![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 162
![]() இதழ் 162 [ ஃபிப்ரவரி 2022 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பாண்டிய நாட்டில் காணப்படும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் பாண்டிய மன்னர் மாறன் சடையனின் கல்வெட்டுகள் பலவாக உள்ளன. அவற்றுள் ஒன்று திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் தளபதிசமுத்திரத்தில் காணப்படுகிறது. அக்காலத்தே மக்கள் நலம் நோக்கி அமைக்கப்பெற்ற இரண்டு தண்ணீர்ப்பந்தல்களைப் பற்றி உரையாடும் இக்கல்வெட்டு 86 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்கவும் வயல்வெளிகளிலும் பிற இடங்களிலும் வேலை செய்வாருக்குத் தேவைக்கேற்ப நீர் வழங்கவும் இத்தண்ணீர்ப்பந்தல்கள் பேருதவியாக அமைந்தன. தளபதிசமுத்திரம் கல்வெட்டுக் குறிக்கும் இரண்டு தண்ணீர்ப்பந்தல்களுமே கரைக்கான நாட்டைச் சேர்ந்த இரம்பாட்டில் வாழ்ந்த வேளான் சாத்தன் என்பாரால் திருக்கோட்டாறைச் சேர்ந்த ராசாக்கர் பெயரால் அமைக்கப்பட்டன. முதல் தண்ணீர்ப்பந்தல் பெரும்பழஞ்சி எனும் ஊருக்கு அருகிலிருந்த நாட்டாற்றுப் போக்கில் உருவானது. 'இராசாக்கத் தண்ணீர்ப் பெரும்பந்தல்' எனும் பெயருடன் தொடங்கப்பெற்ற இத்தண்ணீர்ப்பந்தலில் அந்தியிலும் இரவிலும் ஒளி விளங்குவதற்காக நாளும் உழக்கு நெய்யால் விளக்கொன்று ஏற்ற முடிவானது. படைத்தலைவர் குணவம்பலதேவன் வழி வந்த சாவா மூவாப் பேராடுகள் 50 கொண்டு விளக்கிற்கான நெய் பெறப்பட்டது. கொடையாடுகள் பட்டி பெருகிப் பலவாகும் என்பதனால் அவை இறப்பும் மூப்பும் அற்றவை என்றே கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டன. இவ்விளக்கை ஏற்றி ஆடுகளைப் பராமரிக்கும் பொறுப்புச் சிறுபழஞ்சி சபையாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்தண்ணீர்ப்பந்தலுக்கான தண்ணீர் வழங்கக் கிணறு தோண்டப்பெற்று அதற்கு 'குழுவாணை' என்ற பெயரும் சூட்டப்பட்டது. கிணற்றில் நீர் இறைத்துப் பந்தலில் நிரப்பி, வருவார் போவாருக்கு வழங்குவதற்கெனத் தண்ணீரட்டுவாராகப் பணியாட்கள் அமர்த்தப்பட்டனர். அப்பணியாட்களுக்கு வாழ்வூதியமாக நெல் வழங்கப் பெரும்பழஞ்சிப் பெருங்குளத்து வெள்ளிக் குமிழியால் நீர் பெற்ற மூன்று மா நிலம் ஊரோடு ஒக்கும் விலைக்குப் பெறப்பட்டது. நிலத்தின் மீதான வரிகளுக்கு உரிய தொகை செலுத்தி நிலத்துக்கு வரி விலக்குப் பெற்ற சாத்தன், அந்நில வருவாய் தண்ணீர் அட்டுவாருக்கு முறையாகச் சென்றடையுமாறு கண்காணிக்கும் பொறுப்பைப் பெரும்பழஞ்சிப் பார்ப்பார் சான்றாரிடம் ஒப்படைத்தார். நிலவருவாயின் ஒருபகுதி பந்தலுக்கான புதுக்குப் பணிகளுக்காகவும் கிணற்றை நீர் ஊருமாறு பார்த்துக்கொள்ளவும் ஒதுக்கப்பட்டது. நாட்டாற்றுப் போக்கில் அமைத்தாற் போலவே பெரும்பழஞ்சி ஊரிலும் வேளான் சாத்தன் மற்றொரு தண்ணீர்ப்பந்தலை உருவாக்கினார். முந்நூற்றுவப் பெரும்பந்தல் எனும் பெயரிலமைந்த இத்தண்ணீர்ப்பந்தலுக்கும் நாளும் உழக்கு நெய்யால் விளக்கேற்ற வேளான் 50 ஆடுகள் தந்தார். இந்த ஆடுகளுக்குப் பெரும்பழஞ்சி ஊராரைப் பொறுப்பாக்கிய வேளான், பந்தலுக்கு நீர் கொணரவும் வருவாருக்கு நீர் வழங்கவும் பணியாட்களுக்கு ஏற்பாடு செய்தார். அவர்களுக்கான நெல் ஊதியமளிக்க இடைக்குளத்து முலைவாய்க் குமிழியால் நீர் பெற்ற 2 மா நிலம் வேளானால் தரப்பட்டது. தண்ணீர்ப்பந்தலைப் பராமரித்து தேவைக்கேற்பப் புதுக்குப் பணிகள் மேற்கொள்ளும் பொறுப்புக் கோயிற்பிள்ளைகள் முந்நூற்றுவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மக்கள் வேண்டும்போது நீர் பெற வாய்ப்பாக இரண்டு தண்ணீர்ப்பந்தல்களைப் பெரும்பழஞ்சி ஊரிலும் அருகிலுள்ள நாட்டாற்றுப் போக்கிலும் உருவாக்கிய சாத்தன் வேளான், நீரளிக்கக் கிணறும் வெட்டிப் பந்தல்களில் தொடர்ந்து நீர் வழங்கப் பணியாட்களையும் அமர்த்தி, அவர்கள் தொடர்ந்து ஊதியம் பெற வாய்ப்பாக வளமான நிலமும் அளித்ததுடன், அவ்விரண்டு தண்ணீர்ப்பந்தல்களும் எந்நாளும் இயங்க வேண்டும் என்ற நன்னோக்குடன் அவற்றைக் காப்பாற்றும் பொறுப்பைக் கரைக்கான நாட்டையாளும் நாயகன்மார்களிடம் ஒப்படைத்தார். தண்ணீர்ப்பந்தல்களை தொடர்ந்தியக்கும் பொறுப்பினை ஏற்ற அப்பெருமக்களின் திருவடிகள் என்றென்றும் என் தலைமேலன என்றே தம் கொடைப்பதிவை மிகுந்த பணிவுடனும் பேரன்புடனும் நிறைவு செய்கிறார் இரம்பாட்டு வேளான் சாத்தன். மக்கள் நலம் நோக்கி மனிதர்கள் செய்த இத்தகு பயன்கருதா நற்பணிகளைக் கல்வெட்டுகளே கண் போல் காத்து வரலாற்றுக்கு வழங்குகின்றன. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |