![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 123
![]() இதழ் 123 [ செப் 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
கலைகள் பலவற்றுக்கும் நூல்கள் யாத்து, பயிற்றிப் பலகல்வி தந்த பீடுடைய சமூகம் நம் சங்ககாலத் தமிழ்ச் சமூகம். ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் நம் தமிழர்கள் சிறந்த முன்னோடிகளாய்ப் பெயர் பெற்று விளங்கினர். அந்நாளைய தமிழர்களின் போக்குவரத்து வாகனமாய் விளங்கியது தேர்கள்தான். இஃது பல சங்கப் பாடல்கள்வழி நாம் அறியும் பல நூல்கள் அன்றைய தமிழர் வாழ்வியல் வழக்கில் இருந்துள்ளது என்பது பேயனார் பாடல்வழி நாம் அறியும் அரிய செய்தியாகும். திணை: முல்லை "கார்பயம் பொழிந்த நீர்திகழ் காலை, நுண்ணுயிர் புரந்த தண்ணயம் மருங்கின் நிரைபறை அன்னத்து அன்ன, விரைவரிப் புல்லுனைக் கலிமா மெல்லிதிற் கொளீஇய வன்புஒருன்ட்கு அமையப் பற்றி, முள்கிய பல்கதிர் ஆழி மெல்வழி அறுப்பக் கால் என மருள, ஏறி நூல் இயல் கண்நோக்கு ஒழிக்கும் பண்ணமை நெடுந்தேர் வல்விரைந்து ஊர்மதி - நல்வலம் பெறுந! - அகம்: 234, வரிகள்: 1-9 விளக்கம்: தேரைச் செலுத்தும் தொழிலிலே நல்ல வெற்றித் தன்மையினைக் கொண்ட பாகனே! மேகம் மழைபொழிய, அதனால் வெள்ளம் தோன்றும் காலத்திலே, நுண்மையான அறல்மணல் பரந்த குளிர்ந்த நீர்நிலைப் பக்கங்களிலே, வரிசையாகப் பறத்தலையுடைய அன்னப் பறவைகள் தோன்றும். அவற்றைப் போன்ற வெண்ணிறமுடைய, விரைந்து செல்லும் இயல்பினையுமுடைய, புல்லிய பிடரி மயிரினையுமுடைய, செருக்கு வாய்ந்தவை நின் தேரின் குதிரைகள். அவற்றை மெல்லக் கொண்டு பூட்டிய கடிவாள வாரினை, ஒருங்கே பொருத்தமாகப் பற்றிக் கொள்வாயாக. பல ஆரங்களையுடைய சக்கரங்கள் நிலத்திலே பதிந்து, மென்னில வழியை அறுத்துக்கொண்டு போகுமாறு, வேகத்தால் காற்றோ என மயக்கம் ஏற்படுமாறு, "நூல் நெறி"ப்படி இயன்றதும், கண்ணின் நோக்கினை ஒழிக்கும் பண்ணுதல் அமைந்ததுமான, நெடிய தேரினைச் செலுத்துவாயாக என்பதாம். மேற்கண்டுள்ள பாடல்வழி தேர்நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் வழக்கத்தில் இருந்துள்ளதை அறியலாம். மேலும் நூல்நெறிப் படியே தேர்களை வடிவமைத்து இயக்கியுள்ளனர் நம் முன்னோர்கள். அன்றாட வாழ்க்கையிலும், போர்க்கள வாழ்க்கையிலும் சிறந்த விரைவு வாகனமாய்த் தேர்கள் விளங்கியுள்ளன. பிற்காலக் கல்வெட்டுகள் பல தமிழர்களின் தேர்ப்படை பற்றி வியந்து பேசுகின்றன. நம் சங்ககாலத் தமிழர்கள் கால்தடம் பதிக்காத கலைத்துறையே இல்லை என்பது நம் இலக்கிய நூல்கள் பகரும் அரிய செய்தியாகும். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |