http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 159

இதழ் 159
[ நவம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

பேய் பாடிய பிஞ்ஞகனின் ஆடல்கள்
எடுத்த படியும் அடித்த படியும்
புள்ளமங்கை ஆலந்துறையார் தாங்குசிற்பங்கள்
கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லி
மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 4
ஜப்பானியப் பழங்குறுநூறு - 1 (துளியுதிர் இரவு)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 4
இதழ் எண். 159 > கலையும் ஆய்வும்
புள்ளமங்கை ஆலந்துறையார் தாங்குசிற்பங்கள்
இரா.கலைக்கோவன், மு.நளினி

கட்டமைப்பின் ஒருபகுதியில் நின்று, அமர்ந்து அல்லது தாவிய நிலையில் அக்கட்டமைப்பின் மற்றொரு பகுதியைத் தாங்குமாறு வடிவமைக்கப்படுவன தாங்குசிற்பங்கள். குடைவரைக் காலத்திலேயே பல்லவக் கலைமரபில் தாங்குசிற்பங்களாகத் தாவுயாளிகள் தலையெடுப்பதைக் காணமுடிகிறது. மாமல்லபுரத்துப் பஞ்சபாண்டவர் குடைவரையின் முகப்பும் பெருவராகர் குடை வரையின் ஆரத்தொகுதியும் சிறந்த எடுத்துக்காட்டுகள். ஒருகல் தளிகளில் தொடர்ந்த இத்தாங்குசிற்பங்கள் கற்றளிகளிலும் இடம்பெற்றன. பெரும்பாலும் சிம்மம் அல்லது யாளிவடிவங்களாகவே இவை அமைந்தபோதும் உத்தரமேரூர்ச் சுந்தரவரதப் பெருமாள் கோயில் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் பூதங்களையும் தாங்குசிற்பங்களாகக் காணமுடிகிறது. இக்கோயில் ஆரச்சாலைகளில் தாங்குசிற்பங்களாகக் காணப்படும் வானவர்கள் பல்லவர் படைப்புகளா, பிற்காலத் திருப்பணிகளின் இணைப்புகளா என்பதை அறியமுடியாநிலையில் அவற்றை இவ்வாசிரியர்கள் கொள்ளவில்லை.

முதல்முறையாக முற்சோழர் காலக் கட்டுமானங்களில்தான் வானவர்களையும் ஆடல், இசைக்கலைஞர்களையும் தாங்குசிற்பங்களாகக் காட்டும் மரபைக் காணமுடிகிறது. வானவர்கள் ஆரஉறுப்புகளிலும் பின்னவர்கள் கீழ்த்தளச் சுவர்த்தூண் பலகைகளிலும் இடம்பெற்றுள்ளனர். புள்ளமங்கை ஆலந்துறையார் போலவே முதற் பராந்தகர் காலக் கட்டுமானங்களான குடந்தை நாகேசுவரம், திருநாமநல்லூர்த் திருத்தொண்டீசுவரம் கோயில்களிலும் இத்தகு ஆடற்சிற்பங்களைக் காணலாம். இவை முற்சோழர் காலக் கலையறிஞர்களின் இணையற்ற படைப்புகள்.

ஆலந்துறையார் விமானத்திலும் முகமண்டபத்திலும் நான்கு விதமான தாங்குசிற்பங்களைக் காணமுடிகிறது. முதல் வகையின கீழ்த்தளத் தூண் பலகைகளின் மேல் நின்று கபோதம் தாங்க, இரண்டாம் வகையின வலபித் திருப்பங்களில் தாவுயாளிகளாக உள்ளன. ஆரச்சாலைகளில் அவற்றின் சிகரம் தாங்குமாறு வேதிகையில் கால் பதித்துள்ள வானவர்கள் மூன்றாம் வகைத் தாங்குசிற்பங்கள். நான்காம் வகையினவாக விமான மூன்றாம் தளச் சுவர்த்திருப்பங்களைத் தாங்கும் தாவுயாளிகளைக் குறிக்கலாம்.

இக்கோயில் விமானத்தின் கீழ்த்தளப் பத்திகள், முகமண்டபக் கிழக்குக் கர்ணபத்திகள் ஆகியவற்றின் அணைவுத்தூண் பலகைகள் மேல் நின்று, தங்கள் தலைகளால் கபோதம் தாங்கும் ஆடல், கருவிக்கலைஞர்கள் இக்கட்டுமானத்திற்கு இணையற்ற எழிலையும் கம்பீரத்தையும் உயிர்ப்பையும் ஊட்டுகின்றனர். இன்றைய பார்வையில் நம் கண்களில் நிறைபவர்களாய் 17 கலைஞர்களே இருப்பினும் இல்லாமைக்குறை கட்டுமானத்தின் எப்பகுதியிலும் தோன்றாதவாறு முழுமை உணர்வை, இருப்பவர்களே வழங்கும் செழுமை சோழர் கலையாற்றலின் சிகரமெனலாம்.

முகமண்டபச் சாலைப்பத்திகளின் தாங்குசிற்பங்களாகத் தெற்கிலும் வடக்கிலும் யாளிவீரர்கள் அமைய, விமானத்தின் வடகிழக்குக் கர்ணகூடத் தாங்குசிற்பம் தாவுயாளியாக உள்ளது. முகமண்டபக் கிழக்குக் கர்ணகூடங்களின் நடு தாங்குசிற்பங்கள் பெருமண்டப இணைப்பில் மறைய, விமானத்தின் தெற்குச் சாலையும் தென்மேற்குக் கர்ணகூடமும் தலைக்கு ஒரு தாங்குசிற்பத்தை இழந்துள்ளன. இவ்விழப்புகள் தேடலும் தவிப்புமாய் நாடுவார் கண்களையன்றிப் பிறர் பார்வைக்குப் படமாக வாய்ப்பில்லை.

இருக்கும் 17 கலைஞர்களில் ஒருவர் ஆடவர். தோலிசைக் கருவி இயக்குநராய் முகமண்டப வடக்குக் கர்ணகூடத்தில் வலஒருக்கணிப்பில் மண்டலநிலையில் உடலமைய, கால்களை சுவஸ்திகமாக்கிச் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், முக்கோண இடைத்தொங்கலுடன் சிற்றாடை எனக் காட்சிதரும் அவரது இடக்கை தோலிசைக்கருவியின் மேல். வலக்கை, கருவியைத் தட்டி இசையெழுப்பும் மெய்ப்பாட்டில்.

இவரைத் தவிர்த்த பிற 16 ஆடல், இசைக்கலைஞர்களும் மண்டலநிலைப் பெண்களே. அவர்களுள் விமான மேற்குச் சாலையிலுள்ள ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் கால்களைக் குறுக்கீடு செய்து சுவஸ்திகக் கோலத்தில் உள்ளனர். அவர்தம் பாதங்கள் பார்சுவம், திரயச்ரம், அக்ரதலசஞ்சாரம், குஞ்சிதம், சூசி எனும் ஐந்துநிலைகளில் அமைய, இரு ஆடலர்கள் மட்டும் இரு பாதங்களையும் ஒரே நிலையில் கொண்டுள்ளனர். விமானத்தின் கிழக்குக் கர்ணபத்தி ஆடலரின் இருபாதங்களும் அக்ரதலசஞ்சாரத்தில். விமான மேற்குச்சாலை கடகக்கை ஆடலரின் இருபாதங்களும் திரயச்ரத்தில். பெரும்பாலான கலைஞர்களின் பாதங்கள் தெளிவுற அமைய, ஓரிரு சிற்பங்களில் தெளிவின்மையும் உண்டு.

சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகளுடன், கழுத்தணிகளாக முத்துமாலை, சரப்பளி, பட்டையணி ஆகியவற்றுள் ஒன்றோ, இரண்டோ கொண்டுள்ள அவர்களுள் சிலரின் கைவளைகள் அடுக்கு அல்லது பட்டை வளைகளாக அமைய, சிலருக்குச் சடைமகுடம் மீறிய சடைக்கற்றைகள் தோளின் வல அல்லது இடப்புறத்தே நெகிழ்ந்துள்ளன.

பெரும்பாலோர் ஒருவளைய இடைக்கட்டும் சிலர் இரு வளைய இடைக்கட்டும் கொள்ள, சிலரது முந்தானை வல அல்லது இடப்புறத்தே நெகிழ்ந்து அவ்வளையங்களை மறைத்துள்ளது. ஆடற்பெண்களுக்கே உரிய இடைத்தொங்கல் அனைவரும் பெற, ஒருவர் அடர்த்தியான இடைத்தொங்கல் பெற்றுள்ளார். பெரும்பாலோரின் இடைத்தொங்கல் அவர்தம் வல அல்லது இடக்கால் ஆடையுடன் இணைக்கப்பட்டுள்ளது. கால்கள் தழுவும் இப்பட்டாடை சிலருக்கு ஒருபுறம் தொடையளவிலும் சிலருக்கு இருபுறத்தும் கணுக்கால்வரையுமென அமைந்துள்ளது.

இவர்களில் மூவர் கருவிக்கலைஞர்கள். இருவர் செண்டுதாளம் இசைக்க, ஒருவர் தோலிசைக்கருவி இயக்குகிறார். இம்மூவருள் இருவர் விமான வடமேற்குக் கர்ணகூடத்தில் அடுத்தடுத்துள்ளனர். முழக்குக் கலைஞரான முதலாமவர் இடப்பாதத்தை சூசியில் நிறுத்தி, அதன் பின் வலப்பாதத்தைத் திரயச்ரமாகக் குறுக்கீடு செய்து நடுத்தொங்கலும் சிற்றாடையுமாய் வலஒருக்கணிப்பிலுள்ளார். வலக்கை முழவியக்க, இடக்கை கருவியின் இடைப்பகுதியைப் பற்றியுள்ளது. அடுத்துள்ள தாளக்கலைஞர் வலப்பாதத்தை சூசியிலும் இடப்பாதத்தை அதன்பின் திரயச்ரமாகவும் இருத்தி, சுவஸ்திகத்தில் பட்டாடையுடன் காட்சிதருகிறார். கைகளில் தாளங்கள். மற்றொரு தாளக்கலைஞர் முகமண்டபக் கிழக்கு முகத்தின் வடபுறத்தே இரு பாதங்களையும் சூசியில் நிறுத்தி, வலமார்பருகே உள்ள கைகளில் தாளங்கள் கொண்டுள்ளார்.

இவர்கள் தவிர்த்த பிற பதின்மூவரும் ஆடற்கலைஞர்கள். அவர்களுள் பதின்மர் வலக்கை பதாகத்திலிருக்க, இருவர் கடகத்தில் கொண்டுள்ளனர். ஒருவர் வலக்கை சிதைந்துள்ளது. இருவரின் இடக்கை வேழமுத்திரையில் வலப்புறம் நீள, பதினொருவர் அதை நெகிழ்கையாக்கியுள்ளனர். விமானத் தென்கிழக்குக் கர்ணபத்தி ஆடலழகி வலக்கையைக் கடகத்தில் கொண்டு, இடக்கையை மார்பகத்திற்கு மேலிருக்குமாறு வேழக்கையாக்கியுள்ளார். அவரது இரு பாதங்களும் அக்ரதலசஞ்சாரத்தில். விமான வடசாலையின் ஈரடுக்கு இடைக்கட்டு அழகியும் அவரைப் போலவே இடக்கையை வேழமுத்திரையில் வீசியுள்ளபோதும் வலக்கை பதாகமாக உள்ளது. அவரது இடைத்தொங்கல் வலக்கால் ஆடையுடன் இணைந்துள்ளது.

தாங்குசிற்பங்களாகத் திகழும் இந்த 17 கலைஞர்களும் விமான, முகமண்டபச் சுற்றுவெளியை ஆடரங்காக்கி உயிர்ப்பூட்டுகின்றனர். ஆடல்நிலைக்கேற்ப அங்கசுத்தம் அமைந்திருந்தாலும் இடுப்பிற்கு மேல் சற்றே முன்தள்ளிய நிலையில் பலரும் வலம் அல்லது இடமாக லேசான சாய்வில் சிலரும் மார்புப்பகுதியை முன்னிருத்தித் தலையைச் சற்றே நிமிர்த்தியவர்களாய் ஓரிருவரும் ஆடலின்போது உடலில் நிகழும் அழகியல்சார் நெகிழ்வுகளை நயம் குன்றாது வெளிப்படுத்தியுள்ளனர். மென்மையின் இயக்கமாகவே அவர்தம் ஆடல் நிகழ்வதை இசைக்கலைஞர்களின் உடல்மொழி உணர்த்துகிறது. பேசும் கண்களாலும் உளக் குறிப்பை வெளிப்படுத்தும் முக மெய்ப்பாடுகளாலும் கருத்தை வெளிப்படுத்தும் கைக்குறியீடுகளாலும் காண்போரைக் கவர்ந்திழுக்கும் இந்த ஆடல் அழகியரின் இளமைப் பொலிவும் கலையின் தேர்ச்சியும் தலையலங்காரமும் நெகிழும் சடையின் அழைப்பும் அவர்கள் பெற்ற பயிற்சியின் நேர்த்தியையும் சோழர் கால ஒப்பனைத்திறனின் உச்சத்தையும் மிக இயல்பாகப் பதிவுசெய்துள்ளன.

ஆரச்சாலைத் தாங்குசிற்பங்கள்

முதலிரு தளங்களிலுள்ள ஆரச்சாலைகளின் சிகரங்களைத் தாங்குமாறு போல முகப்பு நாசிகையின் இருபுறத்தும் காட்டப்பட்டிருக்கும் அழகிய இளமைநலம் பொருந்திய ஆடவர்கள் கரண்ட அல்லது சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், முத்துமாலை - மணிமாலை - சவடி - சரப்பளி ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றல்லது இரண்டு, முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை, தாள்செறிகள் ஆகியவற்றுள் சிலவோ, பலவோ பெற்றுள்ளனர்.

கீழ்த்தள ஆரச் சிகரம் தாங்கிகளின் ஒரு கை, சாலை நாசிகை யிலுள்ள இறைவடிவத்தைப் போற்றும் அல்லது அவர் சிறப்புக் குறித்து வியக்கும் மெய்ப்பாட்டில் அமைய, மற்றொரு கை சிகரத்தைத் தாங்குமாறு போல அதன் மீது. அவர்தம் பாதங்களுள் ஒன்று வேதிகை மீதோ, நாசிகைச் சுவர் தழுவியோ அமைய, மற்றொரு கால் முழங்காலளவில் மடித்து உயர்த்தப்பட்டுள்ளது. தெற்குச் சாலை வலப்புறத்தாரின் அரைக்கச்சு முடிச்சுத்தொங்கல்கள் நுனியில் மலர்ப்பதக்கங்கள் தைக்கப் பெற்றனவாய் இரு தொடைகளிலும் நெகிழ்ந்துள்ளன. மேற்குச்சாலை வலப்புறத்தார் நிவீதமாக அணிந்துள்ள முப்புரிநூல் அவரது வலக்கையின் கீழ்ப்பகுதியில் தவழ்ந்து பின்செல்கிறது. கிழக்குச்சாலை வலப்புறத்தாரின் வலக் கை சிதைந்துள்ளது.













இரண்டாம் தள ஆரச்சாலைகளின் சிகரம் தாங்கிகளுள் சிலர் இரு பாதங்களையும் வேதிகையில் இருத்த, சிலர் ஒரு பாதத்தைக் கோட்டத்தூணில் தாங்கலாக்கி, மற்றொரு காலை முழங்காலளவில் மடக்கி உயர்த்தியுள்ளனர். ஒரு கை சிகரம் தாங்கி அதன் மேல் படர, மற்றொரு கையைத் தொடையிலிருத்தியுள்ள அவர் தம் தலை நாசிகைச்சிற்பத்தை நோக்கித் திரும்பியுள்ளது. கிழக்குச் சாலையின் வலப்புறத்தாங்கி கடகவளை பெற்ற இடக்கையைக் கடகமாக்கி, மலர் கொண்டுள்ளார்.

ஆலந்துறையார் வளாகத்தை வலம் வருபவர்கள் இந்தத் தாங்குசிற்பங்களைத் தவறாமல் கண்டு மகிழவேண்டும். காலம் காத்துத் தந்திருக்கும் இந்த உளி உன்னதங்கள் முற்சோழர்காலக் கலையாற்றலின் சிறந்த பதிவுகள். புள்ளமங்கை ஆலந்துறையார் கோயிலின் முழு வளமும் அறிய அண்மையில் வெளியாகியுள்ள 'புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்' என்னும் எங்கள் நூலைக் கண்ணுறுக. நூல் பெற: கைப்பேசி எண் 9345111790.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.