http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 109

இதழ் 109
[ ஜூலை 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 6
Kudumiyanmalai - 3
நாகை சட்டைநாதர் மாடக்கோயில்
கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோயில்
இசையால் இசையும் இடைமருதூர் இறைவன்
இதழ் எண். 109 > கலையும் ஆய்வும்
நாகை சட்டைநாதர் மாடக்கோயில்
இரா.கலைக்கோவன், மு.நளினி
நாகபட்டினம் நகரிலுள்ள சட்டை நாதர் கோயில் பெரும் வளாகமாக விரிந்துள்ளது. இவ்வளாகத்தில் சட்டநாதருக்கான தெற்கு நோக்கிய மாடக்கோயிலும் ஆதிகாயாரோகண ஈசுவரர் - நீலாயதாட்சிக்கான கிழக்கு நோக்கிய கோயிலும் இடம்பெற்றுள்ளன.[1] தெற்கு நுழைவாயிலை அலங்கரிக்கும் முத்தளக் கோபுரத்தின் கீழ்த்தளம் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் உத்திரம், மதலை வலபி, கபோதம் பெற்றுள்ளது. சுவரிலுள்ள பஞ்சரக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. மேற்றளங்களில் குறைவான அளவிலேயே சுதையுருவங்கள் காணப்படுகின்றன.

சுற்று

கோபுரவாயிலின் எதிரில் அமைந்துள்ள சட்டநாதர் மாடக்கோயிலை அடையப் பலித்தளமும் கொடிமரமும் இடம்பெற்றுள்ள திருநடை உதவுகிறது. கபோதபந்தப் பாதத்தின் மீதமைந்த முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகைகளுடன் கூரையுறுப்புகள் தாங்கும் நடைக்கூரையில் தாமரைப்பதக்கமும் புராணக் காட்சிகளும் வரையப்பட்டுள்ளன. கோபுரவாயிலின் இடப்புறத்தே காணப்படும் அலங்கரிப்பற்ற மற்றொரு வாயில் பூட்டப்பட்டுள்ளது. அதனருகே மணிக்கூண்டு மண்டபம் உள்ளது. வளாகத்தின் கிழக்கிலும் மேற்கிலும் மதிலையெhட்டிக் காணப்படும் வண்டிக்கூடு கூரை பெற்ற மண்டபங்கள் வெறுமையாக உள்ளன.

மேற்கு மண்டபத்தையடுத்துள்ள ஒருதள நாகர விமானத்தில் தேவியருடன் ஐயனார் அமர்ந்துள்ளார். நந்தவனத்தை அடுத்துக் கிழக்குப் பார்வையாக உள்ள மூன்று ஒருதள வேசர விமானங்களில் முறையே பிள்ளையார், தேவியருடன் முருகன், யானைத்திருமகள் உள்ளனர். தென்பார்வையாக வடக்கு மதிலை ஒட்டியுள்ள ஒருதள வேசர விமானத்தில் கலைமகள் இடம்பெற்றுள்ளார். இத்திருமேனிகள் அனைத்துமே அண்மைக் காலத்தவை. முருகன் திருமுன் வாயிலின் இருபுறத்தும் காவலர்கள் காட்டப்பட்டுள்ளமை மாறுபட்ட அமைப்பாகும்.

வளாகத்தின் வடக்கில் அண்மைக் கால மண்டபக் கட்டுமானத்துள் சண்டேசுவரரின் ஒருதள வேசர விமானம் சிறைப்பட்டுள்ளது. சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள் பெற்று சுகாசனத்தில் உள்ள சண்டேசுவரரின் வலக்கை மழு கொண்டிருக்க, இடக்கை தொடைமீது உள்ளது. வடகிழக்கில் உள்ள ஓடு வேயப்பெற்ற மண்டபத்தில் பைரவர், சூரியன், ஒன்பான்கோள்கள் இடம்பெற்றுள்ளன. மண்டபத்தை அடுத்து முத்தளக் கிழக்குக் கோபுர வாயிலும் தென்புறத்தே குளமும் உள்ளன. கோபுர வாயிலுக்குச் சற்றே வடக்கில் இருக்குமாறு காயாரோகணர், நீலாயதாட்சி திருமுன்கள் அமைந்துள்ளன. இறைவன் கிழக்குப் பார்வையாகவும் நீலாயதாட்சி தெற்கு நோக்கியும் உள்ளனர்.

இறைவன் திருமுன் பெருமண்டபம்

இறைவி, இறைவன் திருமுன்களுக்குப் பொதுவாக அமைந்துள்ள பெருமண்டபம் கிழக்கிலும் தெற்கிலும் திசைக்கு மூன்று வாயில்கள் பெற்றுள்ளது. அவற்றுள் நடுவாயில்கள் முன்றில் பெற்றுள்ளன. கிழக்கு நடுவாயிலின் முன் பலித்தளமும் நந்தியும் பெற்றுக் காரைக் கட்டடமாக நெடிய நான்முகத் தூண்களுடன் அமைந்துள்ள நடை, கோபுரவாயில் நோக்கி நீள்கிறது. முன்றில் கூரையை முச்சதுர, இருகட்டு உடல் பெற்ற தூண்கள் பூமொட்டுப் போதிகைகளுடன் தாங்குகின்றன. கபோதம் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாயில்கள் மூன்று படிகளுடன் முகலாயர் பாணியில் வளைவு பெற்றுள்ளன.

தெற்கு முன்றிலைத் தாவுயாளித் தூண்கள் பூமொட்டுப் போதிகைகளுடன் தாங்குகின்றன. கபோதத்தின் மேலுள்ள வேதிகையின் முகப்பில் அமர்நிலையில் நீலாயதாட்சியின் சுதைவடிவம் காட்டப்பட்டுள்ளது. நடுவாயிலும் வளைவுக் கூரை பெற்றுள்ள பக்க வாயில்களும் யாளித்தூண்களால் அணைக்கப் பட்டுள்ளன. பெருமண்டபக் கூரையைத் தாங்கும் நெடிய நான்முகத் தூண்களில் தென்புறம் உள்ளவை அம்மண்டபத்தையும் காயாரோகணர், நீலாயதாட்சி திருமுன்களையும் திருப்பணி செய்த நாச்சியாபிள்ளை, அவர் மனைவி இவர்தம் உருவச் சிற்பங்களை உரிய கல்வெட்டுகளுடன் கொண்டுள்ளன.[2]

சுவர்களில் ஆனந்ததாண்டவம், சிவன்உமை இணையர், சட்டநாதர், ஆலமர்அண்ணல் உள்ளிட்ட ஓவியங்கள் காணப்படும் மண்டபத்துள் வடபுறம் உள்ள நீலாயதாட்சியின் முகமண்டப வாயில் எண்முகமாய் அமைந்த தாவுயாளித் தூண்களின் அணைவுடன் கபோத அலங்கரிப்புப் பெற்றுள்ளது. இத்தூண்களின் பாதமாக அமர்யாளி காட்டப்பட்டுள்ளது. வாயிலின் இருபுறத்தும் காவற்பெண்டுகள். கருவறையில் ஆதி நீலாயதாட்சி முன்கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண்டு, பின்கைகளில் அக்கமாலை, மலர்மொட்டு ஏந்தி நின்றகோலத்தில் காட்சிதருகிறார்.

அம்மன் விமானம்

பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ள அம்மன் விமானத்தின் கீழ்த்தளச் சாலைகள் எண்முக அரைத்தூண்களின் அணைப்புடன் புறந்தள்ளியுள்ளன. அவற்றின் பஞ்சர அலங்கரிப்புப் பெற்ற கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. இருதள நாகரமாக அமைந்துள்ள இவ்விமானத்தின் சாலைகளிலும் கிரீவகோட்டங்களிலும் அம்மனின் சுதைவடிவங்கள் இடம்பெற்றுள்ளன. அதே கட்டமைப்பில் உள்ள முகமண்டபக் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன.

இறைவன் விமானம்

பெருமண்டபத்தின் மேற்கிலுள்ள இடைமண்டபம் நந்தியைக் கொண்டுள்ளது. அம்மண்டப வாயிலின் வடபுறம் சனீசுவரன் இடம்பெற்றுள்ளார். இடைமண்டபத்தை அடுத்த முகமண்டப வாயிலைப் பக்கத்திற்கொருவராகக் காவலர்கள் காக்கின்றனர். வெறுமையாக உள்ள முகமண்டபத்தை அடுத்து இருக்கும் கருவறையில் இறைவன் இலிங்கத்திருமேனியராய் வேசர ஆவுடையாரும் பாணமும் கொண்டு ஆதிகாயாரோகணராய் எழுந்தருளியுள்ளார்.

பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளுடன் இறைவன் விமானத்தின் கீழ்த்தளம் சாலைப் புறந்தள்ளல் பெற்றுள்ளது. மேலிரண்டு தளங்களும் வேசர கிரீவமும் சிகரமும் செங்கல் கட்டுமானங்களாய் அமைந்துள்ளன. பஞ்சர அலங்கரிப்புப் பெற்ற கீழ்த்தளச் சாலைகளில் தென்புறம் ஆலமர்அண்ணலும் மேற்கில் இலிங்கோத்பவரும் வடக்கில் நான்முகனும் இடம்பெற்றுள்ளனர். விமானக் கட்டமைப்பில் உள்ள முகமண்டபக் கோட்டங்களில் வடபுறம் மகிடாசுரமர்த்தனி காட்சிதருகிறார்.

முகமண்டபமும் ஒருதள வேசர விமானமும் பெற்றுள்ள தென்திசைக் கோட்ட ஆலமர்அண்ணல் விரிசடையராய் மகர, பனையோலைக் குண்டலங்களுடன் பின்கைகளில் பாம்பும் தீச்சுடரும் ஏந்தி, வல முன் கையைச் சின்முத்திரையிலிருத்தி வீராசனத்தில் உள்ளார். இட முன் கையில் சுவடி. அண்ணலின் இருபுறத்தும் பக்கத்திற்கிருவராய் முனிவர்கள்.

மேருமண்டபம்

வளாகத்தின் வடமேற்கில் சட்டநாதர் திருமுன்னின் வலப்புறம் அமைந்துள்ள மேருமண்டபத் திருமுன் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்த மூன்று மண்டபங்கள், ஒருதள வேசர விமானம் இவற்றைப் பெற்றுள்ளது. இவை அனைத்துமே சட்டநாதர் திருமுன் போல வெற்றுத்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளன. வெற்றுத்தளத்தின் தாங்குதளம் காணக்கூடவில்லை. அதன் நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவரும் கூரையுறுப்புகளும் பூமிதேசமும் செங்கல் கட்டுமானமாய் உள்ளன.

மேருமண்டபத்தின் முகப்பில் 7 படிகள் பெற்ற முன்றில் நான்முகத் தூண்களுடன் அமைந்துள்ளது. அதையடுத்துள்ள முன்மண்டபம் முகமண்டபக் கட்டமைப்புடன் அளவில் சிறியதாய் அமைய, பெருமண்டபம் காரைக் கட்டுமானமாய் மேற்கில் சாளரம் பெற்றுள்ளது. பெருமண்டபத்திற்கும் முகமண்டபத்திற்கும் இடைப்பட்ட ஒடுக்கத்தைக் குடப்பஞ்சரம் அலங்கரிக்கிறது. முகமண்டபமும் விமானமும் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள், பூமொட்டுப் போதிகைகள், மதலை வலபி பெற்றுக் கபோதத்தில் முடிகின்றன. விமானத்தின் சாலைப் புறந்தள்ளல்களில் உள்ள பஞ்சர அலங்கரிப்புப் பெற்ற கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. கிரீவம், சிகரம் இவை வண்ணப்பூச்சுப் பெற்றுள்ளன.

சட்டநாதர் திருமுன் வெற்றுத்தளம்

வளாகத்தின் மேற்குப் பகுதியில் மேருமண்டபத்திற்குக் கிழக்கில் திருநடையின் முடிவில் சட்டநாதர் திருமுன் முன்றில், பெருமண்டபம், இடைமண்டபம், முகமண்டபம், இருதள வேசர விமானம் கொண்டு வெற்றுத்தளத்தின் மீது அமைந்துள்ளது. உபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, உயரக்குறைவான நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கூடுவளைவுகளுடனான கபோதம், பூமிதேசம் பெற்றெழும் 3. 41 மீ. உயர வெற்றுத்தளம் சட்டநாதர் திருமுன்னின் இடை மண்டபத்தை அடுத்துச் சற்று உள்ளடங்கி நீள்கிறது. அதன் முதற் பகுதியிலுள்ள மகரதோரணத் தலைப்பிட்ட நான்கு கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. முகமண்டபம், விமானம் இவற்றிற்காக உள்ளடங்கித் திரும்பும் பகுதியில் கிழக்கிலும் வடக்கிலும் மேற்கிலும் உள்ள கோட்டங்களும் வெறுமையாக உள்ளன.

முன்றில்

உயரமான பாதங்களும் கண்டப்பகுதியும் பெற்றுள்ள கபோதபந்தத் துணைத்தளம் முன்றிலின் முன்னிழுக்கப்பட்ட நடுப்பகுதியின் முகப்பாகியுள்ளது. அதன் இருபுறத்தும் பக்கத்திற்கு ஏழாக அமைந்துள்ள படிகள் முன்றில் மேடைக்கு அழைத்துச் செல்கின்றன. கபோதபந்தப் பாதத்தின் மேbலழும் முன்றில் தூண்கள் மாறுபட்ட அமைப்பினவாய் நாகபந்தம் பெற்ற சதுரம், நான்முகத் தூண்களின் அணைப்புப் பெற்ற செவ்வகம், சதுரம், மீண்டும் நான்முகத் தூண்களின் அணைப்புப் பெற்ற செவ்வகம், தலையுறுப்புகள் என அமைந்துள்ளன. அவற்றின் மீதுள்ள வெட்டுத் தரங்கப் போதிகைகள் கூரையுறுப்புகளைத் தாங்குகின்றன.

அலங்காரத் தூண்கள்

முன்னிழுக்கப்பட்ட நடுப்பகுதியின் கூரையைத் தாங்கும் தூண்கள் ஒட்டுத்தூண்களாக எண்முகத் தூண்களையும் அவற்றின் முன்னிருக்குமாறு குதிரை வீரர்களைப் பெற்ற பெருந்தூண்களையும் பக்கத்திற்கொன்றாகக் கொண்டுள்ளன. அமர்யாளிகள் தாங்கும் இத்தூண்களின் முகப்பிலும் பக்கப் பகுதிகளிலும் வாள், கேடயம் ஏந்திய வீரர்களும் கொடி, பதாகை, குடை உயர்த்திய அலுவலர்களும் புகைப்பான் (ஹூக்கா) ஏந்திய ஊழியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஊர்த்வதாண்டவ ஓவியம்

முன்றிலின் சுவர்கள், தூண்களின் மேற்பகுதிகள், கூரை என அனைத்தும் ஓவியங்களால் நிரப்பப்பட்டுள்ளன. அவற்றுள், சிவபெருமானின் ஊர்த்வதாண்டவம் காட்டும் கிழக்குச் சுவர் ஓவியம் சிறப்பாக உள்ளது. மகர, பனையோலைக் குண்டலங்களுடன் வலக்காலை உயர்த்தி, இடக்காலை முயலகன் மீது இருத்தி, புலித்தோல் ஆடை அணிந்து, முப்புரிநூல், உதரபந்தம் இவற்றுடன் எட்டுக்கைகளிலும் மலர்ச்செண்டுகள் சுற்றி ஊர்த்வதாண்டவமிடும் இறைவனின் சடைமகுட முகப்பில் மண்டையோடு; இடப்புறம் பிறை. வலக்கைகளில் முன்கை காக்கும் குறிப்பில் அமைய, பிற கைகளில் கீழிருந்து மேலாகத் தூபக்கலசம், பாம்பு சுற்றிய உடுக்கை, பரசு இவை அமைந்துள்ளன. இடக்கைகளில் முன்கை தொடையில் அமர, பிற கைகளில் கீழிருந்து மேலாக மணி, தீ, மான் உள்ளன.

ஆடும் இறைவனின் வலப்புறம் பின்கைகள் பாசம், அங்குசம் ஏந்த முன்கைகள் தந்தம், மோதகம் கொள்ள, இடம்புரியாய் ஊர்த்வஜாநுவில் பிள்ளையாரும் அவரை அடுத்துத் தாளம் ஒலிப்பவர்களாய் நான்முகன், பிருங்கி இவர்களும் வீணையுடன் நாரதரும் பதஞ்சலி உள்ளிட்ட முனிவர்களும் நிற்க, இடப்புறம் வலக்கையில் வேலேந்தி, இடக்கையை அர்த்தரேசிதத்தில் வீசி ஊர்த்வஜாநுவில் முருகன் காட்சிதருகிறார். அவருக்கு இடப்புறம் சக்கரத் தளத்தில் இருத்திய ஐமுகக் குடமுழவை அக்கறையுடன் வாசிக்கும் விஷ்ணுவும் அடுத்து மத்தளத்துடன் நந்தியும் வீணையுடன் தும்புருவும் முனிவர்களுடன் நிற்கின்றனர். இவ்வரிய ஊர்த்வதாண்டவக் காட்சி முன்றிலுக்குப் பெருமையும் எழிலும் சேர்க்கிறது.

பெருமண்டபம்

பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ள பெருமண்டபத்தின் சுவரில் காணப்படும் மகரதோரணத் தலைப்பிட்ட மூன்று கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. பூமொட்டுப் போதிகைகளுடன் பெருமண்டபக் கூரை தாங்கும் தூண்கள் கபோத பந்தப் பாதம், நாகபந்தத்துடனான செவ்வகம், எண்முக உடல், தலையுறுப்புகள் கொண்டுள்ளன. தூண்களின் செவ்வகங்களுள் சில, சிற்பங்கள் பெற்றுள்ளன. அவற்றுள் மகிடாசுரமர்த்தினியின் சிற்பம் குறிப்பிடத்தக்கது. மண்டபத்தின் வடகிழக்கிலும் வடமேற்கிலுமுள்ள மேடைகளில் ஆடவல்லான் உள்ளிட்ட செப்புத்திருமேனிகள் இடம்பெற்றுள்ளன. மண்டபச் சுவர்களும் கூரையும் ஓவியங்கள் பெற்றுள்ளன. இருபுறச் சுவர்களிலும் மேலிருக்குமாறு காட்டப்பட்டுள்ள போதிகைகளின் முகப்புகளில் பூதங்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இடைமண்டபம்

பெருமண்டபக் கட்டமைப்பிலேயே அமைந்துள்ள இந்த மண்டபச் சுவரின் மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டம் வெறுமையாக உள்ளது. மண்டபக் கூரையை முச்சதுர, இரு கட்டு உடல் பெற்ற தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகைகளுடன் தாங்குகின்றன. தூண்களின் கீழ், இடைச் சதுரங்கள் நாகபந்தம் பெற்றுள்ளன. மண்டப வாயிலில் இருபெரும் குத்துவிளக்குகள் காட்சிதருகின்றன.

முகமண்டபம்

பெருமண்டபம் இடைமண்டபம் போலவே கட்டமைப்புப் பெற்று, விளக்குத் தோரணத்துடனான வாயிலுடன் விளங்கும் முகமண்டபத்தின் சுவர்க் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. வாயிலின் இருபுறத்தும் காணப்படும் விமானச் சுற்றுக்கான வழி அடைபட்டுள்ளது. மண்டபத்துள் பலித்தளம் அமைந்துள்ளது.

விமானம்

பத்மஉபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளுடன் 4. 76 மீ. பக்கமுடைய சதுரமாய் விளங்கும் விமானத்தின் கீழ்த்தளம் முப்புறத்தும் மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்கள் கொண்டுள்ளது. மேற்றளமும் வேசர கிரீவம், சிகரம் இவையும் செங்கல் கட்டுமானங்களாக அமைய, சுவர்க் கோட்டங்களும் ஆரஉறுப்புகளும் கிரீவகோட்டங்களும் வெறுமையாக உள்ளன.

சட்டை நாதர்

கருவறையில் பித்தளைத் தகடு அலங்கரிப்புப் பெற்ற மேடையில் சட்டநாதரும் அவர் தேவி அமிர்வல்லியும் இடம்பெற்றுள்ளனர். பத்துத் திருக்கைகளுடன் நின்றகோலத்தில் காட்சிதரும் சட்டைநாதரின் வலக்கைகளில் முன்கை காக்கும் குறிப்புக் காட்ட, பிற கைகளில் சூலம், கத்தி, அங்குசம், உடுக்கை உள்ளன. இடக்கைகளில் முன்கை உருள்பெருந்தடி மேல் அமர, பிற இடக்கைகளில் தலையோடு, கேடயம், பாசம், பாம்பு இவை உள்ளன. சட்டைநாதரின் இடப்புறம் வலக்கையைக் கடகத்தில் கொண்டு, இடக்கையை நெகிழ்த்தியுள்ள தேவி அண்மைக் காலத்தவர்.

குறிப்புகள்

1. இம்மாடக்கோயிலை அறிமுகப்படுத்தியவர் திரு. க. இராமச்சந்திரன். ஆய்வு நாள் 30. 5. 2010. உடனிருந்து உதவிய திரு. யோ. மோகன் குருக்கள் நன்றிக்குரியவர்.
2. இக்கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தவர் கா. இராமச்சந்திரன். படித்துப் படியெடுத்தவர் பேராசிரியர் முனைவர் மு. நளினி.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.