http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 111

இதழ் 111
[ செப்டம்பர் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

கதவுகள்
தேவூர்
கோமுகம்
Arivar Koil - 1
தென்னவன் தோள்துஞ்சிய வேப்பம்பூமாலையே!
இதழ் எண். 111 > கலையும் ஆய்வும்
நாகபட்டினம் மாவட்டம் கீழ்வேளூருக்கும் வலிவலத்துக்கும் இடையில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது பாடல் பெற்ற[1] ஊரான தேவூர். துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுடனான கோபுரத்தின் கீழ்த்தளத்தில் தூண் பலகையில் பின்னங்கால்களை ஊன்றிக் கபோதம் தாங்கும் தாவுயாளிகள் அழகுறக் காட்சிதருகின்றன. சுதையுருவங்களால் நிரப்பப்பட்டுள்ள இம்முத்தளக் கோபுர வாயிலுள் நுழைந்ததும் வெளிச்சுற்றின் நடுவிருக்கையாய் வெற்றுத்தளத்தின் மீது விளங்கும் மாடக்கோயிலைக் காணலாம்.[2]

சுற்று

கோபுரத்திற்கும் மாடக்கோயிலுக்கும் இடைப்பட்ட சுற்றுவெளியில் கொடிமரம், பலித்தளம், நந்திமண்டபம் இவை உள்ளன. சுற்றின் தெற்கில் உள்ள மண்டபத்தில் திருத்தொண்டர்கள், சண்டேசுவரர், நால்வர் உள்ளனர். தென்மேற்கில் ஒருதள வேசரமாய் வலம்புரிப் பிள்ளையார் திருமுன்னும் மேற்கில் ஒருதள வேசரமாய் வள்ளி, தெய்வானையுடனான முருகன் திருமுன்னும் ஒருதள நாகரமாய் யானைத்திருமகள் திருமுன்னும் உள்ளன.

சுற்றின் வடமேற்கில் முன்றில், முன்மண்டபம், பெருமண்டபம், முகமண்டபம் பெற்ற ஒருதள வேசர விமானத்துடன் தேன்மொழி அம்மையின் திருமுன் உள்ளது. முன் மண்டபத் தூணொன்றில் அஞ்சலியில் காணப்படும் அடியவர் இம்மண்டபத்தை எடுத்தவராகலாம். வடக்குச் சுற்றில் அகல்யலிங்கம், உயரமான மேடையில் ஒருதள வேசர விமானத்துடன் கெளதம லிங்கம் இவற்றிற்கான திருமுன்களும் வடகிழக்கில் முன்றில், பெருமண்டபம் என அமைந்துள்ள ஆடவல்லான் திருமுன்னும் உள்ளன. வடகிழக்கு மூலையில் மதிலை ஒட்டியுள்ள அறைகளில் இலிங்கத்திருமேனிகள், அம்மன் சிற்பங்கள் அமைய, கிழக்கு அறைகளில் கதிரவன், பைரவர், சனீசுவரன் சிற்பங்களும் ஒன்பான்கோள் மேடையும் உள்ளன. பெருமண்டபத்திற்கான வெற்றுத்தளம் அருகே ஒருதள நாகர விமானத்தில் சண்டேசுவரர் உள்ளார்.

வெற்றுத்தளத்தின் மீது விமானம், முகமண்டபம், பெரு மண்டபம், முன்மண்டபம் என இறைவன் கோயிலும் அதன் தென்புறத்தே விமானம், முகமண்டபம், பெருமண்டபம் என சோமாஸ்கந்தர் திருமுன்னும் அமைந்துள்ளன.


தேவூர் - வெற்றுத்தளத்தின் மீது விமானம்


வெற்றுத்தளம்

பிரதிபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, சதுரபாதங்களின் மீதெழும் எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், ஆழமற்ற கூடுவளைவுகளுடனான கபோதம் பெற்றுள்ள 2. 93 மீ. உயர விமான வெற்றுத்தளத்தின் வலபி பூதவரி பெற்றுள்ளது. அதில், இசைக்கருவிகளை இசைக்கும் பூதங்களையும் ஆடற்கணங்களையும் காணமுடிகிறது. ஒரு பூதத்தின் கண்களை அதன் இரு புறத்தும் உள்ள பூதங்கள் ஆளுக்கொன்றாகப் பிடுங்குமாறு ஒரு காட்சி அமைந்துள்ளது.

கபோதக்கூடுகளில் ஆடற்பெண்கள், கழைக்கூத்து, உச்சிஷ்டகணபதி முதலிய சிற்பங்கள் உள்ளன. விமானஞ் சார்ந்த வெற்றுத்தளத்தின் சாலைப்பத்திகளும் கர்ணபத்திகளும் புறந்தள்ளலாக அமைய, ஒடுக்கங்களில் குடப்பஞ்சரங்கள். சாலைப்பத்திக் கோட்டங்களில் தெற்கில் ஆலமர் அண்ணலும் மேற்கில் விஷ்ணுவும் வடக்கில் நான்முகனும் உள்ளனர். பத்திகள் வேதிகைக்கு மாற்றாகப் பட்டிகை கொண்டுள்ளன. விமான வெற்றுத்தளக் கட்டமைப்பில் உள்ள முகமண்டப வெற்றுத்தளக் கோட்டங்களில் தெற்கில் பிள்ளையாரும் வடக்கில் மகிடாசுரமர்த்தனியும் உள்ளனர்.

வலக்காலை முயலகன் முதுகின்மீது இருத்தி, வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் வலப்புறம் பாம்பும் அக்கமாலையும் அமைய, இடப்புறம் தீச்சுடர் உள்ளது. வல முன் கை சின்முத்திரை காட்ட, இட முன் கையில் சுவடி. விரிசடையாய்க் காட்டப்பட்டுள்ள தலைமுடியின் உச்சியில் மண்டையோடு, வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம், கழுத்தணிகள், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை அணிந்துள்ள இறைவனின் தலையருகே வலப்புறத்தே பாம்பொன்று படமெடுத்துள்ளது.

கிரீடமகுடம், பட்டாடை அணிந்து சமபங்கத்தில் நிற்கும் விஷ்ணுவின் பின்கைகளில் சங்கு, சக்கரம். முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை கடியவலம்பிதமாக உள்ளது. சமபங்கத்தில் சடைமகுடம், வஸ்திர முப்புரிநூல், பூட்டுக்குண்டலங்கள் இவற்றுடன் காட்சிதரும் நான்முகனின் பின்கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் உள்ளன. முன் கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை கடிய வலம்பிதமாக உள்ளது.

பெருமண்டபம், முன்மண்டபம் இவற்றிற்கான வெற்றுத் தளம் வடபுறத்தே பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, சதுர பாதங்களின் மீதெழும் இந்திரகாந்தத் தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றெழச் சுவரில் பலவாய்க் கோட்டப்பஞ்சரங்கள்.

விமானம்

பிரதிபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நாகபந்தங்கள் பெற்ற சதுர பாதங்களின் மீதெழும் எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்ட விமானத்தின் கீழ்த்தளத்தில் மூன்று பத்திகளுமே புறந்தள்ளியுள்ளன. கர்ணபத்திகளினும் கூடுதலாக முன்தள்ளியுள்ள சாலைப்பத்திகளின் கோட்டப்பகுதிகள் மேலும் புறந்தள்ளியுள்ளன. கிழக்கு மேற்காக 6. 32 மீ. நீளமும் தென்வடலாக 6. 18 மீ. அகலமும் பெற்றுள்ள கீழ்த்தளத்தின் தூணடிகள் கொடிக்கருக்குகள் கொண்டுள்ளன.

சாலைப்பத்திகளை எண்முக அரைத்தூண்களும் அப்பத்திஷ களிலுள்ள கோட்டங்களைச் சட்டத்தலை பெற்ற உருளை அரைத்தூண்களும் அணைத்துள்ளன. சாலைப்பத்திகளின் தாங்குதள உறுப்புகளில் ஜகதி பத்மஜகதியாக அமைய, வேதிகைத்தொகுதியின் மேலுறுப்பாகக் கபோதம் இடம் பெற்றுள்ளது. கோட்டங்களில் தெற்கில் வலக்காலை முயலகன் முதுகின்மீது இருத்தி, வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் அக்கமாலையும் பாம்பும் உள்ளன. வல முன் கை சின்முத்திரை காட்ட, இட முன் கையில் சுவடி. வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம், கழுத்தணிகள், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை அணிந்துள்ள இறைவனின் விரிசடையாய்க் காட்டப்பட்டுள்ள தலைமுடியின் உச்சியில் மண்டையோடு.

மேற்கு, வடக்குக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. பத்திகளின் ஒடுக்கங்களிலும் சாலைப்பத்தி, சாலைக்கோட்ட இடைவெளிகளிலும் குடப்பஞ்சரங்கள். பத்திக்கு இரண்டு கூடுவளைவுகள் அமையப்பெற்ற தளக்கூரையின் மேலே நாற்புறத்தும் கர்ணகூடங்கள். கிரீவமும் சிகரமும் வேசரமாக அமைய, கிரீவகோட்டங்களில் தெற்கில் வீராசனத்தில் வல முன் கையைக் காக்கும் குறிப்பில் இருத்தி, இட முன் கையைத் தொடை மீது வைத்துள்ள ஆலமர்அண்ணல் பின்கைகளில் பாம்பும் தீச்சுடரும் கொண்டு காட்சிதருகிறார். மேற்கில் பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, கிரீடமகுடம், பட்டாடை இவற்றுடன் பரமபதநாதராய்க் காட்சிதரும் விஷ்ணுவின் வல முன் கை இருக்கையில் அமர, இட முன் கை சிதைந்துள்ளது. வடக்கில் முன்கைகளில் காக்கும், அருட்குறிப்புக் காட்டிப் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகையுடன் சுகாசனத்தில் நான்முகன். கிழக்குக் கோட்டத்தில் சிவபெருமான் சுகாசனத்தில் உள்ளார்.

முகமண்டபம், பெருமண்டபம்

விமானத்தை அடுத்துள்ள, பிரதிபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர் பெற்ற முகமண்டபத்தில், உருளை அரைத்தூண்கள் அணைத்த சாலைப்பத்தி, ஜகதிக்கு மாற்றாகப் பெருந்தாமரையும் மேற்கம்புக்கு மாற்றாகக் கபோதமும் கொண்டுள்ளது. விமானத்திற்கும் முகமண்டபத்திற்கும் இடைப்பட்ட ஒடுக்கத்தில் தெற்கில் கோட்டப்பஞ்சரமும் அதன் உள்çடாகச் சாளரமும் உள்ளன. வடக்கில் குடப்பஞ்சரம். சாலைக்கோட்டங்கள் வடக்கிலும் தெற்கிலும் மகரதோரணத் தலைப்புடன் வெறுமையாக உள்ளன. பெருமண்டபம், தாங்குதளமற்ற வெறுஞ்சுவரும் கூரையுறுப்புகளும் கொண்டுள்ளது.

முன்மண்டபத்தின் புறச்சுவர் வடபுறத்தே பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, சதுர பாதங்களின் மீதெழும் நான்முகத் தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றெழச் சுவரில் பலவாய்க் கோட்டப்பஞ்சரங்கள்.

முன்மண்டபம்

முன்மண்டபத்திற்கான கிழக்கு வெற்றுத்தளம் சோமாஸ்கந்தர் திருமுன் பெருமண்டப வெற்றுத்தளம் போலவே தாங்கு தளம் இல்லாமல் நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவரும் கூரையுறுப்புகளும் பெற்றுள்ளது. அதன் தென்கிழக்குப் பகுதியில் இருபது படிகள் அமைந்துள்ளன. படிகளின் இருபுறத்தும் அமைந்துள்ள சிறிய ஒருதள வேசர விமானங்களில் தெற்கில் பிள்ளையாரும் வடக்கில் முருகனும் உள்ளனர். சுவரின் வட கோடிப்பகுதியில் உள்ள ஒருதள வேசர விமானத்தில் இந்திர இலிங்கேசுவரர் எழுந்தருளியுள்ளார். படிகள் முன்மண்டபத் தென்கிழக்கில் அமைந்துள்ள சோமாஸ்கந்தர் திருமுன்னுக்கு அழைத்துச் செல்கின்றன. சோமாஸ்கந்தர் வளாகத்தின் தொடக்கத்தில் உள்ள பெருமண்டபத்தின் வடக்கிலுள்ள வாயில் இறைவன் கோயில் முன்மண்டபத்திற்கு வழிவிடுகிறது.

முன்மண்டபத்தின் கிழக்கில் உள்ள முச்சதுர, இருகட்டு உடல் பெற்ற தூண்கள் தாங்கும் செவ்வக முன்றில் விமானத்தின் வடசுற்றுக்கு வழிவிடுகிறது. அதன் பின் அமைந்துள்ள பெருமண்டபத்தின் வடபுறத்தே உள்ள மேடையில் செப்புத் திருமேனிகள் காணப்படுகின்றன. இறை ஊர்திகளும் உள்ளன. அதையடுத்துள்ள மண்டபத்தின் தெற்குச் சுவரில் நான்கு சிற்பங்கள் தரையளவினவாக பதிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இரண்டு வணங்கிய நிலையிலுள்ள ஆடவர்களையும் ஒன்று வணங்கிய நிலையிலுள்ள இணையரையும் காட்ட, மற்றொன்று, மார்பின் இடப்புறம் வாளைத் தழுவியபடி வணங்கிய நிலையில் உச்சிக்கொண்டை, தாடி, மீசை, பட்டாடை இவற்றுடன் காட்சிதரும் ஆடவரைப் படம்பிடிக்கிறது. இம்மண்டபத்தை நான்முக அரைத்தூண்கள் தாங்குகின்றன. அவற்றுள் ஒன்றில் வணங்கிய நிலையில் ஆடவர் உள்ளார். மற்றொரு தூணில் பெண் சிற்பம் காணப்படுகிறது.

பேரளவினதாக உள்ள முகமண்டப வாயிலின் இருபுறத்தும் உள்ள கோட்டங்களில் காவலர்கள் இடம்பெற்றுள்ளனர். பின்கைகளால் இறைவனைப் போற்றும் இருவரும் சடை மகுடம், பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணிகள், கோரைப்பற்கள், சிற்றாடை, கால்களுக்கிடையிலான மணிமாலை பெற்று ஒருபாதத்தைக் கருவறை நோக்கியும் மறுபாதத்தை அருகில் உள்ள மழுவின் மீது நிறுத்தியும் காட்சிதருகின்றனர். இருவருமே வல முன் கை அச்சுறுத்த, இட முன் கையை மழுவின் மீது நிறுத்தியுள்ளனர். கருவறையில் தேவபுரீசுவரர் சதுர ஆவுடையாரில் உருளைப்பாணம் கொண்டு இலிங்கத்திரு மேனியராய் எழுந்தருளியுள்ளார்.

சோமாஸ்கந்தர் திருமுன் வெற்றுத்தளம்

இறைவன் விமானத்தின் தென்புறம் விமானம், முகமண்ட பம், பெருமண்டபம் பெற்று அமைந்திருக்கும் சோமாஸ்கந்தர் திருமுன்னின் வெற்றுத்தளம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி, எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரை கொண்டுள்ளது. விமானப்பகுதியில் மட்டும் சாலைப்பத்தி புறந்தள்ளி உள்ளது. சாலைக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ள முகமண்டப வெற்றுத்தளம் கோட்டம் எதுவும் பெறவில்லை. தாங்குதளம் பெறாத பெருமண்டப வெற்றுத்தளச் சுவரை நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன.

விமானம்

சோமாஸ்கந்தர் விமானம் கபோதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், கூரையுறுப்புகள் பெற்று ஒருதள வேசரமாய்க் காட்சியளிக்கிறது. சாலைப்பத்திகளில் வெறுமையான கோட்டப்பஞ்சரங்கள். அதே கட்டமைப்பில் உள்ள முகமண்டபச் சாலைப்பத்தியில் சாளரத்துடனான கோட்டப்பஞ்சரமும் கர்ணபத்திகளில் மகரதோரணத் தலைப்பிட்ட ஆழமற்ற வெறுமையான கோட்டங்களும் உள்ளன. கிரீவ, சிகரக் கோட்டங்களும் வெறுமையாகவே உள்ளன. விமானப் பெருமண்டபம் அதைத் தாங்கும் வெற்றுத்தளக் கட்டமைப்பிலேயே உள்ளது.

சோமாஸ்கந்தர்

சிவபெருமான், உமை, முருகன் விளங்கும் சோமாஸ்கந்தர் தொகுதியில் இறைவனும் இறைவியும் சுகாசனத்தில் உள்ளனர். சடைமகுடம், நீள்வெறுஞ்செவிகள், சரப்பளி, தோள்மாலை, உதரபந்தம், தோள், கை வளைகள், சிற்றாடை கொண்டு விளங்கும் இறைவனின் பின்கைகளில் மானும் மழுவும். முன் கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை கடகத்தில் உள்ளது. சடைமகுடம், ஸ்வர்ணவைகாக்ஷம், அரும்புச்சரம், சரப்பளி, தோள், கடக, கை வளைகள், சிலம்பு அணிந்துள்ள இறைவியின் வலக்கை நீலோத்பலம் ஏந்த, இடக்கை தொடைமீது இருத்தப்பட்டுள்ளது. தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் நிற்கும் முருகன் கரண்டமகுடம், ஸ்வர்ண வைகாக்ஷம் அணிந்துள்ளார். வலக்கையில் மலர்மொட்டு, இடக்கை உமையைத் தாவிப் பிடிக்கும் மெய்ப்பாட்டில் உள்ளது.

அம்மன் கோயில்

பெருமண்டபம், முகமண்டபம், ஒருதள வேசர விமானம் பெற்றுள்ள தேன்மொழி அம்மன் கோயிலின் விமானம் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகை, எண்முக அரைத் தூண்கள் அணைத்த கோட்டப்பஞ்சரங்கள் கொண்ட சுவர், கூரையுறுப்புகள் பெற்றுள்ளது. சுவரில் உள்ள பின்னாளைய சிற்பங்களுள் முருக உலா குறிப்பிடத்தக்கது. கருவறையில் பின்கைகளில் அக்கமாலை, மலர் கொண்டு, பட்டாடை, சடை மகுடம், தோள், கை வளைகள் அணிந்து நிற்கும் இறைவியின் முன்கைகள் காக்கும், அருட்குறிப்பில் உள்ளன.

ஆடவல்லான், உமை

வலக்காலை முயலகன் மீது இருத்தி, இடக்காலை வலப்புறம் வீசி ஆனந்தத் தாண்டவமிடும் இறைவனின் பின்கைகளில் உடுக்கையும் தீச்சுடரும் அமைய, பாம்பொன்று சுற்றியுள்ள வல முன் கை காக்கும் குறிப்புக் காட்டுகிறது. இட முன் கை வேழமுத்திரையில் உள்ளது. விரிசடையின் வலப்புறம் கங்கையைக் கொண்டுள்ள இறைவனின் வலச்செவி வெறுஞ் செவியாக அமைய, இடச்செவியில் பனையோலைக் குண்டலம். கழுத்தில் அரும்புச்சரம், இடையில் சிற்றாடை. கரண்டமகுடம், பட்டாடை, கழுத்தணிகள், கையணிகள் அணிந்து இறைவனின் இடப்புறம் நின்றிருக்கும் உமையின் வலக்கை கடகத்தில் இருக்க, இடக்கை நெகிழ்ந்துள்ளது. செவிகள் நீள்வெறுஞ் செவிகளாகக் காட்டப்பட்டுள்ளன.

கல்வெட்டுகள்

தேவூரிலிருந்து 1904ல் படியெடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளும் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி பதினேழில் பதிவாகியுள்ளன.[3] இரண்டாம் சடையவர்மர் சுந்தர பாண்டியரின் பதினோராம் ஆட்சியாண்டில் (கி. பி. 1287) பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, கோயிலை ஆதித்தீசுவரம் எனக் குறிப்பதுடன், தேவூரை அருமொழிதேவ வளநாட்டுத் தேவூர் நாட்டில் இருந்த ஊராக அடையாளப்படுத்துகிறது. கோயில் திருநாமத்துக்காணியில் இரண்டு வேலி ஒரு மா நிலம் கேயமாணிக்க வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்து மேனிலைப்பாடியான வீரராஜேந்திரபுரத்துக் காணியாளர் தென்குடி அழகியமணவாளர் ஆட்கொண்ட நாயகனுக்குக் கோயிலாரால் 150 பணத்திற்கு விற்கப்பட்டது.

கோயிலில் நிகழும் சிறுகாலைச் சந்திக்குப் பிறகு, தம் பெயரால் ‘ஆட்கொண்ட நாயகன் சந்தி’ என்ற பெயரில் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடொன்று நிகழ்த்துவதற்காக அழகிய மணவாளரால் இந்நிலம் கோயிலாரிடமே வழங்கப்பட்டது. வெள்ளம், பஞ்சம் வந்தபோதும் இச்சந்தி முட்டாது நிறை வேற்றப்படும் என்று கோயிலார் உறுதியளித்தனர். நிலவிலையாகப் பெறப்பட்ட பணம், ‘திருஅக்கிரமண்டபம் முன்பு திருக்கல் செய்து நின்ற குமுதப்படைக்கு மேல் திருக்கல் சாத்த வாங்கிக் கோவளத்து கல் அடிப்பிக்கவும் படவு கூலிக்கும்’ பயன்படுத்தப்பட்டது.

நிலத்திற்கான எல்லைகளைக் குறிக்கும்போது, பிடாரிக் கோயில் பெருவழி, மாம்படுகை, வீரசோழ மயக்கல் இவை குறிக்கப்பட்டுள்ளன. சந்தியின்போது இறைவன் திருமுழுக்கும் திருமேற்பூச்சும் மலரும் விளக்கொளியில் படையலும் பெறுமாறு செய்யப்பட்டது. இந்த ஆவணத்தில் கோயில் தேவர்கன்மி ஈசான பட்டனும் கோயிற் கணக்கு பிரம்ம பிரியனும் தேவூர் நாயகப் பண்டிதனும் கையெழுத்திட்டுள்ளனர்.

இரண்டாம் தேவராயர் காலத்தில் (கி. பி. 1426) வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு மகமை குறித்த பெரிய இருப்பரசரின் ஆணையாக அமைந்துள்ளது. திருவாரூர் உசாவடியைச் சேர்ந்த அகப்பற்று, இறையிலிப்பற்று, பண்டாரவாடை, அமரம், இலிகிதச் சீவிதம் இவை தொடர்பான மகமையாக வேலிக்குத் தூணிப்பதக்கு நெல், மனை ஒன்றுக்கு இரண்டு காசு இறுக்கும்படி மல்லாயி அவ்வையார் பெயரால் நந்தன ஆண்டில் கட்டளையிடப்பட்டது. அந்த ஆண்டு குறைந்த விலையாகப் பணம் ஒன்றுக்கு நெல் முக்குறுணி விற்றது. பின்பு ஆண்டு தோறும் பணம் ஒன்றுக்கு இரண்டு கலம் அல்லது மூன்று கலமாக நெல் விற்றது. இருந்தபோதும் நந்தன ஆண்டுக் கட்டளைப்படியே விகாரி வருடம் வரை முதலாண்டு இருநூறு பொன் குத்தகையும் பின் தொடர்ந்து எண்ûறு பொன் குத்தகையும் செலுத்தப்பட்டது. குத்தகை கொண்ட அதிகாரிகள், ‘நாட்டிலே அன்னியாயத்திலே இரட்டிக்க இலக்கம் எடுக்க நாடு நலங்கியது’

சாறுவாரி ஆண்டில் அண்ணப்பய்யன் திருவாரூர் வந்து இது தொடர்பான கணக்குகளைக் கேட்டார். கண்ணிமந்த நாயன் எண்ணூறு பொன்னுக்கு மாற்றாக இரண்டாயிரம் பொன் தண்டி இறுத்தபடியால் பற்றுடையார் பெருக்க நலங்கினர். இதனால் தேவர்கள் நாயனான பொக்கண உடையார் காலத்தில் உசாவடிக் குத்தகை இறுக்கும்போது இருந்தவாறே இனி நிகழ சிக்கதேவர் ஆணையிட்டார். அதன்படி வலங்கை, இடங்கை சாதியரிடம் ஒரு மவனுக்குக் கால் பணம் கொள்ளுமாறு அமைந்தது. கல்வெட்டு முற்றுப்பெறாமையினாலும் ஆங்காங்கே சிதைந் திருப்பதாலும் முழுச் செய்திகளையும் அறியக்கூடவில்லை.

மன்னர் பெயரும் ஆட்சியாண்டும் அற்ற நிலையில் கோபுரவாயிலின் கூரையின் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, கோயில் ஆண்டார்களில் அரசம்பாடியைச் சேர்ந்த நாயகன் உடையான் என்பாரின் மனைவி உய்யவந்தாள் தேவூர்க் கோயிலில் சேத்ரபாலப்பிள்ளையார் திருமேனியை அமைத்ததுடன் அதற்கான வழிபாடு, படையல் இவற்றிற்காக அரசிச் செறு என்ற பெயரில் அமைந்த நிலத்துண்டொன்றைக் கோயில் சிவ அந்தணரிடம் அளித்தார். எழுத்தமைதியின் அடிப்படையில் இக்கல்வெட்டைக் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினதாகக் கொள்ளலாம்.(4)

குறிப்புகள்

1. 2 : 48, 3: 74. ‘தென்தமிழ்க் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்’ எனும் சம்பந்தரின் பாடலடி குறிப்பிடத்தக்கது.
2. ஆய்வு நாட்கள் 7. 12. 1982, 27. 9. 2008. இக்கோயில் பற்றிய முதல் கட்டுரை 1983 மார்ச்சு மாதத் திருக்கோயில் இதழில், ‘திருத்தேவூர்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
3. SII 17: 561, 562.
4. இக்கல்வெட்டு பேராசிரியர் முனைவர் மு. நளினியால் கண்டறியப்பட்டது.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.