன்றம் வேதகிரீசுவரர் கோயில் கல்வெட்டாய்வில் ஈடுபட்டிருந்தபோது நிலவறைக் களவும் அது தொடர்பான விசாரணையும் அளிக்கப்பட்ட தண்டனையும் கல்வெட்டொன்றில் (5:479) பதிவாகியிருந்தமையை அறியமுடிந்தது. திருவெற்காவுடையான் மருகன் ஆயத்தான் என்பவர் கழுக்குன்றம் கோயில் நிலவறையைத் திறந்து, அங்கிருந்த குன்றவாணப் பெருமாள் திருவாசியில் 150 பொன் அளவிற்கான பகுதியைக் கைக்கொண்டதுடன், நிலவறையை மீள மூடிச் சாந்திட்டு அடைத்தார். இந்தக் களவு நிகழ்கையில் கோயில் மெய்க்காவலரான திருக்கழுக்குன்ற பட்டன் முதலியான் பார்த்துவிட்டதால், ஆயத்தான் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு தன் கையெழுத்தால் முதலிட்டுத் தந்ததுடன், ஊரைவிட்டு ஓடிப்போய்விடுகிறார். பிறமாதி ஆண்டில் நடந்த இந்தக் களவைப் பற்றி விசாரிப்பதற்காகக் குமாரகம்பணர் ஆட்சிக்காலத்தே (பொ. கா. 1343-1379), ஆனந்த ஆண்டில் ஒரு நாள் கழுக்குன்றம் கோயில் தொண்டக நாயன் (?தொண்டர்கள் நாயகன்) திருக்காவணத்தில் களத்தூர்க் கோட்டத்துச் செங்கலங்கிழான் திருப்பிலவாயில் உடையார் வென்றாபரணன் ஆதித்ததேவர், தனவான் அமராபதி காத்தார், காரைக்கிழான் பொன்னம்பலக் கூத்தன், கைக்கோள முதலிகள், கோயில் ருத்ரமாகேசுவரர் ஆகியோர் கூடி, மெய்க்காவலர் முதலியானை அழைத்தனர். அவர் நடந்தது கூறி ஆயத்தான் கையெழுத்திட்ட முதலைக் காட்டினார். குற்றம் நிகழ்ந்த விதமும் அதைச் செய்தவர் யார் என்பதும் தெளிவானமையின் அளிக்க வேண்டிய தண்டனை பற்றிக் கலந்துரையாடினர். ஆயத்தானின் குற்றம் சிவத்துரோகமாகக் கருதப்பட்டு, அவருடையதும் அவரைச் சார்ந்தவர்களுடையதுமான மனைகள் நான்கையும் கோயிலின் நாற்பத்தெட்டு வட்டக் காணியிலும் முப்பது வட்டத்துப் பூசை நாளிலும் ஆயத்தானுக்கு உரிமையுடையதாக இருந்த பதினாறரை நாட்களுக்கான உரிமையையும் சண்டேசுவரப் பெருவிலையாக விற்று அந்தத் தொகையைக் கோயில் பண்டாரத்தில் ஒடுக்கிட உத்தரவாயிற்று. பொக்கண்ணர் திருப்பணிக்கு 850 பணம் குறித்திருந்த மடலுக்கு ஏற்ப ஆயத்தானின் மனைகளும் உரிமைகளும் அத்தொகைக்கே விற்கப்பட்டன. ஆயத்தானின் பதினாறரை நாள் காணி உரிமையைச் சண்டேசுவரப் பெருவிலையில் பெற்றவர்களின் பட்டியலையும் கல்வெட்டு தந்துள்ளது. நாற்பத்தெட்டு வட்டக் காணி உரிமை பெற்றவர்கள்: 1. பன்மாகேசுவர பட்டர் ஒன்றே கால் நாள், 2 உருத்திர பண்டிதர் ஒன்றே முக்கால் நாள் 3. குன்ற பட்டர் ஒரு நாள் 4. மாதேவ பட்டர் ஒரு நாள் 5. பரமேசுவர பட்டர் அரை நாள் 6. உடையார் ஒரு நாள் ஆக ஆறரை நாள். முப்பது வட்டத்துப் பூசை நாள் பத்து பெற்றவர்கள்: 1. உருத்திர பண்டிதர் மூன்று நாள் 2. சந்திரமெளலி பட்டர் மூன்று நாள் 3. மாதேவ பட்டர் நான்கு நாள் இந்த ஆவணத்தில் பலர் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களுள் உரிமைகளைப் பெருவிலையில் பெற்றவர்களும் மெய்க்காவலும் அடக்கம். இவர்கள் தவிர, கோயிற் கணக்குஆதியூர் உடையான், சித்திரமேழி வேளான், ஆதிசண்டேசுவர வேளான், அபிமானபூஷண வேளான் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர். 21 வரிகளில் அமைந்துள்ள இந்த ஆவணம் கழுக்குன்றத்தில் கோயிலாரே களவில் ஈடுபட்டமையைப் படம் பிடித்துள்ளது.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |