http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 109

இதழ் 109
[ ஜூலை 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 6
Kudumiyanmalai - 3
நாகை சட்டைநாதர் மாடக்கோயில்
கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோயில்
இசையால் இசையும் இடைமருதூர் இறைவன்
இதழ் எண். 109 > கலைக்கோவன் பக்கம்
காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 6
இரா. கலைக்கோவன்
சுற்றாலைக் கோயில்கள் - திருச்சுற்று

அழகு கொஞ்சும் ஆடற்சிற்பங்களைக் கொண்டு இருக்கும் விசுவநாதர் திருமுன்னை அடுத்து மேற்குத் திருச்சுற்றின் மையத்தில் ஆறுமுகப் பெருமானின் சுற்றாலைக் கோயில். அவையடுத்து யானைத் திருமகள். வடபுறத்தில் கொற்றவைக்கென்று புதிய திருமுன். அதையடுத்து சண்டேசுவரர்.

மையக் கோயிலின் கருவறையும் உள்மண்டபமும்தான் சோழர் காலத் திருப்பணி. இடைநாழிகை, முகமண்டபம், முன் மண்டபன் என்பன பிற்காலத்தவை.

கருவறைத் தாங்குதளத்தின் பெரும்பகுதி மண்ணில் புதைந்துள்ளது. விருத்த குமுதமே மண்ணுக்கு மேல் காட்சியளிக்கும் தாங்குதள முதல் நிலை. கண்டத்திற்கு மேல் யாளி வரிமானம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. தேவ கோட்டங்கள் தென்புறம் தவிர வெறுமையாக உள்ளன. இருந்த சிற்பங்கள் என்னவாயினவோ தெரியவில்லை!




தென்புறக் கோட்டத்தில் நந்தி நாயகர் நெடிய திருமேனியராய்க் காட்சி தருகிறார். சோழர் காலத்துச் சிற்பமென்பதை அதன் அழகும் அமைப்புமே காட்டிக் கொடுக்கின்றன. வல முன் கையைக் கட்ய வலம்பிதமாய்க் கொண்டிருக்கும் இவரது இட முன் கை காளையின் தலை மீது பொருந்தியுள்ளது. பின் கைகளில் அக்கமாலையும் மழுவும் கொண்டுள்ள இப்பெருமானின் முகம் இலேசாய்ச் சிதைந்துள்ளது. இவரது திருமேனிக்கு முன்னால் பிற்காலத்திய தென்திசைக் கடவுள் ஒருவர் காட்சி தருகிறார். சின்முத்திரை காட்டும் இவரது வல முன் கையில் அக்கமாலை. வலப் பின்கையில் முத்தலை ஈட்டி. இட முன் கை ஏடேந்தப் பின்கை பாசத்தைக் கொண்டுள்ளது.

நிலமளந்த கோல்

உள் மண்டபத்துத் தென்புறச் சுவரில் யாளி வரிக்கு மேலாக இப்பகுதிகளில் நிலம் அளக்கப் பயன்படுத்தப்பட்ட கோலொன்று இரண்டு கூட்டல் குறிகளின் இடைப்பட்ட பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது (21). இதன் அளவு இன்றைய மெட்ரிக் முறையில் நான்கு மீட்டராகும். இந்த அளவுகோலின் அருகிலேயே 'நிலமளந்த கோல்' என்ற இதன் பெயர் வெட்டப்பட்டுள்ளது. இக்கோல் கொண்டுதான் இப்பகுதி நிலங்கள் அளக்கப்பட்டன என்பதற்கும், இக்கோல் 'பெருங்கோல்' என்னும் பெயரால் வழங்கப்பட்டது என்பதற்கும் அந்த நல்லூர் வடதீர்த்தநாதர் கோயிலில் காணப்படும் முதலாம் இராசராசனின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று(22) வலிமையான சான்றாகி நிற்கிறது. 'திருச்செந்துறை ஸ்ரீ விமானத்து வெட்டிக் கிடக்கும் பெருங்கோலால் நிலம் மூன்று மாவும்' என்ற இக்கல்வெட்டு வரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சோழர் காலத்து நீட்டலளவையொன்று பெயருடனும் அளவுடனும் மட்டுமல்லாது கல்வெட்டுச் சான்றுடனும் கிடைத்திருப்பது பெரும் பேறாகும். இதை வெளிப்படுத்திய பெருமை டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தையே சாரும்.

இதே போன்ற அளவுகோல்கள் பல திருச்சி மாவட்டத்தின் பல கோயில்களில் காணப்படுகின்றன. திருப்பைஞ்ஞீலியில் இரண்டு கோல்கள் (23) திருத்திய மலையில் இரண்டு கோல்கள் (24) திருமழபாடியில் ஒரு கோல் (25) என்று பல இடங்களில் நிலமளந்த கோல்கள் வெட்டப்பட்டுள்ளன. அண்மையில் திண்டிவனத்தருகேகூட ஒரு நிலமளந்த கோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது(26). இதுவே முதலாம் இராசராசன் காலத்தில் நிலமளக்கப் பயன்பட்டதாக வெளியாகியிருந்த செய்தி பிழையானது(27). இந்நிலமளந்த கோல்கள் பற்றிச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் பேராசிரியர் முனைவர் சண்முகம் அவர்கள்(28). ஒரு எம்பில் பட்ட ஆய்வேடே செய்யுமளவுற்கு நிலமளந்த கோல்கள் பற்றிய செய்திகள் நிறைவாய்க் கிடைத்துள்ளன.

பூதவரி

மையக் கோயிலின் புறச்சுவர்களில் அரைத்தூண்களும் அவற்றின் மேல் பூதவரியும் அதையடுத்துக் கொடுங்கையும் அமைந்துள்ளன. இப்பூதவரி சிறப்புக்குரிய விதத்தில் வடிக்கப்பட்டுள்ளது. சில கணங்கள் அர்த்த ரேசிதத்திலும் கொடி, வேழ முத்திரைகளிலுமாய்க் கைகளை அமைத்து ஆடல் நயங்களை அள்ளித் தெளிக்க, அருகிலிருக்கும் இன்னும் சில கணங்கள் கழுத்திலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் சிறு மத்தளம் மற்றும் தாளம், குடமுழவு ஆகிய இசைக்கருவிகளை இயக்கியபடி இனிய சூழலில் இதமாய் மூழ்க, பிற கணங்கள் பார்வையாளர்களாய் வியப்பையும் களிப்பையும் முகத்தில் தேக்கி விரிந்த விழிகளில் காட்சிகளை வாங்கிக் கனவுலக மயக்கத்தில் கண்களுக்கு விருந்தாகின்றன. இந்தக் கணங்களுக்கிடையே கணங்களின் தலைவர்களாம் நந்திகேசுவரரும் பிள்ளயாரும் கூடப் பூதவரியின் செழிப்பான சான்றாகும்.

விமானக் கழுத்தில் வியப்பூட்டும் ஆடல்கள்

கருவறையின் இரண்டாம் தளம் இரு நிலைகளாய் அமைந்துள்ளது. இரண்டாம் நிலையில் அதாவது கழுத்துப் பகுதியின் கீர்த்தி முக மாடங்களில் விமான தேவதைகள் அமைய அவற்றின் இருபுறமும் ஆடற்கோலங்களில் அழகியரைக் காணலாம். மூன்றே இடங்களில் ஆடவர்களும் இடம் பெற்றுள்ளனர். அடி முதல் முடிவரை கருங்கல்லால் ஆன இக்கோயிலின் இந்தக் கழுத்துப் பகுதி ஆடற்சிற்பங்களும் பிற எழிலார்ந்த இரண்டாம் தளச் சிற்ப வடிவங்களும் குடமுழுக்கின் பெயரால் கொடுமையான சேதத்திற்கு ஆளாகியுள்ளன.

உதிரத்தைக் கொட்டி உழைப்பை வார்த்து ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நம் அறிவார்ந்த முன்னோர் உருவாக்கிய இந்தக் கலைப் புதையல்கள் கலையுணர்வேயற்ற சிலரால் கீழ்மைப்படுத்தப்பட்டுள்ள வேதனையை என்னென்பது! கையில் கிடைத்த வண்ணங்களையெல்லாம் இந்தக் கலையெழில் மேனிகளில் கண்டபடி பூசி இவற்றின் அழகுக்கே உலை வைத்திருக்கிறார்கள். ஆயிரமாய்க் கொட்டினாலும் ஆர்வமாய் உழைத்தாலும் இன்றைக்கு நம்மால் இந்தச் சிற்ப அற்புதங்களில் ஒன்றைக்கூட உருவாக்க முடியாது. நளினத்தையும் ஆடல் நயத்தையும் பெண்மையின் ஒல்காப் பேரெழிலையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த இந்தச் சிற்பங்கள் இப்போது விரச உணர்வூட்டும் விகார வடிவங்களாகிவிட்ட கொடுமைக்கு யாரை நோவது! கண் சிமிட்டிக் கதைகள் கோடி பேசிய இந்தச் சிற்பக் காவியங்கள் இன்று சிறகொடிந்த பறவைகளாய்ச் சீரழிந்து நிற்கின்றன. இந்தச் சிற்பங்களுக்கெல்லாம் வண்ணம் பூசவில்லையென்று யார் அழுத து! இப்போது தங்கள் தோற்றங்களைக் கண்டு அந்தச் சிற்பங்களே கதறி அழுவது போலல்லவா ஆகிவிட்டது! நல்ல வேளையாகக் குடமுழுக்கிற்கு முன்னெடுத்த ஒளிப்படங்கள் மையத்தின் தொகுப்பில் இருந்த தால் அவற்றைப் பார்த்து மனதை ஆற்றிக்கொள்ள முடிகிறது.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.