http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 123

இதழ் 123
[ செப் 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

குறளில் கயிறு
புகைப்படத் தொகுப்பு - மண்டகப்பட்டு இலட்சிதாயனம்
மெய்க்காட்டு
இலக்ஷிதாயதனம்
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-6
தேர் இலக்கண நூல்
இதழ் எண். 123 > கலையும் ஆய்வும்
மெய்க்காட்டு
கி.ஸ்ரீதரன்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் செம்பியன்மாதேவி ஊரில் அமைந்துள்ள கைலாசமுடையார் கோயிலில் காணப்படும் உத்தம சோழனது – 15 வது ஆட்சி ஆண்டு கல்வெட்டில், அக்கோயிலில் செம்பியன் மாதேவியாரின் பிறந்தநாளான சித்திரைக் கேட்டை நாளில் மெய்க்காட்டி உண்பதற்காக உத்தமசோழரின் மனைவியான சொன்னமாதேவியார் 507.5 கழஞ்சு பொன் அளித்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இக்கோயிலில் செம்பியன் மாதேவியார் திருநாளான (பிறந்த நாள்) சித்திரைத் திருக்கேட்டை நாள் மெய்க்காட்டி உண்பதாக உத்தம சோழனின் தேவிமார்கள் பொன் தானம் அளித்திருக்கின்றனர். இக்கோயிலிலுள்ள உத்தமசோழனின் மற்றொரு கல்வெட்டும் மெய்க்காட்டி உண்பதற்காக பொன் தானம் அளிக்கப்பட்ட செய்தியை குறிப்பிடுகிறது.

கோபுரப்பட்டி குந்தவைப் பிராட்டி கல்வெட்டு


கோபுரப்பட்டி குந்தவைப் பிராட்டி கல்வெட்டு


திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள கயிலாயமுடையார் கோயிலில் காணப்படும் கல்வெட்டும் ‘மெய்க்காட்டு மெய்க்காட்டி’ என்ற சிறப்பு வழிபாட்டினைப் பற்றி குறிப்பிடுகிறது. முதலாம் ராஜராஜ சோழனது 8 – வது ஆட்சி ஆண்டில் வீரசோழ இளங்கோவரையர் தேவியார் பராந்தகன் ஆதித்த பிடாரி என்பவர் இக்கோயிலில் வழிபாட்டிற்காக சோழமாதேவிச்சதுர்வேதி மங்கலத்துச்சபையாரிடம் பொன் தானமளித்தாள், அப்பொன் தானத்திலிருந்து வரும் வட்டியைக்கொண்டு ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதத்தில் (மாதம் பெயர் சிதைந்துவிட்டது) வரும் அவிட்ட நட்சத்திரத்தில் சோழமாதேவி ஸ்ரீகயிலாயமுடையார் முன் மெய்க்காட்டு மெய்க்காட்டி பிரசஸ்தியை (பெருமைகளை) பூஜிக்க வேண்டும் எனவும், இவ்வாறு வழிபாடு செய்யும் ஒருவனுக்கு ஒரு கழஞ்சு போக மீதி பொன் இவ்வூர் சதுர்வேதி பட்டர்களைச் சேர வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பெரு மெய்க்காட்டு செய்யாது அர்ச்சனை செய்தார்கள் எனில் அந்த ஆண்டில் அவர்களுக்கு சேர வேண்டிய வட்டியைப் பெறுதல் கூடாது என்ற நிபந்தனையும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.

இக்கோயிலில் (சோழமாதேவி) அவிட்டத்திருநாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளன என்பதை அறியமுடிகிறது. இராஜராஜ சோழனின் தமக்கை குந்தவைப்பிராட்டியாரின் பிறந்த நாள் அவிட்டத்திருநாள் என்பதை திருச்சி அருகே உள்ள கோபுரப்பட்டி திருக்கோயிலல் கல்வெட்டினால் அறிய முடிகிறது. பாச்சில் திரு அமல்சுவரம் கோயிலில் குந்தவைப்பிராட்டியார் திருநட்சத்திரமான அவிட்டத்திருநாளின் போது, இப்பகுதியில் அதிகாரியாக இருந்த அவனி முழுதுடையான் மார்த்தாண்டன் உத்தமன் என்பவன் தானம் அளித்த செய்தி குறிப்பிடப்படுவது சிறப்பானது.

செம்பியன்மாதேவி, சோழமாதேவி இரு கோயில்களிலும் அரசியர்களின் பிறந்த நாட்களில் (சித்திரை கேட்டை – (மாதம்?) அவிட்டம்) சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன என்பதை அறியமுடிகிறது. இந்நாட்களில் அவர்களது பெருமைகளைக்கூறி வழிபாடுகள் நடைபெற்றன. இதனைக்குறிப்பிடும் பொழுது கல்வெட்டுகளில் “மெய்க்காட்டு”, “மெய்க்காட்டு மெய்க்காட்டி பிரசஸ்தியை பூஜிப்பானுக்கு” என்ற சொற்றொடர்கள் குறிப்பிடுகின்றன என ஊகிக்க முடிகிறது.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் இரண்டாவது கோபுரத்தினை அடுத்துள்ள மண்டபத்தூண் ஒன்றில் அடியவர் ஒருவர் கைக்கூப்பி வணங்கும் நிலையில் புடைப்புச்சிற்பம் காணப்படுகிறது. இச்சிற்பத்தின் தலைப்பகுதிக்கு மேலே “மெய்க்காட்டுக்கணக்கு ஆடும் அழகியான் சதா சேர்வை” என்ற கல்வெட்டு வாசகப் பொறிப்பு காணப்படுகிறது.


திருவண்ணாமலை சிற்பமும் கல்வெட்டும்


’மெய்க்காட்டு’ என்பது இறைவழிபாட்டில் நடன அசைவுகளுடன் அபிநயத்தவாறே கழைக்கூறி வழிபாடு செய்வதாகும்.

திருவண்ணாமலை கோயிலில் காணப்படும் சிற்பம் மற்றும் கல்வெட்டில் ‘ஆடும் அழகியான்’ என்ப்பெயர் குறிப்பிடப்படுவது அபிநயத்துடன் இறைவனைப் போற்றி வழிபட்டதை உறுதி செய்கிறது எனக் கருதலாம். ‘மெய்க்காட்டு’ என்ற சொற்றொடர் மேலும் ஆய்வுக்குரியதாக விளங்குகிறது!

குறிப்புகள்
1. வரலாறு.காம் இதழ் 73, 74, 75 இராசராசனும் சோழமகா தேவியும் - கி. ஸ்ரீதரன்
2. நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் – தொல்லியல் துறை வெளியீடு – 2007 – பக்கம் – 67, 73, 75, 77
3. தமிழ் நாட்டுக் கல்வெட்டுகள் – 2004 - தொல்லியல் துறை வெளியீடு 2004 - பக்கம் – 14, 15
4. மெய்க்காட்டுக்கணக்கு - கி. ஸ்ரீதரன் – ஆவணம் இதழ் 19 – ஜூலை 2008 – பக்கம் 32
5. அவிட்டமும் சதயமும்–தமிழ்ப் பொழில் – இல. தியாகராஜன் பக்கம் 83.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.